சடம் கடிதங்கள்-2

சடம் [சிறுகதை] ஜெயமோகன்

ஜடம் இக்கதையின் பல களங்கள் அதிர்ச்சி ஊட்டக் கூடியது. மிக தீவிரமான தத்துவார்த்த கனம் கொண்ட கதையை துப்பறியும் கதை பாணியில் மிக இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது. உரையாடல் வழியாகவே கதையை கொண்டு செல்கிறது.முழுக்கமுழுக்க காட்டின் வர்ணையையே கதையை முன்னெடுத்துச் செல்கிறது. காட்சிகள் வழியாக வெளி வந்த போலீஸ்காரரரின் குணாதிசயம்தான் கதை.

சிஜ்ஜடம் என்பது சைவசித்தாந்தக்கருத்து. நாம் வெளியே பார்க்கும் ஒவ்வொரு பொருளும் இரண்டு அம்சங்கள் கொண்டது. ஒன்று ஜடம். இன்னொன்று நமது சித்தம். நாம் சித்தம் இல்லாமலிருந்தால் வெளியே உள்ள பொருள் ஜடமாக இருக்கும். நாம் சித்தம் கொள்கையில் அதுக்கு உயிரும் அர்த்தமும் வந்துவிடும். சிவம்தான் சித்தம். ஆகவே சிவம்தான் ஜடத்தை சிஜ்ஜடம் ஆக்குகிறது

இங்கே போலீஸ்காரர் தான் விரும்பும்படி பெண்களை ஆக்கி அதன்பின் உறவுகொள்பவர். அவர்களை உயிர்த்துடிப்பு கொள்ளவைக்க அவர்களை அவர் சித்திரவதையும் செய்ய்கிறார். அப்படிப்பட்டவர் முன் ஓர் அழகி. அவள் ஜடம். அவள்மேல் அவருடைய சித்தம் முட்டி மோதி அவளை உயிர்பெறச்செய்கிறது.

அந்தப் பிணம் பெண்ணாகும் தருணம்தான் கதையின் உச்சம். இதை முன்பு அருணகிரி ஸ்வாமிகள் சொல்வார்கள். வெள்ளெலும்பு ஜடம்தான். அதில் சிவஞானம் என்னும் திருட்டினை தொடும்போது அது பெண் ஆகிறது. திருட்டினை என்பது ஒரு மனிதனுக்குள் உள்ள உயிர்ச்சக்தி. அது அவனை விட்டு விலகினால் அவனும் பிணம்தான்.அந்த ஆசை அல்லது கிரியாசக்தி ஜடத்தை உயிர்கொள்ளவைக்கிறது.

சிறப்பான சிறுகதை.

ஆ. ஞானசம்பந்தன்

 

அன்புள்ள ஜெ

ஜடம் கதை படித்தேன். எந்த கிரியேட்டிவிட்டியும் இல்லாத போலீஸ்காரர் சுடலைப்பிள்ளை அந்தக்காட்டை பார்க்கிறர். அது வெறும் சடமாக இருக்கிறது. அவருக்கு அந்த காட்டின் அழகோ மகத்துவமோ தெரியவில்லை. அவருக்கு அது பொருட்கள் மட்டும்தான். ஆனால் அவருக்குள் காமம் இருக்கிறது. அந்தக்காமம் அழகுணர்வாக வெளிப்படுகிறது. அவர் அந்தப்பிணத்தை புணர்கிறார். அது உயிர் கொள்கிறது. அதேபோல அந்தக்காட்டையும் அவர் புணர்வார் என்றால் அது உயிர்கொள்ளும். அதன்பின் அவரால் அதிலிருந்து விடுபடவே முடியாது. அவர் அங்கேயேதான் இருப்பார்.

சைவமரபில் இந்தக்கதை வேறுசிலவகைகளில் சொல்லப்படுகிறது. இந்தப்பிரபஞ்சத்தை நாம் அறிவதென்பது புணர்தல்தான். சித்தம் ஜடத்தை புணர்வதுதான். சிஜ்ஜட சமன்வயம்தான் புணர்ச்சி. சித்தர்பாடல்களில் வரும் புணர்ச்சி என்பது இதுதான். புணர்ந்த நிலையில்தான் இங்கே எல்லாமே இருக்கும். ஞானானந்தசாமிகள் நாய்கள் போல புணர்ந்த நிலையில்தான் உலகத்திலுள்ள எல்லாமே உள்ளன என்று சொல்வார். சிவபோதம் என்பது அப்புணர்ச்சியை விலக்குவது. ஜடத்தில் இருந்து சித்தம் விலகும். ஜடம் மீண்டும் ஜடமாகும். சித்தம் சுத்தசிவமாக ஆகி சுடர்விடும்.

ஒரு சித்தர் உருவாவதன் கதை. அவருக்கு அந்த முதல் மண்டையடி கிடைத்த கணத்திலே கதை முடிந்துவிடுகிறது

செல்வக்குமரன் பழனிவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2022 10:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.