அறம் வழியாக நுழைவது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

நலம் . நலம் அறிய ஆவல் .  தங்களின் அறம் புத்தகத்தை தந்தையின் பரிந்துரையில்  படித்தேன் . வாழ்வின் அனைத்து மெய்த்தேடல்களுக்கான களஞ்சியமாக “அறம்” அமைந்தது . வாழ்வின் எதார்த்தங்களை என் இருபதாம் வயதில்  புரிய செய்தமைக்கு நன்றி . ” மனமே , சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு ” என்று கூறி ஓடிக்கொண்டு இருந்தேன் . அறம் சிறுகதைகள் அனைத்தும் பல்வேறு  கேள்விகளுக்கு பதிலாக அமைந்தன , வலிமை சேர்த்தன . விடை காண இயலாத பெரும் போராட்டமாக மரணத்தை எண்ணி இருந்தேன் . அன்பிற்குரியவர்களின் மரணத்தை ஏற்று கொண்டு , அதனை தாண்டி வாழும் பக்குவத்தை இந்நூலின் வரிகள் தந்தன .வாழ்வின் வழிகாட்டியை வழங்கியமைக்கு நன்றி . “அறம்” என்ற நூலை மையமாகக் கொண்டு செயல்பட்டால்  வரும் நாட்கள் வசந்தமாக அமையும் என்று உணர்ந்தேன் .

அறம் நூலில் வரும் ஒவ்வொரு சிறுகதையும் திருக்குறளின் அதிகாரங்களின் மிகச் சிறப்பான விளக்கங்களாக தோன்றியது .உதாரணமாக சோற்றுக்கணக்கு

என்னை உறங்கவிடாமல் செய்த சிறுகதை . திருக்குறளின் பொருட்பாலில் வரும் நல்குரவு என்னும் அதிகாரத்தின் வலியை உணர்த்தியது . “மக்கா நேர்மையா இருந்தா அதுக்குண்டான ருசி தன்னால வரும் பாத்துக்கோ” என்ற வரி மனதில் ஆழமாக பதிந்தது . “விதவிதமாக ஆயிரம் முறை தண்டவாளத்தில் விழுந்து செத்தேன்” என்ற வரியை பலமுறை படித்தேன் . இத்தகைய ஈடு இணை அற்ற படைப்பை வழங்கியதற்கு நன்றி .  யானை டாக்டர் ” கொல்லாமை ” என்னும் அதிகாரத்தை விளக்கியது . “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.” என்னும் திருக்குறளின் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக தாயார் பாதம் தோன்றியது . மத்துறு தயிர் கம்பராமாயணத்தின் பெருமையை உணரசெய்தது . அறத்துப்பால் , இல்லறவியல் ஆகியவற்றை உணர செய்தது . பெருவலி கதையில் கோமலின் வலி என்னை வாட்டியது . என்னதான் நவீனங்கள் , முற்போக்கு நிறைந்த நூற்றாண்டில் வாழ்ந்து வந்தாலும் அவ்வப்போது மனம் கடவுளை தேட தொடங்குகிறது என்பதை பெருவலி சிறுகதை மிக அழகாக உணர்த்தியது . நூறு நாற்காலிகள், என் மனதில் இருக்கும் அரசியல் பற்றிய எண்ணத்தால் ,மேலும் ஆழமாக  உணர முடிகின்றது .சரியான தலைமை இல்லாவிடில் ஆயிரம் நாற்காலிகள் இருந்தாலும் போதாது என்று தோன்றியது . இக்கதையில் அம்மாவின் மரணப்படுக்கை செய்தி என்னை கண்ணீர் விட்டு அழ செய்தது . ஓலைச்சிலுவை கதை வெள்ளைக்காரர்களை பற்றிய என் எண்ணம் முழுவதும் மாறியது .

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று தெரிந்திருந்தேன் . இக்கூற்றை உணர செய்தது அறம் புத்தகம் தான் .

வாழ்வை மாற்றியமைக்க வல்லதோர் படைப்பை தந்தமைக்கு நான் எவ்வாறு நன்றி கூறுவேன் என்று தெரியவில்லை . அறம் படித்து முடித்த பிறகு உங்களை காணும் வாய்ப்பு அமைந்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை . என் வாழ்வின் மிகச் சிறந்த நொடிகள் அவை . என் வாழ்வின் ஆசீர்வாதங்களை எண்ணும் போது “அறம்” புத்தகத்தை இருமுறை எண்ணி கொள்கிறேன் . நாம் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணைத்துள்ளேன் .இத்தனை நாட்கள் எப்படி இந்த அற்புத படைப்பை அறியாமல் இருந்தேன் என்று வருந்துகிறேன் .  நன்றி !

நன்றிகளுடன் ,                                                                                                            சுபாங்கி

அன்புள்ள சுபாங்கி,

நான் அறம் தொகுதியை பற்றி அவ்வப்போது எண்ணுவதுண்டு. அதன் முதன்மையான இடம் என்னவாக இருக்க முடியும்? பொதுவாக நவீன இலக்கியம் எதிர்மறையானது. விமர்சனக்கோணம் கொண்டது. இருண்மையானது. ஆனால் அதற்குள் அறம் வழியாக நுழையும் ஒருவர் நம்பிக்கையுடன் கனவுடன் நுழைய முடியும். நவீன இலக்கியத்தின் எந்த இருளும் அடிப்படையான அந்த நம்பிக்கையையும் கனவையும் கலைத்துவிடமுடியாது.

சந்தித்ததில் மகிழ்ச்சி

அன்புடன்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2022 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.