பொதுவாக லௌகீகம் எதிர் ஆன்மீகம் என துருவப்படுத்தி ஆன்ம பயணத்தில் எவ்வாறு லௌகீகம் தடையாகிறது என சிந்திப்போம். அடுத்த கட்டத்தில் காமகுரோதமோகம் எவ்வாறு தடையாகிறது என சிந்திப்போம். ஆனால் அசல் சவாலான ஆன்மத் தேடலில் ஆன்மிகத் தடை அதாவது அலௌகீக தடை பற்றி குறைவாகவே சிந்திக்கிறோம். ஆன்மிக வேட்கையும் அது தரும் அலௌகீக சஞ்சலமும் பிரிக்க இயலாது, இன்றி அமையாதது. இக்கதை இதை பரிசீலிப்பதால் முக்கியமானது.
இக்கதையில் இயற்கை இட்ட சட்டகத்தை கடத்தல் என்பது மீறலா விரிவா என்கிற வினா எழுகிறது. விரிந்தபின் சுருங்குதல் என்பது அதே அளவு வலிமிக்கதா என்கிற வினாவும் எழுகிறது. இதற்கு ஒரு தேடல் மிகு வாசகன் விடைகாண முயலலாம்.
ஒரு மரணத் தருவாயில் உயிர் கடந்த ஒன்று சற்று நேரம் தன் மறு பாதியுடன் கைகோர்த்து பிரிந்து மிஞ்சி நிற்கும் கணம் தோறும் கரைந்து கொண்டிருக்கும் கை வெம்மையில் உணரும் அனுபவம் மகத்தானது. இக்கதையில் இது போன்ற அருவமான உணர்வுகள் சாத்தியமான மொழியில் வெளிப்பாடு கண்டுள்ளது. கதை முடிவுற்ற இடத்தில்
மச்ச கூர்ம வாமன என பத்து அவதாரங்களும் ஒரு ஆன்மிக வழியின் பத்து படி நிலைகள் என ஒரு மின்னல் நம்முள் வீசுகிறது.
ஒரு புதுவரவு என சொல்லத் தகுதி வாய்ந்த கதை இது, நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
கிருஷ்ணன்,
ஈரோடு.
மிருகமோட்சம் – விஜயகுமார்
Published on September 09, 2021 11:33