சுடரென எரிதல்- “கனலி’ விக்னேஷ்வரன்

நேற்று கவிஞர் ஆனந்த் குமாரின் முதல் கவிதைத் தொகுப்பான ‘டிப் டிப் டிப்’ கையில் கிடைத்தது. தொகுப்பைக் கையில் பெற்றவுடன் முதலில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள முன்னுரையை வாசித்தேன். தொகுப்புக்குள் முழுவதும் எளிதாகச் சென்றுவிட அந்த சின்ன முன்னுரை ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது என்று தோன்றியது. பொதுவாகக் கவிதைத் தொகுப்பு ஒன்றைக் கையில் எடுத்தால் அதிலிருக்கும் அனைத்து கவிதைகளையும் முதல் வாசிப்பில் வாசிப்பது கிடையாது. ஒவ்வொரு பக்கமாகத் தள்ளிக்கொண்டு போய் முதலில் சிறிய கவிதைகளை வாசிப்பேன். நீள் கவிதைகள் முதல் வாசிப்புக்கு அவ்வளவு எளிதாக எனக்குப் பழகிவிடுவதில்லை. அவை பெரும்பாலும் இரண்டாவது வாசிப்புக்குத் தான் நெருக்கமாக மனதிற்குள் வந்து நிற்கிறது. இது என் வாசிப்பு பழக்கம் மற்றவர்களுக்கு அவர்களின் வழி ஒன்று ஏதேனும் இருக்கலாம்.

இப்படித்தான் இந்த கவிதைத் தொகுப்பிலிருக்கும் சிறிய கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் நேரத்தில் தொகுப்பிலிருக்கும் அத்தனை கவிதைகளையும் ஓரளவுக்கு வாசித்து முடித்துவிட்டேன். கொஞ்சம் நேரம் புத்தகத்தின் வடிவமைப்பு மீது கவனம் போயிற்று இருந்தாலும் மனம் மட்டும் வாசித்த கவிதைகளை மீண்டும் என் நினைவிற்குக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தது. அதன்பிறகு தொலைபேசி அழைப்புகள், சமூக ஊடகங்களின் தகவல்கள் அவற்றின் மீதான பார்வைகள் என்று மனம் சற்று மாறிப் போனது. அதன்பிறகு பணி முடிந்துவந்த களைப்பு சற்று உறக்கம் தேடியது. புத்தகத்தை அப்படியே பக்கத்தில் வைத்துவிட்டு உறங்கி விட்டேன். உடல் உறங்கிப் போனாலும் மனம் சற்று உறங்காமல் அலை பாய்வது சரியாக உணர முடிந்தது. இவை பெரும்பாலும் நிறைய நேரத்தில் நடக்கும் என்பதால் அப்படி இப்படி என்று அதை அமைதிப்படுத்திட முயற்சி செய்த போதுதான் தொகுப்பில் இரண்டு, மூன்று முறையேனும் வாசித்த ஒரு கவிதை மீண்டும் முழுவதும் மனதில் வந்து நின்றது.

அக்கவிதை

குழந்தை

குழந்தை
எப்போதும்
என் குழந்தை?

ஒரு குழந்தையை
கையிலெடுக்கையில்
அது என் குழந்தை

வளர்ந்த குழந்தையை
அணைக்கும் போதெல்லாம்
என் குழந்தை

விலகும் குழந்தையை
நினைக்க நினைக்க
என் குழந்தை
என் குழந்தை

ஏன் இந்தக் கவிதை மட்டும் சட்டென்று மனதில் வந்து நின்றது என்று தெரியவில்லை. உடனடியாக என் மகள்களைத் தேடினேன் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் சத்தம் ஒரு வித மகிழ்ச்சியை அளித்ததுடன் எழுந்து உட்கார்ந்து விட்டேன். மீண்டும் உறக்கம் கலைந்து தொகுப்பை முழுவதும் இன்னொரு முறை வாசித்தேன். தொகுப்பை முன்வைத்து இரண்டு விஷயங்கள் பேசலாம் ஒன்று தொகுப்பு முழுவதும் நிரம்பி இருக்கும் எளிமை இன்னொன்று என்றும் மகிழ்ச்சியை மட்டும் காண முற்படும் குழந்தைத்தன்மை பொதிந்திருக்கும் நிறைய கவிதைகள்.

அதனால் தான் ஆனந்த் குமாரால் ஒரு கவிதையில் இப்படிச் சொல்ல முடிகிறது.

மலையிறங்குகையில்
கொஞ்சம் பிடிச்சுக்கோ என
அதனிடம் சொல்ல முடிகிறது.”

இப்படி கவிதைகளின் இடையே ஆனந்த் குமார் தனக்குள் இன்னும் இருக்கும் குழந்தைத்தன்மையின் பார்வையை அல்லது அவரின் மகன்களின் பார்வையைக் கடன் வாங்கி சில எளிய கவிதைகளை அற்புதமான கவிதைகளாக மாற்றியுள்ளார்.

இன்னொரு கவிதை இதற்கு உதாரணம்

மலர் கொய்தல்

ஊதி அணைக்கக்
கூடாதென்றிருந்தாள் அன்னை
கடவுளர்முன்
ஒரு குழந்தையைப் போல
வீற்றிருக்கிறது தீபம்
எப்படி இதை எண்ணையில்
ஆழ்ந்துவது
பார்த்தால் சுடும்போல்
தெரியவில்லை
மலரைக் கொய்வதுபோல்
விரல்களால் பிடித்தேன்
சுடவில்லை
எரிகிறது
சொல்லென மாறாத
சுடர்

ஆமாம் சுடர் தான் தொகுப்பு முழுவதும் நிறைய கவிதைகள் இப்படிச் சுடரென எரிந்து நம் அகத்துக்குள் அவ்வளவு மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது.

படிமம், குறியீடுகள், இருத்தலியம், வார்த்தை விளையாட்டு என்றெல்லாம் எவ்விதமான பரீட்சார்த்த முயற்சிகளையும் ஆனந்த்குமார் இந்த தொகுப்பில் முயலவில்லை. அவர் தான் கண்ட புறக்காட்சிகளையும் அகக்காட்சிகளையும் நம்முன்னே ஒருவித பரவசத்துடன் அதே நேரத்தில் குழந்தைத்தன்மையுடன் தனது கவிதைகளாக மாற்றி நம் முன்வைக்கிறார். அதனால் தான் தொகுப்பு முழுவதும் அனைத்து கவிதைகளும் சுடராக நமக்குக் காட்சி தருகிறது. இச் சுடர் சில நேரங்களில் திரியைத் தாண்டி பற்றியெரிகிறது, சில நேரங்களில் காற்றில் அலை மோதுகிறது. ஆனால் எச் சுடரும் அணையாமல் இருக்கிறது அதனாலேயே வாசித்த அனைத்து சுடரும் எனக்கு மகிழ்ச்சியை இத் தொகுப்பில் அளித்தது.

சுடுகாட்டுக்கு எப்படி
வழி கேட்பதெனத் தயங்கி
ஒளிரும் மஞ்சள் பூக்களை
பின்தொடர்ந்தேன்.”

நானும் உங்களை இக்கவிதைகளின் வழியாகப் பின் தொடர்வேன் என்று நம்புகிறேன். உங்கள் கவிதைகளில் பொதிந்திருக்கும் எளிமையும், குழந்தைத்தன்மையை மட்டும் என்றும் விட்டு விடாதீர்கள் இனி எக்காலத்திலும் அவை நமக்கு அதிகம் தேவை.

நன்றி.

( கவிஞர் ஆனந்த் குமார் மற்றும் புத்தகத்தைச் சிறப்பாக வெளியிட்டுள்ள தன்னறம் மற்றும் சிவராஜ் அவர்களுக்கு என்றென்றும் மகிழ்ச்சியும் அன்பும் உரித்தாகட்டும்.)

 ‘கனலி’ விக்னேஷ்வரன்

நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி

குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்

விளையாடும் ஏரி- கடிதங்கள்

ஒருதுளி காடு- கடிதங்கள்

பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்

ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு

டிப் டிப் டிப் வாங்க டிப் டிப் டிப் தன்னறம் நூல்வெளி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 28, 2022 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.