வீடில்லாதவர்கள்
ரஷ்யக் கரடிக் குடித்தனம் என்ற சிறார் கதை ஒன்றைத் தினமணி இணையத்தில் படித்தேன் சின்னஞ்சிறிய நாட்டுப்புறக் கதை. கண்முன்னே காட்சிகள் தோன்றி மறைகின்றன.
குயவன் தவறவிட்டுச் சென்ற பானை ஒரு வீடாக மாறுகிறது. அந்தப் பானையைக் கரடி ஆக்கிரமித்துக் கொண்டவுடன் இருப்பிடம் பறிபோகிறது. இது சிறார் கதை மட்டுமில்லை. அதிகாரத்தின் இயல்பினைப் பற்றியது
•••

பானைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஒரு குயவர் செல்லும் போது வண்டியிலிருந்து ஒரு பானை தவறி கீழே விழுந்துவிடுகிறது. அந்தப் பானையைக் கண்ட ஈ அதைச் சுற்றிவந்து கேட்டது.
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
அந்த வீட்டில் ஒருவரும் இல்லை. ஈ எனும் ரீங்காரி பானைக்குள் பறந்து போய்க் குடியிருக்கத் தொடங்கியது.
அதன்பிறகு கொசு-ஙொய்மொய் பறந்து வந்து கேட்டது:
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி. நீ யார்?”
“”நான் கொசு-ஙொய் மொய்.”
“”வந்து என்னோடு குடியிரு.”
ஆக, இரண்டும் சேர்ந்து வாழத்தொடங்கின.
சுண்டெலி-கறுமுறுப்பான் ஓடி வந்து கேட்டது:
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி.”
“”நான் கொசு-ஙொய்மொய். நீ யார்?”
“”நான் சுண்டெலி-கறுமுறுப்பான்.”
“”வா. வந்து எங்களோடு குடியிரு.”
மூன்றும் சேர்ந்து வாழத்தொடங்கின.
தவளை-குவாக்குவாக் தாவி வந்து கேட்டது:
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி.”
“”நான் கொசு-ஙொய்மொய்.”
“”நான் சுண்டெலி -கறுமுறுப் பான். நீ யார்?”
“”நான் தவளை-குவாக் குவாக்”
“”வா. வந்து எங்களோடு குடியிரு.”
நான்கும் சேர்ந்து வாழத்தொடங்கின.
ஒரு முயல் ஓடி வந்து கேட்டது:
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி.”
“”நான் கொசு-ஙொய்மொய்.”
“”நான் சுண்டெலி-கறுமுறுப்பான்.”
“”நான் தவளை- குவாக்குவாக். நீ யார்?”
“”நான் முயல்-கோணல்காலன்.”
“”வா. வந்து எங்களோடு குடியிரு.”
ஐந்தும் சேர்ந்து வாழத்தொடங்கின.
பக்கத்தில் ஓடிய நரி கேட்டது:
“”யாருடைய மாடி வீடு இது. வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி.”
“”நான் கொசு-ஙொய்மொய்.”
“”நான் சுண்டெலி-கறுமுறுப்பான்.”
“”நான் தவளை-குவாக்குவாக்.”
“”நான் முயல் -கோணல்காலன். நீ யார்?”
“”நான் நரி-பேச்சழகி.”
“”வந்து எங்களோடு குடியிரு.”
ஆறும் சேர்ந்து வாழத் தொடங்கின.
ஓநாய் ஓடி வந்து கேட்டது:
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி.”
“”நான் கொசு-ஙொய்மொய்.”
“”நான் சுண்டெலி-கறுமுறுப்பான்.”
“”நான் தவளை-குவாக்குவாக்.”
“”நான் முயல்-கோணல்காலன்.”
“”நான் நரி-பேச்சழகி. நீ யார்?”
“”நான்தான் ஓநாய்-மேட்டுப் புதற்காட்டைச் சேர்ந்தவன்.”
“”வந்து எங்களோடு குடியிரு.”
ஆக, ஏழும் சேர்ந்து வாழத்தொடங்கின. சேர்ந்து வாழ்ந்தால் துன்பம் இல்லை.
முடிவில் ஒரு நாள் ஒரு கரடி வந்து தட்டியது:
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி.”
“”நான் கொசு-ஙொய்மொய்.”
“”நான் சுண்டெலி-கறுமுறுப்பான்.”
“”நான் தவளை-குவாக்குவாக்.”
“”நான் முயல்-கோணல்காலன்.”
“”நான் நரி-பேச்சழகி.”
“”நான் ஓநாய்-மேட்டுப் புதற்காட்டைச் சேர்ந்தவன். நீ யார்?”
“”நான்தான் உங்களை விரட்ட வந்த குடித்தனக்காரன்.”
கரடி, பானை மேல் உட்கார்ந்தது. பானை உடைந்தது. எல்லாப் பிராணிகளும் பயந்து ஓடிவிட்டன.

••
கதையில் வரும் ஈ காலியாகக் கிடக்கும் பானையை மாடி வீடு என்கிறது. ஈக்கு வீடில்லை என்பதும் அது தனக்காக ஒரு வீட்டினை ஏற்படுத்திக் கொள்கிறது என்பது அழகான விஷயம். இது போலவே கொசுவும் ஈயும் ஒன்று சேர்ந்து வாழுகின்றன. இப்படி ஆறு விலங்குகள் மாறுபட்ட இயல்போடு இருந்த போதும் ஒன்றாக வாழுகின்றன. ஆனால் கடைசியில் வந்து சேரும் கரடி தன்னை அந்த வீட்டின் உரிமையாளர் என்கிறது. யாரோ தவறவிட்டுப் போன பானைக்குக் கரடி எப்படி உரிமையாளர் ஆனது. ஆனால் அதிகாரம் வந்துவிட்டால் அப்படித்தான். அந்தக் கரடியை அவர்கள் வரவேற்கிறார்கள். ஆனால் அது பானையை உடைத்து சகலரையும் வெளியேற்றிவிடுகிறது.
ஒரு நாடகம் போலவே காட்சிகள் தோன்றி மறைகின்றன. வெறும்பானை வீடாக மாறியதும் அதற்கு ஒரு அர்த்தம் உருவாகிவிடுகிறது. இப்படிதான் எளியோர் தனது இருப்பிடங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
விட்டோரியா டிசிகா என்ற இத்தாலிய இயக்குநர் Miracle in Milan என்றொரு படம் எடுத்திருக்கிறார். இதில் வீடற்றவர்கள் புறநகர்ப் பகுதி ஒன்றினை சீர்செய்து கிடைத்த தகரங்களையும் மரத்துண்டுகளையும் கொண்டு சிறிய வீடு கட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் குடியிருக்கத் துவங்கியவுடன் ஒரு ஆள் அந்த இடம் தன்னுடையது என்று காலி செய்யச் சொல்லி காவலர்களுடன் வந்து நிற்கிறான். மக்கள் காலி செய்ய மறுத்துப் போராடுகிறார்கள். காவல்துறை அவர்களை அடித்துத் துரத்துகிறது. மக்கள் அடிவாங்கி விழுகிறார்கள்.

அப்போது ஒரு அதிசயம் நடந்து காவலர்கள் பின்வாங்கி ஓடுகிறார்கள். அப்பாவி ஒருவனுக்கு அதிசய சக்தி கிடைக்கிறது. வேண்டியதை எல்லாம் அவன் உருவாக்கித் தருகிறான். அவர்கள் குடியிருப்பில் திடீரென ஒரு நீரூற்றுப் பொங்குகிறது. அது தண்ணீர் ஊற்றில்லை. எண்ணெய் என்பதை மக்கள் அறிந்து ஆரவாரம் செய்கிறார்கள். அந்த இடத்தை விட்டு மக்களைத் துரத்த முதலாளி தந்திரங்களை உபயோகிக்கிறான்.. இதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் படத்தின் கதையும் இந்தச் சிறார் கதைப்பாடலும் ஒன்று தானே
கதையில் வரும் கொசு ஈ தவளை சுண்டெலி என யாவும் தன் குரலையும் தன்னோடு சேர்த்து அடையாளப்படுத்திக் கொள்கின்றன. எளிய வாழ்க்கையில் நட்பும் உறவும் எளிதாக அமைந்துவிடுகிறது.
கதை கரடியின் வருகையோடு முடிந்துவிடுகிறது. உண்மையில் இந்த முடிவினை நாம் தொடரலாம். ஒரு விளையாட்டாக வீடில்லாத ஈயும் கொசுவும் தவளையும் சுண்டெலியும் நரியும் முயலும் எப்படிக் கரடியை பழிவாங்கின என்று இன்னொரு கதையை நாம் உருவாக்கலாம்
சிறார் கதைகளில் எளிய சொற்களே கையாளப்படுகின்றன. அவை மின்மினி போல ஒளிர்வது தான் அதன் தனிச்சிறப்பு
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
