மோட்சம்- கடிதம்

மோட்சம்

அன்புள்ள ஜெ,

தாங்கள் பகிர்ந்த ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் மோட்சம் சிறுகதையை வல்லினத்தில் வாசித்தேன். மிகவும் காத்திரமான, வாசிப்பில் வலியின்பம் தரும் கதை. பொதிகைமலை விளிம்புகளில் குடிகள் அமைந்த நிலமென்பதே நானறியாத வெளி. அதன் சேரிகள், மனிதர்கள், தெய்வங்கள் (சொற்கேளா வீரன், குருந்துடையார் அய்யனார், சூட்சமுடையார் சாஸ்தா) அனைத்துமே ஒரு கனவுத்தன்மையைக் கூட்டின. உயிர் காக்கும் மருத்துவரையும் காறி உமிழ்ந்து கடந்து செல்லும் மனிதர்கள் நம் மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பன போன்ற சாதிய அடக்குமுறை சார்ந்த கொடுமைகளின் ஆலாபனையுடன் கதைக்குள் நுழைந்தேன். இது கழுவேற்றம் பற்றிய கதை என்று ஆசிரியர் இரண்டாவது வரியிலேயே உறுதி அளித்து விடுகிறார்.  கழுவேற்றத்துக்கான அத்தனைத் தயாரிப்புகளையும் , கழுவேற்ற நிகழ்வையும் கூடத் துல்லியமாகவும், பீபத்ஸ சுவையுடனும் விவரித்து கிலி ஏற்படுத்துகிறார். கதைகளின் வழியே மட்டும் கேட்டிருந்த கழு நிஜத்தில் நிகழ்கையில் அது அங்கிருந்தவர்களிடம் ஒரு கொண்டாட்ட மனநிலையையே உருவாக்குகிறதென்பதைக் காண்கிறோம். ஒவ்வொருவரும் அதன் தயாரிப்பு குறித்து எழுச்சியுற்ற மனநிலையில் விவரிக்கிறார்கள். 

கதைசொல்லியின் நண்பனான கழுவேற்றப்படும் மாரனுக்கு ஏன் அந்தப் பெயர் என்று ஒருவர் பின்னூட்டத்தில் விளக்கியதை வாசித்து வியந்தேன். பின்னர் வருகிறது கணியான் கூத்து கர்ணமோட்சம். இதுவும் நானறியாத கதையே. என் கருத்தில், ஒரு நல்ல படைப்பில், அதில் வரும் நிகழ்வுகள், எந்தப் புற விளக்கமுமின்றியே வாசகனிடத்துத் தம்மை நிறுவிக்கொள்ளும் ஆற்றல் மிக்கவை. இக்கதையிலும் அவ்வண்ணமே நிகழ்ந்திருக்கிறது. கர்ணமோட்சத்து துரியன்–பொன்னுருவி– கர்ணன் கதையை எந்தப் பின்புல உதவியுமின்றியே அனுபவித்து மகிழ்ந்தேன். பொன்னுருவி என்ற பெயரே உணர்வுகளைக் கிளறுகிறது. கணியாங்குளம் முத்தம்பெருமாளின் பாடல்கள் மட்டுமின்றி, கர்ணன், பொன்னுருவி, துரியன் உரையாடலையும் ஆசிரியர் எழுதியிருந்த விதம் அவர் எழுத்துத் திறனின் தேர்ச்சிக்கான சான்று. அந்நிகழ்வுகளை வாசிக்கையில் ஒரு கணம் அவை உரைநடை என்ற அடையாளத்தை இழந்து ஒரு கிராமத்துக் கிழவியின் சொற்களின் இசை இழைந்து கேட்கும் கதை போல மாறி விடுகிறது.   

நீ தொட்டால் நான் தீட்டாவேன் . உன் கைபட்டால் நான் தீயிற்கே இரையாவேன் . உன்னோடு ஒரு சொல்லும் இனி எனக்கில்லை . என் பெயரைச் சொல்லும் அருகதைக்கூட குலமிலியே உனக்கில்லை .”

மாரனின் மாறாப்புன்னகை நம்மையும், கதைசொல்லியையும் என்னவோ செய்கிறது.  இரு இணைகோடுகளாகப் பயனித்த கர்ணமோட்சத்துக் கதையும், மாரனின் கதையும் பின் மெல்ல மெல்ல இடைவெளி குறைந்து உச்சம் அடைந்து இணைகின்றன.

கதையை நான் மிகவும் வியந்தேன். இதுவே நான் வாசிக்கும் நவீனின் முதல் கதை. தனித்த நடை. அணிகளற்ற, அதே நேரம் நம்பிக்கை மிகுந்த கதை சொல்லல். சிறுகதையின் நுட்பங்களை லாவகமாகக் கையாளும் திறன். உரையாடல் எங்கு அமைக்க வேண்டும் என்ற தெளிவு. முடிவின் திருப்பத்தை திடீரென்று இல்லாமல், மெல்ல, மெல்ல அவிழ்த்து கண்முன் உருள விடும் வல்லமை. எல்லாம் இணைந்து இவரை கவனிக்கத்தகுந்த எழுத்தாளராக்குகிறது. நிறைய எழுதியிருக்கிறார். இவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வல்லினத்தில் இவர் படைப்புகளைத் தேடியபோது, அவர் உங்கள் நூறு சிறுகதைகளைப் பற்றி எழுதிய நீண்ட கட்டுரையையும் வாசித்தேன். உங்கள் நூறுகதைகளுக்குள் நுழையும் வாயிலாக அவை இருக்கும்.

ஜெயமோகனின் நூறு சிறுகதைகள்

எதற்கு இவ்வளவு நீளமான இனிஷியல் என்பதைத் தவிர நவீனிடம் குறைபட்டுக்கொள்ள ஒன்றுமில்லை. 

 

அன்புடன்

ஜெகதீஷ் குமார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.