வாழ்த்துகள்

கவிஞர் சுகுமாரன் ஆசிரியராகப் பணியாற்றிக் காலச்சுவடு 100 ஆவது இதழ் வெளியாகியுள்ளது. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்குக் காலச்சுவடு பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறது. இந்த இதழின் முகத்தை உருவாக்கியதிலும். அதன் தனித்துமிக்கப் பார்வைகள் மற்றும் படைப்புகளைத் தேர்வு செய்து வெளிக்கொண்டு வந்ததிலும் சுகுமாரனின் பங்கு முக்கியமானது.

சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு அவரது கனவின் வெளிப்பாடாக இருந்தது. அதன் அடுத்த கட்ட நகர்வினை, புதிய சாளரங்களைத் திறந்து வைத்ததில் சுகுமாரன் முக்கியமானவர்.

வார இதழ், மற்றும் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றி நீண்ட அனுபவம் கொண்டவர். மிகச்சிறந்த கவிஞர். நாவலாசிரியர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இசை, உலகசினிமா, ஓவியம் என நுண்மையான ரசனை கொண்டவர் என அவரது பன்முகத்தன்மை காலச்சுவடு இதழை உருவாக்குவதில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது

அசோகமித்திரன் ஆசிரியராக இருந்து கொண்டு வந்த கணையாழி இதழ்களை இந்தத் தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன். அசோகமித்திரனின் அர்ப்பணிப்பும், படைப்புகளைத் தேர்வு செய்தவிதமும் மிகுந்த பாராட்டுக்குரியது. அதற்கு இணையான பணியைச் சுகுமாரன் செய்திருக்கிறார்.

சமகால அரசியல், மற்றும் பண்பாட்டுப் பிரச்சனை சார்ந்த கட்டுரைகள். சிறந்த சிறுகதைகள். கவிதைகள், மொழியாக்கப் படைப்புகள். இளந்தலைமுறையின் படைப்புகள். மாற்றுக்கல்வி குறித்த கட்டுரைகள், எனப் பல முக்கியப் படைப்புகள் இந்த நூறு இதழ்களில் வெளியாகியுள்ளன. அத்துடன் இதழின் வடிவமைப்பு, மற்றும் அதில் இடம்பெற்ற ஓவியங்கள் சிறப்பானவை.

தனது தனிப்பட்ட நட்பு மற்றும் விருப்பங்களைத் தாண்டி சிறந்த படைப்புகளை மட்டுமே தேர்வு செய்வதில் சுகுமாரன் கறாரானவர். அது போலவே மொழிபெயர்ப்புகளை அவர் மூலத்துடன் ஒப்பிட்டுத் திருத்தம் செய்வதிலும் அவர் காட்டும் அக்கறை தீவிரமானது.

இலக்கிய இதழின் ஆசிரியருக்குச் சமகாலத்தில் இந்திய மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் இலக்கிய முயற்சிகள். படைப்புகள். சிந்தனைகள் குறித்து ஆழ்ந்த வாசிப்பும் புரிதலும் இருக்க வேண்டும். சமூகப்பிரச்சனைகள். பண்பாட்டு மாற்றங்கள். குறித்த ஆழ்ந்த பார்வைகள் இருக்க வேண்டும். அதில் சுகுமாரனுக்கு இணையேயில்லை. தமிழ், மலையாளம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆழ்ந்து வாசிக்கக் கூடியவர். இந்திய மற்றும் சர்வதேச அளவிலான படைப்பாளர்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர். அவரது பரந்த வாசிப்பின். ஈடுபாட்டின் அடையாளங்களைக் காலச்சுவடு இதழ்களில் காணமுடியும்.

எந்நிலையிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத அவரது ஆளுமையைக் கண்டுவியக்கிறேன். நிகரற்ற கவியாகவும் சிறந்த பத்திரிக்கையாசிரியராகவும், எழுத்தாளராகவும் அவரது பங்களிப்பு மகத்தானது.

சுகுமாரனின் பணி மேலும் சிறக்க மனம் நிறைய வாழ்த்துகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 06, 2021 22:50
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.