கல்விக்கூடம், கடிதம்

 

நமது மாணவர்கள்

நமது கல்வி

கல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துக்களும்

அன்புள்ள ஜெ

கல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துகளும் வாசித்த பின் என் அனுபவங்களை எழுதி பதிவு செய்ய வேண்டும் என தோன்றியதால் இக்கடிதம்.

எங்களூர் நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கையில் எட்டாம் வகுப்பில் நாற்பதுக்கும் மேல் இருந்தார்கள். ஆனால் பள்ளி முடித்து வெளியேறுகையில் வெறும் எட்டு என்றாகியிருந்தது எண்ணிக்கை.

இந்த பள்ளிகளிலும் இன்றும் இங்கே வட தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் ஒரளவு நன்றாகவே உள்ளன. இவை உயர்நிலைப் பள்ளிகளாகவும் மேல்நிலைப் பள்ளிகளாகவும் மாறும்போது தான் எல்லாம் குட்டிச்சுவராக மாறுகின்றன. இவர்கள் ஏன் இப்படி மாறுகிறார்கள் ? முதலாவது, இம்மாணவர்களின் பின்தங்கிய பொருளாதார நிலை. இரண்டு, இவர்களின் தந்தையர்களில் அநேகர் குடிக்கு அடிமையானவர்கள் மட்டுமல்ல, குடித்துவிட்டு வந்து வீட்டில் அம்மாக்களை அடிப்பவர்கள். ரகளை செய்பவர்கள். இப்படிப்பட்ட சூழலில் வளர்கையில் மிக இளம் வயதிலேயே குடிக்கு பழகிவிடுகிறார்கள். அதன் பின் அத்தனை ஒழுங்கினங்களும் வந்து சேரும். என் வகுப்பிலேயே அவ்வகை நண்பர்கள் இருந்தார்கள்.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, முன்பு நம் ஊராட்சிகள் பள்ளிகளில் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் பெரும்பங்கு வகித்தார்கள். என் சிறுவயது நினைவுகளில் வருடந்தோறும் நடக்கும் சுதந்திர தின விழா போட்டிகளின் ஊர் தலைவர் வந்திருந்து பங்கேற்று பரிசுகள் வழங்குவார். அது ஒரு தெளிவான அறிவிப்பு, நாங்கள் ஆசிரியர்கள் பக்கம் நிற்கிறோம் என்று. ஆனால் நான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறுகையில் எப்போதோ ஒருமுறை வருவார்கள். சடங்காக நிகழ்வதாக மாறிப்போனது.

அவர்களின் ஆதரவு குறைந்தது பலவீனம் என்றால் இவர்களில் ஒருசாரார் ஊர் என்பதை விட்டுவிட்டு வட்டார கட்சிகளுடன் தங்களை அடையாளம் கண்டுகொண்டு அடங்கா மாணவர்களை தூண்டி வளர்க்கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற பக்கத்து ஊர் பள்ளியில் நடந்த சம்பவம். பள்ளியின் ஜன்னல் கதவை உடைத்து கம்பிகளை அறுத்து மடிக்கணிணிகளை திருடி சென்றிருக்கிறார்கள். வழக்கு படிந்து அம்மாணவர்களை அழைத்தால், ஊள்ளூர் கட்சி பிரமுகர் ஒருவரின் தலையீட்டால் மடிக்கணிணிகள் திருப்பி தரப்பட்டன. ஆனால் அவர்களின் மேல் எந்தவித பள்ளி அளவிலான குற்ற நடவடிக்கை கூட மேற்கொள்ள முடியவில்லை.

இப்படிப்பட்ட ஒழுங்கீன மாணவர்கள் வகுப்பிற்கு நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுந்தான். இவர்கள் மற்ற அத்தனை பேரையும் படிக்கவிடாமல் கெடுப்பவர்கள். அப்படி பள்ளி படிப்பில் ஆர்வம் குறைந்து சக வகுப்பு தோழிகளை அறிவேன். இன்றைக்கு நீங்கள் சொல்வது போல நம் ஊராட்சிகள் பள்ளிகளில் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். இப்படிப்பட்ட ஒழுங்கீன மாணவர்களை சீர்த்திருத்துவதில் ஆசிரியர்களுக்கு தோள் கொடுப்பது அவர்களின் கடமை.

சமூக ஊடகங்களில் பொய் கூச்சல்களை பார்த்தால் ஆத்திரம் தான் வருகிறது. இவர்களின் பிள்ளைகளை நல்ல தரமான பள்ளிகளில் போட்டுவிட்டு அரசுப்பள்ளிகள் தான் சிறந்தவை என தொடங்கி முறையற்ற ஆடையணிவது, பங்க் தலை வைத்துகொள்வது எல்லாம் அவரவர் சுதந்திரம் என வக்காளத்து வாங்குபவர்கள். அங்கே படிக்கும் ஏழை மாணவர்களின் நலன் சார்ந்து உங்களை போன்ற முக்கியமான ஒருவரின் குரல் ஒலிக்குமென்றால் கொக்கரிக்கிறார்கள். பலவித பழிப்பு பேசுகிறார்கள். மனச்சாட்சியே இல்லாதவர்கள். நீங்கள் சொல்வதே தான், உங்கள் குழந்தையை எங்கே படிக்க வைக்கிறீர்கள் என்ற கேள்வி, இவர்களின் முகத்திரைகளை கிழித்து வீசுவது.

இவர்கள் சொல்லும் சுதந்திரம் அவர்களை சீரழிக்கிறது. எங்கள் வகுப்பிலேயே இப்படித்தான் ஒருவன் கணக்கு வாத்தியார் மேல் கல்லெறிந்தான். தனக்கொரு நியாயம் ஊருக்கொன்று. இன்றைக்கு சமூக ஊடகங்கள் இருப்பது இந்த தறுதலைகளின் குரல் ஓங்கி ஒலிக்க ஏதுவாக உள்ளது.

உங்கள் தரப்பில் அரசுப்பள்ளியில் பயின்ற வாசகனாக அரசும் நம் ஊராட்சிகளும் நம் பள்ளிகளை சீர்த்திருத்துவதில் தம் பங்கை செவ்வனே ஆற்ற வேண்டும். அந்த மூடித்திருத்துவது போன்ற நிகழ்வுகள் நம் ஊர்கள் தோறும் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் நடந்தாலே வெகுவாக நம் பள்ளிகளின் நிலை உயரும்.

அன்புடன்
சக்திவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 29, 2022 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.