அன்புள்ள ஜெ,
கொற்றவை படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் வருகிறது இப்பாடல்
கருங்கழல் அணிந்தவளே – கன்னி
கருங்கூந்தல் அவிழ்ந்தவளே
கலைமான் அமர்ந்தவளே – கன்னி
கண்மூன்று எரிபவளே
ஆயிரம் கைகள் கொண்டாள் – கன்னி
ஆயிரம் படைகள் கொண்டாள்
தாயின் அறம் மறந்தாள் – கன்னி
சேயின் குருதி கொண்டாள்
இப்பாடலைக் கேட்டு கோவலன் அஞ்சியதில் வியப்பேதும் இல்லை. நீங்கள் ஏன் இத்தனை ஆண்டுகளாக கவிதை எழுதுவதை தவிர்த்து வருகிறீர்கள்?
மணிமாறன்
அன்புள்ள மணிமாறன்
என் படைப்புகளில் வரும் எல்லா கவிதைகளும் செய்யுட்களும் என்னால் எழுதப்படுபவை. ஆனால் என்னால் கவிதைகள் எழுத முடியாது.
நான் என் புனைவில் ஒரு சொல்மண்டலத்தை, ஒரு வாழ்க்கைக் களத்தை உருவாக்குகிறேன். அதன் பகுதியாக எதையும் எழுதமுடியும். ஏனென்றால் அவற்றை எழுதுபவன் நான் அல்ல, அந்த சொல் மண்டலத்தின் உள்ளே வாழும் ஒருவன்.
வெளியே வந்து ஏன் கவிதை எழுத முடியவில்லை என்றால் கவிதை என்பது உலகளாவிய ஒரு சொல்மண்டலம் என்பதனால்தான். அது வேறொரு உலகம். அதன் பார்வையாளனாகவே என்னால் இருக்க முடிகிறது.
ஜெ
Published on May 18, 2022 11:31