இந்திய இலக்கிய வரைபடம்

அன்புள்ள ஜெ,

நலம் தானே.

How to Read a Book by Mortimer Adler புத்தகம் பற்றி பார்க்க நேர்ந்தது. அதன் இறுதியில், அவர் காலவரிசை படி மேற்கின் சிறந்த எழுத்தாளர்களையும், அவர்களின் முக்கியமான படைப்புகளையும் கொடுத்திருந்தார். அவர் குறிப்பிட்டு இருக்கும் நூல்களை படித்தால் மேற்கின் இலக்கியம், தத்துவம், அரசியல், அறிவியல் பற்றி நல்ல அறிமுகம் கிடைக்கும் என நினைக்கிறேன். ஆனால் கீழை மரபை பற்றி தனக்கு போதிய பரிச்சயம் இல்லாததால், அது பற்றிய நூல்களை குறிப்பிடவில்லை எனக்கூறியிருக்கிறார்.

ஒருவன் இந்த பாரத நிலத்தில் இன்று வரை நடந்த வரலாறு, இலக்கியம், தத்துவம், அறிவியல்,புவியியல்,அரசியல் பற்றி போதிய அறிமுகம் பெற வேண்டுமானால் அவன் என்ன நூல்களையெல்லாம் வாசிக்க வேண்டும்?

உங்களால் விடை கூற முடியும் என நம்புகிறேன்.

நன்றி

இப்படிக்கு,

சண்முகசுந்தரபாண்டியன் த

***

 

சிவராம காரந்த் கன்னடம்

எஸ்.எல்.பைரப்பா கன்னடம்

அன்புள்ள சண்முகசுந்தர பாண்டியன்,

மேற்கே இலக்கிய விமர்சனத்திற்கு இருநூற்றைம்பதாண்டுக் கால வரலாறுண்டு. தொடர்ச்சியாக ஏற்றும் மறுத்தும் இலக்கிய விமர்சனங்கள் எழுதப்பட்டுள்ளன. பட்டியல்கள் காலந்தோறும் போடப்படுகின்றன, மேலையிலக்கியம் சார்ந்து குறைந்தது நூறு பட்டியல்களையாவது நான் சேமித்து வைத்ததுண்டு. அவற்றிலிருந்து மீண்டும் ஒரு பொதுப்பட்டியலை உருவாக்குவது எளிது.

இந்தியச்சூழல் அப்படி அல்ல. இந்திய மொழிகளிலேயே சிறப்பான விமர்சன இயக்கம் இல்லை. பலமொழிகளின் விமர்சன அணுகுமுறையே இல்லை. இந்திய அளவில் ஓர் எழுத்தாளர் அறியப்படவேண்டுமென்றால் அவர் ஆங்கிலம் வழியாக பரவலாக சென்றடையவேண்டும்.

 

 

வைக்கம் முகம்மது பஷீர் மலையாளம்தகழி சிவசங்கரப்பிள்ளை மலையாளம்

அதற்கு இரு வழிகள். மைய அரசின் இலக்கியநிறுவனங்கள், கல்வித்துறை நிறுவனங்கள் ஒரு வழி. அவ்வாறு அறிமுகமாகும் முகங்களில் முக்கால்வாசிப்பேர் உள்ளீடற்றவர்கள். தொடர்புகள் வழியாக முண்டியடித்து உள்ளே நுழைந்தவர்கள். பெரும்பாலும் கல்வித்துறைப் பேராசிரியர்கள். அல்லது பேராசிரியர்களின் தயவைப் பெற்ற ஆழமில்லாத எழுத்தாளர்கள்.

நல்ல எழுத்தாளர்கள் அப்படி முண்டியடிப்பதில்லை. ஆகவே அவர்கள் மொழியாக்கம் செய்யப்படுவதில்லை, தேசிய அளவில் முன்வைக்கப்படுவதில்லை. என் புரிதலில் மலையாளம், வங்கம், கன்னடம், உருது மொழிகளில் இருந்து அறியப்படுபவர்கள் பெரும்பாலும் அங்குள்ள விமர்சன இயக்கத்தால் முன்வைக்கப்பட்டவர்கள்.

புதுமைப்பித்தன்

ஜெயகாந்தன்

இந்தியிலும், மராட்டியிலும் தமிழிலும் கலவையாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒப்புநோக்க இந்தியிலிருந்தும் தமிழிலிருந்தும் தேசிய அளவில் அறியப்படுபவர்கள் மேலோட்டமான படைப்பாளிகள்தான். யோசித்துப்பாருங்கள் இந்தியாவின் இலக்கியப் பேருருவங்களின் வரிசையில் தமிழிலிருந்து நாம் கொண்டு வைக்கும் பெயர் அகிலன். தமிழிலேயே இன்று அவரை பொருட்படுத்த எவருமில்லை.

தெலுங்கு, பஞ்சாபி, ஒரியா, அஸாமி மொழிகளில் இருந்து பெரும்பாலும் மொக்கைகளே தேசிய அளவில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்களைக்கொண்டு அந்த மொழி இலக்கியத்தை மதிப்பிட்டால் அது மிகப்பெரிய அநீதியாக ஆகிவிடும். உதாரணமாக கன்னட இலக்கியத்தின் மகத்தான முகம் எஸ்.எல்.பைரப்பா. ஆனால் அவருக்கு ஞானபீடம் அளிக்கப்படவில்லை. சந்திரசேகரக் கம்பார் என்ற அரைவேக்காட்டுக் கவிஞர் ஞானபீடம் பெற்றார். எளிய அரசியல் நாடகங்களை எழுதிய கலைஞர் கிரீஷ் கர்நாட் ஞானபீடம் பெற்றார்.

பிரேம்சந்த் இந்தி

கிரிராஜ் கிஷோர்- இந்தி

இன்னொரு வழி, வணிகப்பிரசுரங்கள் வழியாக வரும் இந்தியமொழி இலக்கியங்களின் மொழியாக்கங்கள். ஆனால் மிகமிகமிக அரிதாகவே வணிகப்பிரசுரங்கள் தரமான இலக்கியங்களை வெளியிடுகின்றன. பெரும்பாலும் அவர்கள் வெளியிடுவது இந்தியாவின் கல்வித்துறைவாசிப்பை நம்பித்தான். இந்திய பல்கலைகழகங்களில் ஆங்கிலம் வழி இலக்கியம் கற்கும் பல ஆயிரம் மாணவர்களே இலக்கு.

ஆகவே விளிம்புநிலைக் கதையாடல், தலித் எழுத்து, பெண்ணிய எழுத்து என்றெல்லாம் எளிதில் ‘லேபில்’ குத்தப்படும் எழுத்துக்களையும், பெருமாள் முருகன் போல சர்ச்சைக்கிடமான எழுத்துக்களையுமே வெளியிடுகிறார்கள். அவையே பாடத்திட்டத்திற்கும் உகந்தவை. ஓரளவு வெளியேயும் வாசிக்கப்படுகின்றன.

குர்ரத்துலைன் ஹைதர் உருது

ராஜேந்திரசிங் பேட்டி [உருது]

இந்திய ஆங்கில இதழ்களில் இலக்கியரசனையுடன் மதிப்புரை எழுதுவோர் எவருமே இல்லை. பெரும்பாலும் அனைவருமே இதழாளர்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் எளிமையான அரசியல் வாசிப்பு. அதில் தேறும்படைப்புகளையே அவர்கள் முன்னிறுத்துவார்கள். அவ்வகையிலேயே பிரசுரங்களும் நூல்தேர்வை நிகழ்த்துகின்றன.

இப்பதிப்பங்களின் நூல்கள் வழியாக நாம் இலக்கியப் புரிதலை அடைந்தால் தமிழின் முகங்கள் பெருமாள் முருகன், சல்மா, இமையம் போன்றவர்கள். அவர்கள் மிக மிக எல்லைக்குட்பட்ட படைப்பாளிகள். அவர்களைக் கொண்டு தமிழிலக்கியத்தின் தரத்தை புரிந்துகொள்ள முடியுமா?

விபூதிபூஷண் பந்த்யோபாத்யயா வங்காளம்

தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய வங்காளம்

 

ஆஷாபூர்ணா தேவி, வங்காளம்

இந்திய வணிகப்பதிப்பகங்களின் மொழியாக்கங்களை நம்பியும் நாம் இலக்கிய மதிப்பீட்டை உருவாக்கிக் கொள்ள முடியாது. இவ்வாறு இருவகையிலும் கிடைக்கும் நூல்களைக் கொண்டு இந்திய இலக்கிய வரைபடத்தை உருவாக்கிக் கொள்வதும் சரி, மதிப்பிடுவதும் சரி மிக அநீதியான செயலாகவே இருக்கும்.

அத்துடன், இன்று ஒட்டுமொத்த இந்திய இலக்கியச் சூழலையும் கருத்தில்கொண்டு எழுதும் இலக்கிய அறிஞர்கள் எவரும் கண்ணுக்குப் படவில்லை. சென்றகாலத்திலாவது ஏ.கே.ராமானுஜன், கே.எம்.தாமஸ், சச்சிதானந்தன் போன்ற சில பெயர்கள் இருந்தன. இன்று வெறும் இதழாளர்களே தெரிகிறார்கள். தேசிய அளவில் அறியப்பட்ட இந்திய இலக்கிய விமர்சகர் என ஒரு பெயர் கூட இல்லை.

ஸ்ரீஸ்ரீ- தெலுங்கு

ஆகவே எவரும் நமக்கு ஒட்டுமொத்தச் சித்திரத்தை அளிக்கும் இடத்தில் இல்லை. நாமே கிடைக்கும் நூல்களைக் கொண்டு ஒரு சித்திரத்தை உருவாக்கவேண்டும். நமக்கு கிடைக்கும் நூல்கள் பலசமயம் இருபத்தைந்தாண்டுக்காலம் பழையவை. அவற்றைக்கொண்டு சமகாலச் சித்திரத்தையே உருவாக்கிக் கொள்ள முடியாது.

சிலமொழிகளின் இலக்கியங்களைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. நான் வாசித்தவரை தெலுங்கில் இருந்து ஒரு நல்ல நாவல்கூட, சொல்லப்போனால் அச்சிடும் தகுதிகொண்ட நாவல்கூட வாசிக்கக் கிடைக்கவில்லை. ஒரியமொழியில் ஞானபீடம் கிடைத்தவர்களில் பிரதிபா ராய் சிவசங்கரியைவிட ஒரு படி கீழே. அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமியின் எந்தப்படைப்பையும் ஓர் இலக்கிய பிரசுரநிறுவனம் வெளியிடத் தேர்ந்தெடுக்காது. வெறும் அரசியல் கூச்சல்கள் அவை.

சீதாகாந்த் மகாபாத்ரா ஒரியா

கிடைக்கும் நூல்களைக் கொண்டு நான் ஒரு சித்திரத்தை உருவாக்கி முன்வைத்துள்ளேன். ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ என்னும் நூல் இந்திய இலக்கியச் சித்திரத்தை 20 நாவல்கள் வழியாக முன்வைப்பது. அதிலிருந்து இந்திய இலக்கியத்தின் ஒரு வரைபடத்தை அடைய முடியும்.

சமீபத்தில் அந்நூலை விரிவாக்கலாம் என சாகித்ய அக்காதமி வெளியிட்ட சில மொழியாக்கங்களை வாசித்தேன். கன்னடத்தில் இருந்து இறையடியான் மொழியாக்கம் செய்த போராட்டம் [வியாசராய பல்லாள] ப.கிருஷ்ணசாமி மொழியாக்கம் செய்த சிதம்பர ரகசியம் [பூர்ணசந்திர தேஜஸ்வி] ஞானன் மொழியாக்கம் செய்த நீலநிலா [சிவ்பிரசாத் சிங்] ஆகிய நாவல்களின் மொழிநடை அந்நாவல்களை வாசிக்கச் செய்யவில்லை. 

வி.எஸ்.காண்டேகர் மராத்தி

பல மொழியாக்கங்கள் அத்தகையவை. ஏனென்றால் இங்கே இந்தியமொழிகள் நடுவே மொழியாக்கங்கள் இந்தி, ஆங்கிலம் வழியாக நடைபெறுகின்றன.இந்த மொழியாக்கங்கள் வழியாக நாம் அடையும் சித்திரமும் சரியானது அல்ல. இவற்றை நம்பி நாம் இன்று இந்திய இலக்கிய வரைபடத்தை உருவாக்கிக் கொள்ள முடியாது.

நாம் ஒர் இந்திய இலக்கிய கருத்தரங்குக்குச் சென்றால் அங்கே நம்மிடம் தமிழில் சிறந்த எழுத்தாளர் என்று கேட்டால் அவர்களுக்கு கொஞ்சம்கூட தெரியாத பெயர்களைச் சொல்கிறோம். பலமொழிகளில் நாம் கேள்விப்பட்டே இராத பெயர்களையே சொல்கிறார்கள். இந்தியச் சூழல் இன்று இதுதான்.

பன்னலால் பட்டேல் [குஜராத்தி]

ஜாவேர் சந்த் மேக்னானி

இச்சூழலில் எப்படி ஒரு மதிப்பீட்டை உருவாக்கிக் கொள்வது? இன்று நாம் கிடைப்பவற்றை வாசிக்கலாம், பட்டியலெல்லாம் போடவே கூடாது. இந்திய இலக்கியத்தை இந்தியர்கள் வாசிக்கவே இன்னும் ஒரு நூற்றாண்டாவது ஆகும். அதன்பின்னர்தானே உலகம் வாசிப்பது.

இந்திய அரசு சார்ந்த நிறுவனமான சாகித்ய அக்காதமி பெருமுயற்சி எடுக்கிறது என்பதை மறுக்கவில்லை. ஆனால் இந்திய இலக்கியப் பரிமாற்றத்தில் நம் கல்வித்துறை பரிதாபகரமான தோல்வியே அடைந்துள்ளது. அதில் இந்திய மொழிப்பேராசிரியர்களின் பங்கு எந்த வகையிலும் ஆக்கபூர்வமானது அல்ல, பெரும்பாலும் எதிர்மறையானது. அவர்கள் பரிசுகளை தாங்கள் பெறவும், தங்கள் அடிமைகளுக்கு வாங்கித்தரவுமே முயல்கிறார்கள். அவர்களில் உண்மையான ரசனை கொண்டவர்கள், அறிதல் கொண்டவர்கள் அரிதினும் அரிது.

இந்திய இலக்கியம் ஒற்றைப்பெரும்பரப்பாக ஆக மிகப்பெரிய அறிவியக்கம் தேவை. பெரும்பாலான முதன்மைப்படைப்பாளிகள் இந்தியமொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்படவேண்டும். அவர்களைப் பற்றிய உரையாடல் நிகழவேண்டும்.அதற்கான இதழ்கள், கருத்தரங்குகள் வேண்டும்.

யோசித்துப் பாருங்கள்,  இந்தியமொழிகள் அனைத்திலும் வெளிவரும்படி இந்திய இலக்கியத்தை அறிமுகம் செய்யும் ஒர் இதழை சாகித்ய அக்காதமி நடத்தியிருக்க முடியாதா? சரி, இன்று ஒரு வலைத்தள இதழை நடத்த முடியாதா? சுதந்திரம் கிடைத்தபின் இந்த முக்கால்நூற்றாண்டில் அது நிகழவில்லை.

இன்றையச் சூழல் இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கு மிகமிகப் பின்னால் சென்றுவிட்டிருக்கிறது. இன்று உலக அளவிலேயே இலக்கிய உரையாடல் இல்லை. அதற்கான அமைப்புகள் எல்லாமே செயலற்றுவிட்டன. இன்று உலக அளவில் இலக்கியம் வணிகப்பிரசுரங்களால் ஒருங்கிணைக்கப் படுகிறது. ஆகவே எல்லா மொழிகளில் இருந்தும் ‘விற்கப்படும்’ நூல்களே பொதுவாக வந்து சேர்கின்றன. அவற்றாலான உலக இலக்கியச் சூழல் அமைந்துவிட்டது.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.