கடிதங்கள்

தமிழக அரசின் இலக்கியவிருதுகள் இலக்கிய விருதுகளை ஏற்பது விருதுகள்,விடுபடல்கள் – கடிதம் விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல்

அன்புள்ள ஜெ,

தங்களின் இலக்கிய  விருதுகள் பற்றிய கட்டுரை படித்தேன். நாங்கள் அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் தமிழ் ஆர்வலர் குழு என்கிற வாட்ஸ் ஆப் குழுவை நடத்தி வருகிறோம். அதில்  சங்க இலக்கியம் மற்றும் நவீன இலக்கியம் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். படித்தல், பகிர்தல், படைத்தல் இவைதான் எங்கள் குழுவின் நோக்கம். மற்ற அரசியல் கருத்துக்கள் வந்தால் தடை செய்து விடுவோம்.

நான் அமெரிக்கா வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால் நம் தமிழ் நாட்டின் உண்மை சொரூபம் தெரியாது.சமீப காலமாக திமுக ஆட்சிக்கு வந்து இலக்கிய மாமணி விருது அறிவித்தபோது அடடா எத்தனை பேரை அரசியல் செய்தி போடாதீர்கள் என்று சொன்னோம்.இப்போது நல்ல செய்தி கூட போட முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன் . அக்குழுவிற்கு நானும் ஒரு அட்மின் என்பதால் ரொம்ப கடினமாக அரசியல் செய்திகளை தவிர்க்க சொல்லுவேன். அனால் நீங்கள் உண்மை நிலவரத்தை சொன்னதும் என் செயலின் நியாயம் புரிந்தது,

நாங்கள் ஒரு நாலு பேர் இருக்கிறோம். அடிக்கடி சாதாரண மனிதர்களுடன் ஓட்டமுடியாமல் தவிப்போம். ஆனால் உங்களை படிக்க படிக்க நாங்கள் நேர்வழியில் செல்கிறோம் என்பதை ஆணித்தரமாக நம்ப முடிகிறது. நன்றி ஜெ

அன்புடன்
மேனகா

 

அன்புள்ள மேனகா

நான் இலக்கிய விவாதங்களில் அரசியலைத் தவிர்க்கச் சொல்வது இரண்டு காரணங்களுக்காக. இலக்கியவிவாதங்களில் ஆர்வமில்லாதவர்கள், எங்கும் எதிலும் வழக்கமான கட்சியரசியலின் வம்புகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்கள் வந்து வேறெதையும் பேசவிடாமல் ஆக்கிவிடுவார்கள்.

இலக்கியம் என்பது நுட்பமான கவனமும் சொல்தேர்வும் சமநிலையும் இருந்தால்தான் பேசப்படக்கூடிய ஒன்று. அரசியலென்பது பெரும்பாலும் வம்புகளால் ஆனது. கசப்புகளும் காழ்ப்புகளும் கொண்டது. அங்கே பேசவேண்டிய அனைத்தும் ஏற்கனவே எவராலோ பேசப்பட்டிருக்கும். அதை எதிரொலித்தாலேபோதும்.

ஆகவே அரசியல்பேசுபவர்களின் உரத்தகுரலே எங்கும் ஓங்கி ஒலிக்கும். அவர்கள் வேறெந்த பேச்சும் பேச விடமாட்டார்கள். அவர்களை தவிர்க்காமல் இலக்கியம்பேச முடியாது.

அத்துடன் இங்குள்ள அரசியலென்பது மிகமேலோட்டமன கொள்கை, கோட்பாட்டுப் பாவனைகளுக்கு அடியில் சாதி-மதப் பற்றால் மட்டுமே இயக்கப்படுவது. இலக்கியத்தை விவாதிப்பதற்கு அவற்றுக்குமேலே நின்று அறிவுசார்ந்து, ஆன்மிகம் சார்ந்து பேசும் ஒரு தளம் தேவை. தற்காலிகமாகவாவது அங்கே செல்லாதவர்களால் இலக்கியம் பேசமுடியாது. அரசியல்பேசுபவர்கள் தங்கள் வழக்கமான சாதி- மதக் காழ்ப்புகளுக்கு இலக்கியமுலாம் பூசி அங்கே வைத்து அங்கே எதுவுமே பேசவிடாமலாக்கிவிடுவார்கள்.

இலக்கிய அரங்கில் அரசியல்பேசுபவர்கள் ஒருவகை நோயாளிகள். அந்த நோய் எளிதில் தொற்றுவதும்கூட. அவர்களை முழுமையாக விலக்கிவிடுவதே நல்லது

 

ஜெ

 

அன்பு ஜெ

 

தங்கள் வலை பக்கத்தையும் விக்கி யையும் துலாவும் தோறும் எம்மவர்க்கு விருதுகள் இல்லையே என நினைத்து வருந்தியது உண்டு. எனினும் பல முறை நீங்கள் விளக்கி கூறியதால் அமைதி கொண்டிருக்கிறேன்.ஆனால் விருதுகளை ஏற்கமாட்டேன் என்பது எத்துணை பெரிய செயல். இதை தவறாக கர்வம் என கூட நான் வாசிப்பின் ஆரம்ப காலங்களில் நினைத்ததுண்டு.

‘வெண்முரசு எழுதுவதற்கு முன்பு அரசு விருதுகள் பெறுவதில் எனக்கு தடையேதும் இருக்கவில்லை. அப்போது பத்ம விருது வந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பேன். இன்று நான் வேறு ஒரு இடத்தில் இருக்கிறேன்’

ஒரு தவறு நடக்கும் பொழுது அதை அத்துறையில் எதிர்க்கும் தன்மை என்பது அறத்தின் வழி . தாங்கள் கொண்டுள்ள நிலைப்பாடு கண்டு வியக்கிறேன். உந்தப்படுகிறேன்.

வணங்குகிறேன்.

அன்புடன்

அரவிந்தன்

இராஜை

 

அன்புள்ள அரவிந்தன்,

 

எழுத்தாளன் என்றல்ல எவரும் தங்களுக்கு உகந்த இடத்தை தாங்களே முடிவுசெய்து அங்கே தங்களை வைத்துக்கொள்ளவேண்டும். அதுதான் புறச்சூழலின் அலைகளில் இருந்து அகன்று தனக்குரிய செயலைச் செய்வதற்கான சிறந்த வழி

ஜெ

விருது – கடிதங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2021 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.