ஒப்புக்கொடுத்தல்- யோகேஸ்வரன் ராமநாதன்

இளையராஜா- கலை தனிமனிதன் உரை

அன்பின் ஜெ,

வணக்கம்!

முகநூலில், இரு வரிகளில், தெரிவித்து முடித்திருக்க வேண்டிய பிறந்தநாள் வாழ்த்து ஒன்று, உங்களால் ஒரு கட்டுரையாக நீண்டுவிட்டது.

) : கலைக்கு சிறிதும் மிச்சமின்றி தன்னை ஒப்புக் கொடுத்தல்.

) : கலைக்கான ஒழுக்கங்களில் இருந்து வழுவாமல் இருத்தல்.

) : தனிமனிதர்கள் மீது விருப்பமோ,விலக்கமோ கொள்ளாதிருத்தல்.

) : கருத்துகளின் வழியே, கலைக்கான கருத்துக்களின் வழியே கலையை நோக்காமல் இருத்தல்.

இந்த மாதம் 12ம் தேதி, மாலை 6 மணிக்கு “Muthalvan Media” யூடியூப் சேனலுக்காக “கலையும் தனி மனிதனும்” என்ற தலைப்பில்  “இளையராஜா” அவர்கள்  குறித்த உங்கள் உரையின் முத்தாய்ப்பாய் அமைந்த நான்கு விஷயங்கள்.

உரை முடிந்த பின்னால், கலைக்கு மிச்சமின்றி கொடுத்த கலைஞர்கள் குறித்தான  எண்ண ஓட்டங்கள், குறிப்பாக தவில்-நாதஸ்வர கலைஞர்கள் குறித்தான சிந்தனை மனதில் வெகுநேரம் ஓடிக்கொண்டிருந்தது.

தவில் நாதஸ்வர கலைக்கு தம்மை முழுமையாக ஒப்புக் கொடுத்தவர்கள் முந்தைய தலைமுறைகளில் அதிகம். ஆனால் பெரும்பாலோனோர் குடத்திலிட்ட விளக்காக, வெளியே தெரியாமல் போனவர்கள்…

கொஞ்சும் சலங்கை திரைப்படத்தின்  “சிங்கார வேலனே தேவா…”  பாடலுக்கு காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களுடன் இணைந்து தவில் வாசித்தவர் பெரும்பள்ளம் வெங்கடேசன் பிள்ளை. “சினிமாப்பாட்டுக்கு தவில் வாசித்திருக்கிறார்இவரெல்லாம் என்ன ஆளு” என்ற அவதூறில் இருந்து தப்புவதற்காக குடும்ப உறுப்பினர்களிடம் கூட சொல்லாமல் இருந்திருக்கிறார். வெகுகாலம் கழித்து தனது மைத்துனரான எனது பாட்டனாரிடம் தெரியப்படுத்த அதன் பிறகே குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இந்த பாடல் ரெக்கார்டிங் போது நடந்த மற்றுமொரு சம்பவம், ஒலிப்பதிவு முடிந்து போட்டு பார்க்கையில் நாதஸ்வரத்துடன் கூடவே ஒரு முணுமுணுப்பும் தொடர்ந்து வந்திருக்கிறது… எங்கிருந்து வந்தது என்று பல முறை குழம்பி, ஒரு வழியாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

வாசிக்கையில், பாடலின் ஸ்வரங்களை மெல்ல முணுமுணுத்தபடி தவில் வாசித்திருக்கிறார் வெங்கசேடன் பிள்ளை.

****

இன்றைய தலைமுறை கலைஞர்களில் கலைக்காக தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துள்ள பெரும்பாலான தவில்-நாதஸ்வர கலைஞர்கள் பெரும்பாலோனோருடன்  நேரில் பழகும் வாய்ப்பு எனது தந்தையின் மூலம் கிடைத்தது என்னுடைய நல்லூழ்.

சுவாமிமலையை சேர்ந்த சரவணன் என்னும் இளைஞர், இன்றைய தலைமுறை தவில்-நாதஸ்வர கலைஞர்களின் பெரும்பாலான இசை நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து யூடியூபில் வலையேற்றி வருகிறார். இவர்  கலை விமர்சகர் மறைந்த “தேணுகா”வின் அண்ணன் மகன்.

இலக்கிய நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்துவதில் ஸ்ருதி டிவி கபிலனின் செயல்பாடுகளுக்கு இணையாக தவில்-நாதஸ்வர இசை நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்தி வருபவர்.

கமகம்” [  https://carnaticmusicreview.wordpress.com/tag/lalitharam/ ]  என்ற பெயரில் கர்நாடக சங்கீத குறித்து எழுதிவரும் லலிதா ராம்.  பரிவாதினி [(43) Parivadini Music – YouTube] என்ற யூடியூப் சேனலில் மூலம் பல தவில் நாதஸ்வர இசை நிகழ்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

மற்றும் இசை ஆய்வாளர் பி.எம். சுந்தரம் [மங்கல இசை மன்னர்கள் புத்தகத்தின் ஆசிரியர்]  ஆகியோரின் வழித்தோன்றலாக உருவாகி வருகிறார் சரவணன்.

சரவணன் ஆவணப்படுத்தி இருக்கும் பல நிகழ்வுகள், நேர்காணல்கள் அவருடைய யூடியூப் சேனலில் [(56) Swamimalai Saravanan – YouTube]  காணக் கிடைக்கிறது.

மூன்று காணொளிகள்

1): நாதஸ்வர வித்வான் செம்பனார்கோவில் S.R.D வைத்தியநாதன் அவர்கள், கர்நாடக சங்கீத பாடகர் சஞ்சய் சுப்ரமணியத்திற்க்கு ”சவுக்க காலப்பிரமாணத்தில்” சொல்லிக்கொடுக்கும் அழகு. (41) Sembanarkoil SRD Vaidyanathan teaching Sanjay Subrahmanyan – YouTube

2) : கையில் சுருட்டி வைத்திருக்கும் புகையிலையை போலவே , மனதில் சுருட்டி வைத்திருக்கும் ”சுவாமிமலை சுவாமிநாதன்” கீர்த்தனையை,  “சுருட்டி”  ராகத்தில், நாதஸ்வர வித்வான், கீழ்வேளூர்  என்.ஜி.கணேசன் அவர்கள் உருவாக்க  ஆரம்பிக்கும் தருணம். (41) Ragam : Surutti – Swamimalai Swaminathaswami Kriti – Composer Kizhvelur Nagaswaram N G Ganesan – YouTube

3) : மதுரையில் பல வருடங்களுக்கு முன்னாள் “பொன்னுசாமி நூற்றாண்டு” சிறப்பு விழாவில், தவிலிசையின் ”தஞ்சை நால்வர்” என்று அழைக்கப்பட்ட அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி, தஞ்சாவூர் டி.ஆர்.கோவிந்தராஜன், வேதாரண்யம்.வி.ஜி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் ”தவில் சோலோ” வாசிப்பதாக முடிவு செய்யப்பட்டு இருக்கையில், பாடகர் மதுரை சோமு தானாக முன்வந்து தன்னுடைய பல்லவிக்கு நால்வரும் தனி ஆவர்த்தனம் வாசிக்கட்டும் என்று நிகழ்ச்சியின் வடிவை சுவாரஸ்யமாக்குவது.

நாற்பது வருடங்களுக்கு முன்பான நிகழ்வொன்றை, நால்வரில் ஒருவரான வேதாரண்யம் வி.ஜி.பாலசுப்பிரமணியம் அவர்கள் விவரிப்பது… (41) Part 03 – Thavil Vidhwan Vedaranyam V G Balasubramaniam – “Sharing Memories of his Musical Journey” – YouTube  [ 2 வது நிமிடம், 19வது வினாடி]

என்னளவில் முக்கியமானதாக கருதும் காணொளிகளை எனது தளத்தில் http://yogeswaran.in/2021/06/13/132/  தொகுத்துள்ளேன்.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.