கதாநாயகி-7
முந்தைய நாளிரவு நான் அஞ்சி அந்தப்புத்தகத்தை எடுத்து டிராயருக்குள் வீசி, காலால் ஓங்கி அதை மிதித்து மூடிவிட்டு, எழுந்து சென்று கதவைத்திறந்து வெளியே கொட்டும் மழையைப் பார்த்தபடி நின்றது நினைவிருக்கிறது. மழைச்சாரல் என் உடலை நனைக்கத்தொடங்கியதும் கதவை மூடி உள்ளே வந்தேன். ஈர உடையுடன் அறைக்குள் நடந்தேன். பின்னர் வேறு உடை மாற்றிக்கொண்டு கட்டிலில் வந்தமர்ந்தேன்.
என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று எனக்கு சரியாக புரியவில்லை. ஒவ்வொரு நாளும் மிகக்கொஞ்சமாக எல்லைகள் தாண்டப்படுவதை உணர்ந்தேன். சமையலறைக்குச் சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்துக்கொண்டேன். குப்புறப்படுத்து கம்பளிப் போர்வையை என்மேல் போட்டுக்கொண்டு தலையணையில் முகத்தை அழுத்தி கண்களை மூடி என்ன நிகழ்ந்ததென்று ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திப்பார்த்தேன்.
இந்த மனச்சிக்கல்கள் மிகச்சிறிய அளவில் அந்தப்புத்தகத்தை நான் கண்ணால் பார்த்தது முதலே தொடங்கியிருக்கின்றன. அதுவரைக்கும் ஒன்றுமில்லை. இல்லை அதற்கு முன்னரே என்னைப் பார்க்க வைப்பதற்காக ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. எங்கிருந்தோ எனக்குள் அந்தப்புத்தகத்தை எடுக்கும் விழைவு ரகசியமாகச் செலுத்தப்பட்டிருக்கிறது.
இல்லை, அதை வேறு பாதையில் யோசிக்கவேண்டும்.இப்படி இருக்கும், அந்த மேஜையைப் போல் ஒரு மேஜையை எங்கோ ஒரு திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். அதில் ஒரு ரகசிய அறை உண்டு என்பது அப்போதும் என் மனதில் பதிந்திருக்கிறது. இந்த மேஜையை பார்த்ததுமே அந்த நினைவு வந்து அதற்குள் இணைந்துவிட்டது. ஆனால் மிக ஆழமான நினைவாகையால் அது ஒரு சின்னக்கனவு வழியாகத்தான் எனக்குள் அது நிகழமுடிந்தது.
உண்மையிலேயே அங்கு ஒரு அறை இருந்து, அதற்குள் ஒரு பழைய புத்தகமும் இருந்தபோது என்னுடைய கற்பனைகள் பெருக ஆரம்பித்தன. ஒவ்வொன்றாக நானே உருவாக்கிக் கொண்டேன். இது என்னுடைய மனப்பிறழ்வன்றி வேறல்ல ஒவ்வொன்றும் ஆரம்பகட்ட மனப்பிறழ்வின் எல்லா இலக்கணங்களுக்குள்ளும் முழுமையாக ஒத்துப்போகிறது. பொருட்களின் மேல் கற்பனைகளை ஏற்றிக்கொள்ளுதல், கற்பனைகளை வளர்த்து பின்னர் அக்கற்பனை வழியாக பொருளை வந்து அடைதல் மனச்சிக்கல் உள்ளவர்களுக்கு எப்போதும் நிகழ்வது. அதுதான் இங்கே நிகழ்ந்திருக்கிறது. இப்போது என்னுடைய ஒவ்வொரு அன்றாட நிகழ்வுகளும் அந்தப்புத்தகத்திலிருந்து வரத்தொடங்கியிருக்கின்றன்.
நான் புரண்டு படுத்தேன். ஒவ்வொரு அன்றாட நிகழ்வும் என்று எப்படி சொல்ல முடியும்? இன்று வாசித்தது முற்றிலும் தற்செயலாக இருக்கலாம். எந்த வகையிலும் இன்றைய நாளுடன் தொடர்பற்றது இந்த இடத்துடன் தொடர்பற்றதும் கூட. இல்லை ஆனால் அந்த வரிகள் மிக உண்மையானவை. அந்த வர்ணனை தெளிவாகவே திருவிதாங்கூர் சமஸ்தானத்தைத்தான் குறிக்கின்றது. திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் ரெசிடெண்ட் ராணுவத்தில் இருந்த காப்டன் ஒருவன் இங்கு வந்து இதே பங்களாவில் தங்கி இதே இடத்தில் புலியைப்பார்த்திருக்கிறான். நான் பார்த்த அதே இடத்தில் அதே கோணத்தில் அதே மழையில்.
அந்தக்கோணம் எப்படி அந்த நூலுக்குள் வரமுடியும்? அது எனக்குள்ளிருந்து மட்டுமே அங்கே செல்கிறது. நான் இன்று முழுப்புலியையும் பார்த்திருந்தால் அந்தப் புத்தகத்திலும் அப்படித்தான் எழுந்தப்பட்டிருக்கும். இப்பொழுது எழுந்து சென்று அதைப் பார்த்தால் ஈவ்லினாவின் அந்தக்குறிப்புகள் இருக்காது. மெக்கன்சி என்ற காப்டனே இருக்க வாய்ப்பில்லை. இல்லை என்றே எண்ணிக்கொண்டு சென்று பார்ப்போம். எழுந்து பார்த்துவிடுவோம்.
ஆனால் நான் எழவில்லை. எழுந்து மீண்டும் அந்தப்புத்தகத்தை பிரித்து பார்த்து என்னை சோதனை செய்துகொள்ள எனக்கு தைரியம் வரவில்லை. ஏதோ ஒன்று தவறாக ஆகும். ஆகாமலும் இருக்கலாம். ஆனால் தவறாக ஆகுமென்றால் அதை நான் எப்படி எதிர்கொள்ள முடியும்? நான் நம்ப ஏதுமிருக்காது. எஞ்சியிருக்கும் இந்த தர்க்கமே என் கடைசிப் பிடிமானம்.
அப்போது தான் ஒன்று தோன்றியது. மனிதன் முற்றிலும் தனியாக எவருடைய எந்த உதவியும் இல்லாமல் கைவிடப்படுவது சித்தப்பிரமைகளின்போது மட்டும்தான் என்று. வேறு எந்த நோய்க்கும் மருத்துவரோ செவிலியரோ உறவினரோ உதவ முடியும். மனச்சிக்கல்களுக்கு வெளியிலிருந்து ஒருவர் எந்த உதவியும் செய்ய முடியாது. வெளியிலிருந்து எவருமே அது நிகழும் இடத்திற்கு வந்து சேரவே முடியாது. தனக்குத்தானே ஒருவர் தன்னைச் சீரமைத்துக் கொள்ளவேண்டும்.
மெய்யும் பொய்யும் எல்லை அழிவது போல அனைத்தையும் சிதறடிப்பது வேறில்லை. அது ஒரு பூகம்ப அதிர்வு. அதில் தன்னைச் மீட்டுச் சீரமைத்துக்கொள்ள உதவும் சீரான ஒரு மூலை ஒருவனிடம் எஞ்சுமென்றால் அதைக்கொண்டு அவன் பிற மீறல்கள், சிதைவுகள், சிக்கல்கள் அனைத்தையும் எதிர்கொள்ளலாம். ஆனால் அது ஆற்றுவெள்ளத்தில் கரைந்துகொண்டிருக்கும் ஒரு சிறிய மணல் திட்டு. கண்கூடாகவே காலடியில் நிலமில்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறது. தர்க்கத்தின் அந்த சின்ன பகுதியும் கரைந்து போய்விட்டதென்றால் அதன்பிறகு மீளவே முடியாது.
உள்ளத்தின் எல்லாப்பகுதிகளும் சிதைவடைந்தால் உள்ளமென்றே ஒன்று இருக்காது. அஞ்சிப்பதறி, ஒன்றையொன்று கொத்தி, வானத்தில் சுழலும் பறவைக்கூட்டம் போலாகிவிடும் மனம். மனம் சிதைந்தவர்கள் ஒவ்வொரு முறையும் நமக்கு அளிக்கும் பயம் அதனால்தான், ஒரு கணத்துக்கு மேல் நாம் அவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சிலகணங்களுக்கு மேல் அவர்களுடன் உரையாடவும் முடிவதில்லை. மிக நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்கள் உயிர் துறந்தால் நாம் துயருறுவதில்லை. அவர்கள் ஏன் உயிர் வாழவேண்டும் என்றே நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
ஏனெனில் மனம் சிதைந்தவர்கள் நம்முடைய உள்ளத்தின் ஒரு பகுதியும் சிதைந்திருப்பதை நமக்கு உணர்த்துகிறார்கள். நாம் அதைக்கொண்டே அவர்களை புரிந்துகொள்கிறோம். அத்தனை உள்ளங்களிலும் ஒரு பகுதி சிதைந்திருக்கிறது. எஞ்சும் பெரும்பகுதி சிதைய வாய்ப்பு கொண்டதாக இருக்கிறது. மெல்லிய கோடு ஒன்றின் மேல்நடந்து செல்வது போல ஒவ்வொரு கணமும் சமநிலையை தேடியபடி சென்று கொண்டிருக்கிறோம். அந்த தரிசனம் திகிலூட்டுவது.
நான் எழுந்து பார்த்தேன். என் தலைக்குள் என்ன நிகழ்கிறது. இப்போது நான் என்ன செய்யவேண்டும். எனக்கு நானே சொல்லிக்கொள்ள வேண்டும், இது தேவையில்லை என்று .இவற்றை நான் ஒன்றாகக் கலந்துகொள்ளக் கூடாது என்று. இரும்பு அச்சு போல என்னுடைய பிரக்ஞையை வகுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்த அச்சில் என்னுடைய உணர்ச்சிகளை. கனவுகளை. உள்ளத்தின் ஆழத்தில் எல்லாம் போட்டு அழுத்தி செறிவாக்கி அதன் நகல்களாக்கிக் கொள்ளவேண்டும் .முற்றிலும் சமநிலை உள்ளவன் பிரக்ஞையும் கனவும் ஆழுள்ளமும் ஒன்றேயானவன்.
அது சாத்தியம் தானா? ஆனால் அவனே அலைக்கழிப்பில்ல்லாதவன் .அவன் முட்டாளாக இருக்கலாம் கொடியவனாக இருக்கலாம். கஞ்சனாகவும் அற்பனாகவும் இருக்கலாம். ஆனாலும் அவன் அலைவற்றவன். அவனுக்கு எத்தனை பெரிய துயரமும் வரலாம். இந்த கொப்பளிப்பும் வெறுமையும் இருக்காது இதைவிடப்பெரிய நரகம் ஒன்றில்லை.
ஆனால் நான் எண்ணியது போல முழுஇரவும் துயிலின்றி புரண்டு கொண்டிருக்கவில்லை. சீக்கிரத்திலேயே தூங்கிவிட்டேன். காலையில் கோரன் எழுப்பியபோது புத்துணர்வுடன் எழுந்தேன். உடல் உழைப்பைப் போலவே உள்ளத்தின் அலுப்பும் நன்றாகத் தூக்கத்தைத் தருகிறதா? என் கண்கள் நன்கு தெளிந்திருந்தன. அதற்கேற்ப காலை துல்லியமான கண்ணாடியில் வரையப்பட்ட ஒளியும் தெளிவும் கொண்டிருந்தது.
கையில் டீக்கோப்பையுடன் வெளியே வந்து நின்றபோது காட்டிலிருந்து வந்த காற்று இதமாக இருந்தது. காடு ஆழ்ந்த பசுமையுடன் ஒளியுடன் இருந்தது. மரகதக்காடு என்று இதை வெள்ளையர்கள் சொல்கிறார்கள். திரும்பத் திரும்ப அந்த உவமையை பயன்படுத்துகிறார்கள். அதைப்போல மழைக்காட்டை சொல்வதற்கு இன்னொரு சரியான உவமை கிடையாது. ஆனால் நாம் சொல்வதில்லை, ஏனென்றால் நம்மில் மரகதத்தைப் பார்த்தவர்கள் குறைவு.
மரகதம் பச்சை நிறமானதல்ல. அரை வெளிச்சத்தில் அது கருப்பு நிறமாகவே இருக்கும். பச்சை என்று நினைத்துக்கொண்டு பார்த்தால் பச்சை போலவும் இருக்கும். வெயிலில் கொண்டுவைத்தால் மெல்ல ஒளிகொண்டு பச்சை நிறமாகும். நல்ல ஒளியில் வைத்தால் இளந்தளிரின் நிறத்தை அடைந்து சுற்றியிருக்கும் அனைத்தையும் பசுமையாக்கும். ஒளி ஊடுருவும்தோறும் தெளிந்து கிளிப்பச்சை நிறத்தை அடையும்.
அந்தக்காலையில் அத்தனை தளிர்களும் பச்சை நிறமான சுடர்கள் போலிருந்தன. காட்டுக்குள்ளிருந்து காட்டு ஆடுகளும் மான்களும் எழுப்பும் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. நான் நடந்து காட்டின் விளிம்பு வரைக்கும் சென்றேன். சரிவில் ஒரு மான்கூட்டம் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். ஒரு மான் திரும்பி என்னைப்பார்த்தது. அத்தனை மான் தலைகளும் திரும்பி என்னைப்பார்த்தன. அத்தனை காதுகளும் என்னை நோக்கி மடிந்தன. கண்கள் என்மேல் நிலைத்திருந்தன. நான் பார்த்துக்கொண்டே நின்றேன். கைகளை சொடக்கு விட்டு ஒலியெழுப்பினேன் அவற்றின் காதுகள் அனைத்தும் அவ்வொலிக்கு திடுக்கிட்டு அசைந்தன. காலால் ஒரு தட்டு தட்டினேன். அம்புகள் போல எழுந்து காற்றில் வளைந்து இறங்கி மறைந்தன.
நான் அன்று பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது உற்சாகமான மனநிலையில் இருந்தேன். காலையில் இருந்தே எனக்குள் நிறைந்த அந்த மகிழ்ச்சி எதனால் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் முந்தைய நாள் இரவில் எந்த தீர்வும் இல்லாத கேள்விகளோடு, ஆழமான நெருக்கடிகளுடன்தான் தூங்கியிருக்கிறேன். காலையில் எழுந்தவுடன் இரவு முறுகி முறுகி உச்சத்தை அடைந்த அந்தச் சுருள்வில்லின் இறுதித் தெறிப்பில் தான் விழித்திருக்கவேண்டும். சோர்வும் கசப்பும் அடைந்திருக்கவேண்டும். அப்படியே எழுந்து ஓடி ஊரைவிட்டே அகன்றிருந்தாலும் கூட இயல்புதான்.
ஆனால் முழுமையாக அதெல்லாம் மறந்துவிட்டது. எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது போல .எண்ணவோ குழம்பவோ ஏதுமில்லாதது போல. அத்தனை உள அழுத்தம் தீவிரமான தூக்கத்தைத் தந்தது. தூக்கம் தலையை தெளிய வைத்துவிட்டது. தலை தெளிந்தவுடன் எல்லா சிக்கல்களும் இல்லாமல் ஆகிவிட்டன. உண்மையில் அவ்வளவுதான். உடல் அல்லாமல் மனிதனுக்கு இருப்பென்று ஒன்றில்லை. பசியை உணவன்றி வேறேதும் தீர்க்க முடியாது என்பது போல இந்த பருவடிவ விடைகளன்றி எதுவும் உண்மையில் தீர்வுகளே அல்ல.
ஏனென்றால் நாம் வாழ்வது பருவடிவ உலகில்தான்.பருவடிவு கொள்ளாத சிக்கல்கள் எதுவும் சிக்கல்களும் அல்ல. புறவுலகத்திலிருந்து வராத எந்த சிக்கலும் உண்மையில் நாமே நமக்கு வரவழைத்துக்கொள்வதுதான். நாமே விரும்பி அவற்றை நிகழ்த்திக்கொள்கிறோம். நமது அன்றாடச் சலிப்பிலிருந்து கடந்து செல்வதற்காக. நமது வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தமுண்டு என்று நாமே நிறுவிக்கொள்வதற்காக. ஆனால் நம்மை கைவிடபோகும் அளவுக்கு அவற்றை நாம் உருவாக்கிக் கொள்வதுண்டு.
நாம் உருவாக்கிய பூதங்கள் நம்மை துரத்தி வந்து கவ்விக்கொள்வதுண்டு பிடித்து வாயிலிட்டு மென்று தின்றுவிடுவதுண்டு. தெருக்களில் அலையும் பைத்தியங்களில் பெருவாரியானவர்கள் தங்கள் ஆடைகளை தாங்களே தீக்கொளுத்திக்கொள்வது போல தங்கள் உள்ளங்களை அழித்துக்கொண்டவர்கள். பைத்தியம் என்பது ஓர் உளவியல் தற்கொலை அதை நான் செய்யக்கூடாது.
இங்கே இந்தக்காடு இத்தனை பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கிறது ஒவ்வொரு உயிர்த்துளியிலும் இங்கே வாழ்வின் விசைதான் இருக்கிறது. செழிப்புறாத ஒரு செடி கூட இங்கில்லை. இன்னொரு தாவரத்தை உந்தி விலக்கி மேலெழும் திமிறல் கொண்டிராத ஒரு தளிர் கூட இங்கில்லை. திகழ்வதும் இருப்பதும் வளர்வதும் ஒன்றேயான இந்த வெளியில் அருவமான ஏதோ சிலவற்றுக்காக நான் என்னைக் கொடுத்துக்கொண்டு சோர்வும் சலிப்பும் அடைவேன் என்றால் அது போல அறிவின்மை வேறில்லை. அதை செய்யக்கூடாது.
சொல்லிச் சொல்லி என்னை நானே உறுதிப்படுத்திக்கொண்டேன். அது என்னை நிலைநிறுத்தியது. மண்ணில், உறுதியான காலடிகளுடன், தெளிந்த புலன்களுடன்
நானும் கோரனும் அந்த இரட்டைப்பாறையை அடைந்தபோது நின்று “அங்கே புலியிருக்கா பாரு” என்றேன்.
அவன் உடலை வளைத்து மூக்கை கூர்ந்து மணம் பிடித்து “இல்லை” என்றான்.
“அது தினமும் அங்கு வந்து படுக்கிறதில்லையா?” என்று கேட்டேன்.
“அதினு நிறைய இடம் உண்டு ஏமானே. ஒரு புலிக்கு ஒரு மலை. ஒரு மலையில் நூறு இடம்!” என்று அவன் நான்கு விரல்களைக்காட்டினான். பிறகு குனிந்தபடியே மெதுவாகச்சென்று அந்த மாடன்கல்லுக்குப் பின்னால் எட்டிப்பார்த்தான். திரும்பிப் பார்த்து “நெலத்தில் முடி இல்ல”என்றான்.
“அதனாலே என்ன?” என்று நான் கேட்டேன்.
“முடி இல்லெங்கில் அது ராத்திரி கிடக்கிணில்லா” என்றான்.
”ஓ” என்று நான் சொன்னேன்.
அவன் அந்த பொந்துக்குள் கைவிட்டு புலி படுத்த இடத்திலிருந்து மண்ணை மேலோட்டமாக அள்ளிக்கொண்டான். ”பள்ளிக்கூடத்தில் அரி குழிச்சிட்ட இடத்தில் இது இடணும்” என்றான்.
“ஆமாம்” என்று நான் சொன்னேன். அங்கு ஏற்கனவே புலியின் சிறுநீர்கலந்த மண் விரிக்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் மலைச்சரிவில் இறங்கினோம். கோரன் என்னிடம் பற்கள் தெரிய சிரித்து, “வல்ய பள்ளிக்கூடம்” என்று சுட்டிக்காட்டினான்.
ஒவ்வொரு முறையும் அந்தப்பள்ளிக்கூடத்தை பார்க்கும்போது அவன் அவ்வாறு சொல்லாமல் இருப்பதில்லை. அவனுக்கு அந்தப் பள்ளிக்கூடத்தின் மேல் அத்தனை பெருமிதம் எழுந்தது நான் அவனைப்பார்த்து புன்னகைத்தேன்.
அவன் மீண்டும் கையை விரித்து “வல்ய பள்ளிக்கூடம்!” என்றான்.
“ஆமா” என்றேன்.
நாங்கள் அங்கு சென்றபோது இருபது குழந்தைகளும் வந்திருப்பதை பார்த்தேன். ஒன்றிரண்டு கூடுமோ என்று கூடத்தோன்றியது. எண்ணிப் பார்த்தேன் நான்கு குழந்தைகள் கூடுதலாக இருந்தன.
கைக்குழந்தைகளை அவர்கள் யாரும் கொண்டுவரவில்லை. அங்கே அதை நான் கவனித்திருக்கிறேன். காணிக்காரர்கள் நடக்க ஆரம்பிப்பது வரை குழ்ந்தையை அன்னையின் கையிலேயே வைத்திருக்கிறார்கள். மூத்த பிள்ளைகளிடம் கொடுத்து அனுப்புவதில்லை. வயதானவர்களிடம்கூட ஒப்படைப்பதில்லை. அது தாயின் உடலின் மேல் ஒரு உண்ணி போல எப்போதும் ஒட்டியிருக்கும். அங்கேயே சாப்பிட்டு அங்கேயே தூங்கும். அதன் கால்கள் கூட அதற்கேற்ப நண்டுக்கால்கள் போல வளைந்திருக்கும். இவர்கள் வளர்ந்தபின் மரங்களுக்குமேலெயே பெரும்பாலான நேரம் இருக்கிறார்கள். அந்த குழந்தைக்காலம் அவர்களுக்குள் அவ்வாறு நீடிக்கிறதுபோல.
அங்கு வந்திருந்த எல்லாக்குழந்தைகளுமே பேசவும் நடக்கவும் கற்றவைதான். நான் போய் நின்றவுடன் “மானிட்டர் எங்கே?” என்றேன்.
உச்சன் வந்து நின்றான். அவன் தயங்கி திரும்பி மற்றவர்களைப் பார்த்தான். உடல் காற்றில் செடிபோல வளைந்தது.
“நான் கூப்பிட்டதும் இப்படி வரக்கூடாது. இப்படி வரணும்” என்று நான் மிடுக்கான நேர்நடை நடந்து காட்டினேன். “வந்து என் முன்னால் இப்படி நிக்கணும். நில்லு பாப்போம்” என்றேன்.
அவன் நான் சொல்வது போலவே வந்து நின்றான். பின்பக்கமாக வில்போல் உடலை வளைத்திருந்தான்.
“யெஸ் ஸார் என்று சொல்லு”என்றேன்.
அவன் திரும்பி மற்ற குழந்தைகளைப் பார்த்தபின் ”யெஸ் ஸார்” என்றான்.
மற்ற குழந்தைகளெல்லாம் அதே போன்று சேர்ந்து ”யெஸ் ஸார்” என்றன.
“எல்லாரும் சொல்லக்கூடாது. யெஸ் ஸார் என்று மானிட்டர் மட்டும் தான் சொல்லணும்” என்றேன். அவனிடம் “நீ மட்டும் தான் சொல்லணும் என்ன?” என்றேன்.
அக்கணமே அவனில் பொறுப்பும் அதிகாரமும் குடியேறுவதைக் கண்டேன். ”நான் மட்டும் யெஸ்ஸு” என்றான். திரும்பி பக்கம் நின்ற குழந்தைகளிடம் “சத்தம் இடருது…நானாக்கும் யெஸ்ஸு”என்றான்.
“சரி போ. திரும்பி வந்து எஸ் சொல்லு” என்றேன்.
அவன் பழைய இடத்திலிருந்து மிடுக்காக நடந்து வந்து என் அருகே வந்து நின்று நிமிர்ந்து “யெஸ் ஸார்” என்றான்.
“சரி, பிள்ளைங்களை பிரிச்சு உக்கார வை .சின்னக்குழந்தைகள் தனியா பெரிய குழந்தைகள் தனியா ”என்றேன்.
மூன்றாகப் பிரிக்க வேண்டிய தேவை இல்லை என்று தெரிந்தது. அங்கு எந்தக் குழந்தைக்குமே எழுத்தும் படிப்பும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவனிடம் அவனுடைய நெஞ்சுக்குழியைக் காட்டி ”இத்துகு கீழே உள்ள குழந்தைங்க அங்க. இதுக்கு மேலுள்ள குழந்தைக்க இங்கே” என்றேன்.
அவன் தன்னுடைய மார்பில் கையை வைத்து அளவைப் பார்த்துக்கொண்டான். ஒவ்வொரு குழந்தை பக்கத்திலும் சென்றுநின்று அதன் உயரத்தை அளந்து சில நேரங்களில் அதை இரண்டு அணியாகப் பிரித்துவிட்டான்.
“ஒரு கூட்டம் அங்கே இருக்கணும் இன்னொரு கூட்டம் இங்கே இருக்கணும்” என்றேன்.
இரண்டு வகுப்புகள் உடனே உருவாகிவிட்டன. கரும்பலகை வேண்டும். நாற்காலி வேண்டும். ஒரு பள்ளியாக இதை மாற்றுவதற்கு இன்னும் என்னென்னவோ பொருட்கள் வேண்டும் .ஆனால் எளிதில் உருவாக்கிவிடலாம். கரும்பலகைக்கு பதிலாக நாகர்கோயில் செல்லும்போது சுருட்டக்கூடிய தாள்பலகையைக் கொண்டு வருவது நல்லது. கரும்பலகையை இங்கே வைத்தால் அது பழுதடைந்துவிடும். ஆனால் இங்குள்ள மழையில் தாள் நீண்டநாள் இருக்காது. நல்லது எது என்று கேட்டுப்பார்க்கவேண்டும்.
நான் “சின்னக் குழந்தைங்க எல்லாம் அமைதியாக இருக்கணும்” என்றேன். வாயில் கைவைத்து “உஸ்’ என்றேன். சில குழந்தைகள் அவர்களும் வாயில் கைவைத்து “உஸ்ஸ்” என்றன. ஆனால் அமைதியடைந்தன. கண்கள் மட்டும் வெள்ளைக்கல் போல மின்னி மின்னி தெரிந்தன.
அவர்களுக்கு அந்த விளையாட்டு பிடித்திருந்தது. இந்தப்பிள்ளைகளிடம் நாம் சொல்வதை மீறிச் செல்லும் வழக்கமே இல்லை. அதட்டி சொல்லும்போது அவர்கள் அஞ்சுகிறார்கள். நட்பாக சொல்லும்போது எதையுமே உடனடியாக செய்கிறர்கள் என்பதை கண்டு கொண்டேன். ஏனென்றால் அவர்களுடைய பெற்றவர்களோ பெரியவர்களோ அவர்களை அதட்டுவதில்லை. குழந்தைகளை அதட்டும் வழக்கமே அங்கே இல்லை.
அவர்கள் குழந்தைகளிடம் செயற்கையான குரலில் பேசுவதில்லை. பெரியவர்களிடம் பேசும் அதே குரல்தான். கொஞ்சலும் இல்லை, அதட்டலுமில்லை. அவர்கள் அக்குழந்தைகள் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் தான் சொல்கிறார்கள். அவற்றை மீறவேண்டும் என்ற எண்ணமே குழந்தைகளுக்கு வருவதில்லை. தாங்கள் அவற்றை செய்வதற்காகவே இருப்பதாகத்தான் எண்ணிக்கொள்கிறார்கள். ஒருபோதும் குரலை உயர்த்தி அவர்களை அதட்டவோ தண்டிக்க முற்படவோ கூடாதென்று தெரிந்துகொண்டேன்.
பெரிய குழந்தைகளுக்கு தமிழில் அ ஆ இ ஈ உ ஊ ஆகிய ஆறுஎழுத்துக்களையும் ஈரத் தரையில் ஒரு குச்சியால் எழுதி அவர்கள் அந்த எழுத்துக்களின் முன்னால் அமரச்சொன்னேன். உச்சனிடம் குச்சியை கொடுத்து ஒவ்வொரு எழுத்தை சுட்டி அந்த ஒலியை உரக்க கூவவேண்டும் என்று சொன்னேன்.
அ ஆ இ ஈ என்று அவன் சுட்டிக்காட்ட அவர்கள் அதை கூவத்தொடங்கினார்கள். ஒருசிலர் கூர்ந்து பார்க்கும்பொருட்டு எழுந்து அருகே வர உச்சன் அவர்களை அப்பால் போகும்படிச் சொன்னான். அவர்கள் அவனுக்குக் கட்டுப்பட்டனர்
அதன் பிறகு நான் சிறு குழந்தைகளிடம் சென்றேன். அவர்கள் மீண்டும் ஆவலுடன் என்னைப் பார்த்தார்கள் நான் வந்து நின்றதும் அவர்களும் ஆ என்று கூச்சலிட ஆரம்பித்தார்கள். ஓரிரு குழந்தைகள் எழுந்து நின்று கூச்சலிட்டன.
“இல்ல்லல…உங்களுக்கு ஆ கிடையாது” என்றேன்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஒரு பெண் “ஆ இல்ல” என்று கைவிரித்தாள். அவர்களுக்கு ஆ என்றால் சாப்பாடு என்று அர்த்தம் என்று எனக்குத் தெரிந்தது.
“சோறு உண்டு… தரையில் ஆ இல்லை” என்றேன்.
“சோறு உண்டு” என்று அந்தப் பெண்குழந்தை சொன்னாள். “ஆ இல்லை…’
“ஆ இல்லை” என்று எல்லா குழந்தைகளும் சேர்ந்து சொல்லின. அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்ததன் மகிழ்ச்சி அது. அவர்கள் ஒன்றை புரிந்துகொண்டால் அதைத் திருப்பிச் சொல்வார்கள்.
“உங்களுக்கு கதை தான் சொல்லப்போறேன்” என்று சொன்னேன். இம்முறை நானே ஒரு கதையைப் புனைந்து சொன்னேன். ஒரு யானைக்குட்டி எப்படி குழியில் விழுந்தது. அதனால் ஏறிவரமுடியவில்லை. அதை ஊர்க்காரர்கள் எப்படி வெளியே எடுத்தார்கள் என்று சொன்னேன்.
நாலு பக்கம் இருந்தும் மண்ணை கொட்டி குழியை நிரப்பி அவர்கள் யானையை வெளியே எடுத்த கதையை சொல்லி முடித்ததுமே எல்லாக் குழந்தைகளும் உற்சாகத்துடன் கூச்சலிட்டபடி எழுந்து விட்டனர். ஒவ்வொருவரும் அவர்கள் யானைக்குட்டியை பார்த்த கதையை சொல்ல ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவரையாக நிறுத்தி ‘நீ சொல்லு ..நீ சொல்லு” என்று எல்லாரையுமே பேசவிட்டேன். பேசும்போது அவர்கள் உடலையே வளைத்து ஊசலாட்டி நெளித்தனர். கைகள் அலைபாய்ந்தன. கண்கள் உருண்டன. அந்த ஆர்வம் என்னை புன்னகைக்கச் செய்தது.
அவர்களிடம் இருந்த கற்பனைத்திறன் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. அவர்கள் பொய்யை உருவாக்கவில்லை. யானைக்கு மனித குணத்தை கொடுக்கவில்லை. எந்த நீதியையும் அந்தக் கதைக்குள் கொண்டுவரவில்லை. ஆனால் யானையின் உடல்மொழியையும் அறிவையும் செயல்பாடுகளையும் மிகக்கூர்ந்து கவனித்திருந்தார்கள். யானையின் துதிக்கையை பாம்பு என்று ஒருவன் சொன்னான். யானைக்குட்டியை பெரிய பனங்கொட்டை என்று ஒருவன் சொன்னான். இன்னொருவன் அதை வண்டு என்று சொன்னான்.
சற்று நேரத்திலேயே அவர்கள் உருவாக்கிய அந்த உலகிற்குள் நான் சென்றுவிட்டேன். அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதை பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த மேதமையை பள்ளிக்கூடம் அழித்துவிடுவா என்று சந்தேகப்பட்டேன். அன்று நான் கற்ற பாடத்தை என்றுமே மறந்ததில்லை.
அவர்கள் பேசிமுடிந்தபின் என்னைச் சுற்றி கூடிக்கொண்டார்கள். ஒவ்வொருவரும் என்னை தொட விரும்பினார்கள். நான் அவர்கள் ஒவ்வொருவரையும் தழுவி முத்தம் கொடுத்தேன். காணிக்காரர்கள் குழந்தைகளை குரங்குகள் போல கொஞ்சிக்கொண்டே இருப்பவர்கள் என்பதை பார்த்திருக்கிறேன். அவர்களை தொட்டு வருடியபோது அவர்களின் உடல்கள் நாய்க்குட்டிகள் போல அதை ஏற்றுக்கொண்டன.
அதன் பிறகு “நீங்க எல்லாரும் போய் விளையாடுங்க’ என்று சொல்லி அனுப்பிவிட்டு மீண்டும் பெரிய குழந்தைகள் வகுப்புக்கு வந்தேன். ஒவ்வொருவராக எழுந்து வந்து அந்த எழுத்துக்களை சுட்டி அது என்ன ஒலி என்று சொல்லவேண்டும் என்று சொன்னேன். அதன்பின் நானே குச்சியால் அந்த எழுத்துக்களை மாற்றி மாற்றி சுட்டிக்காட்டினேன். ஓரு சிலர் தவறுகள் செய்தாலும் கூட அத்தனை பேருமே நான்கு எழுத்துக்களையும் அடையாளம் கண்டுகொண்டார்கள்.
“இன்னைக்கு இது போதும்” என்றேன். எனக்கே நிறைவாக இருந்தது.
கோரன் அவனே அரிசி மூட்டையை எடுத்து சோறு பொங்கியிருந்தான். நாங்கள் வெளியே வந்தபோது என்னிடம் “முயல் கிட்டி! நாலு முயல்!”என்றான்.
“எங்கேருந்து?” என்றேன்.
அப்பால் நின்றிருந்த ஒருவன் எழுந்து வந்து “குட்டிகளுக்கு முயல்… குட்டிகளுக்கு முயல் துப்பன் தந்நு” என்றான்.
“இவன் யார்?” என்று அவனிடம் கேட்டேன்.
“துப்பன்!” என்று அவன் சொன்னான்.
குழந்தைகள் சாப்பிடுவதற்காக அவன் முந்தைய நாள் பொறிவைத்துப் பிடித்த நான்கு முயல்களை கொண்டுவந்திருந்தான். கோரன் அதன் இறைச்சியை துண்டு போட்டு கஞ்சியுடன் சேர்த்து சமைத்திருந்தான். உண்மையாகவே கறிக்கஞ்சியின் மணம் பசியை எழுப்புவதாக இருந்தது.
நான் அனைவரும் வட்டமாக அமர்ந்து இங்கேயே சாப்பிடவேண்டும் என்று சொன்னேன். வீட்டுக்கு கொண்டு போகக்கூடாது.
“ஏன்?” என்று உச்சன் கேட்டான்.
“இது ஸ்கூல் கஞ்சி, ஸ்கூலில் தான் குடிக்கணும்” என்றேன்.
“ஸ்கூல் கஞ்சி” என்று அவன் சொன்னான்.
குழந்தைகள் அனைவரும் வட்டமாக அமர கோரனும் நானும் துப்பனும் அமர்ந்துகொண்டோம். கஞ்சி குடிப்பதற்கு முன் ஒரு சிறு பிரார்த்தனையை செய்தேன். “வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று!. விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பது அரிது. நீர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு”.
அவர்கள் என்னை திகைப்புடன் பார்த்து அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு மந்திரவாதிதான் தெய்வ வடிவம். மந்திரமே தெய்வம். அவர்கள் என்னை வணங்க வேண்டுமென்றால் மந்திரம் தேவை என அங்கு வந்த அன்றே கோரனிடம் பேசி கண்டுபிடித்திருந்தேன்.
அதன் பிறகு கஞ்சியை சாப்பிட ஆரம்பித்தோம் தொன்னைகளை வீசிவிட்டு அனைவரும் ஓடையில் இறங்கி கைகழுவினார்கள். உச்சன் என்னிடம் “சாரு நாளைக்கு வருமோ?” என்றான்.
“நான் தினமும் வருவேன்” என்று நான் சொன்னேன்.
“எந்நுமா?” என்று அவன் கேட்டான்.
“ஆமாம்” என்று நான் சொன்னேன்.
அத்தனை குழந்தைகளும் உற்சாகத்துடன் குரலெழுப்பி என்னை சூழ்ந்துகொண்டன. ஒருவன் “நான் நாளைக்கு வரும்! நாளைக்கு வரும்!” என்றான்.
அவர்கள் “நாளைக்கு வரும் நாளைக்கு வரும்” என்று கூச்சலிட்டனர்
“எல்லாரும் நாளைக்கு வரணும்” என்றேன்.
துப்பன் என்னிடம் “நான் நாளைக்கு வரும்” என்றான்.
நான் ”முயல் கொண்டு வா” என்று சொன்னேன்.
“நாலு முயல்” என்று அவன் விரல்களைக் காட்டினான்.
“சரி நாலு முயல்” என்று நான் சொன்னேன்.
“நான் அ ஆ படிக்கும்” என்று அவன் ஆவலுடன் சொன்னான்.
“சரி நீ மட்டும் நாளைக்கு வந்து படிச்சுக்கோ” என்றேன்
கோரன் சீற்றத்துடன் “போடா! மூத்தோர் ஆ ஆ படிக்க பாடில்ல” என்றான். அவனுக்கு அதில் ஏதோ ஒவ்வாமை தோன்றியது.
நான் அவனிடம் “அது வேற ஆஆ. மூத்த ஆ ஆ” என்றேன்.
கோரன் குழப்பத்துடன் தலை அசைத்தான்.
“அதை தனியாக சொல்லிக்கொடுக்கலாம். அவன் முயல் கொண்டு வாறானே?” என்று நான் கோரனை மேலும் சமாதானப்படுத்தினேன்.
நாங்கள் கிளம்பியபோது இருபது குழந்தைகள் எனக்குப் பின்னால் வந்தார்கள். “யாரும் ஒப்பம் வரக்கூடாது. எல்லாரும் இங்க இருங்க” என்றேன்.
“நாளையும் வரும்! நாளையும் வரும்!” என்று எல்லாக் குழந்தைகளும் கூச்சலிட்டன
நான் அவர்களைப் பார்த்து “நாளை வருகிறேன்” என்று சொல்லிவிட்டு திரும்பி மெல்ல நடக்கும்போது அத்தனை மகிழ்வாக அத்தனை நிறைவாக உணர்ந்தேன்.
மீண்டும் பங்களாவை நோக்கி நடக்கும்போது நான் எண்ணிக்கொண்டேன், ஒன்றையே திரும்ப திரும்ப செய்துகொண்டிருக்கிறோம் என்று. எத்தனை முறை இப்படி இந்த பங்களாவிலிருந்து பள்ளிக்கும் ஊருக்கும் கிளம்பிச்சென்றேன், எத்தனை முறை திரும்பி வந்தேன். இருபக்கங்களிலிருந்தும் பங்களாவை நோக்கி வந்திருக்கிறேன். ஆனால் ஒரே போல அது நிகழ்வதாக தோன்றியது.
அப்போது ஒன்று தோன்றியது. எப்போதுமே இனிமையானவை இப்படி திரும்பத் திரும்ப நிகழ்பவைதான். புதிய நிகழ்வுகளில் ஒரு களியாட்டம் இருக்கிறது, திகைப்பு இருக்கிறது, நிலைகுலைவு இருக்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் நாம் செய்பவற்றில்தான் மென்மையான, நீடிக்ககூடிய, உறுதியான இன்பம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் முதல் டீ, துவைத்து மடித்த சட்டையை எடுத்து போட்டுக்கொள்ளுதல், நன்றாக விரிப்பு பரப்பிய படுக்கை மேல் களைப்புடன் படுத்துக்கொள்ளுதல், குளித்தபின் ஈரத்துடன் தலை சீவ வருதல்… இன்பமான அனைத்துமே நான் திரும்ப த்திரும்ப செய்து கொண்டிருப்பவைதான்.
இன்று இந்த பங்களாவை அணுகும்போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணர்விலிருக்கிறேன். ஆனால் மெல்ல மெல்ல இது பழகும். நான் இங்கிருக்கும் காலம் முழுக்க இப்படி வந்துகொண்டே தான் இருப்பேன். என் மனதில் இந்த வருகையின் சித்திரம் இனி என்றுமே அழியாது.
தொலைவிலிருந்து பங்களாவை அணுகியபோது அதன் முற்றத்தில் யாரோ நிற்பதைப் பார்த்தேன். யாரென்று திடுக்கிட்டபின் கூர்ந்து பார்த்தபோது ஒரு சிறிய அசைவு போலத் தெரிந்தது .யாரோ முற்றம் வழியாக வீட்டுக்குள் நுழைந்தது போல.
காட்சி மயங்குவதற்கான எந்தக் காரணமும் இல்லை. பளிச்செனும் வெயில் இருந்தது. பார்வையை எதுவும் மறைக்கவில்லை. ஆனாலும் அந்த உருவத்தை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அது விரைந்து உள்ளே செல்வது கரைந்து கரைந்து புகை செல்வது போலத்தான் இருந்தது.
நான் கோரனைப்பார்த்தேன். கோரன் என்னிடம் ”அவிடே” என்றான். திருத்திக்கொண்டு “அங்கே’ என்றான்.
“என்ன” என்று நான் அவனிடம் கேட்டேன்.
“அங்கே ஆரோ நிக்குணு எந்நு தோந்நி” என்றான்.
“யார் நிக்கிறா?” என்றேன்.
“அதாணு கோரன் நோக்கியது…” என்றபின் அவன் சுட்டிக்காட்டினான் “கதவு சிரிக்குந்ந வெளிச்சம்”
”ஓ” என்று நான் நினைத்துக்கொண்டேன். கதவு காற்றில் திறந்து கிடந்தது. அதன் வழியாக செங்குத்தான ஒளி முற்றத்தில் விழுந்திருந்தது. அதைத்தான் நான் அசைவாக பார்த்திருக்கிறேன்.
கதவு சிரிப்பது. கோரன் மட்டுமல்ல அவர்கள் அனைவருமே எளிதாக ஒரு சொல்லாட்சியை கண்டடைந்துவிடுகிறார்கள். அந்த வரி என்னை மீண்டும் இயல்பான புன்னகைக்குக் கொண்டுசென்றது.
வீட்டை நெருங்கியபோது தெரிந்தது, காலையில் அரிக்கேன் விளக்கை அணைக்காமல் சென்றுவிட்டிருந்தோம். அந்த வெளிச்சம்தான் கதவு வழியாக வெளியே விழுந்திருந்தது.
நான் வீட்டுக்குள் நுழைந்தபின் எதற்கும் இருக்கட்டும் என்று அந்த அறையை நன்கு பார்த்தேன் .பொருள் வைக்கும் அறையையும் சமையலறையையும் இயல்பாகச்சென்று பார்த்துவிட்டு வந்தேன். யாருமில்லை.
கோரன் டீ வைக்க தொடங்கிவிட்டான். நான் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன். டிராயரை திறந்து அந்தப்புத்தகத்தை வெளியே எடுத்தேன். உடனே அந்த எண்ணம் வந்தது. அன்று முழுக்க எனக்கு வந்த உல்லாசம் ஏன் என்று. நான் நேற்று அவ்வளவு அஞ்சி விட்டிருந்தேன். அந்த அச்சம் நீடித்திருந்தால் அந்த புத்தகத்தை கையிலேயே எடுத்திருக்க மாட்டேன் .அதை நான் எடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த மகிழ்ச்சி. இப்போது இதோ எந்த தயக்கமும் இல்லாமல் அதை எடுக்கிறேன். மீண்டும் வாசிப்பு. இந்தப்புத்தகம் இதிலிருந்து எவரையும் தப்ப விடாது. இது என்னை தேர்ந்தெடுத்திருக
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

