அட்டன்பரோவின் ‘லைஃப்!”

இனிய ஜெயம்

சென்ற வருடம் துவங்கிய முடக்க சூழல் நல்கிய அறை வாசத்தில் இன்றுவரை இரவுகளை ஒளிரச் செய்தவர்களில் முதன்மையானவர் டேவிட் அட்டன்பரோ. அவ்வப்போது, அவரது துவக்ககால ஆவணங்கள் துவங்கி அண்மையில் அவரது 95 வயதில் கடந்த 100 வருட சூழலியல் சரிவை சுட்டி, மீட்சிக்கான வழி வகைமைகள் குறித்து அவர் வெளியிட்ட life on our earth வரை பெரும்பாலானவற்றை மீண்டும் பார்த்தேன்.

கடந்த 15 வருடம் முன்பு நிகழ்ந்த dvd புரட்சிகளில் மிகவும் மகிழ்ந்த ஆத்மாக்களில் நானும் ஒருவன். பக்கத்து புதுவையில ஞாயிரு சந்தைகளில் 25 ரூபாய்க்கு dvd கள் பொலியும். நான் டேவிட் அட்டன்பரோவின் பெரும்பாலான ஆவணத் தொடர்களை அங்கேதான் சேகரித்தேன். இன்று மொபைலின் ott புரட்சி, மற்றும் you tubeம் இத்தகு ரசனைக்கு இன்னும் விரிவான தளம் அமைத்து தருகின்றன. முன்னர் you tube இல் அவ்வப்போது uplode ஆகும் அபூர்வ பைரேட்டட் பிரதிகள்காக இரவுகளில் துழாவிக் கொண்டிருப்பேன். இப்போது அந்த நிலையிலும் மாற்றம். Net flix, bbc போன்ற முக்கிய நிறுவனங்கள் சொந்த தளங்கள் வழியே பல அபூர்வங்களை இலவசமாக அனைவரும் காண அளிக்கிறது.

உதாரணமாக, இந்த சுட்டி.  bbc தனது தளத்தில் உயிர் சூழல் ஆவணங்களில் நிகழ்ந்த 50 தலையாய தருணங்களை தொகுத்து அளித்திருக்கிறது.

 

நம் காலத்து மெய்யாசிரியர்களில் முதன்மையானவர் டேவிட் அட்டன்பரோ. டார்வினின் உயிர் தளிக் கொள்கைக்கு ஆதரவாளர். Rise of animals மற்றும் டார்வினின் life of tree ஐ அவர் விளக்கிய ஆவணங்கள் அதன் அழுத்தமான சான்றுகள். கடந்த மாதங்களின் அட்டன்பரோ ஆவணங்கள் வழியே நிகழ்ந்த ஒட்டு மொத்த அனுபவம் எனக்குள் நேர்மாறான கருத்துப் பதிவையே அழுத்தம் பெற வைக்கிறது.

நாம் காணும் இந்த புற உலகின் உயிர்ச்சூழல் மண்டலம் முழுவதையும் தர்க்க ஒருமையுடன்  இன்டர்ப்ரேட் செய்யும் ஒரு பெருங்கதையாடல் என்னும் வகையில் டார்வினின் பரிணாம கொள்கை மானுட அறிவு பாய்ச்சலுக்கு பெரும் பங்காற்றி இருக்கிறது. அதற்கு வலிமை சேர்த்தது பிரபஞ்ச தோற்ற மூலம் என்ற big bang கொள்கை நோக்கி நிகழ்ந்த உயர் கணித சாதனைகள். ஸ்டீபன் ஹாக்கிங் அவரது  இறுதி காலங்களில் ஒரு மூட்டை உயர் கணித ஈவுககளை அறிவு துறை மேல் கவிழ்தி இதையே சொன்னார். அந்த தர்கத்தின் பகுதியாக பிசிர் இன்றி இணையக் கூடிய தர்க்கம் டார்வினுடையது.

எல்லாம் சரிதான் ஆனால் இது அந்த பேருண்மையின் ஒரு பகுதியாக மட்டுமே ஏன் இருக்கக் கூடாது? மற்றொரு தர்க்க வரிசை என்ற ஒன்று இல்லாத பேருண்மை உண்டா என்ன?. நிச்சயம் இருக்கும். ஆனால் உரிய தர்க்க முறைமை இன்றி மைய்ய சிந்தனை முறைமைக்கு வெளியே  விளிம்பில் இருக்கும். அது உரையாடலுக்கு வெளியே நிற்பதில் உள்ள முதல் சிக்கல் இந்த மையமான சிந்தனைக்கு எதிர் வாதம் முன் வைக்கும் எதுவும் கிறிஸ்துவ இறையியல் பின்புலம் கொண்டிருப்பதே.

ஆக இந்த மைய்ய சிந்தனைக்கு எதிர் வாதம் கொண்ட எதுவும் இத்தகு மத நம்பிக்கை போன்ற எளிய அடிப்படை வாதங்களுக்கு வெளியே மைய சிந்தனை கைக்கொள்ளும் அதே தர்க்க முறையில் இயங்க வேண்டும். அறிவு × நம்பிக்கை எனும் எதிர் நிலைக்கு பதில் அறிவு × அறிவு எனும் எதிர் நிலையில் உருவாகி வரவேண்டும்.

இதில் உள்ள சிக்கல் மேலை தத்துவ  பண்பாட்டில் உள்ள ‘தன்’ மைய்ய நோக்கு. அதில் எழுந்த எளிய எதிரிடை. உதாரணத்துக்கு மணிமேகலையில் உள்ள கணக்கர் திறம் கேட்ட காதை. இன்று மேலை அறிவியல் தத்துவ மரபில் இத்தனை பன்முகம் கொண்ட இன்டர்பிரேஷன் கு இடமே இல்லை எனும் வகையில் big bang, டார்வினிசம்,  உயர் கணிதம் என அனைத்தும் ‘நிறுவப்பட்ட’ உண்மை போல கவிந்து மூடிக் கிடக்கிறது.

தாராளவாதம் × பொருள்முதல் வாதம் என்ற இரு பொருளாதார எதிரிடை சக்திகள் வழியே முரண் இயக்கத்தில் உச்சம் தொட்ட பிரபஞ்ச அறிவியல் தேட்டங்கள், இன்று எதிர் நிலை என்ற ஒன்றே இன்றி, கிட்டத்தட்ட  இருக்கும் எல்லாமே கணித அடிப்படையில் நிறுபவப்பட்டு உறைந்த நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.

மேலை மரபில், பரிணாம விதி போல ஒவ்வொரு அலகிலும், எதிரான மாற்று சிந்தனைகள் தத்துவ பலத்துடன் எழ வேண்டிய சூழல் இன்று. பரிணாம கோட்பாட்டுக்கு எதிரான தரவுகளை பைபிளை முன் வைத்து தேடுவதை விடுத்து, அறிவு தர்க்கங்களை முன்வைத்து தேடலாம். இத்தனை பன்முகமும் ‘ஒரே’ மூலம் கொண்டதாக இருந்தே ஆகவேண்டும் என்ற விதி உண்டா என்ன? பரிணம கோட்பாடு இங்கே செயல்படும் பல்வேறு விதிகளில் ‘ஒன்று’ மட்டுமேயன்றி அதுவே சர்வ ரோக நிவாரணி அல்ல என்பதே, கடந்த மாதங்களில் கண்ட இந்த ஆவணங்கள் எனக்கு உருவாக்கிய அழுத்தமான பதிவு.

மனிதன் குரங்கிலிருந்து ‘பரிணமித்து’ வந்திருக்கலாம். ஆனால் பறவை மீனிலிருந்து ஊர்வனவாக பரிணமித்து அதிலிருந்து வளர்ந்து பறவையாக வளர்ந்தது என்பதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. மீனுக்குள் மீன் வகைமைக்குள், ஊர்வணவற்றில் ஊர்வன வகைமைக்குள், செடி கொடிகளில் அந்த வகைமைக்குள் என சிறிய எல்லகைக்குள் பரிணாமம் செயல்பட்டிருக்கலாம். ஆனால் ‘ஒன்றே’ தான் செடியாகவும் டினோசராகவும் பறவையாகவும் மனிதனாகவும் பரிணமித்தது என்று ஏன் கொள்ள வேண்டும்? பிரபஞ்சத்தின் படைப்புத்திறன் அவ்வளவு கஞ்சத் தனம் கொண்டதா என்ன? ‘முதல் உயிர்’ (இதுவும் இன்றுவரை யூகம்தான்) எனும் ரசாயன குழம்புக்கே குறைந்தது மூன்று ‘தனித் தனி’ களின் சேர்க்கை தேவைப் படுகிறது. இத்தனை ‘தனி’ கள் கூடி முதல் உயிர் தோன்றும் என்றால் ஏன் பல்வேறு ‘தனிக்கள்’ கூடி இப்போது நாம் காணும் உயிர் சூழல் பரிணமித்திருக்கக் கூடாது?

இன்ய ‘நிறுவப்பட்ட’ மேலை மரபின் பெருங்காதையாடலுக்கு எதிர் நிலையில், //முதல் முடிவு இல்லா ஆதி மகா இயற்கையான இந்த பிரபஞ்சம் அனேகாந்தம் கொண்டது//. என்ற நிலை ஒன்றும் ஏன் இருக்கக் கூடாது?  சமணத்திலும் பௌத்தத்திலும் உள்ள இக்கூறுகள் தான் இனி ஒற்றைத் தர்க்க மெய்மை நோக்கில்  உறைந்து கொண்டே போகும் மேலை அறிவியல் தத்துவ மரபின் எதிர்நிலையாக வளர சாத்தியம் கொண்ட விதைகள்.

தெரியும். இது எல்லாமே வெறும் விளையாட்டு சிந்தனைகள். ஆனாலும் சும்மா இப்படி சிந்திப்போமே என்பதைக்கூட இன்றைய அறிவியல் பாசிசம் ஒத்துக்கொள்ளாது. அது இன்று வலிமையானதொரு இணை மத பண்பாடு. ஆனால் இப்படி சிந்திப்பதன் வழியே இவ்வாவணங்கள் எனக்குள் ‘நிறுவிய’ ஒரு மையத்தை நானே கட்டவிழ்த்துக் கொள்கிறேன். இல்லையேல் இந்த ஆவண அனுபவங்கள் எல்லாமே என் உள்ளே உறை நிலைக்கு சென்று விடும். இரவுகளை நிறைத்த டேவிட் அட்டன்பரோவுக்கு முத்தங்கள் :).

கடலூர் சீனு

அன்புள்ள கடலூர் சீனு

அமெரிக்கா சென்றிருந்தபோது அட்டன்பரோவின் லைஃப் ஆவணப்படத்தின் முழுத்தொகுதியும் [36 டிவிடிக்கள்] பரிசாகக் கிடைத்தது. சில ஆண்டுகளாக கைவசமிருந்தும் முழுமையாகப் பார்க்கவில்லை. சென்ற ஊரடங்கின்போது தினம் ஒருமணி நேரம் வீதம் நானும் அஜிதனும் சைதன்யாவும் அதைப் பார்த்து முடித்தோம். ஒரு காவியம் வாசித்த நிறைவை அளித்தது. காவியமென்பது பிரபஞ்சமெய்மை, மானுட மெய்மை, அன்றாட உண்மை ஆகிய மூன்றையும் ஒன்றே என ஆக்கிக் காட்டுவது என்பார்கள். அத்தகைய ஓர் அனுபவம் அதை கண்டது.

அதிலும் பூச்சிகளின் உலகம். நாமறிந்த இந்த பூமியில் நாம் முற்றிலும் அறியாத மாபெரும் ஒரு உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. பழைய நூல்களில் உலகங்கள் என்றே சொல்லப்படுகிறது. ஏன் என்று அன்று புரிந்தது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.