புகைப்பட முகங்கள் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம் !!

சமீபத்தில், தாங்களும், திருச்செந்தாழை அவர்களும் இணைந்திருந்த புகைப்படங்கள் சிலவற்றை கண்டு மகிழ்ந்தேன். சில புகைப்படங்கள் மட்டுமே இப்படி தனித்துவமாய் மிளிர்வதுண்டு. வாஞ்சையான சிரிப்புடன் இருவரும் தழுவும் அப் படம் உள்ளார்ந்த பேரன்பின் அச்சு வடிவமாய் உணர்ந்தேன். படங்களும் பேசும் அல்லவா ?

கேட்பதா வேண்டாமா என்ற சஞ்சலத்துடன், சிறுபிள்ளைத்தனமான கேள்வி ஒன்று என்னிடத்தில் உண்டு. அதனை இன்று கேட்டே விடுவது என்ற முடிவில் கேட்கிறேன். அவர் குறித்தான பதிவுகளில் எல்லாம் நீங்கள் பயன்படுத்தும் புகைப்படம் எனக்கு ஏனோ காண்பதற்கு அயர்ச்சியாய் தோன்றும்.

அவர் முகநூலில் நிறைய நல்ல படங்கள் உண்டு.குறிப்பாக, அய்யப்ப மாதவன் அவர்கள் எடுத்த கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் மிகவும் நன்றாக இருக்கும். நான் எழுத்தினை குறித்து அல்லவா கவனிக்க சொல்கிறேன், புகைப்படத்தில் என்ன உள்ளது எனவும் உங்களுக்கு தோணலாம். ஆனாலும், அந்த படத்தில் அவர் சோர்வாக, கண்களில் சோகம் ததும்ப உள்ளார்.

இத்துடன் அவரின் சில படங்கள் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். உங்களுக்கும் பிடித்திருந்தால், இனி இந்த படங்கள் பயன்படுத்தலாமே…அந்த சோகப்படம் வேண்டாமே !!

அன்புடன்

கல்யாணி.

அன்புள்ள கல்யாணி

இந்தத் தளத்தில் புகைப்படங்கள் பயன்படுத்துவது பற்றி சில சொல்லவேண்டியிருக்கிறது. எழுத்தாளர்கள் என்றால் அவர்களைப்பற்றி நான் என்ன எழுதினாலும் கூடவே அவர்களின் புகைப்படம் இருக்கும். ஏனென்றால் அது அவர்களின் சொற்களுக்கு முகம் அளிக்கிறது.

ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படம் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்குக் காரணம் உண்டு. மலையாள இதழியலாளர் கே.ஸி.நாராயணன் அதைச் சொன்னார். ஓர் இதழில் பல புகைப்படங்கள் வெளியாகின்றன. வாசகர்களின் கவனத்தில் முகங்கள் அவ்வளவு ஆழமாக பதிவதில்லை. ஆனால் ஒரே புகைப்படம் சிலகாலம் பயன்படுத்தப்படும்போது அது நினைவில் நீடிக்கிறது, ஓர் அடையாளம் போல ஆகிவிடுகிறது. சட்டென்று அதற்கு முந்தைய படைப்புகள் அனைத்தையும் மனதில் கொண்டுவந்து சேர்க்கிறது. நாம் சுவரில் மாட்டிவைத்திருக்கும் ஒரு படம் நமக்கு மிக அணுக்கமாக ஆவதுபோல. சமயங்களில் அந்த புகைப்படமுகம் நம்மிடம் பேசவே ஆரம்பித்துவிடும்.ஆகவே ஒரு படத்தையே நானும் திரும்பத்திரும்ப பயன்படுத்துகிறேன். பாஷாபோஷிணியில் அதையே செய்வார்கள்.

ஜெ

சிறுகதைகள்-செந்தில் ஜெகன்னாதன்,திருச்செந்தாழை

துவந்தம், கடிதங்கள்

துவந்தம், கடிதங்கள்

துவந்தம், கடிதங்கள்

கதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்

ஆபரணம், பா.திருச்செந்தாழை

ஒரு புதிய வீச்சு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.