பொ.திரிகூடசுந்தரம், கலைக்களஞ்சியம்
தமிழின் முதல் முழுமையான கலைக்களஞ்சியம் பெரியசாமித் தூரன் அவர்களால் உருவாக்கப்பட்டது. 1968 ல் உருவான இக்கலைக்களஞ்சியம் அதற்குப்பின் புதுப்பிக்கப்படாமல் நீடிக்கிறது. வாழ்வியல் களஞ்சியம் என்னும் பெயரிலும் தமிழ்க்கலைக்களஞ்சியம் என்னும் பெயரிலும் வேறு முயற்சிகள் நடைபெற்றாலும் அவை நிறைவடையவில்லை. நீடிக்கவுமில்லை.
தமிழ் கலைக்களஞ்சியம் ,அதன் உருவாக்கம் பற்றி ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய முக்கியமான நூல் ‘தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை ‘. அதில் பொ.திரிகூடசுந்தரம் பற்றி வரும் குறிப்பு ஆர்வமூட்டக்கூடியது. அன்று திரிகூடசுந்தரம் பேச்சாளராக புகழ்பெற்றிருந்தார். நிறைய பயன்தரு நூல்களையும் எழுதியிருந்தார். தூரனை விட அனுபவம் கொண்டவர். ஆகவே கலைக்களஞ்சியப் பணிக்கு தலைவராக தன்னை தவிர்த்து தூரனை நியமித்ததை அவர் கடுமையாக எதிர்த்தார். தொடர்ந்து தூரனுக்கு தொந்தரவளித்துக் கொண்டிருந்தார்.
பொ.திரிகூடசுந்தரம் எப்படிப்பட்ட பேச்சாளர்? விக்ரமன் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. பற்றி ஒரு கட்டுரையில் சொல்லும் அனுபவம் இது. எஸ்.ஏ.பி மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர். ஒரு மேடையில் அவருக்கு முன் திரிகூடசுந்தரம் பேசினார். அவருக்கு அளிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து,மேடையில் இருந்த அனைவர் நேரத்தையும் கடந்து, மேலும் பேசிக்கொண்டே இருந்தார். மேடையில் இருந்து தப்பி ஓடிய எஸ்.ஏ.பி அதன் பின் ஒருமுறைகூட மேடையில் பேசியதில்லை.
திரிகூடசுந்தரம் எழுதிய நூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. எல்லா தலைப்புகளிலும் சரமாரியாக எழுதியிருக்கிறார். பொது அறிவுத் தகவல்கள். ஆனால் அவரால் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியிருக்க முடியுமா? அவினாசிலிங்கம் செட்டியார் தகுதியையே முதன்மையாக பார்த்திருக்கிறார் என்பது தெளிவு
பொ.திரிகூடசுந்தரம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

