நாதஸ்வரத்தின் பின்னால்

கோபாலகிருஷணன் கணேசன்

சஞ்சாரம் நாவல் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு முறை எஸ். ரா வின் புத்தகத்தை வாசித்து முடிக்கும் போதும் மனதில் விட்டில் பூச்சிகள் அலைவதைப் போல நினைவுகளும் வலிகளும் அலையத் துவங்கிவிடுகிறது.

திடீரென்று எனது ஊரில் யாராவது நாதஸ்வரம் வாசித்திருக்கிறார்களா? என்று யோசித்துப் பார்த்தேன். கோவில் கொடையில் நாயனம் வாசித்தது நினைவிற்கு வந்தது. மற்றபடி எங்கள் ஊர் முருகன் கோவிலில் அன்றாடம் சிறிது நேரம் ஒருவர் நாயனம் வாசிப்பது வழக்கம். அதைத்தவிர வேறு எதுவும் நாதஸ்வரம் பற்றித் தெரியாது

நாதஸ்வரக் கலைக்குப் பின்னர் இப்படியான மனிதர்களின் அவல வாழ்க்கை ஒளிந்து கொண்டுள்ளதை நாவலின் வழியே தான் உணர முடிகிறது.

சாலையில் எதாவது ஒரு நிகழ்ச்சியில் நாம் கடந்து போகையில் நாதஸ்வரம் வாசிக்கும் யாரையாவது பார்த்தால் வெள்ளை வேஷ்டி சட்டை, பாகவதர் மாதிரி படிய வாரிய தலை முடி, வாயில் வெற்றிலை பாக்குச் சிவப்புக் கறை, கையில் மோதிரம், நகை தவிர வேறெதுவும் தெரியாது. ஆனால் அந்த இசை அதன் புனிதம், ராகக் கீர்த்தனைகள், அந்தக் கலைஞர்களின் திறமை என நாவலில் எஸ். ரா மாபெரும் பிரமாண்ட சித்திரமே வரைந்து காட்டுகிறார்.

ரத்தினம் மிக இயல்பாக நாதஸ்வர கலைஞனாக உருவாக்கப் பட்டிருக்கிறார். உண்மையில் அவமானப் படுத்தப்பட்ட, ஆதரிக்கப் படாத கலையின் வலியும் வேதனையும் கொண்ட கலைஞனின் குரலாகவே பக்கிரி வருகிறான் .

நாவலின் தொடக்கத்தில் சூலக்கருப்பசாமி கோவில் முன்பாக அவர்கள் அவமதிக்கப் படுவது நாம் என்றோ வாழ்வில் அந்தச் சம்பவங்களைப் பார்த்திருப்போம் ஆனால் எதுவும் செய்யாமலே அவர்களை ஆதரிக்காமல் கடந்து வந்திருப்போம். அதுமட்டுமில்லாமல் கரகாட்டம், நாடகக் கலைஞர்கள், யானைப்பாகன் எனப் பல மனிதர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகிறார். கிட்டத்தட்ட இன்றைக்கு வாசிக்கையில் இது ஒரு பின் நவீனத்துவ நாவல் எனச் சொல்ல முடித்தாலும் இந்தப் புத்தகம் சொல்கிற உண்மை என்றைக்கும் பொருந்தும் தான்.

ஏன் அனைத்து கலைகளுக்கும், புறக்கணிக்கப்பட்ட கால மாற்றத்தால் நலிவடைந்து போன தொழிற் கலைஞர்களும், நாட்டுப் புற கலைஞர்களின் வாழ்க்கையும் கூட இப்படியான நிலைமைக்கு உள்ளாக்கப் பட்டிருப்பதும் நிதர்சனம். கிராமப் புறங்களில் இன்றும் கோவில் திருவிழாக்களில் நாதஸ்வரம், வில்லுப்பாட்டு, கரகாட்டம், தெருக்கூத்து போன்ற பண்பாட்டுக் கலைகள் மிகச் சொற்பமாகவே வழக்கத்தில் உள்ளன .

சமகாலத் திரைப்படங்கள் கிராமப் புற வாழ்வியலைச் சாதிக் கொடுமைகளை, அங்குள்ள நில ஆக்கிரமிப்பு மற்றும் கார்பொரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தைப் பற்றிப் பரவலாகப் பேச ஆரம்பித்து விட்டன. ஆனால் கிராமியக் கலைகள், நாட்டுப் புற கலைஞர்களின் அவல வாழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றால் இல்லைதான் என்று சொல்ல வேண்டும் . நாடோடித் தானமான அவர்கள் வாழ்க்கை வறுமை, என நிலைகொள்ளமைதான் இந்தப் படைப்புச் சொல்கிறது .

நாவலில் பல இடங்களில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்கள் அவமதிப்புக்குள்ளாகிறார்கள். இன்றைய வாழ்க்கையில் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் மேற்கத்திய பாணியில் அல்லது சினிமாத்தனமான கொண்டாட்டங்கள் பெருகிப் போய்விட்டன. ட்ரம்ஸ், நடனம், கும்பலாகச் சேர்ந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ்கிறார்கள் . ஆனால் கூடவே இந்த மேளம், நாதஸ்வர கலைஞர்களை ஏற்பாடு செய்து அவர்களை அவமானப் படுத்துகிறார்கள் . வெளி நாடு போய் வாசிக்கச் செல்லும் ரத்தினம், பக்கிரி, பழனி குழுவினர் எத்தனை இடர் பாடுகளைச் சந்திக்கின்றனர் என்பது கண் முன்னே காட்சியாக விரிகிறது. பலவிதமாக வாழ்ந்து மறைந்த மகத்தான நாதஸ்வர வித்துவான்களின் வாழ்க்கையும் இந்த நாவலில் சொல்லப் படுகிறது.

இசையுடன் பண்பாடு நாகரீகத்தைப் பற்றிய எழுதப் பட்டிருந்தாலும் நாவலில் சாதிக் கொடுமைகள், சிதைந்து போன கிராமங்களையும் அதன் மனிதர்களும் நினைவுகளும் நமக்குக் கண்ணீரை வரவழைத்துவிடும். நல்ல புத்தகம் ஒரு மனிதனை உற்சாகப் படுத்தி நம்பிக்கை ஏற்படுத்திச் சுயசிந்தனை கொண்டவனாக மாற்றும் அதே சமயத்தியதில் சக மனிதத் துயரத்தைக் கொண்டு கண்ணீர் விட வைப்பதும் அடங்கும். அந்த வகையில் இந்தப் புத்தகம் மிக இன்றியமையாத முக்கியமான படைப்பு.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2022 03:58
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.