கோவை புத்தகக் கண்காட்சியில்
இரண்டு நாட்களாகக் கோவை புத்தகக் கண்காட்சியிலிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் மக்கள் கண்காட்சிக்கு வந்திருந்தார்கள். பை பையாக நூல்களை வாங்கிச் சென்றார்கள்.
தேசாந்திரி பதிப்பக அரங்கில் வாசகர்களைச் சந்தித்தேன். எனது புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன். ஜாக் லண்டனின் ஒயிட் ஃபேங் நாவலின் மொழிபெயர்ப்பை டாக்டர் சந்திரமௌலி செய்திருக்கிறார். அந்த நூலின் வெளியிட்டு விழா நடைபெற்றது. டாக்டர் ரவி அதனை வெளியிட்டார்.




அதைத் தொடர்ந்து கவிஞர். க.வை.பழனிசாமியின் கவிதையின் அந்தரங்கம் நூலினை வெளியிட்டு உரையாற்றினேன். இதில் விஜயா வேலாயுதம். கவிஞர் மோகனரங்கன். எழுத்தாளர் கோபாலகிருஷணன். எழுத்தாளர் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். காலச்சுவடு சார்பில் அரவிந்தன் நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்தார்.
கவிஞர் சுகுமாரன். மலையாளக் கவிஞர் ராமன். இயக்குநர் ஞான.ராஜசேகரனைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது.

அன்று மாலை மணிகண்டனின் வானம் பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் உதயசங்கர். எழுத்தாளர் கலைச்செல்வி எழுதிய சிறார் நூல்களை வெளியிட்டேன்.

திங்கள்கிழமை காலை பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரி மாணவர்களுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. பேராசிரியர் ராமராஜ், பேராசிரியர் கந்தசுப்ரமணியம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்காட்சி வளாகத்தின் வெளியே உள்ள புல்தரையில் அமர்ந்து பேசினோம். மாணவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சி அளித்தது.


திங்கள்கிழமை மாலை கண்காட்சியில் ஏன் நாவல்களை வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன். அரங்கு நிரம்பிய கூட்டம். பலரும் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே கேட்டார்கள்.
கோவை புத்தகக் கண்காட்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள கொடீசியா அமைப்பின் நிர்வாகிகள் பாலசுந்தரம், நடராஜன், விஜய் ஆனந்த், ரமேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
