கார்கடல்

அன்புள்ள ஜெ,

கார்கடல் செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றேன், நன்றி!

ஓவியங்களற்ற 885 பக்க நாவல். மற்ற வெண்முரசு நாவல்களின் சராசரி அளவுதான் ஆனாலும் கருநீலவண்ண அட்டை ஓவியமோ, நூலின் உள்ளடக்கமோ, பார்த்தவுடன் ஒரு எடை மிக்க புத்தகமாகத் தெரிந்தது.

நீங்கள் குறிப்பிட்டபடி மகாபாரதப் போரின் உச்சங்கள் நிகழும் நாவல் இது. மேலும் மகாபாரதம் என்றதும் நினைவுக்கு வரும் பல பிரபலமான நிகழ்வுகளும். பொற்தேரில் போர்க்களம் புகும் கர்ணன், கர்ணனின் நாகவாளிப் பிரயோகம், குந்தி கர்ணனைச் சந்தித்து வரம் கேட்பது, சுப்ரதீகத்தில் வந்து போரிடும் பகதத்தர், அவரது நாராயணாஸ்திரம் செயலிழப்பது, அபிமன்யு பத்ம வியூகத்தில் சிக்கி உயிரிழப்பது, அர்ஜுனன் ஜெயத்ரதனைக் கொன்று வஞ்சம் தீர்ப்பது, பூரிசிரவஸ் சாத்யகியால் கொல்லப்படுவது, கடோத்கஜனின் பெரும் போரும் வீழ்ச்சியும், துருபதனும் விராடரும் களம் படுவது, இறுதியில் துரோணரைக் கொல்வதற்காக அஸ்வத்தாமன் கொல்லப்பட்டானென்று யுதிஷ்டிரர் சான்றுரைப்பது. போர் முழுவதுமே யுதிஷ்டிரரை ஒரு பார்வையாளராகவே நடத்தும் பாண்டவர் தரப்பு, அவர்கள் வாழ்வதும் முற்றழிவதும் அவர் சொல்லும் பொய்ச்சான்றில் இருக்கிறது என்னும் ஒரு நெருக்கடி நிலையில் அவரை முடிவெடுக்க வைக்கிறார்கள். போர் ஒவ்வொருவரையும் அவர்களது எல்லைக்குத் தள்ளுகிறது.

வெண்முரசு முதற்கனல் இவ்வாறு ஆரம்பிக்கிறது: “வேசரதேசத்தில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரே மகன் ஆஸ்திகனை மடியில் அமரச்செய்து கதை சொல்ல ஆரம்பித்தாள்..”

கார்கடலும் அதே வாசகங்களுடன் ஆரம்பிக்கறது “வேசரநாட்டில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தன் குலத்து மகள் விஷஹாரியின் வயிற்றில் பிறந்த சிறுமகள் மானசாதேவியை மடியில் வைத்துக்கொண்டு கதைசொல்ல அமர்ந்தாள்..”

வெண்முரசு நாகர்களின் கொடிவழியில் மீண்டும் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கிச் சொல்லப்படுவதுபோல் உள்ளது.

நன்றி.

அன்புடன்,

S பாலகிருஷ்ணன், சென்னை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2021 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.