மெளனியுடன் கொஞ்ச தூரம்
திலீப்குமார்

எழுத்தாளர் திலீப்குமார் மெளனியின் படைப்புலகம் குறித்து ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன நூலை எழுதியிருக்கிறார். வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மிக முக்கியமான நூல் அந்த நூலின் துவக்கத்தில் திலீப்குமார் தனது இலக்கியப்புரிதலை அழகாக வரையறை செய்து கொண்டிருக்கிறார்.
••••

மௌனியைப் பற்றிப் பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் நிலவுவதை நாம் காண்கிறோம். அவரை வெகுவாகக் கொண்டாடவும், கடுமையாகத் தூஷிக்கவும் பலர் உள்ளனர். ’மௌனியின் எழுத்துக்கள் புரியவில்லை’; ‘அவர் சமூகப் பார்வையற்றவர்’ என்றெல்லாம் அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், அவரைப் பாராட்டுபவர்களும் ரொம்பவும் தீவிரமான சொற்களைக் கொண்டு பாராட்டுகின்றனர். இத்தகைய அபிப்பிராயங்களில் பாரபட்சங்களை நாம் ஒதுக்கியே விடவேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இவை அவரவர் தம்தம் அறிவுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப இலக்கியத்தைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் வரித்துக்கொண்ட தீவிரமான எண்ணங்களைச் சார்ந்தவை. இவற்றை நாம் முழுதாக ஏற்கவேண்டியதில்லை.
என்னைப் பொறுத்தவரையில், ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ, புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டான் என்றே நினைக்கிறேன். மாறாக இலக்கியத்தில் வரையரைகளையும், வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாக இருப்பான். நுண்ணுணர்வு கொண்ட ஒரு வாசகனால், ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பில், சமூகப் பார்வையின் இருப்பையோ, இல்லாமையையோ, அழகியல் நுட்பத்தின் உயர்வையோ தாழ்வையோ நிச்சயமாக உணர்ந்து கொள்ள முடியும். மேலும் இக்கூறுகளின் மிகுதியோ குறைவோ அவனை விசேஷமாகப் பாதிப்பதில்லை என்றே நினைக்கிறேன்.
என்னதான் படப்பாளியின் இமையருகே சென்று பார்த்தாலும் தான் படைப்பாளியின் கோணத்தில் உலகைப் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்தவனாக அவர் இருப்பான். அதேபோல், படைப்பாளியின் கோணத்திலிருந்து காட்டப்படும் உலகமே சர்வ நிச்சயமானது என்று ஆவேசம் கொண்டோ, சுருங்கியோ விடமாட்டான். அவர் ஒவ்வொரு படைப்பாளிக்கும் (அப்படப்பாளியின்) அவனது கலமட்டத்திற்கும் ஏற்பத் தன்னை மாற்றியமைத்துக் கொண்டே வாசிப்பதில் ஆழ்கிறான்.
உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும், மதிப்பும், அவர்கள் ஒரே விதமான தத்துவச் சார்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்பதற்காகத்தான் என்று நம்மால் கொள்ளமுடியுமா? உலக இலக்கியத்தின் சிறப்பான தொகுதியை நாம் பார்க்க நேர்ந்தால், கால, தேச, எல்லைகளையும், தத்துவச் சார்புகளையும் மீறி அது நம்மை ஈர்த்துக் கொள்வதைக் காண்போம்.
இவ்வகையில் பார்க்கும்போது, பல்வேறு தத்துவச் சார்புடைய பல்வேறு எழுத்தாளர்களிடையே – இவர்களுக்கிடையே காணப்படும் வேற்றுமைகளையும் மீறி – ஒற்றுமைக்கான ஏதோவொரு அம்சம் இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த ஒற்றுமைக்கான அம்சம் என்ன? கொகோலுக்கும், எக்சூபெரிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை என்ன? தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, டால்ஸ்டாய், செகாவ், காஃப்கா, காம்யு, ஜேக் லண்டன், மார்க்வெஸ் போன்ற பலரிடமும் காணக்கிடைக்கும் ஒரே விஷயம், ஒரே வசீகரம்தான் என்ன?
இந்த எழுத்தாளர்கள் அனைவரும் வாழ்க்கையின் மீது தீவிரமான அக்கறை கொண்டிருந்தார்கள் என்பது மட்டும்தானா? இல்லை என்றே தோன்றுகிறது. இதையும் மீறிய ‘ஏதோவொன்று’ இருக்கவேண்டும். வாழ்க்கையின் மீது தீவிரமான அக்கறை என்பதைத் தவிர இவர்களது இலக்கியச் செயல்பாடுகளுக்குப் பின்னிருந்து இயக்கிய ஒரு ‘அற இயல்பு’ என்ற விஷயமும் இருந்திருக்கவேண்டும் என்று நான் கொள்கிறேன். இந்த ‘அற இயல்பு ’ தான் இவர்களுக்கிடையேயான ஒற்றுமைக்கான முதன்மையான அம்சம். தன்மையிலும் தத்துவச் சார்புகளிலும் மிகவும் மாறுபட்ட பல எழுத்தாளர்களிடையே காணப்படும் ஒற்றுமை இந்த ‘அற இயல்பு’ தான். மேலும் இந்த ‘அற இயல்பு’ தன்னளவில் தன்மையற்றதே என்றும் நான் கூறுவேன். இது ஒவ்வொரு படைப்பாளியிடமும் அவனது கலை இயபுக்கும், திறமைக்கும், அவன் செயல்பட்ட கால, சமூக, அரசியல், இலக்கியப் பின்னணிக்கும் ஏற்ப அவனுள் விகசிக்கிறது. எழுத்தாளர்கள் பலராகவும் பல பார்வை கொண்டவர்களாகவும், வாழ்க்கையின் ஒரு சில பரிமாணங்களிலேயே கவனம் செலுத்தியவர்களாக இருந்திருப்பினும், இந்த ‘அற இயல்பை’ இந்த ஒற்றுமைக்கான அம்சத்தை நாம் எல்லோரிடமும் காண்கிறோம்.
ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களில், அவன் காட்டும் வாழ்க்கைப் பரிமாணங்களில் அவனது சார்பு நிலைகளில் ஒரு வாசகனுக்கு ஏற்படும் ஆவல் உண்மையில் நான் மேலே சொன்ன ‘அற இயல்பின்’ மீது ஏற்படும் மதிப்புதான். இந்த அற இயபு அதுவே ஒரு பண்பு எனவும், அது சார்ந்திருக்கும் ஏனைய விஷயங்கள் இரண்டாம் பட்சமானவையே என்றும் நான் கொள்கிறேன்.
மௌனியின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது, மேலே சொன்ன வகையிலேதான் அவற்றைக் கணிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. மௌனி ரொம்பவும் குறுகிய ஒரு வட்டத்திற்கான எழுத்தாளராகச் சுருங்கியிருப்பினும், அவரிடமும் நான் மேற்குறித்த ‘அற இயல்பின்’ உந்துதலைக் காண்கிறேன். மேலெழுந்தவாரியான தத்துவச் சார்புகளையும், மேலெழுந்தவாரியான அழகியல் உணர்வுகளையும் தாண்டி வந்து நாம் பார்க்கும் பொழுதே மௌனிக்குரிய மதிப்பை நம்மால் அளிக்கமுடியும்.
நன்றி
மௌனியுடன் கொஞ்ச நேரம் . வானதி பதிப்பகம்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
