மழையும் நிலமும்
மழைப்பாடல்மழையைப் பற்றி ஜெ குறிப்பிடும்போது அதை வள்ளுவனின் வரிகளில் “விசும்பின் துளி” என்று குறிப்பதையே மிகவும் விரும்புவார். ஆம்! அத்தகைய விசும்பின் துளி நோக்கி காத்துக் கொண்டிருக்கும் ஓர் பறவையாக அஸ்தினாபுரி இந்த நாவலில் காணக்கிடக்கிறது. மழையின் போது எழும் தவளைகளின் சத்தமே அதன் பாடலாக இருக்க முடியும். தவளைகளைப் பற்றி சத்யவதி கூறும்போது, “கங்கைக்கரையின் கோடானுகோடி தவளைகளின் நாவில் வேதம் எழும்போது விண்ணோர் இரங்கியாகவேண்டும். தவளைக்குரல் எழும் நாட்டிடம் வருணனும் இந்திரனும் கனிவுடனிருக்கிறார்கள்” என்கிறாள். அத்தகைய தவளையின் பாடலை நோக்கி அஸ்தினாபுரி ஏங்கி நிற்கும் தருணமாக மழைப்பாடலின் துவக்கம் அமையப் பெறுகிறது
‘அன்னை தன் நான்கு கைவிரல்களால் நான்கு தாயக்கட்டைகளைச் செய்தாள். திரேதம், கிருதம், துவாபரம், கலி என்னும் அக்கட்டைகளை சிரித்தபடி உருட்டி அவள் ஆடத்தொடங்கினாள்’ என்றே நாவல் துவங்குகிறது. கிராதம் என்னும் பகடையாக பரசுராமன் பிறந்து, ஷத்ரியர்களின் அரச மோகத்தால் உயிரிழந்த மூதாதையர்களின் கண்ணீர்த்துளிகளுக்கு பலியாக, ஷத்திரிய குலங்களை அழித்தொழிக்கிறான். மூன்றாவது பகடையான துவாபரம் விண்ணவர்களான சூரியனுக்கும் இந்திரனுக்குமான போர்ச்சூழலை மூளவைத்து அதன் காரணகர்த்தவாக தான் இருப்பது கண்டு சிரித்துக் கொண்டிருக்கையிலேயே சக்கரங்களில் மோதித் தெரித்து மேருவில் முட்டி உடைகிறான். உடனே விண்ணவர்கள் “இனி நம் ஆடல் அந்த மண்ணில்” என்று சிரிப்பதாக சூதரின் வெறிகொண்ட பாடலுடன் மழைப்பாடல் நம்மை அத்தியாயத்திற்குள் அழைத்துச் செல்கிறது. துவாபார யுகத்தின் இறுதிக் கட்டத்தை நாவல் எடுத்தியம்புவதாக விண்ணின் தேவர்கள் யாவரும் மண்ணில் பிறந்து தங்களின் ஆடலை நிகழ்த்துவதற்கான களத்தை ஒருக்குவதாக இந்த நாவல் அமையப்பெறுகிறது
பகுதிகளின் வழியாக மழைப்பாடல்:
பதினேழு பகுதிகளைக் கொண்டிலங்கும் மழைப்பாடல் நாவல் ’வேழாம்பல் தவம்’ எனும் பகுதி கொண்டு தொடங்குகிறது. ’வேழாம்பல்’ என்ற சொல்லே உச்சரிபதற்கு இனிமையாக இருக்கிறது. வேழாம்பல் என்பது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் இருவாட்சி பறவையே தான். தொல் குடிகளான பழம் மக்களுக்கு இன்றளவிலும் அது குறியீடாக இருந்து வருகிறது. நாகர்கள் இதை உண்பதில்லை. அஸ்தினாபுரம் எனும் மிக உயரமான பாதுகாப்பான இடத்தில் கூட்டைக் கட்டி தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் ஒரு பெண் வேழாம்பலான சத்தியவதியின் தவம் இது. வேழாம்பலில் ஆண் தான் கூட்டைப் பாதுகாப்பதும், இரையைக் கொணர்வதுமான வேலையைச் செய்கிறது. அஸிதினாபுரி எனும் முதிராக் குழந்தைகளுக்கான பசியைப் போக்கும் இரையாக காந்தாரமும் மர்க்காவதியும் எழுகிறது. அதைக் கொணர்ந்து கொடுக்கும் ஒரு ஆண் பறவையாக பீஷ்மர் திகழ்கிறார். அஸ்தினாபுரி எனும் குழந்தையின் தந்தையாக பீஷ்மர் இருந்து அந்த வேலையைச் செய்து அதை வளர்த்தெடுக்கிறார்.
கானல் வெள்ளி: ’கானல் நீர்’ தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு இரண்டாம் பகுதியில் ஆசிரியர் காணிப்பது கானல் வெள்ளியை. எங்கோ தொலைவில் இருக்கும் வெள்ளி ஒரு கானல் நீரைப் போலவே மின்னி மின்னி தான் நம் கண்களுக்குத் தெரிகின்றது. காட்சிபிழையெனவே நம் கண்களை நிறைக்கும் அழகைக் கொண்டவை அவை. திருதிராஷ்டிரனுக்கான அரியணை என்பதும் கூட அப்படியான ஒரு கட்சிப்பிழையாய் அமைந்துவிடுவதை பகுதி எடுத்தியம்புகிறது. ஹஸ்தியின் அரியணையில் அமரும் பெருந்தோள் வல்லமை கொண்டவனான திருதிராஷ்டிரன் அரியணைக் கனவு கொண்டிலங்குகிறான். தன் தோள்வலிமையின் மீதான முற்றாணவம் அழிந்தபின் பீஷ்மர் முன் முகம் குப்புற விழுந்து தன்னை ஏற்றுக் கொள்ளச் சொல்லும் அவனைத் தன் மகனாக ஏற்கிறார். அவனை அரியணை ஏற்றுவேன் எனும் சபதத்தையும் எடுக்கிறார்.
புயலின் தொட்டில்: எவ்வழி நோக்கினும் புயல் அழிவின் ஒரு சக்தியே. ஆனால் அது இயற்கையின் ஒரு இன்றியமையாத நிகழ்வும் கூட. பூமி தன்னை மழை தேவன் வருவதற்கு முன் தூய்மையாக்கிக் கொள்ளும் கருவியாகவும் புயல் அமைகிறது. மாபெரும் புயல்களின் பிறப்பிடமாக இந்த மண்ணில் இருப்பது பாலை நிலமே. சப்தசிந்துவையும் கூர்ஜரத்தையும் தாண்டி அமைந்த ஒரு பெரும்பாலை நிலப்பரப்பின் சித்திரத்தை ஆசிரியர் நம் கண்களுக்கு இங்கே கட்சிப்படுத்துகிறார். சந்திரகுல யாயாதியின் இரண்டாவது மைந்தன் துர்வசு தன் தந்தையால் தீச்சொல்லிடப்பட்டு நாடு துறந்தபோது அவன் கண்டடைந்து உருவாக்கிய பாலை அரசே காந்தாரம். புயலின் தொட்டிலான காந்தாரம் அஸ்தினாபுரியுடன் எவ்வாறு இணைகிறது என்பதை இந்தப் பகுதி எடுத்தியம்புகிறது. மனிதன் எத்தனையோ திட்டங்களைத் தீட்டி தன் எதிர்காலத்தைக் கனவு காண்கிறான். ஆனால் நிகழும் நிகழ்வுகள் அந்த திட்டத்தை முறியடித்து தெய்வத்தின் ஆடலுக்கான களத்தை ஒருங்கு செய்கிறது. அப்படித்தான் மகதத்தின் நட்பை விரும்பிய சகுனியின் திட்டம் ’அவமானம்’ எனும் கருவியால் முறியடிக்கப்பட்டு அஸ்தினாபுரியோடு இணைந்து வரலாற்றை உருவாக்க அவனை உந்தித் தள்ளுகிறது. அஸ்தினாபுரியின் ஒவ்வொரு பெரு நிகழ்விலும் செயல் தந்தையாக இருக்கும் பீஷ்மர் காந்தாரத்திற்குச் சென்று திருதிராஷ்டிரனுக்காகப் பெண் கேட்கிறார். அவரின் கண்கள் வழியே தான் நாம் பாலை நிலத்தையும் காந்தாரத்தையும் காண்கிறோம். இங்கு காணிகப்படும் ”இறந்தவர்களின் நகரம்” மற்றும் அதன் வர்ணனை நம்மை காலத்தைக் கடந்த வரலாற்றுக்குப் புலப்படாத ஒன்றை நோக்கி உந்தித் தள்ளுகிறது. காந்தாரி வசுமதியின் முதல் அறிமுகம் இங்கு தான் காணக்கிடக்கிறது. பேரழகியாகவும், அரசியல் வியூகம் தெரிந்த ஷத்ரியப் பெண்ணாகவுமே அவளை நமக்கு ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார். “ஷத்ரியர்களும் விழியற்றவர்கள்தான்” என்று கூறி அவள் தன்னை திருதிராஷ்டிரனின் மனைவியாக, அஸ்தினாபுரியின் அரசியாக முடிசூட்டிக் கொள்வதற்கு ஒப்புக் கொடுக்கும் தருணம் சகுனியை மட்டுமல்ல நம்மையும் நெகிழத்தான் செய்து விடுகிறது. இங்ஙனம் இந்தப் பகுதியில் அஸ்தினாபுரத்திற்கான புயலின் தொட்டில் காந்தாரத்தில் ஒருக்கப்படும் விதத்தை ஆசிரியர் எடுத்தியம்புகிறார்.
பீலித்தாழம்: ”பீலித்தாழம்” என்ற வார்த்தையே புதுமையாக இருந்தது. அது ஒரு சடங்கின் குறியீடு. அதன் வர்ணனையிலேயே நம்மை அது சிலிர்க்கவைக்கிறது. மனிதர்கள் தங்களை குடும்பமாக குலமாக பிரித்துக் கொண்டு ஒரு நிலத்தைத் தேர்ந்தெடுந்து ஒரு இடத்தில் அமைந்தொழுகத் தொடங்கி தனக்கான சடங்குகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். சடங்குகள் நமக்கு நம் மூதாதையர்களை, நம் குல வரலாற்றை அவர்களின் நம்பிக்கைகளை நினைவுகூறச் செய்கின்றன. அங்ஙனம் இந்தப் பகுதி முழுவதுமாக லஷ்கர்கள் எனும் பழங்குடிகளின் சடங்குகளும் நம்பிக்கைகளும் என நிரம்பித் ததும்புகிறது. காந்தாரத்தின் ஆதி மூத்தவரிகளின் ஒப்புதலை திருதிராஷ்டிரன் எங்ஙனம் பெறுகிறான் என்பதையும், அவனுக்கும் காந்தாரி வசுமதிக்கும் நடைபெறும் திருமண நிகழ்வு மற்றும் அதையொட்டிய சடங்குகளும் விளக்கப்படுகிறது. சடங்குகளின் குறியீடாக, பூத்த பீலிப்பனையின் ஓலையில் சுருட்டப்படும் தாலி அமைகிறது. சடங்குகளின் முற்றில் காந்தாரி தன்னை காந்தாரம் என்ற கட்டிலிருந்து விடுவித்து அஸ்தினாபுரியைத் தழுவிக் கொள்ளும் உணர்வை அவளுக்கு அளிப்பதாக இந்தப்பகுதி அமைகிறது.
முதல்மழை: மழைப்பாடல் நாவலின் முதல்மழை நிகழும் பகுதியாக இது அமைந்தொழுகிறது. காந்தாரியின் நகர் நுழைவுக்கு முன் ருத்ராணிருத்ரை எனுமிடத்தில் பெய்த முதல் மழை பல வகைகளிலும் சிறப்பானது. அந்தப் பாலை நிலத்தில் ஏழு வருடங்களுக்கு முன் பெய்த மழை அன்று பூத்தது என்பதாலும், அது கூழங்கல் போன்ற கனத்தில் பெய்த குருதி மழை என்பதாலும், காந்தாரியின் நகர் நுழைவின் போது அது நிகழ்ந்ததாலும், அஸ்தினாபுரிக்கு மூன்று மாதமாகப் பிந்தியிருந்த மழை காந்தாரியின் வருகையின் போது பெய்திருந்தமையாலும், அவளின் லஷ்கர் பாலை நில வாசனையை அது கழுவிவிடுமென சத்யவதி சொன்னமையாலுமென இந்த முதல் மழை சிறப்பு பெற்றதாக அமைகிறது. மழையைப்பற்றி ஜெ சொல்லும்போது “மழையோ ஒற்றைப்பெரும்பொழிவென திகழ்ந்தது. மழையோசை ஒன்றையே சொல்லும் முதல்மந்திரம். ஆயிரம் இலைநாவுகள் சுழித்தெழும் நாதம். பல்லாயிரம் நீர்த்தந்திகள் அதிர்ந்தெழும் நாதம். நிலமுரசின் விம்மல். நதியாழின் மீட்டல். மேகச்சல்லரியின் குமுறல். மழைத்தலின் பேரிசை.” என்னும் சித்தரிப்பில் முதல் மழையை நமக்கு அணுக்கமாக்கிவிடுகிறார்.
தூரத்துச் சூரியன்: சூரிய தேவனின் ஆற்றல் நிரம்பிய விந்துவால் குந்தி போஜனுக்குப் பிறந்த கர்ணன் அஸ்தினாபுரியை விட்டும் யாதவ குலத்தை விட்டும் கால நிகழ்த்தகவில் விலகிச் சென்று சூதரான அதிரதனுக்கும், ராதைக்கும் மைந்தனாக அமையப்பெறும் விதத்தை இந்த தூரத்துச் சூரியன் எனும் பகுதி எடுத்தியம்புகிறது. யதுவின் வழித்தோன்றல்களாக உருவாகி விரியும் யாதவர்களின் குலவரலாறு விரிக்கப்படுகிறது. சூத்திரர்களான அவர்கள் காலப்போக்கில் பல்கிப் பெருகி நூற்றியெட்டு குலங்களாக விரிந்து ஷத்ரியர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள எத்தனிக்கும் ஒரு இடத்தில் நமக்கு ஆசிரியர் பிருதையை அறிமுகப்படுத்துகிறார். பாலாலும், நெய்யாலும், பொன் விளையும் யாதவ நிலத்தை அஸ்தினாபுரியுடன் இணைப்பதற்கான முதல் விதை இங்கு தான் நிகழ்கிறது. இந்த அரசியல் ஆட்டங்களின் மத்தியில் தன் சூரியனை யமுனையில் எங்கோ தொலைத்து விட்டு காலத்திற்கும் ஆறாத வடுவொன்றை சுமப்பவளாக இங்கே குந்தி அமைந்துவிடுகிறாள்.
பால்வழி: பால் போன்ற வெண்மை நிறமும், விசித்ரவீரியன், தேவாபி வரிசையில் அவர்களின் ஆடிப்பிம்பமாக உடற்குறையும் கொண்ட பாண்டுவின் முழுமையான அறிமுகம் இந்தப் பகுதியில் நமக்குக் கிடைக்கிறது. பிருதையை மணம் புரிந்து அஸ்தினாபுரி மற்றும் யாதவ அரசுகளின் அரியணைக் கனவை நிறைவேற்றும் கருவியாக பாண்டுவின் மர்க்காவதிப் பயணம் விரிக்கப்படுகிறது. விதுரன் பிருதையை சந்திக்கும் முதல் தருணமொன்று இந்தப்பகுதியில் நம் மனதை வருடிச் செல்கிறது.
மொழியாச்சொல்: யாதவ அரசியான குந்தி தன் உதிரத்திலிருந்து உதித்த முதல் மகவைப் பற்றி பாண்டுவிடம் சொல்ல எத்தனித்து மொழியாமல் விட்ட சொல்லை எடுத்தியம்புவதாக இந்தப் பகுதி அமைகிறது. தன்னேற்பு மணத்தில் வென்று பாண்டு குந்தியை மணக்கும் நிகழ்வு நிகழ்கிறது.
அனல்வெள்ளம்:
மண்மகளின் மீது விழுந்த சூரிய தேவனின் ஒளிவெள்ளத்தால் அவள் அனல்வெள்ளம் போல சலனமடைந்து மழை பொழிகிறது. அஸ்தினாபுரியின் இரு அரசியர்களின் வருகைக்குப் பின்னும், ஹஸ்தியின் அரியணைக்குகந்த மன்னனின் முடிசூட்டு விழாவுக்கு முன்னரும் நிகழும் மழை இந்தப்பகுதியில் நிகழ்கிறது. பெருமழையான அது நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன் அஸ்தினாபுரியில் நிகழ்ந்த பெரு மழையை ஒத்து நகரையே சூரையாடுகிறது. பெய்த பெருமழையால் நகரும் அரண்மனையும் தன்னை புதுப்பித்து இனி நடைபெறும் நிகழ்வுக்காக மீண்டும் பிறந்தழுவது போன்ற சித்திரமாக அமைகிறது. இயற்கையன்னை பொழிவித்த பெருமழையைப் போலவே காந்தாரத்திலிருந்து பரிசில்களும் செல்வங்களும் அனல் வெள்ளம் போல நகரைச் சூழ்ந்து அதை ஸ்தம்பிக்கச் செய்கிறது. “பெண்களுக்கிடையே விளையும் சிறுபொறிகூட பெருநெருப்பாகிவிடும்”
என்ற ஜெ –வின் வரிகளைப் போலவே இங்கு அஸ்தினாபுரியின் அரண்மனைக்குள்ளும் பெண்களால் அனல் மூழ்கிறது. காந்தாரிகளுக்கும் இசையறிந்த பிரகதிக்கும் மூளும் அனல், குந்தி அரண்மனை நுழையும் போது அவள் ஷத்ரியர் குலம் அல்லாதவளாதலால் காந்தாரிகள் அவளை முறையாக வரவேற்பு செய்யாமல் செய்த முதல் அவமதிப்பின் நிமித்தம் மூளும் அனல், அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் தன் மைந்தர்களை அரியணை ஏற்றும் ஆசையில் மூழும் கனல், இவையனைத்தின் தாக்கத்தினால் துக்கமுறும் சத்யவதி மற்றும் விதுரனின் மனதில் எழும் அனல், இறுதியாக ஒரு சார்வாகனால் திருதிராஷ்டிரன் அரியணை அமர்வதற்கு எதிராக தீச்சொல் சொல்வதால் ஹஸ்தியின் அரியணையில் மூளும் அனல் என அஸ்தினாபுரி அரண்மனை அகத்திலும் அனல் வெள்ளம் நிரம்பி வழியும் பகுதியாக அமைகிறது.
முதற்களம்:
ஹஸ்தியின் அரியணை ஏறும் நிகழ்வே பின்னர் நிகழவிருக்கும் அனைத்துக்குமான முதற்களமாக மாறுவதை இந்தப்பகுதி எடுத்துரைக்கிறது. மனிதன் ஆயிரம் திட்டங்கள் வகுத்தாலும் இயற்கை தன் திட்டத்தை தான் செயல்படுத்துகிறது. திருதிராஷ்டிரன் அரியணை ஏறும் நாளன்று நிகழ்ந்த அமங்கல நிகழ்வினால் குலமூத்தோர் அவனை ஏற்க மறுத்து பாண்டு அதில் அமர்கிறான். போர்ச்சூழல் மூளாமல் இந்த நிகழ்வை விதுரன் முடித்துக் காட்டுகிறான். திருதிராஷ்டிரனை அரியணை ஏற்றுவேன் என்று மொழிந்திருந்த பீஷ்மர் அதில் தோற்றுப்போகவே விசனமுடனிருந்த சகுனியை அவர் ஆற்றுப்படுத்துகிறார். அடுத்த பதினெட்டு ஆண்டுகள் திருதிராஷ்டிரனின் குருதியில் பிறக்கும் மகன் அரியணை ஏறும் வரை அவனை அஸ்தினாபுரியிலேயே இருக்கச் செய்து அது நிகழவும் உறுதியளிக்கிறார். அதன் பின் சகுனி காந்தாரிகளை ஆற்றுப்படுத்துவதும், தங்களுக்கான ஆட்டத்தையும் சேர்த்து தான் விளையாடுவதாகச் சொல்லும் குந்தியிடம், பாண்டுவும் அம்பாலிகையும் தங்களை முழுதளித்து ஒப்படைப்பதுமென களம் அனலாகி முதற்களமாக உருவெடுக்கிறது.
விதைநிலம்:
செழுமையான நிலத்தில் ஊன்றப்பட்ட உயிர்ப்புள்ள விதைகள் முளைத்துப் பூத்து காய்த்து கனியை நல்குகிறது. தன் அடுத்த தலைமுறையை நோக்கி அஸ்தினாபுரி எனும் விதைநிலம் காத்து நிற்கிறது. மாத்ரி கலப்பைக் கொடியுடன் அஸ்தினாபுரியின் பாண்டுவுக்கு ஷத்ரிய அரசியாவதும், விதுரனுக்கு உத்தரமதுராபுரியின் சுருதையை மணமுடிப்பதும், பாண்டு தன் அரசியருடன் வனம் புகுந்து கானக வாழ்வு சென்றடைவதுமென விதைகள் முளைத்தெழ நிலம் உழவு செய்யப்படுகிறது.
தனிப்புரவி:
வியாசருடன் மனம் இணைந்து மதி நிறைந்த விதுரனைப் பெற்ற சூதப் பெண்மணியான சிவையைப் பற்றிய சித்திரம் இந்தப் பகுதியில் காணக்கிடக்கிறது. முதல் நாவலில் எல்லா அரண்மனை சூதப் பெண்களைப் போலவே பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிந்த அவள் குழந்தை பெற்ற பின் தனித்து விடப்பட்டவளாய், ஒற்றைச் சாளரத்தையே இருப்பிடமாகக் கொண்டு தனிப் புரவியாய் திரிந்தலைபவளாக இருக்கிறாள். அவளை ஆற்றுப்படுத்தி அணைத்துக் கொள்பவளாக விதுரனின் துணைவி சுருதை அமைந்து அவனுக்கு இணக்கமாவதை இந்தப் பகுதி எடுத்தியம்புகிறது.
களிற்றுநிரை:
காந்தாரிகள் களிற்றுநிரை ஒன்றை அஸ்தினாபுரிக்கு தரவிருப்பதன் துவக்கம் இங்கு நிகழ்கிறது. காந்தாரியின் கருவில் உருவாகப்போகும் அத்தகைய பெரு வல்லமை கொண்ட உயிர் வருவதற்கான நிமித்தங்கள் காணிக்கப்படுகிறது.
கலி தெய்வத்தின் கோவிலிலிருந்து நரி நூறாகப் பெருகி ஊருக்குள் நுழைதல், திருதராஷ்டிரன் சாளரத்துக்குக் கீழே ஒரு மதகளிறு பிளிறுதல், முதுபெரும் களிறான உபாலனின் இறப்பு, அந்த யானையை அடக்கம் செய்யும் இடத்தில் கண்டடைந்த எடைமிக்க கதை, சகுனியுடன் ஒரு கரிய இருள் பகடை ஆடி அவனை வெல்லுதல், தன்னை முழுங்கிய மலைப்பாம்பை பிளந்துகொண்டு யானை வெளியே வரும் கனவையே காணும் காந்தரி என நிமித்தங்களால் நிறைகிறது இந்தப்பகுதி.
தென்றிசை மைந்தன்: அஸ்தினாபுரியில் காந்தாரியின் வழி பிறக்கப் போகும் குழந்தைக்கான நிமித்தங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க, குந்தியின் வழி பிறக்கப் போகும் தென்றிசை மைந்தனும் அறமுதல்வனுமாகிய தருமனுக்கான நிமித்தக் குறிகள் இங்கு சொல்லப்படுகின்றன. நிமித்திகரின் வரிகளின் வழி இங்கு மண்ணில் நிகழவிருக்கும் சதுரங்க ஆட்டத்திற்கான காய்களாக பிறக்கவிருப்பவர்களைப் பற்றியும், அதை ஆட்டுவிப்பவனுமாகிய அவனின் பிறப்பையும், ஒரு யுகத்தின் முடிவையும் பற்றிய செய்தியை நமக்குக் கடத்துகிறார். துர்வாசரிடமிருந்து சக்தி வாய்ந்த மந்திரத்தை கொடையாகப் பெற்ற குந்தி அது கொண்டு தர்ம தேவனை தன் கருவில் ஏந்துகிறாள். அஸ்தினாபுரியின் முதல் வாரிசைப் பெற்றெடுக்கிறாள்
இருள்வேழம்:
மதங்க கர்ப்பத்தில் துரியோதனன் எனும் இருள் வேழத்தை காந்தாரி பெற்றெடுக்கும் நிகழ்வு விரிக்கப்படுகிறது. அவனுக்கான பெயர் சூட்டும் நிகழ்வில் பீஷ்மர் ‘சுயோதனன்’ என்ற பெயரை அவனுக்கு இட்டழைக்கிறார். அனசூயைக்கு நிகரான கற்பைக் கொண்டிலங்கும் காந்தாரியின் தவப்பலனை முது நாகினியின் அறிவுரைப்படி தன் மகனுக்கு அளிக்கத் தலைப்படுகிறாள். ஆனால் இடைக்குக் கீழேயான தொடையைப் பார்க்கத் தவறிவிட்டதை உணர்ந்து அவனைக் காக்க காந்தாரிகள் மகன்களைப் பெற்றெடுக்க ஆணையிடுகிறாள். இருள்வேழங்கள் பல பிறக்கப் போவதற்கான வித்தாக இந்தப்பகுதி அமைகிறது,
புதிய காடு: குருகுலத்தின் காலனாக, தன்குலத்துச் சோதரர்களைக் கொல்பவனாக குறைப் பிரசவத்தில் பிறந்த குந்தியின் இரண்டாவது மகனை குரங்குகள் கையிலெடுத்து முலையூட்டி மீட்கச் செய்கிறார் பலாஹாஸ்வர். அவரே அவனுக்கு பீமன் என்ற பெயரையும் சூட்டுகிறார். மண்ணிலுள்ள அத்தனை அன்னத்தையும் தின்றாலும் அடங்காத பெரும்பசி கொண்ட விருகோதரனாக வளர ஆசியளிக்கிறார். தருமனுக்கும் பாண்டுவுக்குமான இணக்கமான உறவொன்று இந்தப் பகுதியை நிறைக்கிறது. குந்தியும் பாண்டுவும் தங்கியிருந்த இடம் காட்டுத்தீயால் அழிதலுக்கு உட்பட அவர்கள் புதிய காடான புஷ்பவதியை நோக்கிச் செல்லும் பயணம் நிகழ்கிறது. அங்கு இந்திரனின் மைந்தனாக அர்சுனனைப் பெற்றெடுக்க குந்தி விழைகிறாள். அதன் பின் தன் வயிற்றின் கரு நிறைவை அடைந்துவிட்ட அவள் தாய்மைக்காக ஏங்கும் மாத்ரிக்கு அந்த மந்திரத்தை அளிக்கிறாள். அதன் மூலம் மாத்ரி நகுலனையும் சகாதேவன்னையும் பெற்றெடுக்கிறாள். யாவும் நிகழ்ந்து நிறைவுடன் வாழும் பாண்டு ஒரு நாள் தான் காட்டில் கண்ட சாதகப் பறவையின் கூட்டை மத்ரிக்கு காட்ட விரும்பி அழைத்துச் சென்று களியுருகிறான். அங்கிருந்த செண்பக வனத்தில் தன் காதல் அனைத்தையும் காட்ட விரும்பியவன் காமத்தால் அவளை புனர முற்பட்டு அதன் முழுமையை அடையாது இறக்கிறான்.
மழைவேதம்: பாண்டுவின் இறப்பிற்குப் பின்னர், முன்பு நிமித்திகர் சொன்ன வரிகளைப் புரிந்து கொண்டவளாய், பாண்டுவிற்கான விண்ணக வாயில்களை தானே திறந்து வைக்க முடியும் என்றுணர்ந்து சிதை புகுகிறாள் மாத்ரி. அஸ்தினாபுரியின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய சத்யவதி அங்கு தொடந்து நிகழும் தீய நிமித்தங்களினால் அலைக்கழிந்து எதிர் காலத்தையே அஞ்சுபவளாக ஆகியிருந்தாள். அவளின் இடத்தையும் இட்டு நிரப்பிக் கொண்டிருந்த விதுரன் வேலைகளில் மூழ்கியிருந்தான். சியாமையின் இறப்பிற்குப் பின்னர் அவனுக்கும் சுருதைக்கும் சுபோத்யன், சுசரிதன் எனும் இரு மகன்கள் பிறந்திருந்தனர். சகுனி தன் மருமகன்களுடன் ஆயுதப் பயிற்சியிலேயே மூழ்கியிருந்தார். பீஷ்மர் மீண்டும் வனம் புகுந்திருந்தார். இது போன்ற ஒரு தருணத்தில் தான் பாண்டுவின் இறப்பு செய்தி விதுரனை வந்தடைகிறது. திருதிராஷ்டிரன் பாண்டுவுக்காக அரற்றி அழுவதும், பகையெண்ணம் நீங்கி அம்பிகை அம்பாலிகையைத் தேடிச் சென்று கட்டித் தழுவுவதும், இருவரும் கானகம் புக முடிவெடுப்பதும், சத்யவதி அனைத்து பொறுப்புகளையும் துறந்து வனம் புகுவதும் சடசடவென மழை போல நிகழ்ந்து முடிகிறது. தன் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் அனல் கொண்டு காத்திருந்த அஸ்தினாபுரியின் மேல் மழை பெய்யத் தொடங்குகிறது. தவளைகளின் ஒலி கேட்கத் தொடங்குகிறது. ‘மழை! மழை! மழை! மழை! என முழங்கி துவாபரயுகம் சாரலாகி வெளுத்து முடிவுக்குச் சென்று கலியுகம் மண்ணில் இறங்கும் மழை வேதமாக நாவல் முடிவு கொள்கிறது.
மழைப்பாடலின் கதாநாயகர்கள்:மழையின் போது எழுந்து வரும் முதல் தவளைச் சத்தத்திற்குப் பின்னர் பெருகி வரும் வெள்ளம் போல அதன் சத்தங்கள் நிறம்பித் ததும்பும். அதுபோலவே இந்த நாவல் வரிசையை முன் நகர்த்திச் செல்லும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவராக இந்த மண்ணில் தன் காலடியை எடுத்து வைக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதையே ஆசிரியர் ”கண்ணுக்குத்தெரியாத கை ஒன்று சதுரங்கக் களம் ஒருக்குவதுபோல ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குரிய சதுரங்கக்காய்கள் மெல்லமெல்ல வந்து அமைகின்றன. ஆட்டத்தை நடத்தவிருப்பவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மேடை நிறைந்துகொண்டிருக்கிறது.” என்று குறிப்பிடுகிறார்.
அங்ஙனம் இந்த நாவலில் புதிய காதைமாந்தர்களாக துரியோதனன் மற்றும் நூற்றுவர்களான கெளரவர்கள், தர்மன், பீமன், அர்சுனன், நகுலன் மற்றும் சகாதேவன் எனும் பாண்டவர்களும், விதுரனின் மைந்தர்களான சுபோத்யன், சுசரிதன் என அடுத்த தலைமுறை அஸ்தினாபுரியின் மைந்தர்கள் பிறக்கின்றனர்.
முதற்கனலில் வியாசரிடம் அம்பிகை, அம்பாலிகை மற்றும் சிவைக்குப் மைந்தர்களாகப் பிறந்தவர்கள் முறையே திருதிராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோரைச் சுற்றியே நாவல் சுழல்கிறது. அவர்கள் மூவரும் வளர்ந்து பதின் வயதை கடக்கும் விளிம்பில் நிற்கிறார்கள். முதற்கனலில் தோன்றி அஸ்தினாபுரியின் நலனுக்காகவே செயல் செய்யும் அதன் பெருந்தந்தையான பீஷ்மர் இங்கும் கதையை முன்னகர்த்தும் பெருஞ்செயல்களின் நாயகராகிறார். அரசுசூழ் பெருங்கனவு கொண்டவனும், சகோதரப்பாசம் மிக்கவனுமான சகுனியின் அறிமுகம் கிடைக்கிறது. யாதவ அரசின் பெருஞ்செயல்திட்டதின் ஒரு கூராக வசுதேவன் காட்சியளிக்கிறான். சிறிய பாத்திரமே ஆனாலும் இந்த நாவலில் நம் மனதில் நிற்பவர்களாக திருதிராஷ்டிரனின் விழியான சஞ்சயன், அவனின் இசை ஆசிரியரான தீர்க்கசியாமர், கர்ணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதன், மதுராபுரியின் கம்சன், திருதிராஷ்டிரன் அரியணை ஏறுவதை எதிர்த்து முழங்கிய சார்வாகன், குந்திக்கு மந்திரங்களை போதித்த துர்வாசர், தன்னேற்பு மணத்தின் போது குந்தியின் முடிவே இறுதி என கம்சனை எதிர்த்து நின்றவனாகிய சல்லியன் ஆகியோர் அமைகின்றனர்.
மழைப்பாடலின் திருதிராஷ்டிரன்: பீஷ்மருக்கு நிகரான உடல்வாகு கொண்டவனாக, முரடனாக, பீஷ்மரிடம் ஹரிசேனன் அவனைப் பற்றி சொல்லும் விதமாக திருதிராஷ்டிரனைப் பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைக்கிறது. கண்கள் இல்லாதவனாயினும் வீரத்தில் சிறந்து விளங்கும் திருதிராஷ்டிரனை முதன் முதலில் பீஷ்மர் சந்திக்கும் இடம் மட்போரிலேயே. புற உலகைக் காண இயலாதவனாகிய திருதிராஷ்டிரனுக்கு ஒரு சிறு விடயமும் அவனை அவமதிப்பு செய்ததாகக் கருதும் குணம் இருப்பதில் ஆச்சரியமில்லை. தன்னை பீஷ்மர் வந்து சந்திக்காமல் விதுரனை முதலில் கண்டது தெரிந்து அவருடன் போர் செய்து தன்னை நிறுவும் எண்ணம் வருகிறது. இறுதியில் பீஷ்மர் அவனை வீழ்த்தி அவனுக்கான பாடத்தை கற்பிக்கிறார். அவன் அழுது துவண்டு அவர் கால்களில் சரணடைந்து அவரைத் தந்தையாக குருவாக ஏற்கிறான். பாண்டுவின் மேலும் விதுரனின் மேலும் அவன் வைத்திருக்கும் பாசம் அளப்பரியது. முதலிரவில் காந்தாரி அவனுக்கு விருப்பமானவர் யார் என்று வினவுகையில் தன் அன்னைக்கு அடுத்தபடியாக விதுரனைக் கொணர்ந்து நிறுத்துகிறான். தான் இறந்துவிட்டால் விதுரன் உயிரோடு இல்லாமல் இருப்பதே அவனுக்கு நலம் பயக்குமென நினைக்கும் அந்த இடம் மிகவும் உணர்வுப் பூர்வமாக அமைகிறது. தன் முதல்காதல் பித்தான காந்தாரியை தன் தோள்வலிமையை நிறுவி, மணந்து, அவள் கைத்தலம் பற்றும் இடம் சிலிர்க்கச் செய்கிறது. இசையின் மீது தீராத நாட்டம் கொண்டவனாக, யாழை வாசிப்பவனாக, இசையிலே மூழ்குகையில் கந்தர்வனைப் போல்வனாக அவனுக்கே உரிய உலகத்தை இசையின் மூலம் சமைத்துக் கொள்பவனாக அமைகிறான். இசையினால் அவனுக்கு அணுக்கமானவர்களாக தீர்க்கசியாமர் மற்றும் பிரகதி அமைகின்றனர். ஒரு பாதி நாவல் வரை விதுரனே திருதிராஷ்டிரனின் கண்களாக அமைந்து அணுக்கமாக இருக்கிறான். ஆனால் பணிச்சுமை காரணமாக மதி நிறைந்த சஞ்சயன் எனும் சிறுவனை அவனின் கண்களாக நியமிக்கிறான் விதுரன். காலப்போக்கில் சஞ்சயனைத் தன் கண்களாக மாற்றிக் கொண்டு நெருக்கமாக்கிக் கொள்ளும் விதத்தை ஆசிரியர் நெகிழ்வுடன் படைத்திருக்கிறார். பாண்டுவின் இறப்பின் போது கதறி அழும் சகோதரனாக, தீய நிமித்தங்களை முன்னிட்டு அனைவரும் பயந்து வெறுப்பவனாகிய தன் மகன் துரியோதனை ஒரு போதும் கைவிடுவதில்லை என்று உரைப்பதும், பாண்டுவின் மகன்களின் பிறப்பை தன் மகன்களின் பிறப்பு போல் கொண்டாடுபவன் என ஓர் அன்பனாக நம் நெஞ்சில் நிலைத்துவிடுகிறான் திருதிராஷ்டிரன் எனும் பேருருவன்.
மழைப்பாடலின் பாண்டு: முதற்கனலில் பிறந்து, மழைப்பாடலில் வளர்ந்தவனாகி, வாழ்ந்து இந்த சதுரங்க ஆட்டத்தின் மையக் கதாப்பாத்திரங்களான பாண்டவர்கள் பிறப்பதற்கு காரண கர்த்தாவாகி மறைந்து விடுகிறான். வெளிறி வெண்ணிறமாக பாளைக்குருத்து உடல் கொண்டவனாக, அன்னையின் விளையாட்டுப்பாவையாகவும், அந்தப்புரம் விட்டு வெளிவராதவனாகவும், அன்னையுடனும், சேடியருடனும் பெண்களைப்போல மலர்கொய்தும் நாணலால் மீன்களைப் பிடித்தும், மரக்கிளைகளில் ஆடியும் பகலெல்லாம் விளையாடுபவனாகவும் பாண்டு முதலில் நமக்கு அறிமுகமாகிறான். அந்தப்புரமெங்கும் தான் காண முடியாத வெளிச்ச உலகை திரைகளில் வண்ணங்களால் நிறைக்கும் சித்திரனாக இருக்கிறான். உடற்குறை கொண்டவனாக ஆனால் பல கனவுகளில் மூழ்கித்திழப்பவனாக இருக்கிறான். ஆசிரியர் பாண்டுவைக் குறிக்கும்போது ”ஆடிப்பிம்பங்கள் காலந்தோறும் தனக்கான உடலைக் கண்டு அதனுள் ஏறிக் கொள்வது போல குரு வம்சத்தில் தேவாபி பின்னர் விசித்ர வீரியன், அதன் பின் பாண்டு” என சென்று கொண்டிருப்பதாகக் கூறுகிறார். ஆணமைக் குறைவு கொண்ட பாண்டுவின் காதலை நிறைவு செய்பவளாக ஷத்ரிய அரசியாக, சல்லியனின் தங்கை மாத்ரி வருகிறாள். அவர்கள் இருவருக்குமிடையேயான அந்தக் காதல் உடலைக் கடந்த ஒன்றாக அமைந்தொழுகுகிறது. அவளுடனான முதல் இரவில் காமம் சாத்தியப்படாத ஒன்றாக அமைந்து, அதுவே அவனுடைய உயிருக்கு ஆபத்தாய் முடிகிறது. அதன்பின் குந்தி மற்றும் மாத்ரியுடன் வனம் புகுந்து நிறைவாழ்வு வாழ்கிறான். அவனுடைய வர்புறுத்தலின் பேரில் தான் குந்தி துர்வாசர் தனக்கு நல்கிய மந்திரத்தைப் பயன்படுத்த விழைகிறாள். ’தர்மன், பீமன், அர்ஜுனன்’ ஆகியோரைப் பெற்றெடுப்பவளாக குந்தியும், ’நகுலனையும், சகாதேவனையும்’ பெற்றெடுப்பவளாக மாத்ரியும் உருவாவதற்கு காரணமாகிறான். தருமனை எந்நேரமும் தோளில் தூக்கி வைத்து அலைபவனாக, ஐவரிடமும் அன்பைப் பொழிந்து ஒரு தந்தையாக நிறைவு கொள்கிறான். தன் காமத்தை முழுமை செய்யவியலாது செண்பக வனத்தில் இறந்துபட்டு தன்னுடன் சிதையேறிய மாத்ரியுடன் மண் நீங்குகிறான். அவன் இறப்பினாலேயே சத்யவதி, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் வனம் புகுந்து தங்களை மழைப்பாடலில் நிறைவு செய்து கொள்கின்றனர்.
விதுரன் எனும் அறிஞன்: கிருஷ்ணதுவைபாயன வியாசனே இளம் வடிவுகொண்டது போல்வனும், காவியங்கள் வாசிக்கும் இலக்கியவாதியாகவும், முதல் சந்திப்பிலேயே “நீ ஒரு சிறந்த அறிஞன்” என்று பீஷ்மரால் சொல்லப் பெறுபவனும், திருதிராஷ்டிரனின் கண்களாக, அவன் அகம் உணரும்படி உரைக்கும் நல்ல அமைச்சனாகவும், அரசியல் மதியூகியாகவும் விதுரன் நமக்கு அறிமுகமாகிறான். பீஷ்மர் தன்னை வந்து சந்திக்கவில்லை என்று கோபம் கொண்டு அவரை பகைத்துக் கொள்ள நினைக்கும் திருதிராஷ்டிரனுக்கு அவருடன் ஓர் மற்போர் ஏற்பாடு செய்து வைத்து அவரின் திறத்தை அறியச் செய்கிறான். பாண்டுவுக்கு உரிமையான பாதி நிலத்தை வைத்து திருதிராஷ்டிரனின் அரியணை ஏறும் நிகழ்வை நிறுத்த எத்தனித்த அம்பாலிகையின் திட்டங்களை மதியூகத்தால் முறியடிக்கிறான். பின்னாளில் நிகழப்போகும் மிகப்பெறும் சச்சரவுக்கான முதல் வித்தாகவும் அவன் செயல் அமையும் என்பதில் ஐயமில்லை. திருதிராஷ்டிரன் அரியணை ஏறுவதற்கு மறுப்பு எழுந்தபோது பாண்டு அரியணை ஏறும் நிகழ்வை அவனின் மேலான சம்மதத்துடன் நிகழ்த்திக் காட்டுகிறான். விதுரனின் காதல் தருணங்களாக அவன் முதல் முறை குந்தியை சந்தித்த தருணமும், சுருதையுடன் அணுக்கமாகும் நிகழ்வுகளும் அமைகின்றன. பேரரசியான சத்யவதியின் கனவுகளையும் குறிக்கோள்களையும் ஏந்தியவனாக அவளிடமிருந்து அதற்கான ஞானத்தையும் பெற்றவனாகத் திகழ்கிறான். அவளின் திட்டங்களையெல்லாம் செய்ல்படுத்தும் நல் அமைச்சனாகவும், அஸ்தினாபுரியை நேரடியாக ஆளும் விதியைப் பெறவில்லையெனினும் அவனின் மதியூகத்தாலேயே ஆள்கிறான். மழைப்பாடலில் சத்தியவதியின் மூப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவற்றைப் போக்கும் அருமருந்தாக அவள் சார்பாக அனைத்தையுமே முடிவெடுக்கும் செயல்படுத்தும் நல் அமைச்சனாக அறிவுத் திறம் வாய்ந்தவனாக விதுரன் அமைகிறார். மழைப்பாடலின் ஒவ்வொரு முக்கியமான நகர்விலும் விதுரரின் முடிவுகள் இருக்கின்றன. இறுதியில் சத்யவதி வனம் புகும் நிகழ்வில் ஒரு பேரிழப்பு மன நிலை நிகழாதிருப்பதற்குக் காரணம் நாவலின் பாதியிலேயெ அவன் ஒரு ஆண் சத்யவதியாக அவளின் இடத்தை நிரப்புவதே காரணமாகிறது.
சகுனி எனும் மதியூகி: காந்தார அரசின் எதிர்காலத்தின் மேல் உயரிய கனவுகள் கொண்டு அதற்கான செயல்திட்டமும் கொண்டிருக்கும் மதியூகியாக சகுனி நமக்கு அறிமுகமாகிறான். மகதத்துடன் நட்பாக்கிக் கொள்ள விழைந்தவனை அவர்கள் அவமதித்த காரணத்திற்காகவே அஸ்தினாபுரத்துடன் இணையும் முடிவுக்கு இசைகிறான். தன் சகோதரி காந்தாரி அரியணை ஏறும் நிகழ்வுக்காக காந்தாரத்தின் செல்வங்களையெல்லாம் அனல் வெள்ளம் போல அஸ்தினாபுரிக்கு எடுத்து வந்து அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்கிறான். அவனுக்கும் காந்தாரிக்குமிடையேயான சகோதரப்பாசம் அளப்பரியது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

