கரும்பனைமீது காற்று

அன்புள்ள ஜெ.

பின்தொடரும் நிழலின் குரல் பலவகையான நினைவுகளைக் கிளர்த்துகிறது. மனஓசைக் காலம் முதலே நமக்கிடையே அறிமுகம் உண்டு. இளந்தென்றலுடன் ஈரோட்டில் முதல்முறை சந்தித்தோம். நினைவிருக்குமென நினைக்கிறேன்

பின்தொடரும் நிழலின் குரலின் அட்டை என்னை பெருமூச்சுவிட வைக்கிறது. கண்ணீர் வருமளவுக்கு ஒரு தனிமையை உணர்கிறேன். எவ்வளவு நண்பர்களின் முகங்கள். எவ்வளவு ஆவேசமான உரையாடல்கள். தூக்கமற்ற ராத்திரிகள்.

அன்றைக்கு ஒருமுறை அந்நாவல் பற்றி தோழர் மருதையனிடம் பேசினேன். அப்போது அவர் அந்நாவலில் கே.கே.எம் தூக்கிவீசப்படுவதும், அவர் குருவாயூரப்பன் பக்திக்குச் செல்வதும் வன்மத்துடன் சொல்லப்பட்டிருப்பதாக ஒரு வார்த்தையுடன் முடித்துக்கொண்டார். இன்றைக்கு அவர் கே.கே.எம். இருந்த அதே நிலையில் இருப்பதை நினைத்தால் நெஞ்சில் ஒரு நடுக்கம். என்ன சொல்வதென்று தெரியவில்லை. நீங்கள் அதையெல்லாம் கற்பனை செய்து எழுதினீர்களா அல்லது ஒரு கலைஞனின் சாபம்போல அதெல்லாம் நடக்கிறதா என்றே தெரியவில்லை.

நான் உங்களைச் சந்தித்து கே.கே.எம் பற்றி கேட்டேன். நீங்கள் கே.ஆர்.கௌரியம்மா எப்படி கிருஷ்ணபக்தையாக ஆனார் என்று சொன்னீர்கள். சிலகாலம் கழித்து டபிள்யூ.ஆர்.வரதராஜன் தற்கொலை செய்துகொண்டார். அவமானப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டு. அப்படியே அவரை மறந்தும்விட்டார்கள்.

பின்தொடரும் நிழலின் குரல் எப்படி அச்சுஅசலாக அப்படியே திரும்பத் திரும்ப நிகழ்கிறது என்று பார்க்கையில் சோர்வும் தனிமையும் ஏற்படுகிறது. ஒரு நண்பரிடம் பேசும்போது அவர் வழக்கமான வசைகளைக் கொட்டினார். நான் சொன்னேன். தோழர், சும்மா ஒரு ஸ்போர்ட்ஸ் மாதிரி கட்சியரசியலை எடுத்துக்கொண்டு நிலைபாடுகளை கக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நட்டமும் இல்லை. அவர்களால் இப்படிப்பேசமுடியும். அவர்களுக்கு பின்தொடரும் நிழலின் குரல் புரியாது. ஆனால் தோழர் டபிள்யூ.ஆர்.வரதராசன் பின்தொடரும் நிழலின் குரல் வாசித்தார் என்றால் அவருக்குத் தெரியும். அவர் கடைசிநாட்களில் ஒருமுறையாவது நினைத்துப் பார்த்திருப்பார். தோழர் மறுபடி கத்த ஆரம்பித்தார். என்னவென்று சொல்வது. சிரித்துவைத்தேன்.

இன்றைக்கும் அந்நாவலின் பக்கங்கள் மறக்கவில்லை. கரும்பனைமீது காற்று என்று ஒரு அத்தியாயம். அந்த வரியே என்னை சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது பத்தாண்டுகளுக்கு முன்பு. மண்டை உறுமிக்கொண்டே இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை என அறிந்தேன். இப்போது காற்று நின்றுவிட்டது. ஆனால் இந்நாவலை மறுபடி படிக்க மாட்டேன். மறுபடியும் எல்லாவற்றையும் எண்ணி எண்ணி கணக்கிட ஆரம்பித்துவிடுவேன்.

ஆர்

தொடர்புக்கு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

vishnupurampublishing@gmail.com

https://www.vishnupurampublications.com/

மருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல்

அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு

தீவிரவாதமும் இலட்சியவாதமும்

உ.ரா.வரதராஜன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.