மறைமலையடிகள் நாட்குறிப்புகள்

மறைமலையடிகள் 1898 முதல் 1950 வரையில் எழுதிய நாட்குறிப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

இணையத்தில் இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

நூலின் தொகுப்பாசிரியர் மறை. திருநாவுக்கரசு, மறை. தி. ஆலங்காடன். தி. தாயுமானவன். இந்த நூலை ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்திருக்கிறார்

தனித்தமிழ் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகள் இளமைப்பருவம் முதல் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார். ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்டவர் என்பதால் தனது நாட்குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்.

ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக உள்ள இந்த நாட்குறிப்புகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட விஷயங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்

மறைமலையடிகளின் நாட்குறிப்புகளை வாசிக்கும் போது அவர் எவ்வளவு ஆங்கில நூல்களைத் தேடிப்பிடித்துப் படித்திருக்கிறார். விலைக்கு வாங்கியிருக்கிறார் என்று வியப்பாகவுள்ளது. நூறு வருஷங்களுக்கு முன்பே 11 ரூபாய் கொடுத்து ஆங்கிலப் புத்தகம் ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார். அப்போது அவரது மாதசம்பளம் 30 ரூபாய்.

நிறையப் புத்தகங்கள் வாங்குகிறார் என்று மனைவி அவரோடு சண்டையிட்டிருக்கிறார். பல்லாவரத்தில் வீடு கட்ட நிலம் 90 ரூபாய்க்கு வாங்கியதைப் பதிவு செய்திருக்கிறார்.

நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சென்னை நகரின் தோற்றம், மற்றும் அன்றைய வாழ்க்கைமுறை, அன்றைய கல்வி நிலையங்கள். பிரம்மஞானச் சபையில் நடந்த கூட்டங்கள். வெள்ளைக்கார அதிகாரிகள் தமிழ் கற்றுக் கொண்டது. அன்றிருந்த தமிழறிஞர்களின் வாழ்க்கை மற்றும் ஆய்வுப்பணிகள் குறித்து விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

குறிப்பாகச் சென்னைக்கு விமானம் அறிமுகமானது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நாளில் ஏற்பட்ட அனுபவம் . காந்தி கொல்லப்பட்டது. சென்னையில் நடைபெற்ற பல்வேறு அரசியல் கூட்டங்கள். ஆங்கிலத் திரைப்படங்கள். அறிஞர்களுக்குள் நடந்த கருத்து மோதல். வழக்கு விபரங்கள். Oriental Mystic Myna என்ற ஆங்கில இதழ் வெளியிட்டது. அந்த நாட்களில் வெளியான தமிழ், ஆங்கில இதழ்கள் இவற்றைப் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்

பெரியார் ஆரம்பித்த சுயமரியாதை இயக்கம் பற்றிய மறைமலையடிகளின் பார்வை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய பதிவுகள். டாக்டர் ஆனந்த குமாரசாமியின் நட்பு. இலங்கை மற்றும் வட இந்தியாவில் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய குறிப்புகள். மாக்ஸ்முல்லருடன் உருவான கடித தொடர்பு. அருட்பா மருட்பா விவாத அரங்குகள் பற்றிய குறிப்புகள் முக்கியமானவை.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2022 02:34
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.