சொல்லப்படாத வாழ்க்கை.
தி.லட்சுமணன்.
நிமித்தம் நாவல் குறித்த விமர்சனம்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையைப் பற்றி நாவல்கள் எழுதப்படுவது மிகவும் குறைவு. இத்தகு சுழலில் எஸ்.ராமகிருஷ்ணன் “நிமித்தம்” என்ற சிறப்பான நாவலைப் படைத்துள்ளார்.

அந்த நாவலில் வரும் தேவராஜ் காதுகேளாத மாற்றுத்திறனாளி, அவன் தன் வாழ்க்கையில் காது கேளாத காரணத்தால் எவ்வளவு சிரமங்களைச் சந்திக்க வேண்டி வருகிறது என்பதைச் சிறப்பாக விளக்குகிறார்.
நாவலின் முதல் அத்தியாயத்திற்கு “அவனது இரவு” என்ற தலைப்பிட்டு ஆசிரியர் கதையைத் துவக்குகிறார். அந்த ஒர் இரவுதான் அவனுடைய (தேவராஜ்) வாழ்க்கையின் கடந்த கால நிகழ்வுகளை எண்ணிப்பார்ப்பதாகவுள்ளது. மொத்த நாவலும் அவனது பிளாஷ்பேக் தான். திரைப்படம் காணுவது போல அவனது வாழ்க்கையை நாம் காணத் துவங்குகிறோம்.
இப்போது அவனுக்கு நாற்பத்தியேழு வயது. இந்த வயதில்தான் அவனுக்குத் திருமணம் நடக்கப்போகிறது. இவனைக் கணவனாக ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ள பெண்ணுக்கு வயது 34
ஏன் தேவாராஜுக்கு 47 வயது ஆகும் வரை திருமணம் ஆகவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலே நாவலின் யைம்.
அவனுக்குப் பெண் கிடைக்காமல் போனதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள், ஒன்று அவனுக்குக் காது கேட்காது, இரண்டு அவனுக்கு நிரந்தர வேலையோ, வருமானமோ இல்லை என்பதுதான்.
பொதுவாகவே மாற்றுத்தினாளிகளுக்கு அவ்வளவு லேசில் திருமணம் நடைபெறுவதில்லை அப்படியே நடந்தாலும், நடக்கும் அந்தப் பெரும்பான்மை திருமணங்களில் இரண்டுபேருமே ஏதோ ஒரு வகையில் மாற்றுத்திறனாளிகளாகவே இருப்பார்கள். இதில் அப்படியான திருமணம் நடக்கவில்லை. பெண் மாற்றுதிறனாளியில்லை. ஆனால் குடும்பக் கஷ்டம் காரணமாகத் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கிறார்.
விடிந்தால் திருமணம். ஆனால் ஏதோஒரு காரணத்தால் திருமணம் நின்றுவிடுமோ என்ற பயம் அவன் மனத்திற்குள் இருக்கிறது.
நாவலில் வரும் கதைநாயகன் தேவராஜன் எதையும் எளிதாகப் பழகிக்கொள்ள முடியாதவனாக இருக்கிறான். காது கேளாதது ஒரு குறை என்றால் அதைவிடப் பெரிய குறை அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையிருப்பது. குரங்கு தன் புண்களைச் சதா நோண்டிக் கொண்டிருப்பது போல் அவனது மனசு சதா தாழ்வுணர்ச்சியைக் கிளறிக் கொண்டே இருக்கிறது.
தான் எதற்கும் லாயக் கற்றவன் என்று பல நேரங்களில் நினைக்கிறான். அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வு நாவலில் விவரிக்கபடுகிறது
வீட்டில் பதுங்கிக்கொண்டிருந்த எலி திடீரென ஒரு நாள் யார் கண்ணிலாவது பட்டுவிடும். அதை அடிக்க மக்கள் விரட்டுவார்கள். எங்கே ஓடி ஒளிவது என்று தெரியாமல் வீதிக்கு ஓடிவிட்டால் என்ன கதி? அங்கேயும் மக்கள் தடிகளோடு, கல்லுகளோடு அடிக்க ஓடுவார்கள். திடீரென எலிக்கு உலகம் சுருங்கிவிடும். அவ்வளவுதான் அதன் வாழ்க்கை. திடீரென ஒரு குண்டாந்தடி அதன் தலையில் விழ, ரத்தம் கசிய செத்துப்போகும். இப்படித்தான் இந்த உலகம், இது ஒரு வேட்டைக்களம். ஓடினால் துரத்திக்கொண்டே இருக்கும், அதன் கண்ணில் ஒளிந்து வாழ்வது சுலபமல்ல. தன்கதியும் இபப்படி ஆகிவிடுமோ எனத் தேவராஜ் அஞ்சுகிறான்
.தேவராஜிற்கு உதவி செய்வதற்காக அவனது நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். ராமசுப்பு பல்வேறு விதங்களில் உதவி செய்கிறான். திருமணமும் அவனது ஏற்பாட்டில் தான் நடக்கிறது. ராமசுப்புவிடம் காணப்படும் நம்பிக்கை தேவராஜிடம் காணப்படுவதில்லை.
வயது வளர வளர தொடச்சியாக அவமானங்களும் கசப்பான நிகழ்வுகளும் அவனை வீட்டில் தங்கி வாழமுடியாதபடி துரத்துகின்றன
.தேவாராஜின் வாழ்க்கையில் அவனுடைய இளமைக்கால நண்பன் ராமசுப்பு மட்டுமல்ல, சுதர்சனம் என்கிற ஓவிய ஆசிரியரும் அவர் மனைவி – ஆசிரியை அங்கயற்கண்ணியும் தேவராஜனுக்குக் கிடைத்த அற்புதமான மனிதர்கள்.
அவனைச் சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ஆசிரியர் சுதர்சனம் ஓட்டிச் சென்றபோது ஒரு நாள் கூடத் தன் தகப்பனார் இப்படி என்னை அழைத்துச் செல்லவில்லையே என ஏங்குகிறான்..
டீச்சரைப் போல் எனக்கு ஒரு அம்மா கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவனுக்குள் ஆழமாக உள்ளது.
தேவராஜ் கனவுகளில் மட்டுமே சந்தோசமாக இருக்கிறான். அவனது கனவுகளில் சில தொடர்ச்சியாக வருகின்றன. கனவில் அவனுக்குக் காது கேட்கிறது. அழகான பெண்களுடன் சுற்றியலைய முடிகிறது. ஒரு மனிதன் வளரும்போது கூடவே அவனது கனவுகளும் வளர்கின்றன. கனவுகளை நாம் வளர்த்தெடுக்க முடியாது என்று சொல்லுவது பொய். சிலரால் அது முடியக்கூடும். தேவராஜ் அப்படிப்பட்ட ஒருவன். .
கனவுகள் மனதின் நிறைவேறாத ஆசைகள் என்பதெல்லாம் வெறுங் கதை. கனவுகள் இன்னொரு வாழ்க்கை. உண்மையிலே ஒருவன் கனவின் வழியே மட்டுமே முன்னறியாத விசித்திர அனுபவங்களைப் பெறுகிறான். பிரச்சனை அவன் விழித்துக்கொள்ளுவதே. விழிப்புற்றவுடன் மனம் இன்னொரு வாழ்க்கையை நம்ப மறுக்கிறது. அதைப் பொய் என்று ஒதுக்கி வைக்கிறது. கனவு என்று சொல்லி சுருங்கிவிடுகிறது. வாழ்க்கையில் நாம் கண்ட முதல் கனவு எதுவென நமக்குத் தெரியாது.
சமூகத்தில் மற்றவர்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தரப்பட வேண்டும். அவர்கள் தன்னம்பிக்கையுட்ன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் புறக்கணிக்கபடும் போது தேவராஜ் போன்ற வாழ்க்கையைத் தான் வாழுவார்கள் என்பதை இந்த நாவல் மூலம் சிறப்பாக உணர்த்தியிருக்கிறார். அதற்காக எஸ் ராமகிருஷ்ணனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
