பெரியம்மாவின் சொற்கள், பிரதமன் – கடிதங்கள்

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெ,

நலமா? நூலகத்திருந்து தங்கள் உச்சவழு சிறுகதை புத்தகம் எடுத்து வந்து வைத்திருந்தேன். வேறு புத்தகங்கள் இருந்ததால் தள்ளி கொண்டிருந்தது. இன்று பெரியம்மாவின் சொற்கள் படித்ததும் தங்களிடம் பகிர்ந்து கொள்ள தோன்றியது.

முதலில் படித்ததும் கவர்ந்தது, ஒரு மனம் எப்படி புது விஷயங்களை உள் வாங்கி கொள்கிறது என்பதும் அழகிய நடையும் தான். ஆனால் இது எளிய மனம் கொள்ளும் மோதல் அல்ல என்று கதை இறுதியில், தன் கொள்ளு பேத்தி நான்காவது திருமணம் செய்து கொண்டதை பெரியம்மா “அவ அந்த ஊரு குட்டியில்லா? அந்த ஊரிலே பொம்புளங்க மனசுக்கு பிடிச்சவன கெட்டிகிட்டு மானம் மரியாதையா சந்தோசமா இருக்காளுக ” என்று ஏற்குமிடத்தில் தான் இந்த கதையால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். மீள் வாசிப்பு செய்யும் போது தான் இதனை எழுதுவோம் என்று நினைத்தேன்.

பெரியம்மா ஒரு மேல் தட்டு பெண். அத்தனை வசதிகளும் இருந்தாலும் பழைய கால கட்டுப்பாடுகளால் பிணைத்தும் வைக்கப்பட்டவள். அவள் அறிந்ததெல்லாம் புராண கதைகள் வழியாக தான். அதுவும் கடந்த 40 வருடங்களாக, கணவன் இறந்த பிறகு. தினமும் புலவரை கொண்டு வீட்டில் இருக்கும் சிறு கோயிலில் புராண பாராயணமும், விளக்கமும் அதனையும் அனுபத்தையும் கொண்டு உருவாக்கிய சொந்த புராண கதைகளும் கொண்ட, ஒரு பாரம்பரிய உதாரண இந்திய பெண்ணின் மனதில் உருவாகி இருக்கும் கருத்துக்களை, ஆங்கில மொழியில் தெரிந்து கொள்ள நினைக்கும் போது நடக்கும் சுவரசியமான நிகழ்வுகளே கதை எனலாம் சுருக்கமாக.

ஆங்கில வார்த்தைகள் பொருள் கொள்ள துவங்கும் முன்பே, வார்த்தையின் ஒலி வழியே அவள் அகம் அடையும் பொருளும் ஏற்பும் சுவை பட சொல்லப்பட்டு இருந்தது. நாய் நன்றியுள்ளது என்று சொல்ல கதை சொல்லி எடுக்கும் முயற்சிகளும் பெரியம்மாவின் பதில்களும் ரகளையாக இருந்தது.

முருகன் அருளை எப்படி சொல்வது என்ற கேள்வி திகைப்பூட்டியது. இறைவா என்னை இரட்சியும்! இறைவா என்மேல் இரக்கம் காட்டும்! ஆண்டவரே என்னை கைவிடாதேயும்! என்று தானே கிறித்துவ பிரார்த்தனை சொல்கிறது(நான் அறிந்தவரையில் ). அருளளை எப்படி எதிர் கொள்ளும் ஆங்கிலம். Bless என்று சொல்லலாமா? தெரியவில்லை.

Manners என்பதை நாகரிகம் என்று சொல்லும்போது, அது அழகு படுத்தி கொள்ளுதலாகவே பெரியம்மாவிற்கு பொருள் கொள்ளுகிறது. ஆனால், சீதையோடு இணையும் போது நாகரிகத்தின் சித்திரம் உடனே மாறிவிடுகிறது. அடுத்த பிரச்சனையாக கற்பு சொல்லப்பட்டு, மரபான மனதிற்கு குந்தியோ பாஞ்சாலியோ விளக்கம் அல்ல என்று ஏற்கிறாள் பெரியம்மா.

இடையே சொல்லப்படும் இந்திய மேற்கத்திய புராண கதைகளும், மொழிக்கு நடுவே உள்ள தூரத்தையும், நாகரிகத்திற்கு இடையேயான தொடர்பையும் அறிய உதவும் உள்ளடுக்காக உதவுகின்றன. இருவேறு நாகரிகங்கள் சந்திக்கும் புள்ளிகளாகவும், புதியவர்களுக்கு தொடங்கும் புள்ளியாவாகவும் அமைய சாத்தியம் கொண்ட அழகான கதை.

நன்றி

க சரத்குமார்

அன்புள்ள ஜெ

உங்கள் சிறுகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். 1993 முதல் உங்கள் கதைகளை வாசிப்பவன் நான். முந்தைய கதைகளில் இருந்த ஏதோ ஒரு கசப்பு இப்போது கனிந்திருப்பதை காண்கிறேன். அன்றிருந்த இறுக்கம் இல்லை. சுந்தர ராமசாமியிடமிருந்து பஷீர் நோக்கி நகர்ந்திருக்கிறீர்கள். பிரதமன், பெரியம்மாவின் சொற்கள் இரண்டு கதைகளுமே அற்புதமானவை. அதிலுள்ள கனிவு எட்டுவதற்கு அரியது. கலை வழியாக அங்கே செல்லமுடியாது. அது கிராஃப்ட் அல்ல. அகம் கனிந்தால் கதை அப்படியே ஆகிவிடுகிறது. அந்த கனிவுதான் பிரதமன் கதையின் சாரமும்.

எம்.ஆர்.ராம்

பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு

டேவிட் பெல்லொஸ்,பெரியம்மாவின் சொற்கள்

பெரியம்மாவின் சொற்கள் [சிறுகதை]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2022 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.