ஜின்களின் ஆசான் – சௌந்தர்

ஜின்களின் ஆசான் வாங்க

புத்தாண்டின் முதல் நாளில் ஒரு சூஃபி மரபு சார்ந்த புத்தகத்தில் தொடங்கலாம் என்று நினைக்கையில் முதலில் அலமாரியில் தென்பட்டது. நமது கோவை விஷ்ணுபுரம் விழாவில் வாங்கிய “ஜின்களின் ஆசான் – சூபி நாவல்” என்கிற நூல் தான்.

ஒரு இலக்கிய பிரதியை படித்து முடித்தபின் ”ஆம். நான் இதை படித்ததன் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று தோன்றினால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது இதன் அனுபவம்.

கதை என்னவோ. ஒரு பாலைவனத்தில் முற்காலத்தில் தொலைந்து போன முத்திரை மோதிரத்தை கண்டெடுக்க செல்லும் ஒரு பணயக்குழுவின், துப்பறியும் கதைதான். ஆனால், அது சொல்லப்பட்ட விதத்திலும், சூஃபி மரபையும், ஜின்களின் உலகையும் மிகக்கச்சிதமாக அறிமுகம் செய்து, கையாண்ட விதத்திலும் தான் இந்நூலை தனித்துவமான நாவலாக்குகிறது.

மிர்தாதின் புத்தகம், நான்காவது தடம் {குர்ட்ஜிப் -வாழ்க்கை வரலாறு} போன்ற சூஃபி அல்லது மெய்ஞானியரின் கதைகளை சொல்லும் நூல்களில் இருந்து இந்நாவல் தனித்துவம் அடைவதும். இது சொல்லப்பட்ட விதத்தில் தான்.

குரு -சிஷ்ய உரையாடலில் தான் நாவல் துவங்குகிறது. மூத்த சூஃபி ஞானி நடுவில் அமர்ந்திருக்க, அரைவடட வடிவில் தர்வேஷ் எனப்படும் தீக்ஷை பெற்ற /பெறப்போகும் சிஷ்யர்கள் அமர்ந்து, மெல்லிய பாடலும், பேச்சும், களிப்புமாக ஒரு இரவு தொடங்குகிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அறுபடாமல் தொடரும் இந்த ஞான உரையாடல், இந்த இரவில், யூத, இஸ்லாமிய, கிருஸ்துவ மத நம்பிக்கைகளின் படி, மனித படைப்புக்கு முன்னரே இறைவனால் படைக்கப்பட்ட “ஜின்கள்” எனப்படும், உயிரினம், குறித்தும் அதன் பல்வேறு உருவங்கள், குணங்கள் குறித்தும் உரையாடப்படுகிறது.

ஜின்கள் கதைக்குள் வந்தவுடேனேயே அதற்கு சமமாக, தொல்பொருள் ஒன்றை தேடி பாலைவனம் செல்லும் ஆராய்ச்சி குழு ஒன்றின் சாகச கதையும், வந்து இணைந்து கொள்கிறது. எனினும் மைய பேசுபொருள் மேற்சொன்ன இரண்டுமல்ல.

முழுமுதற் பொருளான இறையே- நாவலின் மையம். அந்த முழுமுதல் இறையை -இறையெனும் உணர்வை, அடைய சூஃபி மரபின் மெய்ஞ்ஞானியர் நிரை வந்து, உயிரினங்கள் அனைத்தயும் ”அவன்பால்” திருப்பும் ஒற்றை நோக்குடன் செய்த சாகசங்களும், கருணையும், தான் கதையின் மையம்.

சூஃபி மரபுக்கே உரித்தான மத, இன, பாகுபாடற்ற ‘இறையுணர்வு’ என்கிற கோட்ப்பாட்டை முதல் அத்தியாயமே, ஒரு கவிதை மூலம் விவரித்து விடுகிறது.

ஒவ்வொரு வடிவத்திற்கும்,

தோதாகிவிட்டது என் இதயம்.

மாறிமான்கள் மான்கள் மேயும் புல்வெளி அது.

கிறிஸ்த்தவ துறவிகளுக்கு ஒரு மடம்.

சிலைகளுக்கு ஒரு கோயில்.

புனித பயணிக்கொரு கஅபா.

வேதத்தின் பலகை.

குரான் மறைநூல்.

நான் காதல் சமயத்தை தொடர்கிறேன்.

எத்திசை ஏகினும்

அத்திசையே எனது மார்க்கம்.

அதுவே எனது நம்பிக்கை.

{முஹையதீன் இப்னுல் அரபி}

ரமீஸ் பிலாலி

ஒரு சாகச,  மாய-எதார்த்த நாவலுக்குள், இறையுணர்வு சிந்தனையை அல்லது ஒரு ஞான மரபின் சிந்தனையை சொல்லுவதில், சற்று பிசகினாலும், அந்த நாவல் வடிவம், பக்தி புத்தகமாகவோ,  சாகச-திகில் கதையாகவோ மாறிவிடும், எனினும். அந்த கத்திமேல் பயணத்தை, மிகச்சரியாக நூலாசிரியர். செய்து வெற்றியும், பெற்றுள்ளார் என்றே சொல்லவேண்டும்.

உதாரணமாக, பாலைவனத்து நிலக்காட்சியில் நாம் கற்பனை செய்வதற்கான, வண்ணங்களும் வடிவங்களும் மிகமிக குறைவாகவே இருக்கும், அதை ஜின்களின் உலகுடன் இணைத்து உருவாக்கும் கற்பனை அபரிமிதமானது.

பாலையின் மணல் சூறாவளிக்குள் சிக்கிக்கொண்ட பயணக்குழுவிற்கு, எட்டு திக்கிலும் இருளைத்தவிர, வேறு எந்த உருவமும் இல்லை. அந்த இடத்தில ஒரு ஜின் உலகம் உயிர்பெற்று வருகிறது. பூமியில் இதுவரை கண்டிராத அத்தனை காட்சிகளையும்,  கனவுவெளியையும்,  வண்ணங்களையும், அள்ளித்தெளிக்கிறது.

அதில், குழுவினர் கட்டுண்டு, மனம் பேதலித்து கிடக்கையில், தீமை செய்யும் ஜின்களும், நன்மை செய்யும் ஜின்களும், பாதாளத்தில் இருந்து எழுந்துவந்து ஊழி தாண்டவம் நிகழ்த்துகின்றன. அவற்றின் தாண்டவத்தை, சூஃபி பக்கீர் தன் இறை வல்லமையால், அடக்கி ஒடுக்குகிறார்.

இந்த மாயாவாத காட்சிகள் நிகழ்ந்துகொண்டு இருக்கும் பொழுதே,  கதை யதார்த்த உலகிற்குள் நுழைந்து விடுகிறது. ஊழி தாண்டவத்திலிருந்து தப்பி தன் ஆசானை நோக்கி,பாலை மணலிலும்,  வாகனத்திலும்,  ஓடுகிறான் கதைசொல்லி.

சரி, இந்த மனிதர்களின் சாகச உலகிற்கும், ஜின்களின் மாய உலகிற்கும், இடையே சூஃபி ஞானியருக்கான தேவையும் இடமும் என்ன?

குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்குமே, ஒவ்வொரு வகையில் தயக்கமும்,  அவநம்பிக்கையும், இயலாமையும்,வெறுப்பும் இயல்பிலேயே இருக்கிறது, அப்படியான இதயங்களை எல்லாம்வல்ல இறையின் மீது திருப்புவதற்கும்,  அதற்கான மரபார்ந்த சூஃபி பயிற்சிகளை வழங்குவதற்கும், கதை முழுவதும், வரும் சூஃபி ஞானியர் மனிதர்களுக்கான மீட்பாகவும், அருட்கொடையாகவும் அமைக்கின்றனர்.

இன்னொரு முனையில், ஜின்களின் உலகில் நுழைந்து, அவற்றுடன் உரையாடியும், போரிட்டும்,  வாழ்த்தியும், இதுவரை ஜின் உலகில் நிகழ்வே நிகழாத ”இறையருள்” எனும் அற்புதத்தை நிகழ்த்தி காட்டியும், தங்கள் இருப்பை, ஆசியை,  போதனையை வெளிப்படுத்துகின்றனர்.

அரேபிய இரவு கதைகள் போல நாவல் முழுவதும் கதைக்குள் கதைகள் வந்துகொண்டே இருக்கிறது. தொன்மையான பேரரசர் சுலைமான் நபியின் கதை, ஒவ்வொரு ஜின்னுக்கும் ஒரு கதை. நாவலில் வரும் மனிதர்களின் கதை. சூஃபி ஞானியரின் கதை. என ஒரு கதைத்திரட்டு போல அமைந்திருப்பது, மொத்த நாவலையும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.

இந்நாவலை ஒரு குழந்தைக்கு கதையாக விரித்து சொல்லத் தொடங்கினால் முதல் கதையிலே அக்குழந்தை கதைக்குள் வந்துவிடும். உலகியலுக்கு அப்பால் நோக்காமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் மத்யம வயதினருக்கு, ‘இறைசெய்தி’ என அவர் ஆன்மாவை தீண்ட சூஃபி ஞானியர் கதைமுழுவதும் போதித்துகொன்டே இருக்கின்றனர்.

மனிதர்களை படைப்பதற்கு முன்னரே, ஜின்களை படைத்த இறைவன், அவற்றை ஏன்  தண்டிக்கிறான்? என்கிற கேள்விக்கு ‘நன்றியின்மை ‘ எனும் அத்தியாயம் மிகவிரிவாக சூஃபியின் மூலமாக சொல்லப்படுகிறது.

‘தன்னகங்காரம்’ – ‘சுயபெருமை’- என்கிற பாவங்களின் பலனாக ஜின்’னுகள் கீழுலகை அடைகிறது. என்று முடிகிற இடத்தில், மனிதர்கள் மீது பெரும் கேள்வியை விடுத்து. நம்பிக்கையும், அடிபணித்தலுமே அருளை கொண்டுவருகிறது என முடிகிறது.

இப்படியாக ஒவ்வொரு அத்தியாயத்திலும், நிகழ்காலம் அதன் அவலங்களுக்கான தீர்வு, ஜின்களின் மாய உலகம் அவற்றின் பலம், பலவீனம், சூஃபிக்களின் வாழ்வும் நோக்கமும் என. ஒரு பரந்த பார்வையுடன் முன்செல்கிறது.

இறுதியாக, ‘இறைவனை காதலித்தல்’ எனும் சூஃபி மரபின் அடிப்படையும், உலக கவி மரபின் அடிப்படையும், நாவலுக்கு ஒரு மெய்ஞ்ஞான அந்தஸ்தை வழங்குகிறது.

உதாரணமாக  நாவலில் வரும் ஒரு ‘ஹதீஸ் குத்சீ’ எனும் நபிமொழி கவிதையில்.

என்னைப்பற்றிய என் அடியானின்

எண்ணத்தருகில் இருக்கிறேன்.

அவன் என்னை நினைக்கும்தோறும்

அவனுடன் நான் இருக்கிறேன்

தன்னுள் என்னை நினைப்பானாகில்

என்னுள் அவனை நினைக்கிறேன்

குழுவில் என்னை நினைப்பானாகில்

அதனின்,அதனின்,  சிறந்த

குழுவில் அவனை நினைக்கிறேன்

முழம் நெருங்கி வருவானாகில்

அடியளவு நெருங்குகிறேன்

அடியளவு அருகில் வந்தால்

சாணளவு நெருங்குகிறேன்

என்னிடம் அவன் நடந்து வந்தால்

அவனிடம் நான் ஓடுகிறேன்

சௌந்தர்

இந்த அத்தியாயத்தை படித்து முடித்ததும் நமக்கு தோன்றுவது, உலக கவிமனம் முழுவதும், ஞானசிந்தனை முழுவதும் ‘எதில்’ கட்டுண்டு கிடக்கிறது என்பது தான்.

இதே, வகைமையில் நாம் எத்தனை உயர்கவிதைகளை படித்திருப்போம். என்று மனம் ஒவ்வொன்றாக தொட்டு தொட்டு மீள்கிறது.

இறுதியாக ,மொழிபெயர்ப்பு செய்திருக்கும் தமிழ் அறிஞர் ரமீஸ்  பிலாலி, ஒவ்வொரு வார்த்தைகளையும் தேர்ந்தெடுத்து, அமைத்து, அரேபிய சொற்களுக்காக சரியான பதத்தையும் தூய தமிழில் வழங்கியதுடன்,  சூஃபி கவிதைகளின் சாரமும்,  கவித்துவமும் குறைந்து விடாத அளவில் செம்மை படுத்தி இருக்கிறார்.

மூல நூலை படித்து மொழிபெயர்ப்பது என்பது எந்த தொழில்முறை வல்லுனரும் செய்துவிடலாம் . இதுபோன்ற மறைஞான பிரதிகளை மொழிபெயர்க்க, அனுபவமாக  உணர்வுபூர்வமாக, அதை மாற்றிக்கொள்ளாமல், இவ்வளவு தெளிவான நடை சாத்தியமே இல்லை. எனலாம் .

ரமீஸ் பிலாலி அவர்களுக்கு வாழ்த்துக்களும். நல்ல நாவலை தமிழுக்கு தந்தமைக்கு நன்றியும்.

அன்புடன்

சௌந்தர்.G

ரமீஸ் பிலாலி நூல்கள்

ரூமியின் வைரங்கள்

ரமீஸ் பிலாலி இணையப்பக்கம்

காடு, நிலம், தத்துவம்

இசையும் மொழி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.