Error Pop-Up - Close Button This group has been designated for adults age 18 or older. Please sign in and confirm your date of birth in your profile so we can verify your eligibility. You may opt to make your date of birth private.

வெளிச்சத்தைப் பரப்பும் மழைமான்

பிச்சைக்காரன்

எஸ் ராமகிருஷ்ணனின் மழைமான் சிறுகதை தொகுதி சமீபத்தில் மனநிறைவளித்த ஒரு கதை தொகுப்பு. எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது. அறம் அழிவது அன்றாடச் செயல்பாடாகி வருகிறது; என்ற பின்னட்டைக்குறிப்புகள் இந்தச் சிறுகதைத் தொகுதியை முடித்தபின்பு வேறோரு பொருளைத்தருகின்றன

எளிய மனிதர்கள் என்பதே ஒரு ரிலேட்டிவ் பதம்தான். ஒரு பார்வையில் மனிதர்கள் அத்தனைப்பேருமே எளியவர்கள்தான். காலம்தான் சிலரை அவ்வப்போது ஒவ்வொரு இடத்தில் வைக்கிறது.ஒரு நிமிடத்தில் மாறி விடக்கூடியதுதான்.

இந்தத் தொகுப்பில் நடுத்தர வாழ்வு என்ற ஓர் உலகுக்குள் நடக்கும் இந்த ஒரு பரமபத விளையாட்டை அழகாகப் பதிவு செய்துள்ளார் எஸ்ரா

உயர் ரசனையுடன் , கம்பீரமாக வாழும் ஒரு குடும்பத்தலைவி ஒரு கல்லூரி மாணவனின் அத்துமீறல் என்றொரு செயலால்மனம்நிலைகுலைவதும் அந்தச் சம்பவம் நிகழக் காரணமாக அமைந்த மற்ற நிகழ்வுகளும் ஒரு முழு வாழக்கையையே பிரதிபலித்து விடுகின்றன; ( அவன் பெயர் முக்கியமில்லை சிறுகதை)

வாழ்க்கை என்பது எண்ணற்ற தற்செயல்களின் விளைவுகள். நம்மை மீறிய செயல்களே நம்மை எளியவனாகவும் வலியவனாகவும் மாற்றிக்காட்டுகின்றன. ஒரு கணம் முன்பு உண்டியல் விற்கும் தாத்தா முன்பு வலியவளாக இருந்தவள் அதே நாளில் ஓர் விக்டிம் அல்லது அபலை ஆகிப்போகிறாள்

அந்த நிகழ்வு வேறோரு,பெண்ணுக்குக் கிளுகிளுப்பானதாக அவளது ஈகோவை வலுவாக்கும் சம்பவமாக அமைந்திருக்கக்கூடும்

இதன் பின்னணியில் நிகழும் ஒரு கொலை சம்பவமும் இந்த எளியவன் வலியவன் இருமையை அடிக்கோடு இடுகிறது.

இதில் தன்னை வலியவனாக உணரும் மாணவன் ஒரே ஒரு நிமிடத்தில் எளியவனாகும் வாய்ப்பும் இருக்கிறது

ஒழுங்கின்மைக்குள் ஏதோ ஒரு ஒழுங்கு இருக்கிறது என்கிறது அறிவியல். அதுபோல அறமின்மைக்குள் வாழும் அறம்தான் உலகை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது

இன்னொரு ஞாயிற்றுக்கிழமை கதையில் வேலையில்லாமல் நண்பன் அறையில் தங்கி இருக்கும் தாமோதரன் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளாவது வயிறார சாப்பிட விரும்புகிறான். அதற்கு அவன் ஒரு யுக்தி வைத்திருக்கிறான்.

யாராவது ஒரு வசதியான பழைய நண்பனை நட்பு ரீதியாகச் சந்திக்க செல்வதுபோல மதிய வேளை சந்தித்துச் சுவாரஸ்யமாகப் புகழ்ந்து பேசி அப்படியே சாப்பிட்டு விட்டு வந்து விடுவான்

பாஸ்கர் என்ற நண்பனிடம் இந்த யுக்தி பலிக்கவில்லை துச்சமாக நடத்துகிறான் பசி தாங்க முடியவில்லை பாஸ்கரின் பாட்டி கொரியர் செய்யக் கொடுத்த 50 ரூபாயில் தனது நண்பனுடன் சாப்பிட்டு விடுகிறான்

கதையின் வெடிப்பு நிகழ்வது அதற்குப்பிறக்குதான். 50 ரூபாய்க்குப் பாட்டியை ஏமாற்றியவனால் அந்தக் கவரில் இருக்கும் 500 ரூபாயை அபகரிக்க முடியவில்லை

வலியவன் எளியவனை வாட்டினால் எளியவன் தான் துன்புறுத்தத் தன்னை விட எளியவன் ஒருவனைக் கண்டுபிடிப்பான் என்ற அறவீழ்ச்சியால் சூழப்பட்ட ஒரு யுகத்தின் மத்தியில் அவனது அறம் விழிக்கிறது

தனக்கு நிகரானவரைத் தன்னை விட உயர்நிலையில் இருப்பவரை ஏமாற்றுவதை ஏற்கும் அவன் உள்ளம்,தன்னை விடக் கையறு நிலையில் இருக்கும் ஒரு கிழவியை − அதுவும் அவள் தன்னிலும் எளிய ஓர் அபலைக்கு உதவ முனையும்போது −, ஏமாற்றுவதை ஏற்கவே முடியவில்லை

Games people play என்பதுபோல, மனிதர்கள்,விளையாடும் இந்தக்கருணையற்ற விளையாட்டின் விளைவை அவன் கண் முன் பார்ப்பது அவனுக்கு ஒரு தரிசனமாக ( vision)அமைகிறது

அறம் என்பதையே கேள்விக்குள்ளாக்குகிறது ஓலைக்கிளி கதை

ஒரு காலத்தில் ரவுடியாக இருந்தவன் தற்போது திருந்தி விடுகிறான் தன் மகள் திருமணத்துக்குக் கிட்டத்தட்டப் பிச்சை எடுக்கிறான். கடைசியில் மகள் திருமணம் என்பதே பொய் எனத் தெரிகிறது. வேண்டுமென்றேதான் செய்தேன் எனக்கூறி அதற்கொரு லாஜிக்கலாகக் காரணமும் கூறி கடிதம் அனுப்புகிறான் குடும்பத்தினருக்கு அரிய பரிசு ஒன்றையும் அனுப்புகிறான்.அவன் செயலில் எவ்வித அறப்பிழையையும் நம்மால் காண முடிவதில்லை. நமக்கே அவனைப்பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது

நம்மில் பலருக்கு உரிய சம்பளத்தைக் கேட்டுப்பெறப் பயம் , சாலை உடைசல் , குப்பை குவியல் இவற்றையெல்லாம் யாரிடம் முறையிடுவது என்று தெரிவதில்லை தெரிந்தாலும் உரியவர்களிடம் முறையிட,தயக்கம் , பயம் , சோம்பல் இந்தக்கோழைத்தனத்தை மறைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள , முகநூல் அவதாரம் எடுக்கிறோம் . விளாடிமின் புடின் , டிரம்ப் , மோடி , ஸ்டாலின் , எடப்பாடி என அனைவரையும் வீரமாக எதிர்க்கிறோம். வீரன் சமூகப்போராளி என நம்மை நம்ப வைத்துக் கொள்கிறோம்.

இதை மழைமான் எனப் படிமம் மூலம் அழகாகச் சொல்கிறது மழை மான் கதை.

சக பெண் ஊழியர் வீட்டுக்குச் சர்ப்ரைஸ் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி அளித்து ஹீரோ ஆகும் முயற்சி அசட்டுத்தனமாய் முடிகிறது. இப்படி அலுப்பூட்டும் வாழ்வில் சுவையாக ஏதேனும் செய்யும் பொருட்டு மான் ஒன்றைப் பார்க்க ஆசைப்படுகிறார் ஒருவர் அந்தத் தேடல் அனுபவத்தைச் சாகசமாக ஆக்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்களைக் கோட்டை விடுகிறார். நிஜ மானைத் தவற விட்டுவிட்டு மழைமான் ஒன்றைக் கற்பனையில் உருவாக்கி மழை நீர் மட்டுமே அருந்தும் கற்பனை மானைத் தான் பார்த்ததாகப் பிறரிடம் அளந்து விடுகிறார். அதைத் தானும் நம்புவது மட்டுமல்ல அதை உண்மையில் பார்க்கவும் செய்கிறார்

ஆனால் மழைமான் கதையைத் தன் மனைவியிடம் சொல்லும்போது அவள் சிரித்து விடுகிறாள். அவருக்கு வலிக்கிறது.

முகநூலில் சமூக ஊடகங்களில் நாம் உருவாக்கி அலைய விட்டிருக்கும் மழைமான்கள் எத்தனை எத்தனை

இந்தச் சிறுகதைத் தொகுப்பை ஒரு நான்லீனியர் நாவலாகவும் வாசிக்க இயலும்.

எளியவன் வலியவன் எனும் இருமையை இன்னொரு கோணத்தில் காட்டும் கதை , எதிர் கோணம். சிறந்த கேமிரா கலைஞனாக உருவாகி இருக்க வேண்டிய ஒருவரை வாழ்க்கை பேருந்து நடத்துநராக ஆக்கி வைத்துள்ளது அவரது வாழ்வின் ஒரு துளிதான் கதை. எங்கோ பெற்ற அடியை வேறு எங்கோ செலுத்தும் முடிவில்லா அர்த்தமற்ற விளையாட்டு

இந்த விளையாட்டின் அபத்தம் நாம் முன்பு பார்த்த கதையில் ஒரு கணத்தில் முகத்தில் அறைகிறது இக்கதையில் அந்தச் செயல்பாடு நிகழ்கிறது

பாடல்களுக்கும் நமக்குமான ( குறிப்பாகப் பெண்களுக்குமான ) உணர்வுப்பூர்வமான பந்தத்தை,பேசும் கதை , அபூர்வமான பறவையைத் தேடும் அனுபவம் முழுக்க முழுக்கக் கவிதை நடையில் அமைந்த மழைக்கதை என அனைத்தும் அழியாத ஏதோ ஒன்றைச் சொல்வதாகவே தோன்றுகிறது

வெறும் பிரார்த்தனை கதையில் பொறுப்பற்ற குடிகாரன் ஒருவனால் குடும்பம் அடையும் மன உளைச்சல் காட்டப்படுகிறது பொறுப்பற்ற தந்தை இரக்கமற்ற வேலை சூழல் கடுமையாக வேலை வாங்கும் முதலாளி என முழுக்க முழுக்க இருண்மையான வாழ்க்கை ஆனால் அந்த,முதலாளி ஒவ்வொரு நாளும் வீட்டுக்குக் கிளம்பும்போதும் பத்திரமா போய்ட்டு வாம்மா என அன்பாகப் பேசி ஒரு சாக்லேட் வழங்குவதில் அத்தனை வலியும் மறந்து போய்விடுகிறது

மாபெரும் இருளை விட ஒரு சின்னஞ்சிறு தீப்பொறி ஆற்றல் மிக்கது

இந்தத் தொகுதியின் செய்தி என எஸ்ரா எதுவும் உத்தேசித்து இருக்க மாட்டார் ஆனால் எனக்கு இத்தொகுதி வழங்கிய”செய்தி இதுதான்

மாபெரும் இருளை விட ஒரு சின்னஞ்சிறு தீப்பொறி ஆற்றல் மிக்கது

தூய வெளிச்சம் என்ற கடைசிக்கதை எனக்கு அவ்வளவு நிறைவளித்தது.

எத்தனையோ கனவுகளுடன் கலை உணர்வுடன் ஒரு மாளிகையை எழுப்புகிறார் குமாரசாமிப்பிள்ளை . வீட்டின் முகப்பில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் விளக்கு அந்தத் தெருவுக்கே இரவு முழுக்க நிலவு போல வெளிச்சமளிக்கும்

ஆனால் குமாரசாமிப்பிள்ளையின் வாரிசுகளைப் பொருத்தவரை அந்த வீட்டின் கலையுணர்வோ தூய வெளிச்சம் வழங்கும் அவரது நல்லெண்ணமோ பொருட்டில்லை..

பணம் மட்டுமே பொருட்டு. எதற்குத் தெண்டமாக மின்விளக்கு என அந்த விளக்கை நிறுத்தி விடுகின்றனர். பிள்ளையின் மறைவுக்குப்பிறகு அந்த வீடு இடிக்கப்படுகிறது

அப்படி என்றால் அவரது ரசனை நல்லெண்ணம் எல்லாம் காரிருளில் மறைந்து விட்டதா ? அந்த வெளிச்சம் யார் மனதிலும் இல்லாமல் இணைப்புச்சங்கிலி அறுந்து விட்டதா என்பதற்கு அற்புதமான பதிலைத்தருகிறது கதை

ரசனை , நல்லெண்ணம் எனும் வெளிச்சம் என்றும் மறைவதில்லை தனக்கான கடத்தியைத் தேர்வு செய்து கொண்டு அவை காலம் காலமாகத் தொடர்கின்றன

ஒரு திருடன்தான் இந்த வெளிச்சத்தை அடுத்த தலைமுறைக்கு ஏந்திச் செல்கிறான் என்பது சுவையான முரண்

அந்தக் கட்டடத்தை , அந்த வெளிச்சத்தை அணு அணுவாக ரசிப்பவன் அந்தத் திருடன். அந்த வீட்டிற்குள் ஒரு முறையாவது நுழைந்து பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டு உள்ளே திருடச் செல்கிறான் வீட்டின் இருண்மை அவ்வீட்டில் உள்ளோரின் மனநிலையை அவனுக்குத் தெரிவிக்கிறது

பிள்ளை மரணத்துக்கு இதயப்பூர்வமாக வருந்துபவன் அவன் மட்டுமே

அந்த வீடு இடிபட்டுத் தரைமட்டமாகும்போது அவ்வீட்டின் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு அவன் செல்வதுடன் கதை கவித்துவமாக முடிகிறது. அந்தத் தூய வெளிச்சம் நம்முள்ளும் பரவுகிறது

வித்தியாசமான துள்ளும் நடையில் அனைத்து கதைகளையும் படைத்துள்ளார் எஸ்ரா . சும்மா புரட்டிப்பார்க்கத்தான் எடுத்தேன் முடித்து விட்டுத்தான் வைத்தேன்

இப்படிச் சுவையான நடையில் ஆழமான இலக்கிய நூல்கள் வருவது அரிது

தேசாந்திரி பதிப்பகம் சிறப்பாக நூலை உருவாக்கியுள்ளது . அட்டை ஓவியம் அருமை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2022 23:30
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.