பேசாதவர்கள்[சிறுகதை]

பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் போலீஸ் துறையிலும் பின்னர் சிறைத்துறையிலும் வேலைபார்த்த என் தாத்தா என்.கே.தாணப்பன் பிள்ளை முறையாக ஓய்வுபெறவில்லை. அதை எனக்கு அவரேதான் சொன்னார். தாத்தா  அவருக்கு ஓய்வூதியம் இல்லை. திருவிதாங்கூர் இல்லாமலாகி, தமிழகம் உருவாகும்போது அவருக்கு ஐம்பது வயதுதான். அப்படியென்றால் மேலும் பத்தாண்டுகள் சுதந்திர இந்தியாவின்  அரசு ஊழியராக பணியாற்றியிருக்க முடியும்.

நானும் என் அப்பாவைப்போல 1956ல் மாநிலப்பிரிவினையின்போது பழைய திருவிதாங்கூர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள், தாத்தாவும் வேலையை இழந்தார் என்றே நம்பியிருந்தேன். அது எப்படிச் சாத்தியமென்று யோசித்ததே இல்லை. பொதுவாக நாம் பழைய தலைமுறை பற்றி அவ்வளவாக யோசிப்பதில்லை. ஆகவே அவர்கல் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஓயாமல் சொல்லப்படுவதனாலேயே நாம் செவிகொடுப்பதில்லை.

தாத்தா திருவனந்தபுரம் சிட்டி கார்ட்ஸ் நாயர் பிரிகேடில் ஹெட்கான்ஸ்டபிளாகவும் ,அதன்பின்னர் ஐந்தாண்டுகள் சப்இன்ஸ்பெக்டர் ராங்கில் சிறையில் ஸ்பெஷல் வார்டர் ஆகவும் பணியாற்றினார்.வார்டராக பணியாற்றிய காலத்தில் அவர் ஒரு முக்கியமான குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் அதை வெளியே சொல்லவில்லை. 1948ல் நிகழ்ந்த மொத்தக்குளறுபடிகளில் ஒன்றாக தன் வேலையிழப்பையும் ஆக்கிக்கொண்டார். முறையாகப் பதவி ஓய்வு பெற்றதாகவே நாற்பதாண்டுக்காலம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர் உண்மையைச் சொல்ல நேர்ந்த சந்தர்ப்பம் ஒன்று அமைந்தது. அவருடைய நண்பரும், அவருடன் சேர்ந்து வேலையிழந்தவருமான ஆர்.கே.கருணாகரக் கைமளின் மகன் ஆர்.கே.அச்சுதன் அவரைப் பார்க்க எங்கள் ஊருக்குத் தேடிவந்திருந்தார். அவர் கேரளக் காவல்துறையில் டி.ஐ.ஜியாக இருந்தார். தாத்தா உயிருடனிருக்கும் செய்தியை எங்கள் பக்கத்துவீட்டில் குடியிருந்த கேரளச் சிறைத்துறை ஊழியர் அப்துல் வகாப் வழியாக அறிந்து பரிசுப்பொருட்கள் பழங்களுடன் வந்தார். அவர் சின்னக்குழந்தையாக இருக்கும்போது அப்பா அவர் வீட்டுக்கு அடிக்கடிச் செல்வதுண்டு. அவரை சைக்கிளில் அமரச்செய்து திருவனந்தபுரம் நகரைச் சுற்றிக் காட்டியிருக்கிறார். திருவனந்தபுரம் மிருகக்காட்சிசாலைக்கு அவரைக் கூட்டிச்சென்றதே தாத்தாதான் என்று சொன்னார்.

அவரைச் சந்தித்தது தாத்தாவையும் நெகிழச்செய்தது. கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. பொதுவாகவே தாத்தா வயதானபின் எதற்கெடுத்தாலும் கண்ணீர் விடுபவராக ஏற்கனவே மாறியிருந்தார். அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு நெடுநேரம் நினைவுகளைப் பேசிக்கொண்டிருந்தார்.  தாத்தாவுக்கு நினைவுகள் தெளிவாக இருந்தன. பல் நன்றாக இருந்ததனால் துல்லியமாகப் பேசவும் முடிந்தது.அந்தப் பேச்சின் நடுவில்தான் ஆ.கே.அச்சுதன் நான் மெல்லிய அதிர்ச்சியை அடைந்த செய்தியைச் சொன்னார். அவருடைய அப்பாவும் என் தாத்தாவும் ஒரே உத்தரவால் வேலையை இழந்திருக்கிறார்கள். வேலையிழப்பை தாங்கிக்கொள்ள முடியாத அவருடைய அப்பா பத்து மாதங்களுக்குள் நெஞ்சடைப்பில் உயிரிழந்தார்.

நான் ஒன்றையும் காட்டிக்கொள்ளவில்லை. அவர் போனபின் தாத்தாவிடம் கேட்டேன், அது உண்மையா என்று. தாத்தா அப்போது பேச்சு மிகக்குறைந்து பெரும்பாலான பொழுதுகளில் அமைதியாக இருக்கப் ஆரம்பித்துவிட்டிருந்தார். அது உயிரின் தீ அணைவது என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆறுமாதம் கழித்து தாத்தா தூக்கத்திலேயே உயிர்விட்டார். அப்போது அவர் சமகால நினைவுகளை கோக்க முடியாதவராக இருந்தார். காலையுணவு சாப்பிட்டோமா என்று நினைவிருப்பதில்லை. பேரப்பிள்ளைகளின் பெயர்கள் நினைவில் எழவில்லை. எந்த ஊரில் இருக்கிறோம் என்பதே கூட சரியாக ஞாபகம் வரவில்லை. ஆனால் பழைய நினைவுகள் மேலும் கூர்மைபெற்றிருந்தன. காட்சித்துல்லியத்துடன் அவற்றைச் சொன்னார்.

அவரும் பாட்டியும் முதன்முதலாக திருவனந்தபுரம் ஆறாட்டு பார்த்த அந்த வருடம்தான் அங்கே ஆட்டுமணி அரண்மனை முகப்பில் அமைக்கப்பட்டது என்றார். அன்று பாட்டி அணிந்திருந்த சேலை இளஞ்சிவப்பு நிறம் என்பதுகூட ஞாபகமிருந்தது, அன்றெல்லாம் வண்ணச்சேலைகளை கேரளப்பெண்கள் அணிவது மிக அபூர்வம். பாட்டி அன்றுதான் முதன்முதலாக உணவு விடுதியில் சாப்பிட்டார். அது ஒரு நாயர் பெண்மணி கரமனை ஜங்ஷனில் நடத்திவந்த கஞ்சிக்கடை. சம்பா அரிசிக் கஞ்சிக்கு பலாக்காய் அவியலும் ஊறுகாயும் அளிக்கப்பட்டது.

ஆனால் நான் நினைத்ததுபோல தாத்தா தன் நினைவுகளில் மூழ்கி அமர்ந்திருக்கவில்லை என்பதை அவர் பேசப்பேச  கண்டுபிடித்தேன். நினைவுகளை தூண்டினால்தான் அவை ஒன்றிலிருந்து ஒன்றாக கிளம்பி வந்தன. அவ்வாறு வரும் நினைவுகளுக்கும் எந்தத் தொடர்ச்சியும் இருக்கவில்லை. ஏதாவது மறைமுக தொடர்பு இருக்கும் நினைவுகளாக இருக்கலாம். சொல்லச்சொல்லத்தான் அவை உருவாயின. சொல்லாதபோது அவர் மனம் ஒழிந்து கிடந்தது. சொல்லோ சித்திரமோ இல்லாத வெற்றுவெளியாக. உள்ளத்தை இயக்கவும் ஆற்றல் தேவைப்படுகிறது. அவருடைய உயிராற்றல் திரிதாழ்ந்து மிகமிக மங்கலாக எரிந்துகொண்டிருந்தது.

நான் அவரிடம் அவர் ஏன் வேலைநீக்கம் செய்யப்பட்டார் என்று கேட்டேன். அவர் என் கேள்வியை என்னவென்றே தெரியாமல் நெடுநேரம் வெறித்துப் பார்த்தார். பலமுறை கேட்டபின்னரே அவருடைய ஆழத்திலிருந்து நினைவுகள் எழுந்துவந்து அந்தக் கேள்வியைச் சந்தித்தன. உண்மையில் நாற்பதாண்டுகளாகச் சொல்லிவந்ததை தாத்தா அவரே நம்பிவிட்டிருந்தார். அவர் அதைச் சொல்லிச் சொல்லி, உள்ளத்தில் நிகழ்த்தி நிகழ்த்தி, அவருக்கு உண்மையில் நடந்தவை கனவாக மாறி உள்ளே நகர்ந்துவிட்டிருந்தன. அவருடைய உள்ளத்தின் விசை அழிந்திருந்தமையால்தான் உண்மையை அவர் சொன்னார். இல்லாவிட்டால் அவருடைய கூர்மையான உள்ளம் புனைந்ததையே உண்மையென முன்வைத்திருக்கும்.

“எல்லாம் பேய்… பேய் என்று சொன்னால் ஒரு உக்கிரமான பேய்.” என்றார்.

நான் முதலில் சலிப்புற்றேன். கதைவிடப்போகிறார் என்று தோன்றியது. ஆனால் நினைவுகளை தொகுத்து கவ்வி இழுத்துவரப் போவது எது என்று சொல்லமுடியாது. அது ஒரு படிமம். ஆனால் அது இன்றைய மொழி. அன்றெல்லாம் அவை புழங்கும் உண்மைகள். தெய்வங்களும் தேவர்களும் நீத்தாரும் பேய்களும் பிசாசுக்களும் மனிதர்களுடன் புழங்கிய காலகட்டம்.

[ 2 ]

தாத்தா சொன்னார். நான் திருவனந்தபுரம் மத்தியச் சிறைச்சாலையில் வேலைசெய்த காலம். என் கண்காணிப்பில் இருந்த சாமிநாத ஆசாரி என்ற இளைஞனை தூக்கிலிட்டார்கள். திருவிதாங்கூர் ஆவணங்களின்படி கடைசியாகத் தூக்கிலிடப்பட்டவன் அவன்தான். மனைவியை கற்பழித்த உள்ளூர் நிலப்பிரபுவை கொலைசெய்த குற்றம். அவனுடைய கடைசிநாட்களில் நான் அவனுடன் இருந்தேன். அவன் இனிமையான மகிழ்ச்சியான இளைஞன். கடைசி ஆசை என்று ஒரு ஆடு வாங்கிவரச்செய்து சிறையில் இருந்த அனைவருக்கும் விருந்து வைத்துவிட்டு தூக்கிலேறினான்.

அவன் போனபின் ஒரு மாதம் சிறையே சோர்ந்துபோயிருந்தது. அவன் நினைப்பை பேசிக்கொண்டே இருந்தனர். அவன் கடைசியாகப்போட்ட அந்த விருந்தில் அத்தனைபேருமே சாப்பிட்டிருந்தனர்.ஆகவே அவன் தங்களுடனேயே இருப்பதாக அனைவரும் உணர்ந்தனர். ஆனால் சிறை என்பது ஒரு கொந்தளிப்பான இடம். அதுவும் 1946 என்பது நாள்தோறும் ஏதோ நடந்துகொண்டிருந்த காலகட்டம். சீக்கிரமே புதிய கைதிகள் வந்தனர். அவர்களில் பாதிப்பேர் அரசியல் கைதிகள். சிறைக்குள் அவர்கள் எதிர்ப்புக் கலவரம் செய்ய நாங்கள் அவர்களை அடித்து ஒடுக்கினோம்.

அதன்பின் காங்கிரஸ் தலைவர்கள் கேளப்பன், ஏ.கே.கோபாலன், கே.பி.கேசவமேனன் ஆகியோர் ஜெயிலுக்கு வந்தனர். ஜெயிலுக்குள் ஒரு வகையான அரசாங்கமே உருவானதுபோலிருந்தது. ஜெயிலுக்குள் பாரதமாதாகீ ஜே, இங்குலாப் சிந்தாபாத் எல்லாம் சாதாரணமாக ஒலிக்க ஆரம்பித்தது. ஜெயிலர்களுக்கே அரசியல் கைதிகள் மேல் மரியாதை வர ஆரம்பித்தது. ’ஒருவேளை சுயராஜ்யம் கிடைத்தால் இவர்கள் நம் எஜமானர்களாக வந்தாலும் வருவார்கள்’ என்று ஜெயிலர் குட்டப்பன் பிள்ளை சொன்னதும் நாங்களெல்லாம் சிரித்தோம். ஆனால் அது எல்லாருக்கும் உள்ளூர நடுக்கத்தை உருவாக்கியது.

ஆகவே நாங்கள் கைதிகளை அடிப்பதை நிறுத்திக்கொண்டோம். அவர்களை நாங்கள் அடிக்காமலானபோது அந்தச் சிறிய இடத்தில் அத்தனைபேரை அடைத்து வைக்கமுடியவில்லை. தண்ணீர் இல்லை. கழிப்பறை இல்லை. போர்வைகள் சட்டைகள்கூட இல்லை. ஆகவே அவர்கள் எப்போதும் சண்டைபோட்டார்கள். நாங்கள் அவர்களை கெஞ்சிக் கெஞ்சி சமாதானம் செய்யவேண்டியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அந்த தலைவர்களுக்கான வேலைக்காரர்களாக மாறினோம். எல்லாம் நாள் நாள் என நடந்தன. ஒருமாதம் கழித்து தூக்கிலேற்றப்பட்ட சாமிநாத ஆசாரி முழுக்கவே நினைவிலிருந்து மறைந்துபோனான்.

எனக்கு எங்கள் ஜெயிலின் ஸ்டோர் அறைமேல் ஓர் ஈடுபாடு உண்டு. இருட்டான அறை. உடைந்த பழைய சாமான்கள் நிறைந்து கிடக்கும். அரசாஙகத்தில் ஒரு பொருளை தூக்கிப்போடுவதென்றால்கூட ஏராளமான சட்டச்சடங்குகள் உண்டு.அதற்குச் சோம்பல்பட்டுக்கொண்டு எல்லாவற்றையும் இருட்டு அறைகளில் குவித்துப்போடுவார்கள். அந்த அறையில் என்னென்னவோ பொருட்கள் இருந்தன. பழைய பல்லக்குகள், உடைவாட்கள், ஈட்டிகள், தலைக்கவசங்கள், குதிரைச்சேணங்கள். ‘சென்ற கால வரலாறே உடைசல்களாக உள்ளே இருக்கிறது’ என்று ஜெயிலர் கட்டமம் வர்கீஸ் தாமஸ் மாப்பிள்ளை சொல்வதுண்டு.

நான் நினைத்துக்கொண்டேன். சுயராஜ்யம் கிடைத்தால் பழைய திருவிதாங்கூரையே அப்படி தூக்கி ஏதாவது இருட்டறைகளில் வைக்கவேண்டியிருக்கும். ஆயிரமாண்டுக்கால வரலாறு. எத்தனை கொலைகள், எத்தனை அநீதிகள், எத்தனை தோல்விகள், எத்தனை பேரழிவுகள். அரியகணங்களும் உண்டு. வெற்றிகள், சாதனைகள், மங்கலங்கள்,விழாக்கள். அவற்றை மட்டும் கோத்துக்கொண்டு மெல்லமெல்ல இன்னொரு வரலாற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதான். அவற்றை கொண்டுசென்று முகப்பில் அலங்காரம் செய்து நிறுத்தவேண்டியதுதான்.

ஜெயிலில் பெரும்பலானவர்கள் அந்த அறையை நெருங்க மாட்டார்கள்.  வர்கீஸ் மாப்பிள்ளையே என்னைத்தான் அழைப்பார். உள்ளே இருட்டும், ஒட்டடையும், புழுதியும், களிம்பும் ,துருவும், மட்கும் துணிகளும், எலிப்புழுக்கைகளும் கலந்த மூச்சடைக்கவைக்கும் நெடி. அங்கே இருக்கையில் நான் மண்ணுக்கு அடியில் ஆழத்தில் புதைந்து போய்விட்டிருப்பேன். காலமே தெரியாது. மூச்சுத்திணறல் தாங்கமுடியாமலாகும்போதுதான் வெளியே வருவேன். எனக்கு அது அந்தக் கட்டிடத்தின் மலக்குடல் என்று தோன்றுவதுண்டு.

அந்த அறைக்கு உள்ளே சென்று மீளும்போது சமகாலகட்டத்தில் இருந்து எங்கோ ஒரு கனவுக்குள் சென்று திரும்பி வருவதுபோன்ற உணர்வு. தேவையில்லாமல் கூட அதை அடிக்கடி திறந்து உள்ளே இருக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து அவை என்ன என்று பார்ப்பேன். கைநகங்களை பிடுங்கி எடுக்கும் குறடுகள், கொத்துக்கொத்தாக முடியை பிடுங்கி எடுக்கும் இடுக்கிகள், பற்களை இடுக்கி பிடுங்கி எடுக்கும் நெம்புகோல் போன்ற கருவிகள், பழுக்கக் காய்ச்சி உடலில் விதவிதமான முத்திரைகளைச் சூடுவைக்கும் இரும்பு அச்சுக்கள், பலவகையான சவுக்குகள், சவுக்காக பயன்பட்ட திரச்சிமீன் வால்கள் என ஏராளமான சித்திரவதைக் கருவிகள்.

ஒருகாலத்தில் சிறை என்பது வெறுமே அடைத்துவைக்கும் இடம் அல்ல, சித்திரவதைதான் முக்கியமாக நடந்திருக்கிறது. ஏனென்றால் அன்றெல்லாம் சாவு மிக எளிதானது. படைவீரனும் சாகத்தான்போகிறான். ஆகவே துளித்துளியாகச் சாகச்செய்தனர். உடலில் எழும் வலி எத்தனை ஆழமான நம்பிக்கையாலும் எத்தனை தீவிரமான பற்றினாலும் எவ்வளவு பெரிய துணிவாலும் எதிர்கொள்ளத்தக்கது அல்ல. அது ஓர் இயற்கைநிகழ்வு. அதை வெல்லவே முடியாது. எதிர்கொள்ள முயன்று மெல்லமெல்ல பணிந்துவிடவேண்டும்.

சித்திரவதை நம்மை வெறும் உடலாக ஆக்குகிறது. வெறும் மிருகமாக ஆக்குகிறது. இல்லை நான் மனிதன், நான் சிந்தனையாளன், நான் புரட்சியாளன், நான் நிரபராதி  என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஓர் எல்லைவரை. அதன்முன் தன் உள்ளத்தை கைவிடுகிறது உடல். வெறும் சதையென எலும்பென நரம்பென ஆகிவிடுகிறது. மிருகம்போல் ஊளையிடுகிறது, புழுப்போல நெளிகிறது. பரிதாபகரமான உடல், அருவருப்பான ஒரு பொருள் அது. எத்தனை பார்த்திருக்கிறேன் இந்தச் சிறையில்

எத்தனை வகையான சித்திரவதைகள். வதைக்கருவிகளில் கைகால்களை சேர்த்துப் பிணைக்கும் கிட்டிகள், தோலை உரிக்கும் மீன்செதில்கள், ஆளை சிலுவை வடிவில் இழுத்து அந்தரத்தில் நிறுத்தும் கொத்தாளங்கள், கைகால்களை முறுக்கி முறுக்கி எலும்புகளை ஒடிக்கும் முறிக்கைகள் போன்றவை மூர்க்கமானவை. இன்னும் நுட்பமான சித்திரவதைக் கருவிகள் உண்டு.அவை எப்படி பயன்படுத்தப்பட்டன என்று கண்டுபிடிப்பதே பெரிய கற்பனை தேவையாகும் பணி. நான் அதைக் கற்பனைசெய்யும்போது ஒருவகையான உடல்கூசும் பரவசத்தை அடைந்தேன். பல்லால் மின்சாரக் கம்பியை கடிப்பதுபோல ஓர் அனுபவம்.

பெரிய புனல் போன்ற இரு இரும்புப் பாத்திரங்கள் ஒரு சித்திரவதை கருவி. அவற்றின் கூர்முனைகளை  அசையாமல் கட்டிப்போடப்பட்ட  கைதியின் இரு காதுகளிலும் பொருத்துவார்கள். அவற்றின் அகன்ற வாயின் அருகே வெண்கலத்தாலான தட்டுமணிகள் கட்டித்தொங்கவிடப்படும். அவற்றை மெல்ல தட்டிக்கொண்டே இருப்பார்கள். அவற்றின் ரீங்காரம் அவன் செவிகளில் பலமடங்கு கார்வையுடன் முழக்கமிடும். அப்படி பல நாட்கள். பெரும்பாலானவர்கள் செவி அடைந்து பைத்தியமும் ஆகிவிடுவார்கள்.

அதேபோலவே கண்களை அகற்றி விழிகளுக்கு முன் லென்ஸ்களை நிறுத்தி அப்பால் மிகப்பெரிய வெளிச்சத்தைப் பீய்ச்சுவார்கள். வெளிச்சம் பலமடங்காக கண்களுக்குள் செல்லும். குருடாகிவிடுவார்கள். மிகநீளமான மோர்ஸிங் போன்ற ஒரு கருவியை பற்களால் கடிக்கவைத்து அதை சுண்டிக்கொண்டே இருக்கும் ஒரு சித்திரவதை உண்டு. தலையின் எலும்புகள் வழியாகச் செல்லும் அந்த ஒலியதிர்வு மூளையை கலங்கடித்துவிடும்.

நான் சித்திரவதை செய்பவன் அல்ல. என்னால் எந்த வன்முறையையும் நேருக்குநேர் பார்க்கமுடியாது. நான் காவல்துறைக்கு பொருத்தமானவனே அல்ல. இருந்தாலும் ஏன் அவற்றை பார்த்தேன்? என்னுள் இருந்த தாழ்வுணர்ச்சியாலா? அல்லது மறைமுகமான வன்முறை வெறி எனக்குள் இருந்ததா? எனக்கு இன்றும்கூட தெரியவில்லை. ஆனால் அந்த கொந்தளிப்பான காலத்தை அப்படியெல்லாம்தான் கடந்துவந்தேன்.

[ 3 ]

ஒருநாள் அந்த ஸ்டோர் அறையைத் திறந்தபோது உள்ளே எவரோ நிற்பதை உணர்ந்தேன். பயந்து நடுநடுங்கி வெளியே பாய்ந்து விட்டேன். துள்ளி துள்ளி அதிர்ந்த என் உடல் மெல்ல அமைதியடைந்தபிறகு கையில் இருந்த விளக்கை உள்ளே நீட்டி அது என்ன என்று பார்த்தேன். அது மனிதன் அல்ல, ஒரு பொம்மை. துணிப்பொம்மை. ஆனால் உள்ளே சட்டகம் இருக்கவேண்டும். விரைப்பாக நின்றது. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு மனிதனை விட கொஞ்சம் பெரியது. ஆறடி உயரம் இருக்கலாம். முகமோ கண்களோ வாயோ கிடையாது. தலை ஓர் உருளை. கைகால்கள், உடல், அவ்வளவுதான்

உள்ளே போய் அது என்ன என்று பார்த்தேன். அதை தூக்கமுயன்ற போது திடுக்கிட்டேன். அது நல்ல எடை இருந்தது. ஒரு பருத்த மனிதனின் எடை. கிட்டத்தட்ட எண்பது கிலோ. நான் தூக்கமுயன்றபோது அசைந்து சரிந்தது. அதை நன்றாகப் பார்த்துவிட்டு நான் தேடிச்சென்ற பழைய ஒரு தோல் சேணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.  வெளியே அமர்ந்துகொண்டபோது என் உடல் பதறிக்கொண்டிருந்தது. என்னை நான் சொற்களை கோத்து அமைத்து என் உள்ளமென அவற்றை ஆக்கி தேற்றிக்கொள்ளவேண்டியிருந்தது.

மீண்டும் உள்ளே சென்று அதை நன்கு ஆராய்ந்தேன். அது நன்றாகப் பருத்த ஒரு மனிதனின் உடலளவே எடைகொண்டது. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடல் அளவு கொண்டத்ய். மனிதனைப்போல செங்குத்தாக நின்றிருந்தது. இரும்பாலான சட்டகம் மேல் துணியைச் சுற்றி அதை உருவாக்கியிருந்தனர். எடைக்காக உள்ளே கற்கள் வைக்கப்பட்டிருக்கலாம். வயிறு -நெஞ்சுக் கூடுக்குள் அக்கற்கள் இருந்தன. ஆகவே சற்றே அசைத்தாலும் அது மேல்பகுதி எடையுடன் சரிந்து மண்ணில் விழுந்தது.

கட்டமம் வற்கீஸ் மாப்பிளையிடம் அது என்ன என்று கேட்டறிந்தேன். அது ஒரு டம்மி. “டம்மி உடம்பு. மனிதனைத் தூக்கில் போடுவதற்கு முன்னால் இதை தூக்கிலே போடவேண்டும்” என்றார்.

“ஏன்?”என்று கேட்டேன்

“1892ல் ஒருவனை தூக்கில் போட்டபோது கயிறு அறுந்துவிட்டது. கீழே விழுந்து அவன் துடித்தான். அவனை தூக்கிலே போடவேண்டாம் என்று அனந்தபத்மநாப சாமி ஆணையிட்டுவிட்டார், ஆகவேதான் தூக்குக் கயிறு அறுந்துவிட்டது என்றார்கள் சோதிடர்கள். ஆகவே அவனை விட்டுவிட்டார்கள். ஆனால் கழுத்து இறுக்கப்பட்டதனால் அவன் நோயாளியாக ஆனான். ஒருமாதம் படுத்த படுக்கையாக இருந்தான். உள்ளமும் கலங்கிவிட்டது. சாபங்கள் போட்டு அழுதபடியும், வெறிகொண்டு சிரித்தபடியும் இருந்தான். நாற்பத்திரண்டாம் நாள் அவன் இறந்தான்” என்றார் வற்கீஸ் மாப்பிள்ளை

“சோதிடர்கள் சொன்னபடி மகாராஜாவே ஆளனுப்பி அவனுக்குரிய ஈமச்சடங்குகளைச் செய்து நடுகல் நாட்டி பூசைக்கும் படையலுக்கும் ஏற்பாடுசெய்தார். ஆண்டுதோறும் அவனுக்கு குருதிக்கொடை அளிக்கப்படுகிறது. கரமனை ஆற்றின் கரையில் இன்று அவனுக்குக் கோயில் அமைந்துவிட்டது. தூக்குமாடன் சாமி என அவனை வழிபடுகிறார்கள்” என்று வற்கீஸ் மாப்பிள்ளை சொன்னார்.

அப்போது நாங்கள் கதலிவாழைப்பழம் போட்டு வாற்றி கொண்டுவரப்பட்ட நாட்டுச்சாராயம் குடித்துக்கொண்டிருந்தோம். வேலாயுதன் தண்டான் கொண்டுடு வந்து தருவான். அது ஒரு மாதாமாதம் நிகழும் சடங்கு. அதை அருந்தி கொஞ்சம் வியர்வையும் பூத்தால் வற்கீஸ் மாப்பிள்ளை இளகி இலகுவாகி தத்துவப்பேச்சு பேசுவார். சிறுஏப்பம் விட்டபடி அவர் சொன்னார்.

“இன்று அவனுக்கு பெரிய கொடைவிழாவே நடைபெறுகிறது. அவன் மகாராஜாவுக்குப் போட்ட சாபத்தால்தான் அவர் திடீரென்று இறந்தார் என்று கதைகள் உள்ளன. கீழ்க்குடிகள் வந்து அவனை வணங்கிக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் அவனுக்கு மஞ்சளரிசிப்பொடியுடன் பச்சை ஆட்டுரத்தம் கலந்து உருட்டி படையலிடுகிறார்கள். பானைத்தாளமும் உறுமித்தாளமும் முழங்க அவர்கள் அவன்முன் வெறிகொண்டு ஆடும்போது அவர்களில் ஒருவரின் மேல் அவன் சன்னதம் வந்து தோன்றுகிறான். அருள்வாக்கும் குறிச்சொல்லும் அளிக்கிறான்.”

“ஆகவே இனி அப்படி நடக்கக்கூடாது என்று திவான் ஆணையிட்டார். அதன்படி தூக்குபோடுவதற்கு என்று சில சடங்குகள் உருவாக்கப்பட்டன. ஒரே கயிற்றில் திரும்பத்திரும்ப தூக்கு போடக்கூடாது. ஒவ்வொரு தூக்குக்கும் தனியாக கயிறு செய்யப்படவேண்டும். தூக்கு போடப்பட்டவனுடன் சேர்த்து அதையும் எரித்துவிடவேண்டும். தூக்கு நிகழவதற்கு முன்பு இதேபோல மனித எடை கொண்ட ஒரு டம்மியை தூக்கில் தொங்கவிடவேண்டும். கயிற்றின் உறுதியைச் சோதனை செய்தபின் தூக்கிலிடவேண்டும்”

“இதெல்லாம் நூறாண்டுகளாக சீராக கடைப்பிடிக்கப்படுகின்றன. வெள்ளையர்கள் எப்படி தூக்குத்தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் என்று பார்த்து அதே நடைமுறையை இங்கேயும் அப்படியே உருவாக்கினார்கள்…டம்மி என்ற வார்த்தையே அவர்கள் உருவாக்கியதுதான்” என்று வற்கீஸ் மாப்பிளை சொன்னார். “டம்மி என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று நான் கரமனை சுந்தரேசய்யரிடம் கேட்டேன். அவர் இங்கிலீஷ் அறிந்தவர். டம்பி என்ற வார்த்தையிலிருந்து வந்தது. டம்ப் என்றால் பேசாதவன் அல்லது பேசமுடியாதவன்”

நான் திரும்பி அந்த துணிப்பொம்மையைப் பார்த்தேன். பேசாதவனா பேசமுடியாதவனா? என் எண்ணத்தை என்னால் எப்போதுமே கட்டுப்படுத்த முடிவதில்லை. பேசமுடியாதவை என ஏதும் இல்லை. எல்லாமே பேசும். அதற்குரிய தருணம் வந்தாகவேண்டும், அவ்வளவுதான்.

அந்த எண்ணத்தை உணர்ந்தவர்போல வற்கீஸ் மாப்பிள்ளை சொன்னார் “இது ஒருவேளை பேசிவிடுமோ என்ற பயம் இருந்திருக்கிறது நம் அதிகாரிகளுக்கு. ஆகவேதான் கண்ணோ வாயோ மூக்கோ இல்லாமல் முகத்தை மொழுங்கையான உருண்டையாக உருவாக்கியிருக்கிறார்கள்” என்று வற்கீஸ் மாப்பிள்ளை சொன்னார். ”பேச ஆரம்பித்தால் என்ன சொல்லும்? எத்தனை முறை எங்கெல்லாம் தூக்கிலிடப்பட்டது என்றா? திரும்பத்திரும்ப தூக்கிலிடப்படுவதன் துக்கத்தைச் சொல்லுமா?”

ஆனால் பேசுவதற்கு வாய் அவசியமா என்ன? உடலால் பேசமுடியாதா? நாக்கு நெளிந்து நெளிந்து தவித்துத் தவித்துதானே பேசுகிறது? என் மண்டைக்குள் ஓடும் சிந்தனையை என்னால் அடக்கவே முடிவதில்லை.

“இந்த டம்மி உண்மையில் ஐநூறாண்டுகளாக தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறது” என்று வற்கீஸ் மாப்பிள்ளை சொன்னார். நான் இங்கே சர்வீஸுக்கு வரும்போது அச்சுதன் நாயர் இங்கே இருந்தார். மிக வயதானவர். அவர் பதிமூன்று வயதிலேயே இங்கே காவலனாக வந்துவிட்டார். அன்றெல்லாம் வேலைக்கு வயது வரையறை இல்லை. இந்தச் சிறையை கட்டியதும் இங்கே வந்த முதல் காவலர் படைப்பிரிவில் அவரும் இருந்திருக்கிறார். தெரியுமே, அதற்கு முன்பு சிறை அங்கே, தேவாரக்கெட்டு அரண்மனைக்கு அருகே கோட்டைக்குள் இருந்திருக்கிறது.அச்சுதன் நாயர் ஒருவகை ஆயுள்கைதி. இந்த சிறையிலேயே வாழ்ந்து இங்கேயே மடிந்தார். காவலனாக என்பதுதான் வேறுபாடு”

“இந்த டம்மியைச் செய்தவர் அச்சுதன் நாயர். நல்ல பருமனான மனிதனின் எடையும் அளவும்கொண்ட டம்மி வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு ஆசாரியைக்கொண்டு அதை மரத்தில் செய்யலாம் என்று யோசித்தனர். ஆனால் மரம் அவ்வளவு எடை கொண்டிருக்காது. அந்த அளவுள்ள எடை கொண்ட மரம் என்ன என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது அச்சுதன் நாயர் அவரே செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். சரி என்று சொல்லி ஆணை கொடுத்துவிட்டார்கள். ஒரே நாளில் அச்சுதன் நாயர் இந்த டம்மியைச் செய்தார். அவருக்கு அன்று அதற்குப் பரிசாக ஐந்து வெள்ளிச்சக்கரம் பரிசாக அளிக்கப்பட்டது. அன்று அது பெரிய பணம்”

“அச்சுதன் நாயர் இதை எப்படிச் செய்தார் என்று அவரே சொன்னார்.” என்றார் வற்கிஈஸ் மாப்பிள்லை “அவருக்கு சட்டென்று ஓரு யோசனை தோன்றியிருக்கிறது. இங்கே தூக்குபூட்டு என்று ஒரு சித்திரவதைக் கருவி உண்டு. நீ அதை இப்போதுகூட பல சிறைகளிலே பார்க்கலாம். இப்போது அதை பயன்படுத்துவதில்லை. அது இரும்பாலான ஒரு கூண்டு. மனித உடலின் அதே வடிவில் இருக்கும். அதற்குள் தண்டனைக்குள்ளானவனை போட்டு  பூட்டிவிடுவார்கள். மேலே உள்ள கொக்கியால் அவனை முச்சந்தியில் ஏதாவது மரத்தில் தொங்கவிடுவார்கள்”

“அந்தக் கூண்டு மனித உடலின் அளவே ஆனது. இறுக்கமாக அசையாமல் மனித உடலை நிறுத்திவிடும். தொங்கிக் கிடப்பதனால் கொஞ்சம் கொஞ்சமாக உடலின் நீர் முழுக்க கால்களிலும் கைகளிலும் தேங்கி வீக்கம் ஏற்படும். விளைவாக தசைகள் இரும்புக்கூண்டில் இறுகி உடலில் வலி தொடங்கும். அந்த வலி பெருகிப்பெருகி நாட்கணக்கில் நீடிக்கும். ஆனால் ரத்த இழப்பு இல்லை என்பதனால் மயக்கம் வராது. வலியை அறிந்தே தீரவேண்டும். அவன் பசியால் மயங்காமலிருக்க பதநீரை குடிக்கக் கொடுப்பார்கள். நிறைய நீர் உடலில்  இருந்தால் உடல் உப்புவதும் அதிகரிக்கும். மெல்லமெல்ல உடல் உடைந்து நீர் வழியும். காகங்கள் வந்து கொத்தி கிழிக்கும். பதினைந்து நாட்கள் வரை வலியால் துடித்து துடித்து உயிர்பிரியும்”

“இது நடப்பது முச்சந்திகளில்…” என்று வற்கீஸ் மாப்பிள்ளை கைகளை தூக்கி குரல் எழுப்பிச் சொன்னார். “யோசித்துப் பார், முச்சந்திகளில்! அதைக் கண்டு மற்றவர்கள் பயப்படவேண்டும். ராஜத்துரோகிகள் இப்படி தண்டிக்கப்பட்டார்கள். சாதிச்சுவர்களை தாண்டிய புலையர்களும் மலையர்களும் ஈழவர்களும் இப்படி தண்டிக்கப்பட்டார்கள்”

நான் பிரமைபிடித்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த தூக்குபூட்டு கருவியை நான் பார்த்திருக்கிறேன். அந்த குடோன் அறைக்குள் கூட உடைந்துபோன ஒன்று இருந்தது.

“தூக்குபூட்டுக் கூண்டை எடுத்து உள்ளே நாலைந்து கல்குழவிகளை வைத்து அதன்மேல் துணியை இறுக்கமாகச் சுற்றி இந்த டம்மியை உருவாக்கினார். இது நூறுகிலோ எடை. ஆறரை அடி உயரம்”. என்றார் வற்கீஸ் மாப்பிள்ளை.

“இதை இப்போதும் தூக்கில் போடுகிறார்களா?”என்று நான் கேட்டேன்.

“ஆமாம். நூறாண்டுகளாக ஒவ்வொரு தூக்குக்குக்கும்  முன்னால் இதை தூக்கிலேற்றுவார்கள். கடைசியாக இப்போது சாமிநாதன் ஆசாரியை தூக்கிலேற்றும்போதுகூட இதை தூக்கிலிட்டோம்”

நான் அதை அறிந்திருக்கவே இல்லை.

“அதற்காகத்தான் அதை வெளியே எடுத்தோம். அதை எப்படிச் செய்வது என்றெல்லாம் எழுதிவைக்கப்பட்டுள்ளது. உண்மையான தூக்கு போலவே இதற்கும் எல்லா அதிகாரிகளும் வரவேண்டும். எல்லாமே உண்மையான தூக்கு போலவே நடைபெறவேண்டும். தூக்குக்கான ஆணையை நான் படிப்பேன். சாட்சிக்கு இரண்டு அதிகாரிகள் இருப்பார்கள். ஆராச்சாரும் உதவியாளனும் இந்த டம்மியை தூக்குமேடைமேல் ஏற்றி நிறுத்துவார்கள். நாங்கள் ஆணையிட்டதும் இதை உதவியாளன் பிடித்துக்கொள்ள ஆராச்சார் கழுத்தில் சுருக்கை மாட்டுவார். நான் ஆணையிடுவதற்கு முன்பு மற்றவர்களிடம் அனுமதி கேட்கவேண்டும். ஆணை இடப்பட்டதும் லிவர் இழுக்கப்படும். கீழே கதவு திறந்து ஓசையுடன் விழும். பள்ளத்தில் டம்மி விழுந்து தொங்கி சுழன்றுகொண்டு ஆடும்”

“உண்மையான மனிதனைப்போலவே அது ஆடும்” என்று வற்கீஸ் மாப்பிள்ளை சொன்னார். ”முப்பது நிமிடங்கள் அது கயிற்றில் அப்படியே தொங்கிக்கிடக்கவேண்டும் என்று ஆணை. அந்த முப்பது நிமிடங்களும் அங்கே நிற்பது ஒரு பெரிய அனுபவம். உண்மையான தூக்குக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. நம் கைகால்கள் பதறிக்கொண்டிருக்கும். சிறுநீர் வந்து முட்டும். கண்களில் இருட்டு படியும். அரைமணிநேரம் கழித்து அதை எடுப்பதற்கு கைகாட்டவேண்டும். கையை தூக்கவே முடியாது. உடல் பிணம்போல செயலிழந்து, வியர்த்துக் குளிர்ந்திருக்கும்”

“அதை இழுத்து சுருக்கை அவிழ்த்து படுக்கவைப்பார்கள். டாக்டர் சென்று அதை சோதனைசெய்வதுபோல பாவனை செய்யவேண்டும். அது செத்துவிட்டது என்று அறிக்கை அளிக்கவேண்டும். அதை நான் பதிவுசெய்யவேண்டும். எல்லாமே நாடகம். ஆனால் முறையாக நடிப்போம்” என்று வற்கீஸ் மாப்பிள்ளை சொன்னார். “நாடகம் ஒருவகையில் அந்த நிஜ நிகழ்வை விடக் கொடியது. மறுநாள் உண்மையில் ஒரு மனிதனை தூக்கிலிடும்போது அந்த அனுபவம் கொஞ்சம் பதற்றம் குறைவானதாகவே இருக்கும். அதை எண்ணி நான் வியந்திருக்கிறேன். அது ஏன் என யோசித்திருக்கிறேன். ஒருமுறை அதை நாம் நடித்துவிட்டதனால் மறுபடி நிகழும்போது பதற்றம் குறைந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டேன்”

”அந்த டம்மி மனிதனை விட பரிதாபத்திற்குரியது என்பதனால்கூட இருக்கலாம்” என்று நான் சொன்னேன் “அதை நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் தூக்கிலிடுகிறார்கள்”

வற்கீஸ் மாப்பிள்ளை திகைப்புடன் என்னைப் பார்த்தார். பிறகு “ஆமாம், எதற்கும் நீ அந்த டம்மியை தொடவேண்டாம்… அதை திரும்ப பழைய இடத்திலேயே வைத்துவிடு. இனி அடுத்த தூக்கு வருவது வரை நமக்கு அது தேவையில்லை”

“ஆமாம்” என்றேன்.

“அதில் என்னென்ன கெட்ட ஆவிகள் இருக்கின்றன என்று யார் கண்டார்?”என்றார் வற்கீஸ் மாப்பிள்ளை. அவருக்கு நாக்கு நன்றாக குழறத் தொடங்கிவிட்டிருந்தது. “இப்போது அந்த டம்மியை இறக்கி படுக்கவைத்துவிட்டு டாக்டரிடம் போய் பரிசோதனைசெய்ய சொன்னோம். அவர் போய் கையில் நாடிபார்ப்பதுபோல நடிக்கவேண்டும். கையை பிடித்ததுமே அவர் திடுக்கிட்டு எழுந்துவிட்டார். உடம்பு நடுங்கியது. நான் என்ன என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று சொல்லி மீண்டும் நாடித்துடிப்பை பார்த்தார். அறிக்கையும் அளித்தார்”

”நாங்கள் டாக்டரின் காரில்தான் வீட்டுக்குச் சென்றோம். அவருடைய வீடு வழுதைக்காட்டில் இருந்தது. காரில் டாக்டர் அமைதியாக இருந்தார். பதறிக்கொண்டிருந்தார். நான் என்ன ஆயிற்று என்று கேட்டேன். பதில் சொல்ல மறுத்துவிட்டார்.  ஆனால் பத்துநாட்களுக்குப் பின்பு சொன்னார். அந்த டம்மியை அவர் நாடி பிடித்துப் பார்த்தபோது அதில் கொஞ்சம் துடிப்பு எஞ்சியிருந்தது என்று…”

[ 4 ]

“சேச்சே” என்று நான் சொன்னேன். “அந்தக்காலத்து ஆட்களின் மூடநம்பிக்கைகள்… குற்றவுணர்ச்சியிலிருந்து வருபவை அவை”

“இல்லை, நானும் அதில் ஏதோ குடியிருந்தது என்று நினைக்கிறேன்”என்று தாத்தா சொன்னார். “டாக்டர் சொன்னது உண்மை. அதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஏனென்றால் நானே அதை உணர்ந்திருக்கிறேன்”

நான் ஒன்றும் சொல்லவில்லை. தாத்தா அவரே பேசலானார். அவருடைய நினைவுகளும் உணர்வுகளும் கலந்து மழுங்கிய கிழக்குரலில் வெளிப்பட்டன

நான் அந்த டம்மியை குடோன் அறைக்குள் இருந்து எடுத்து பலமுறை பார்த்திருக்கிறேன். அதை மறுபடியும் பார்க்கவே கூடாது என்று நினைப்பேன். ஆனால் அதை என்னால் தவிர்க்கவே முடிந்ததில்லை. அந்த அறைக்குள் அது இருக்கிறது என்னும் உணர்வு என்னுள் இருந்தது. இருண்ட கருவறைக்குள் இருக்கும் தெய்வம்போல.

அது என்னை பார்த்தது. அதற்குக் கண்கள் இல்லை. கண்களால் பார்க்கத்தான் வெளிச்சம் தேவை. அந்தப்பார்வைக்கு இருட்டு மேலும் பொருத்தமானது. அது வாயற்றது, பேசமுடியாதது அல்லது பேசாதது. ஆகவே அதன் பார்வை கூர்மைகொண்டிருந்தது

அதை நான் முதலில் தொட்டபோது ஓர் அதிர்வை உணர்ந்தேன். ஆம், மெய்யாகவே உணர்ந்தேன். உயிருள்ள ஓர் உடலின் அதிர்வு அது. உயிரின் அதிர்வு. அந்த அதிர்வை உணர்ந்ததும் நான் கைகளை உதறிவிட்டு உளறியடித்தபடி அறையை விட்டு வெளியே ஓடிவிட்டேன். ஆனால் வெளியே வந்ததுமே நிதானமடைந்தேன். அதை என் கற்பனை என்று விளக்கிக்கொண்டேன். மீண்டும் உள்ளே சென்று அதன் கையைப் பிடித்துப்பார்த்தேன். அதே அதிர்வு இருந்தது.

இம்முறை நெஞ்சு உடைவதுபோல துடித்துக்கொண்டிருந்தாலும் என்னால் நிதானமாக அதை ஆராய முடிந்தது. சத்தியமாகச் சொல்கிறேன், எந்தக் கற்பனையும் இல்லை, அதில் உயிரின் துடிப்பு இருந்தது. அதுதானா அதுதானா என எத்தனையோ முறை சோதித்துப் பார்த்தேன். அது உயிரின் துடிப்பேதான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.