வெண்ணிற இரவுகள்- பிரவீன்

வெண்ணிற இரவுகள் வாங்க

‘தஸ்தயேவ்ஸ்கி’ அவர்களின் மூன்று குறுநாவல்கள் தொகுப்பான “உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்” புத்தகத்தினை வாசித்தேன். இது “பாரதி புத்தகாலயம்” வெளியீடு. அதில் உள்ள “வெண்ணிற இரவுகள்” குறுநாவல் வாசிக்கையில் என்னுடைய அனுபவங்களை கீழே தொகுத்துள்ளேன்.

இது ஒரு கனவுலகவாசியைப் பற்றிய அதி அற்புத காதல் கதையாகும். பீட்டர்ஸ்பர்க் நகரில் நம் கனவுலகவாசி, வாழ்க்கையில் எப்போதுமே ஒரு கனவுலகத்தில் வாழ்பவர். நகரத்து மக்கள் எல்லாம் வேலை முடிந்து அவரவர் கிராமங்களுக்கு சென்று கொண்டிருக்கையில், இவர் மட்டும் கால் போன போக்கிலே நகரை சுற்றி வந்து கொண்டிருப்பார். நகரில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவருக்கு ஒரு நண்பர் கூட இல்லை. அந்நகரதில் உள்ள அத்தனை தெருக்களிலும் அவர் நடந்துள்ளார். அவ்வீடுகழும் தெருக்களும் தான் அவரின் நண்பர்கள்.

இப்படி ஒரு முறை அவர் நகரத்துக்கு வெளியில் சென்று விட்டு வரும் போது , பாலத்தின் ஓரம் ஒரு இளம்பெண் அழுதுகொண்டு இருப்பதைக் கண்டார். அப்பெண்ணை பார்த்ததுமே தன் தனிமையின் வேதனைகளை அனுபவிப்பவளாக தெரிந்தாள். அதனால் அவளிடம் இவருக்கு ஒரு இனம் புரியா அன்பு மலர்ந்தது. அவளை ஒரு குடிகாரனிடமிருந்து அன்று இவர் காப்பாற்றுகிறார். அவளைத்  தன்னிடம் அறிமுகம் செய்து கொள்கிறார்.

இருவரும் அன்றைய முதல் நாள் சந்திப்பில் பேசிக் கொள்கின்றனர். நம் கனவுலகவாசி, தன் அக எண்ணங்களை எல்லாம் அவளிடம் கூறுகிறார். அவர் இந்த நகரில் வாழும் தனிமை வாழ்க்கையைப் பற்றி. தன கனவுலகத்தில் அவர் காணும் அற்புத காதலைப் பற்றி. அந்தப் புனிதமான காதலை வெறும் கனவாகவே அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் காதல் என்னும் கனவின் மீது தீராக் காதல் கொண்டுள்ளார். ‘நாஸ்தன்கா’வும் அவரிடம் நட்பு பாராட்டுகிறாள்.

அவள் தன் கதையை கூறுமுன் அவரிடம் ஒரு சத்தியம் செய்து வாங்கிக் கொள்கிறாள். அவர் அவளின் மேல் காதல் கொள்ளக் கூடாது என்று.  அவள் தன் கண் தெரியாத பாட்டியிடம் தனியாக வாழ்கிறாள். அவள் ஒரு முறை செய்த ஏதோ ஒரு தப்பிற்காக,  அவள் சட்டையையும் தன் சட்டையையும் சேர்த்து ஒரு ஊக்கு போட்டு எப்போதும் வைத்துள்ளார் அவள் பாட்டி. இவள் அதனை எப்போதும் வெறுத்தாள் . தான் நினைத்த இடத்திற்கு போக முடியவில்லயே என்று இவள் எப்போதும் விடுதலைக்காக ஏங்குவாள். அப்போது அவர்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒருவனிடம் இவள் காதல் கொண்டு விடுகிறாள். ஒரு வருடம் முன்பு அவன் இந்நகரை விட்டு போய் விடுகிறான். போகும் முன் தான் இன்னும் ஒரு வருடத்தில் வந்து அவளை திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லிவிட்டுச் செல்கிறான் .

ஒரு வருடம் முடிந்து விட்டது. அவனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது தான் நம் கனவுலகவாசி அவளைக் பாலமருகே காண்கிறான். அவளும் அவனும் இதையெல்லாம் அந்த வெண்ணிற இரவில், வெளியில் ஒரு பெஞ்சின் மீதமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் இரவில், அவள் தனது இந்தக் கதையினை அவரிடம் சொல்லி முடித்துவிட்டு, அவன் மீண்டும் வந்து விட்டதாகவும் அது தமக்கு தெரியும் என்றும், அவன் என்னைப் பார்க்க வராதது மிகவும் கவலை அளிப்பதாகவும் அவரிடம் கூறுகிறாள்.

நம் கனவுலகவாசி அவள்மீது தீராக் காதல் கொண்டு விடுகிறார். இது வரையில் கனவில் மட்டுமே காதலித்து வந்தவர் இப்பொழுது நிஜத்தில் காதலிக்கிறார் அவளை. அனால் அவளிடம் அவர் செய்து கொடுத்த சத்தியத்திற்காக அவர் இதை அவளிடம் சொல்லவில்லை.

அவளை இந்த கவலையிலிருந்து போக்க அவளிடம் பல சமாதானங்கள் கூறுகிறார். அவள் அதையெல்லாம் உண்மை என்பது போலவே நினைத்து சமாதானம் அடைகிறாள். இது அவருக்கு வியப்பாக இருக்கிறது. இந்தப்பெண் உண்மையிலே நாம் சொன்னவற்றை எல்லாம் நம்பிவிட்டு சமாதானம் அடைந்துவிட்டாளா? இவ்வளவு அப்பாவிப் பெண்ணாக அல்லவே இருக்கிறாள். அவர் அவளிடம் அவனுக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்லி கேட்கிறார். அவள் அக்கடிதத்தினை எழுதி, அவனிடம் கொண்டு சேர்க்கும்படி மன்றாடுகிறாள். அவரும் சரியென்று, அதைச் செய்வதாய்ச் சொன்னார்.

அடுத்த நாள் இரவு பெருமழையில் இருவரும் சந்திக்க முடியவில்லை. ஆனால் அவளின் வீட்டின் பக்கம் இவர் சென்று பார்க்கிறார். ஏதோ சொல்லவொண்ணா ஏக்கம் அவரின் நெஞ்சடைக்கவே  திரும்பவும் தன் வீட்டிற்கு வந்து படுத்துறங்குகிறார். அடுத்த நாள் மூன்றாம் இரவில், அவள் இவருக்கு முன்னாடியே வந்தமர்ந்து இவருக்காகக்  காத்துக் கொண்டிருக்கிறாள். தான் அந்த கடிதத்தை சேர்த்து விட்டதாகவும், அவன் நிச்சயம் இன்று உன்னை வந்து சந்திக்கப் போகிறான் என்றும் அவளிடம் சொன்னார். அவள் அவரின் கையைபப்  பிடித்துக் கொண்டு ஆனந்தம் அடைந்தாள். அவள் அவரிடம், நாம் இருவரும் இப்படியே ஒருவரை ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்றும் எப்போதும் பிரியக் கூடாது என்றும் கூறினாள்.

அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தினருகே யாரோ ஒருவர் தென்படவே, அவர் தன் கையை அவளிடமிருந்து எடுத்துக் கொள்கிறார். ஆனால் அதற்குள் அது வேறு யாரோ ஒருவர் என்று தெரிகிறது. அவள் அவரிடம, ஏன் நீ கையை எடுக்க வேண்டும், அவன் வந்தாலும் கூட இப்படடியே நாம் கைகோர்த்துத் தான் அவனை வரவேற்போம்என்று சொன்னாள். அவர்கள் ரொம்ப நேரம் அங்கேயே அவனுக்காக காத்துக்கொண்டிருக்கிறாரகள். அவள் அழத் தொடங்குகிறாள். அவர் நிறைய சமாதானம் சொல்கிறார். இறுதியில் ஒரு கட்டத்திற்கு மேல் அவர் தன் காதலை அவளிடம் சொல்லிவிடுகிறார். அவளும் முதல் அதிர்ச்சி  முடிந்த உடனேயே அவரை கட்டி அணைத்துக்கொள்கிறார். அவள் அதற்கு தனக்கு தானே பல்வேறு சமாதானங்கள் சொல்லிக் கொள்கிறாள். அவர் தான் தன்னை உண்மையாக  காதலிக்கிறார் என்றும், அவன் அவளை காதல் செய்யவே இல்லை என்றும், தான் தான் அவன் மீது காதல் கொண்டனென்றும், இனிமேல் அவனை காதலிக்க போவதில்லை என்றும், அவரைத்தான் காதலிக்கப்  போவதுமாகச் சொன்னாள். அவரும் தன் காதல் கைகூடியதை நினைத்து மிதமிஞ்சிய இன்பம் கொள்கிறார். அவர்கள் இருவரும் நெடு நேரும் இரவு முழுவதும் நடந்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அவரும், அவளும் காதலித்தார்கள். அவள் அத்தனையும் மறந்து அவரிடம் மிகவும் இன்பமாக பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் அழுதார்கள், சிரித்தார்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டார்கள். செல்ல சண்டைகள் போட்டார்கள்.

அப்பொழுது திடீரென்று அங்கு ஒரு உருவம் வந்து நிற்கிறது. அது யாரென அவர் யோசிக்குமுன், நாஸ்தென்கா அவர் பிடியிலிருந்து விலகி அவனைப் போய்  கட்டிக்கொண்டாள். திரும்ப அவரை நோக்கி வந்து அவரை ஒரு முறை கட்டிதழுவிவிட்டு அவனிடம் அவள் சென்று விட்டாள்.

அடுத்த நாள் அவர் அவளிடம் தான் கொண்ட காதலினை பற்றி யோசித்துக் கொண்டுருக்கையில், அவளிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதை அவர் படித்துவிட்டு அமைதியாக அவரும் அவளும் காதல் கொண்ட அந்த ஒரு சில கணங்களையே எண்ணி கொண்டிருந்தார்.

காதலுக்காக ஏங்கும் ஒரு இளம்பெண்ணும், கனவிலே காதல் கொண்ட ஒரு ஆணும் இதற்கு மேல் காதல் செய்ய ஏதும் இல்லை. அவளின் செய்கைகள் எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையானவையோ அவ்வளவுக்கு அவ்வளவு சமூகத்தில் சேராதவை. இங்கு சமூக கட்டமைப்பினால் காதலை ஒரு வடிகட்டிய பொட்டலம் போன்றெ அணுக வேண்டியுள்ளது. அல்லது இந்த சமூக கட்டமைப்பு இருப்பதால்தான் இந்த மாறி காதல்கள் உருவாகிறதா என்றும் தெரியவில்லை. ஊழின் வசத்தால் மனங்கள் செய்வதறியாது திக்குமுக்காடுகிறது. ஒன்றை மறுத்து எழும் காதல் உண்மையில் காதலே இல்லை. அது தன்னிச்சையாக நிகழ்வது. அவளின் முடிவுகள் ஒவ்வொன்றும் ஒரு சிறு பிள்ளையின் செயலாகவே உள்ளது.ஆனால் அது தான் உண்மையான உணர்களோ? அதற்கு மேல் நாம் கட்டி அமைத்த நாகரிகம் நம்மை தர்க்கத்தில் கொண்டு வந்து கணக்கு போட வைத்து விடுகிறது.

நாகரிகம் வளர்ந்து நம் உணர்வுகளை வகைமைப்படுத்தி பொட்டலமாக்கிவிட்டோம். அதனால் முரண்களினால் வரும் உணர்வுகள் ஒன்று சண்டையினால் அல்லது தியாகத்தினால் முடிவடைகிறது.  இதற்கு எங்கும் விதிவிலக்கே இல்லை என்றே தோன்றுகிறது. இது அப்படித்தான் நடக்கும், வேறு வழியே இல்லை என்றும் நினைக்கிறேன்.

அன்புடன்,

பிரவின்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.