அறியப்படாத வரலாறு
மறைக்கப்பட்ட இந்தியா – நூல் அறிமுகம்
– சசிகலா ரகுராமன்
“மகாத்மா” என்றால் காந்தியடிகள் மட்டுமே என நினைத்துக் கொண்டிருப்பவரா நீங்கள் ? இந்திய மன்னர்கள் கோட்டைகளையும் கோவில்களையும் கட்ட மட்டுமே ஆதரவு அளித்தார்கள் என்ற உங்களுடைய எண்ணம் சரிதானா ? வெள்ளைக்காரர்கள் வருகைதான் இந்தியாவில் அறிவியல் சிந்தனையை அறிமுகப்படுத்தியது என நினைக்கிறீர்களா ?

எனில், நீங்கள் அவசியம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘மறைக்கப்பட்ட இந்தியா’ என்ற புத்தகத்தைப் படிக்க வேண்டும். இந்தியாவின் புதைக்கப்பட்ட அருமை பெருமைகளை, மறக்கப்பட்ட சுதந்திர போராட்ட தலைவர்களை , மறைக்கப்பட்ட நிகழ்வுகளை, அவலங்களை ஆராய்ந்து வியப்பாகவும், விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும், உயிர்ப்பாகவும் சொல்லியிருக்கிறார்.
இந்திய சுதந்திரத்திற்கு ரஷ்யாவில் இருந்து உதவிய நாயர் ஸான், நேதாஜியின் ‘ஐ என் ஏ’ விற்கு ஜப்பானில் இருந்து உதவிய வீரேந்திரநாத் சட்டோபாத்யாய ஆகியோருக்கு வரலாறு இடம் கொடுக்காததைச் சுட்டிக் காட்டி வருந்துகிறார். தினம் ஓர் இடத்தில் இருந்து ‘ரகசிய ரேடியோவை’ இயக்கி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவிய உஷா மேத்தா , ஜப்பானில் குண்டுகளின் நடுவே நடந்து வந்து, ஹரி ப்ரபோ என்ற பெண்மணி ஒளிபரப்பு செய்த ‘ஆசாத் இந்தியா ரேடியோ ‘ போன்ற நிகழ்வுகள் , சிறந்த திரைப்படம் அல்லது குறைந்த பட்சம் ஒரு இணையத் தொடராகவோ எடுக்கக் கரு உள்ளவை.
புகைப்படக்கலையிலும் , நுண்ணோவியங்களிலும், மருத்துவத்திலும் சிறந்து விளங்கியவர்களைப் பார்த்து வியந்தவர், கூடவே இங்கு வந்து கோலோச்சிய பார்ஸிக்கள், யவனர்கள், ஆர்மேனியர்கள் ஆகியோரின் சிறப்புகளையும் எடுத்துரைக்கிறார்.
இந்தியாவைத் தேடி வந்த சீன யாத்திரிகர்கள்(அனைவரும் அறிந்த யுவன் சுவாங் ) மட்டுமல்லாமல், ரஷ்ய யாத்ரிகர்களும், இங்கிலாந்தில் திருமணத்திற்கு மணமகன் கிடைக்காததால் கப்பல் கப்பலாக வந்து இறங்கிய இளம் பெண்களும், பயணத்தின் போது பட்ட அவதிகளைப் பற்றிப் படித்தால், இன்னொரு ” டைட்டானிக்” போன்ற படம் எடுத்து விடலாம்.
தீப்பெட்டிக்குள் அடக்கி வைக்கக் கூடிய, மஸ்லின் சேலை தயாரித்த நெசவாளர்களின் நகங்கள் வெட்டப்பட்டதும், இந்திய விவசாயிகள் அவுரி விதைப்பதற்கக்காகக் கொடுமை படுத்தப்பட்டதும், இண்டிகோ புரட்சியும், அன்றும் இன்றும் நம் நாட்டில் தொழிலாள வர்க்கம் நசுக்கப்படுவதைச் சித்தரிக்கிறது.
நடந்த பல கொடுமைகளுக்கும் , ‘காடும்’ , ‘தாவர உலகமும்’ நம் அனைத்து இயற்கை வளங்களும் சீறாமல் மௌனம் காத்தது பற்றியும், அதனால் இழந்த வளங்களும் , வந்த விருந்தினர்களுக்கு மன்னர்கள் அளித்த காண்டாமிருகங்களும் , யானைகளும், மான்களும், பிற விலங்குகளும் பட்ட அவதிகளையும் எழுத்தாளர் விவரிக்கும் போது, ‘ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய’ வள்ளலாரையே நான் கண்டேன்..
நமது தேசிய சின்னங்களை வடிவமைத்தவர்கள் யார்? அதன் பின்னணியில் இருந்த அரசியல் என்ன? அரிக்கமேட்டில் என்ன உள்ளது? காந்தியடிகளுக்கு மகாத்மா எனப் பெயர் சூட்டியவர் யார்? அவரே ஏன் சூட்டினோம் என்ற அளவிற்குக் கோபம் வரக் கரணம் என்ன?
பல அரிய தகவல்களை அறிய , மறைக்கப்பட்ட இந்தியா என்ற இந்தப் பண்பாட்டு வரலாற்று நூலை அவசியம் படியுங்கள் .
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
