வாசகன் எழுத்தாளன் ஆவது- கடிதம்

ஒரு மலையாள வாசகர் மலையாள வாசகர், கடிதம் அன்புள்ள ஜெ

இன்று பதிவு பார்த்து நண்பர்கள் வாழ்த்தினார்கள்.  எழுத்தாளர் கிற ஸ்தானம் நான் பயத்துடன் நினைத்து பார்ப்பது, நிறைய நல்ல கதைகள் எழுதி அந்த இடத்தை அடைய வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.  நீங்கள் அவ்வாறு சொல்லி இருந்தது கூடுதல் பொறுப்பை அளித்தது.  கண்டிப்பாக நல்ல கதைகள் எழுதுவேன்.

ஒன்று மட்டும். நான் டிப்ளமோ படித்திருக்கிறேன், பத்தாம் வகுப்பு முடித்து மூன்றாண்டுகள் படிப்பு அது,  இந்திரவியல்தான் எடுத்து படித்தேன்.  நான் கருமான் என்பதால் இயல்பாக இந்த வேலையை தேர்ந்தெடுத்து வந்தேன்.  உங்களை பார்க்கும் பொழுது தற்காலிக வேலையாக எபாக்சி கோட்டிங் பெயின்டிங் வேலைக்கு போய் கொண்டிருந்தேன், அது தினசரி சம்பள வேலைதான்,  வார சம்பளம் அளிப்பார்கள்.  அந்த வேலை குழப்பம் மட்டும் என்ன மேற்கொண்டு செய்வது என்றறியாத குழப்பங்களில்  அந்த சமயங்களில் இருந்தேன், நான்கு வேடங்கள் கட்டுரை புரிதல் அளித்தது, நிரந்தர வருவாய் முக்கியம் என்று எண்ணினேன்,  சிறுவயதில் இருந்தே சொந்த தொழில் ஆர்வம் எனக்கிருந்தது,  அப்பாவுடன் வேலைக்கு சென்ற அனுபவம் இருந்தது, கூடவே படிப்பு ( DME) ம் கொஞ்சம் தைரியம் அளித்தது,  இரும்பு வண்ண கூரைகள் அமைக்கும் பணியில் நண்பருடன் கூட்டு சேர்ந்து இறங்கினேன், இந்த தொழில் எனக்கு ஒரு அடையாளமும் திருப்தியும் முக்கியமாக பணமும் அளித்தது, contract அடிப்படையில் செய்வதால் பண தட்டுப்பாடு எப்போதும் இருந்தாலும் வேலை தொடர்ந்து கிடைக்கிறது,  கடனில் சிக்குவேன், பிறகு அடைப்பேன் :) ஆனால் நிரந்தர வருவாய் கிடைக்கிறது. இனி எதிர்காலத்தில் இதில் அதிகம் சம்பாதிக்க இயலும் என்று நம்புகிறேன்.

இன்னொரு பக்கம் சிறுவயதிலேயே மதமோதல்களை ( கோவை கலவரம் ) பார்த்து அந்த மனநிலை வழியாக வந்தவன், இந்து மதம் பற்றி அறிந்து கொள்ள படிக்க போய்தான் உங்களை வந்தடைந்தேன், படிக்கும் ஆர்வம் சிறுவயதிலேயே இருந்தாலும் மத பற்று, அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லாம் இருந்தது. உங்களை நீண்ட நாள் படிப்பதன் மூலமாக மத பார்வையில் அணுகும் இயல்பு மறைந்தாலும் இப்போதும் அவ்வப்போது என்னுள்ளில் இருந்து இந்து சார்பு பார்வை வெளிப்படும்.

உங்களை ஆரம்பத்தில் வாசிக்கும் போது எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை,  ஆனால் எனக்குள் இருந்த வாசிக்கும் இயல்பு உங்கள் புனைவுகளை தொடர்ந்து  தேடி தேடி வாசிக்க வைத்தது. உங்களை பற்றிய விமர்சன கட்டுரைகளை கூட தேடி தேடி வாசித்திருக்கிறேன். வெங்கட் ஸ்வாமிநாதன் உங்கள் சிறுகதை தொகுப்பிற்கு,  நவீன தமிழிலக்கிய அறிமுக நூலுக்கு எழுதிய கட்டுரை,  சுஜாதா உங்களின் திசைகளின் நடுவே சிறுகதை தொகுப்பிற்கு ( அதில் பல்லக்கு கதையை சிறுகதை வடிவத்திற்குள் சரியாக பொருத்திய கதை என்று சொல்லியிருப்பார், உங்கள் முன்னுரையை மெலிதாக ஓட்டியிருப்பார் ! ) எழுதிய கட்டுரை,  கார்த்திகேசு என்பவர் உங்கள் விஸ்ணுபுரம், பின்தொடரும் நூலுக்கு எழுதிய கட்டுரை எல்லாம் வாசித்திருக்கிறேன்.  பேட்டிகளில் உங்களை சொல்வதை கூட தேடி வாசித்திருக்கிறேன்.  ஜெயகாந்தன் பின்தொடரும் நிழலின் குரல் வந்த சமயத்தில் அதை பற்றி பேட்டியாளர் கேட்ட போது உங்கள் எழுத்தை பற்றி தேவதைகள் இல்லாத சமயத்தில் அங்கு பேய்கள் உலவும் என்பது போல சொல்லுவார் :) ஆனால் உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்ப்பதாகவும்  சொல்வார்,  சுஜாதா கூட ரப்பர் நாவல் பற்றி சொல்லி அது போல நாட்கணக்கில் அமர்ந்து தீவிரமாக எழுதும் நேரம் சூழல் தனக்கில்லை என்று சொல்வார். எனக்கு வேறு புனைவுகள் வாசிக்கும் ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை.  ரஷ்ய நாவல்கள் இப்போதும் கூட வாசித்ததில்லை.  ஆனால் உங்களை பழகி பின்பு விஷ்ணுபுர நண்பர்கள் பழக்கம் நிகழ்ந்த பிறகுதான் மற்றவர்களை வாசிக்க ஆரம்பித்தேன்.  இப்போது நானே சிறுகதை எழுதும் வரை இது வந்து நிற்கிறது.

எனக்கு சில நோக்கங்கள் உண்டு,  அதில் தொடர்ந்து பயணிப்பதற்கு, விவாதிப்பதற்கு,  பிறரிடம் கொண்டு செல்வதற்கு எழுத்து பயனளிக்கும் என்று நம்புகிறேன், நந்தனார் பற்றி நானே சமீபத்தில் எழுதி பார்த்த (புனைவின் சாத்தியம் கொண்டு ) கதை வழியாக அந்த நம்பிக்கையை வலுவாக அடைந்தேன்.  இந்த வகையில் எழுத்து எனக்கு வலுவாக பயனளிக்க கூடிய ஒன்று.

சிறுகதை எழுதுவது முற்றிலும் இன்னொரு விருப்ப உலகம் என்று தோன்றுகிறது. இது மதிப்பை எனக்கு அளிக்கிறது கண்டிப்பாக இதற்கு நன்றி உடையவனாக இருப்பேன் !

ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்கதைகள்

சுழல்

வலு

தெளிதல்

பிரிவு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2021 10:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.