ஆலயம் கடிதங்கள்-3

ஆலயம் எவருடையது? ஆலயம் கடிதம் 1 ஆலயம் கடிதங்கள்-2

வணக்கம்,

வாரந்தோறும் செல்லும் அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் வசதிக்கேற்ப தூரத்திலிருந்து பார்த்தால் மூர்த்தி தெரியும் வகையில் ஒரு focus light ஐ வைத்து கருவறையில் ஒளியை பாய்ச்சுகிறார்கள். அந்த ஒளியின் வெப்பத்தில் ஐந்து நிமிடங்கள் கூட நம்மால் நிற்க முடியாது. ஒரு பக்தன், உள்ளே இருப்பது கல் என்று நம்பியிருக்க வேண்டும் அல்லது  அவர் எவ்ளோ சூடும் தாங்குவார் என்று  நம்பியிருக்க வேண்டும்.  யார் சொன்னது கடவுள்தான் பக்தனை சோதிக்கிறார் என்று?

ஆகவே பெரிய கோயில்களுக்கு திங்கள் அல்லது புதன் கிழமைகளிலும் திருநாள்களில்/ விடுமுறைகளில் பிரபலமிலாத கோயில்களுக்கும் செல்வதுதான் வழக்கமாகியிருக்கிறது. மாறிச்சென்றால் அன்றுமுழுதும் ஆற்றாமையும் கோபமும்தான் பொங்கி வருகிறது

ஆலயம் பதிவு தக்க சமயத்தில் எழுதப்பட்ட முக்கியமான ஒன்று. அதுவே பக்தர்களின் குரல்

அன்புடன்

R.காளிப்ரஸாத்

அன்புள்ள ஜெ

ஆலயங்கள் அரசிடம் இருக்கவேண்டுமா இல்லையா என்பதல்ல இன்றைய பிரச்சினை. ஆலயங்களைப் பாதுகாப்பது எவர் என்பதுதான். ஆலயம் பற்றிய தெளிவு இந்துக்களிடம் இல்லை. அவை பாரம்பரியச் சொத்துக்கள் என்னும் நினைப்பு இல்லை. சிலர் அவற்றை தங்கள் சொத்து என நினைக்க பிறர் அவற்றுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என நினைக்கிறார்கள். ஆலயத்தின் சிற்பங்களையும் கட்டிட அழகையும் அறிபவர்கள் நாத்திகர்களானாலும் அவற்றை பேணவே நினைப்பார்கள். ஆலயங்களின் ஒத்திசைவு என்பது ஒரு மெய்ஞானத்தின் பருவடிவம் என நினைக்கும் ஆத்திகர்கள் அதை அன்றாடப்புழக்கத்துக்காக அழிக்க நினைக்க மாட்டார்கள். ஆனால் அந்தப் புரிதல் இரு சாராருக்குமே இல்லை. ஆகவேதான் ஆலயங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன.

ஜி. சம்பத்குமார்

அன்புள்ள ஜெ

ஆலயங்களைப் பற்றிய விவாதத்தில் தெளிவாக ஒன்றைச் சொல்லியிருந்தீர்கள், ஆலயம் என்பது ஒரு மந்திரம் போன்றது. அதை மாற்ற நமக்கு உரிமை இல்லை. அதை நானும் பலவாறாக பக்தர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் பக்தர்கள் இன்னும் அதை ஒரு கட்டிடமாகவே நினைக்கிறார்கள்.

ஆலயங்களுக்குள் குப்பைத்தொட்டிகள் வைக்கலாமா என்ற ஒரு சர்ச்சை ஒருமுறை வந்தது. வைக்கக்கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் அப்படியென்றால் குப்பையை அப்படியே போடுவார்கள் என்றார்கள். ஆலயம் முழுக்க ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் இருப்பதற்கு நம் மரபில் என்ன பொருள்? அது மூதேவி, ஜ்யேஷ்டாதேவி. அதை ஆலயம் முழுக்க நிரப்பி வைக்கலாமா?

சரி, அப்படியென்றால் குப்பையை என்ன செய்வது? நேற்றுவரை என்ன செய்தார்கள்? குப்பையை ஆலயத்துக்குள்ளா போட்டார்கள். குப்பையை உள்ளே கொண்டுவரவில்லை. குப்பை உள்ளே இருந்தால் உடனே வெளியே கொண்டு சென்று போட்டார்கள். அப்படி இன்றைக்கும் செய்யலாமே?

அடுத்த கேள்வி, அது கொஞ்சம்பேர் வரும்போது சரி. ஆயிரக்கணக்கானவர்கள் வரும்போது? ஆயிரக்கணக்கானவர்கள் ஏன் வரவேண்டும்? ஆயிரக்கணக்கானவர்கள் மைதானம்போல கூடினால் அது கோயிலாக இருக்குமா? கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கெட்டவார்த்தை சொல்கிறார்கள். தடியடியும்கூட நடைபெறுகிறது.

ஆலயங்களுக்கு பெரும்பாலும் வேடிக்கைபார்க்க சுற்றுலாப்பயணிகளாகவே வருகிறார்கள். அதுதான் பிரச்சினை. பக்தர்களாக வருபவர்களிடம் கூட பேசி சில நியமங்களை புரிந்துகொள்ளச் செய்ய முடியும். வெறும் சுற்றுலாக்கூட்டமாக பெருந்திரளாக வருபவர்களிடம் என்ன சொல்வது? அவர்கள் சிற்பங்களை தட்டியும் கொட்டியும் பார்ப்பார்கள். அவர்கள் பார்க்க சிற்பங்களை நம்மவர்கள் கல்லால் அடித்து காட்டுவார்கள்.சீரங்கத்தில் ஒருவர் சிற்பங்களை கல்லால் அடித்து மணியோசை எழுப்பிக் காட்டுவார். அதற்கு கூலி வாங்கிக்கொள்வார். இதெல்லாம்தான் இங்கே பக்தி என்ற பேரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆலயத்துக்கு மெய்யான பக்தர்கள் வரட்டும். கலையார்வம் கொண்டவர்களும் வரட்டும். கொஞ்சம் ஆலயத்தைப் பற்றி அறிந்துகொண்டு, அதன் சட்டங்களைக் கடைப்பிடிப்பவர்கள் வரட்டும். வெறுமே வேடிக்கைபார்க்க பெருங்கூட்டம் வரவேண்டாம். வந்தால் மூலைக்கு மூலை அக்காள்தரிசனம்தான் கிடைக்கும்.

எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.