ஏதோ ஒரு நதி

சிவாஜி எம்ஜியார் மற்றும் வெவ்வேறு சின்னச்சின்ன வம்புகளுக்கும் செய்திகளுக்கும் அப்பால் பழைய சினிமாவின் உலகம் என்பது ஆர்வமூட்டுவது. ஆழமான சமூகவியல் ஆய்வுகளுக்கு அதில் இடமிருக்கிறது. ஆனால் நான் சொல்வது நாம் நம் கடந்தகாலத்தில் உலவ அது அளிக்கும் வாய்ப்பு.

ஏனென்றால் இங்கே நம் வாழ்க்கை தொடர்ச்சியாக பதிவாகியிருப்பது சினிமாவில்தான். வணிக இதழ்களில் ஓரளவு உண்டு. அது ஒரு சிறுவட்டத்தில்தான். உதாரணமாக குமுதம், விகடன் இரண்டுமே என் இளமைநினைவுகளில் கலந்தவை. ஆனால் அக்காலக் குமுதம் முழுக்கமுழுக்க சென்னையையே முன்வைக்கும் இதழ். விகடன் பிராமணர்களின் உலகை மட்டுமே முன்வைப்பது.

சினிமா அப்படி அல்ல. அதன் காட்சிகள் மட்டுமல்ல இசையும் முக்கியமானது. அவை ஏதேதோ நினைவுகளுடன் கலந்துள்ளன. நினைவுகளில் எவற்றை தொட்டு அவை மேலெழுப்பிக் கொண்டுவரும் என்று சொல்லிவிடமுடியாது. மேலும் பழைய வார இதழ்களை இன்று காண்பதே அரிது. நான் விசாரித்தவரை அந்த இதழ்களின் அலுவலகங்களிலேயேகூட அவற்றின் பிரதிகள் பேணப்படவில்லை. ஆனால் சினிமா பெரும்பாலும் கிடைக்கிறது. சினிமா பாடல்களில் சிலவே மறைந்துவிட்டிருக்கின்றன.

யூடியூப் நினைவுகளி களஞ்சியம் போலிருக்கிறது. இந்தப்பாடலை கேட்கும்போது நான் யூடியூபில் நள்ளிரவுக்குமேல் இறங்கும் அனுபவத்திற்கும் இதைச் சொல்லலாம் என்று தோன்றியது. அன்று சிலோன் வானொலியில் அடிக்கடி ஒலிக்கும்பாடல் இது. திருவரம்பின் மதியங்கள் அமைதியானவை. காற்றும் நீரும் ஓடும் ஒலிகளும் அவ்வப்போது மாடுகளின் ஒலியும் மட்டுமே சூழ்ந்திருக்கும். எங்கோ ஒரு வீட்டில் வானொலி ஒலித்தால் காற்று அதை ஊரெங்கும் பரப்பும். அந்த மயக்கத்தில் பாடல்கள் தர்க்கமனத்தை கடந்து கனவுக்குள் நேரடியாகவே நுழைந்துவிடும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.