மழைப்பயணம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

மழைப்பயணம் பற்றிய கட்டுரை வாசித்தேன். இந்த சூழலில் இப்படி பயணம் செய்யக்கூடாது. உருமாறிய வைரஸ் எப்படி இருக்கிறது என்று தெரியாது. நோய் வந்து சென்றதோ அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டதோ உறுதியான பாதுகாப்பை அளிப்பது அல்ல. ஆனால் நீங்கள் பயணம் செய்யாமலும் இருக்க முடியாது. சாவு என்றாலும்கூட பயணத்தைத் தேர்வுசெய்வீர்கள் என்று தெரியும். ஆகவே உங்கள் மனநிலையையும் புரிந்துகொள்கிறேன்.

அர்விந்த்குமார்

***

அன்புள்ள ஜெ

நலமா?

குதிரேமுக் டிரெக்கிங் பற்றிய குறிப்பை வாசித்தேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் நண்பர்களுடன் சென்றிருந்தேன். ஆனால் கோடைகாலத்தில். அப்போதும் பசுமையாகவே இருந்தது. ஆனால் மழை இல்லை.

மழைக்காலத்தில் குதிரேமுக் டிரெக்கிங் ஆபத்தானது என்று அப்போது சொன்னார்கள். பாறைகள் உருள்வதுண்டு. மழைநீர் பாதை வழியாகவே பெரிய காட்டாறாக வருவதும் உண்டு. அங்கே மேகக்கிழிசல் போல ஒரே இடத்தில் சட்டென்று தீவிர மழை பொழியும். மிகப்பெரிய விசையுடன் காட்டாறு உருவாகி வரும். கர்நாடகத்தின் மலநாடு தென்னகத்திலேயே அதிக மழைபெறும் இடம். துங்கா, பத்ரா, காவேரி போன்ற பெரிய ஆறுகளும் ஏராளமான நடுத்தர ஆறுகளும் உருவாகும் இடம் அந்த மலைப்பகுதிதான். அங்கே திடீர் வெள்ளங்கள் சகஜம். சிருங்கேரியில் அப்படி ஒரு திடீர்வெள்ளத்தில்தான் எழுத்தாளர் ஆதவன் மறைந்தார். கவனமாகச் சென்றிருக்கவேண்டிய பயணம்.

அட்டைக்கடியின் அரிப்பிலிருந்து விடுபட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்

ஆர்.ராஜகோபால்

***

அன்புள்ள ஜெ,

ஆகும்பே ராஜநாகம் மழை என்று எல்லாமே ஒரு கனவுபோல இருக்கிறது. நானே ஆகும்பே பற்றி ஒரு கற்பனை வைத்திருக்கிறேன். முடிந்தால் நல்ல மழைக்காலத்தில் அங்கே சென்று ஒருநாள் மழையோசையைக் கேட்டுக்கொண்டு தங்கியிருக்கவேண்டும்.

ஜெயக்குமார் ராமநாதன்

நிலவும் மழையும்- 4 நிலவும் மழையும்- 3 நிலவும் மழையும்-2

நிலவும் மழையும்-1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.