தமிழ்நாட்டில் சமணர்

அருகர்களின் பாதை வாங்க

வணக்கம் ஜெமோ,

நான் தற்சமயம் தங்களின் “அருகர்களின் பாதை” என்ற புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.அதை படிக்கும் போது நமது நாட்டில் சமணர்கள் பெரும்பான்மையாக இருந்திருப்பதாகவும் வசதி செல்வாக்காகவும் இருந்திருப்பதாகதெரிகிறது.தமிழகத்தில் எந்த பகுதியில் அதிகமாக இருந்தார்கள்? தற்போது அவர்களின் எண்ணிக்கை குறைந்த காரணம் என்ன?இந்தியாவில் மற்ற மதங்களை சேர்ந்த மக்களைவிட அதிக எண்ணிக்கையில் இருந்திருப்பார்களா? தற்போது குறைய காரணம் என்ன?

நன்றி

கேசவன் ஶ்ரீனிவாசன்.

அன்புள்ள கேசவன்

தமிழகத்தில் உருவான பக்தி இயக்க அலை சமண நம்பிக்கையாளர்களாக இருந்த ஏராளமானவர்களை சைவ வைணவம் நோக்கி திருப்பியது. சைவ,வைணவ அரசர்கள் வந்ததும் ஒரு காரணம்.ஆனாலும் சமணர்கள் தொடர்ந்து குறிப்பிடும் எண்ணிக்கையில் நீடித்தனர்.

பதினேழாம் நூற்றாண்டுமுதல்தான் சமணர்கள் படிப்படியாக தமிழகத்தில் குறைந்துகொண்டே வந்தனர். அதுவரைக்கும்கூட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தனர். மேல்சித்தமூர் போன்ற பெரிய சமண ஆலயங்கள் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை. மேல்சித்தமூர் போல சமணர்கள் மட்டுமே வாழும் ஊர்கள் தமிழகத்தில் பல இருந்திருக்கின்றன. இன்றும் செயல்படும் தொன்மையான சமண ஆலயங்கள் இருக்கும் இடங்களைப் பார்த்தால் தஞ்சையில் மன்னார்குடி போன்ற ஊர்களில்கூட நிறைய சமணர்கள் இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் இங்கிருந்து செல்லவில்லை, அவர்கள் சமணத்தை காலப்போக்கில் மெல்ல கைவிட்டனர். சமணர்களிலுள்ள இல்லறத்தார் முன்பு இந்துமத தெய்வங்களையோ குலதெய்வங்களையோ கைவிட்டுவிட்டு சமணர்களாக ஆனவர்களல்ல. சமணதத்துவம் சமண ஆசாரம் ஆகியவற்றை முதன்மை நம்பிக்கையாகக் கொண்டிருக்கையிலேயே அவர்கள் குலதெய்வங்களையும் பிற இந்து தெய்வங்களையும் [குறிப்பாக வைணவ தெய்வங்களை] வழிபட்டுக்கொண்டிருந்தனர். சமணம் கைவிடப்பட்டபோது அவர்களிடம் மற்றவழிபாட்டுமுறைகள் எஞ்சின.

இன்று தமிழகத்தின் வடமாவட்டங்களில் சமணர்கள் இருக்கிறார்கள். தமிழகத்துச் சமணர்களில் வன்னியர்கள் எண்ணிக்கையில் மிகுதி. விழுப்புரம். காஞ்சீபுரம், வேலூர் மாவட்டத்தில் பொதுவாக அதிகம்பேர் இருக்கிறார்கள். நாங்கள் 2010ல் சமணப் பயணம் செய்தபோது தென்னகத்திற்கு தலைமையகமாக இருந்த கும்சா [கர்நாடகம்] மடத்திற்கு தமிழகத்தில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. அவர்கள் வன்னியர்கள். புதிய சமணக்கோயில் கட்ட அனுமதி கோரி வந்திருந்தனர்.

தமிழ்ச்சமணம் பற்றிய செய்திகளுக்கு http://banukumar_r.blogspot.com/ என்னும் இணையதளம் ஒரு நல்ல இடம்

ஜெ

மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

தங்களின் பல்வேறு உரைகளின் காணொலி வாயிலாக தமிழ்நாட்டின் சமணர்களை பற்றிய அறிமுகம் கிடைத்தது.சமணர்கள் அவர்களின் மத நம்பிக்கைகளை இங்கு பரப்ப வந்தாலும், இங்கு தமிழைக் கற்று அதன் மூலம், அவர்களின் கொள்கைகளை எவ்வாறு பரப்ப முடிந்தது?பள்ளி நடத்தும் அளவுக்கு தமிழில் தேர்ச்சி அடைந்து கவிதைகள் அல்லது நீதி நூல்கள் மூலமாக பாடம் நடத்தியது அசாதாரணமான செயல்.

இங்கு தமிழை இவ்வாறு வருபவர்களுக்கு(தமிழறியாத) கற்றுத்தந்தவர்கள் பற்றிய குறிப்புகள் உண்டா?(வெவ்வேறான கால கட்டங்களில்)

பாலாஜி,
சென்னை.

 

அன்புள்ள பாலாஜி

சமணர்கள் அனைவரும் இங்கு வந்தவர்கள் அல்ல. சமண ஞானத்தை இங்கே கொண்டுவந்தவர்கள் அந்த மதத்தின் மெய்யறிவர். அவர்களில் இங்கிருந்து சென்று அவற்றைக் கற்றவர்களும் இருக்கலாம். அவ்வாறு ஒரு மெய்யறிவை கொண்டுசெல்லும் முதல்வர்கள் எளிய மானுடர் அல்ல. வியப்பூட்டும் அறிவுத்திறனும், உளத்திண்மையும் கொண்டவர்கள். அவர்களின் சாகசங்கள் எந்த மாவீரனும் எண்ணினால் அஞ்சும் அளவுக்கு தீவிரமானவை.

சமணர்களின் துறவுநெறிகள் கடுமையானவை.ஆடையில்லா உடலுடன், பிச்சை எடுத்த உணவை  வெறுங்கைகளால் உண்ணவேண்டும். வெறுந்தரையில் படுக்கவேண்டும். மறந்தும் உயிர்களைக் கொல்லக்கூடாது. மண்படிந்த மேனியர் என அவர்களை தொல்நூல் சொல்கிறது

அவர்கள் தன்னந்தனியாக பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு நடந்தே அலைந்திருக்கிறார்கள். மனிதர்கள் எளிதில் அணுகமுடியாத மலையுச்சிக் குகைகளில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருக்கிறார்கள். தாங்கள் பிச்சையெடுத்தாலும் பல்லாயிரம்பேருக்கு உணவு அளிக்கும் அன்னசாலைகளை நடத்தியிருக்கிறார்கள்.

அவர்கள் அமைத்த அஞ்சினான் புகலிடங்கள் அவர்களின் ஆன்மபலத்திற்கான சான்றுகள். தங்கள் எல்லைக்குள் ஆயுதங்களை அனுமதிப்பதில்லை என நோன்புகொண்டிருப்பார்கள். அந்த எல்லைக்குள் ஆயுதமெடுத்தவர்களின் இல்லங்களின் முன் சென்று உண்ணாநோன்பிருந்து உயிர்விடுவார்கள். ஆகவே அரசர்களும் அவர்களின் பழியை அஞ்சினர்.

அவர்களுக்கு ஒரு மொழியை கற்று தேர்வது கடினமா என்ன?பழைய சமண அறிஞர்களில் பலர் சம்ஸ்கிருதம், பிராகிருதம், தமிழ், கன்னடம் உட்பட பலமொழிகளில் விற்பன்னர்கள். தென்னக மொழிகளுக்கு இலக்கணம் அமைத்தும், தொகைநூல்களாக அம்மொழிகளின் செல்வங்களை திரட்டியும் அடித்தளப் பணியை ஆற்றினார்கள். அந்தந்த மொழிகளில் பெருங்காவியங்களையும் இயற்றினார்கள்.\

அவர்களால் வழிகாட்டப்பட்டு இங்கே பெரிய சமணச்சமூகங்கள் உருவாயின. கிபி ஒன்றாம்நூற்றாண்டு முதல் தமிழகத்தில் சமணம் ஓங்க ஆரம்பித்தது. கிபி ஏழாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் தலைமை மதமே சமணமாக இருந்திருக்கக்கூடும் என இன்று கிடைக்கும் ஆயிரக்கணக்கான சமண வழிபாட்டிடங்களில் இருந்து தெரிகிறது.

ஜெ

தமிழ்ச் சமணம்

அருகர்களின் பாதை – ஓர் அனுபவம்

அருகர்களின் பாதை- வாசிப்பனுபவம்

சமணர் கழுவேற்றம் பற்றி இன்னும் ஏன் சொல்லப்படுகிறது?

சமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை

சமணர் கழுவேற்றம்- ஒரு கட்டுரை

சமணர் கழுவேற்றம்

சமணர் கற்படுக்கை

பற்றற்றான் பற்று

சமணத்தில் இந்திரன்

மணம் ஒரு கடிதம்

சமணம் ஒரு கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.