தேவி

ஆஸ்கார் வைல்டின் ‘எந்த மர்மமும் இல்லாத பெண்’ என்ற ஒரு சிறுகதை உண்டு. பெண்மையின் ஜாலம் என்று அக்கதையைச் சொல்லலாம். சிறுகதை தோன்றிய காலகட்டம். அப்போதே அதை எழுதிப்பார்த்திருக்கிறார். அதன் பின் இத்தனை ஆண்டுகளில் உலகச்சிறுகதைகளை திரும்பிப்பார்க்கையில் சிறுகதை என்ற வடிவில் முடிவில்லாமல் எழுதப்பட்டவை பெண்மையின் வண்ணங்களே என்று படுகிறது. புதுமைப்பித்தன், ஜானகிராமன், வண்ணதாசன் வரை. அது தவிர்க்கமுடியாது. வைரத்தை திருப்பி ஒரு கணம் மின்னும் ஒரு பட்டையின் ஒளியை கண்டடைவதுபோன்றது பெண்மையின் ஒரு தருணம் வெளிப்படுவது. அதற்குரிய வடிவம் சிறுகதைதான்.

இந்தக்கதைகளை மறுபடி தொகுப்புக்காகப் பார்க்கையில் இதிலுள்ள பெண்மையின் வெவ்வேறு தோற்றங்கள் நெகிழ்வூட்டுகின்றன. வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் லீலையின் நாயகி, வாழ்க்கையை தன் கையில் எடுத்து ஆடும் தேவி. இந்த முகங்களை எழுதும்போது ஆசிரியனாக நான் அகத்தே புன்னகைகொண்டிருக்கிறேன். அப்புன்னகை இக்கதைகளிலும் உள்ளது. இன்று பெண்மையின் இந்த ஜாலங்களை தந்தையின் இடத்தில் இருந்துகொண்டு ஆடுக மகளே என்று சொல்லுபவனாக ஆகியிருக்கிறேன்.

இக்கதைகளின் நுட்பங்கள் என நான் நினைப்பது பெண் அளிக்கும் பாவனைகளை. அவை மெய்யாக வெளிப்படுபவையும்கூட. மண்ணின் பாவனைகளே பருவங்களும் பொழுதுகளும் என்பதுபோல. அவையே நம் வாழ்வின் அத்தனை அழகுகளையும் தீர்மானிக்கின்றன.

இந்நூலை என் பிரியத்திற்குரிய சிங்கப்பூர் சித்ரா ரமேஷுக்குச் சமர்ப்பிக்கிறேன். வாழ்க்கையின் துயர்கள் அலைக்கழிப்புகள் அனைத்துக்கும் அப்பால் ஆசிரியை என நிமிர்ந்து நிற்கும் ஆளுமை கொண்டவர். எந்நிலையிலும் தழையாத நன்னம்பிக்கையும் ஊக்கமும் கொண்டவர், அத்தகைய நட்புகள் பெரும் கொடைகள்.

ஜெ

தேவி வாங்க

***

வான்நெசவு முன்னுரை ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை தேவி – முன்னுரை ஐந்து நெருப்பு முன்னுரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2021 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.