நாடகப் பயணம்
எனது நாடக வாழ்க்கை என்ற அவ்வை தி.க.சண்முகம் நூலில் மல்லாங்கிணருக்கு நாடகம் போட வந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில் சங்கரதாஸ் சுவாமிகள் மல்லாங்கிணருக்கு வந்து நாடகம் நடத்திய செய்தி இடம்பெற்றுள்ளது.

எங்கள் வீட்டின் அருகிலுள்ள தேரடியில் தான் அந்தக் காலத்தில் நாடகங்கள் நடந்திருக்கின்றன.

மல்லாங்கிணரில் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏதாவது நடக்கிறது என்றால் வேட்டுப் போடுவார்கள். அந்தச் சப்தம் கேட்டு பக்கத்துக் கிராமத்து மக்கள் யாவரும் ஒன்று திரண்டு வந்துவிடுவார்கள். அந்த விளம்பர யுக்தியை வியந்து டிகே சண்முகம் எழுதியிருக்கிறார்.
ஆடல் இல்லாத நாடகத்தை மக்கள் எப்படி ரசித்தார்கள் என்பதைப் பற்றிய குறிப்பும் சுவாரஸ்யமானது.





கிராமப்புறங்களைத் தேடி இப்படி நாடகக்குழுக்கள் சென்று வந்த காலம் மறைந்துவிட்டது. இன்று தொலைக்காட்சி, சினிமா தவிர வேறு கலைநிகழ்ச்சிகள் இல்லை.
கோவில் திருவிழாவிற்கு நாடகம் ஏற்பாடு செய்கிறவர்கள் கூட இப்போதெல்லாம் மெல்லிசை நிகழ்ச்சி அல்லது ஆடல்பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துவிடுகிறார்கள்.
விடிய விடிய வள்ளி திருமணம் நாடகம் நடந்த நாட்கள் நினைவில் பசுமையாக இருக்கின்றன. நாடகம் முடிந்த பிறகு நடிகர்கள் கௌரவிக்கப்படுவார்கள். அப்போது விவசாயிகள் தங்களின் நிலத்தில் விளைந்த காய்கறிகள். பழங்கள். கம்பு, சோளம் போன்ற தானியங்கள். நாட்டுக்கோழிகளை அன்புப் பரிசாகக் கொடுப்பதைக் கண்டிருக்கிறேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் பண்பாட்டுச் சூழலையும் நாடக் குழுக்களின் செயல்பாடுகளையும் மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார் டி.கே.சண்முகம். ஒரு காலப்பெட்டகமாகவே இதைக் கருதுகிறேன்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
