இலையின் கதை- கடிதம்

ராய் மாக்ஸம் ராய் மாக்ஸாம்- மூன்று நூல்கள் வழியெங்கும் கல்லறைகள்… ராய் மாக்ஸம்

கிழக்கு வெளியீடாக சிறில் அலெக்ஸ் மொழிபெயர்ப்பில், ராய் மாக்ஸம் எழுதிய தே: ஒரு இலையின் வரலாறு முக்கியமான நூல். 1650 இல் டச்சு வணிகர்கள் வழியே சீனாவின் தே பிரிட்டனுக்கு அறிமுகமாகி, 1750 இல் பிரிட்டனுக்கு தே பைத்தியம் முற்றியது தொடர்ந்து உலக அரங்கில், தே வணிகம் வழியே நிகழ்ந்த மாற்றங்களை விவரிக்கும் நூல்.

பிரிட்டன், சீனா,ஜப்பான், இந்தியா, இலங்கை,ஆப்ரிக்கா என சுற்றி சுழலும் நூல். பிரிட்டன் அரச குடும்பத்துக்கு பரிசாக உள்ளே வந்த தே, 1750 துவங்கி லண்டனில் காபி க்ளப்புகள் வழியே பரவுகிறது. காபி க்ளப்புகளிலும் பல படித்தரங்கள். உயர் பண்பாட்டு மனிதர்கள் அருந்தும் தே வை சாதாரண தொழிலாளியும் அருந்தும் நிலை பெரிய சங்கடங்களை ஆண்டைகளுக்கு உருவாக்கி இருக்கிறது. ஆண்கள் தே குடித்தால் ஆண்மை போய்விடும், வீரம் போயிடும்  ,  கலவி செய்யவோ போர் புரியவோ முடியாது என்ற வகையிலான ஆய்வுகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இதன் மத்தியில்தான், பிரிட்டனில்  1750 இல் 15,000 டன் ஆக தே இறக்குமதி வெறும் 25 ஆண்டில் 50,000 டன் என உயர்ந்திருக்கிறது.

துவக்க அத்தியாயம் முழுக்க பிரம்மாண்ட கடல் கொள்ளையர் வலையும், அவர்கள் வசமிருந்து அதன் முதல் இலக்கான தே அது எவ்வாறு காப்பாற்ற படுகிறது, கொள்ளையருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என விரிகிறது. கொள்ளைக்கு துணை நின்றவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனை. கொள்ளையருக்கு அதிக பட்ச தண்டனை. குறைந்த பட்ச தண்டனையாவது தூக்கு. தூக்கில் போட்டு உயிர் போனதும் உடனடியாக உடலை உறவுகள் வசம் ஒப்படைத்து விடுவார்கள். அதிக பட்ச தண்டனை தூக்கில் போட்டு அந்த உடலை ஊர் மத்தியில் அப்படியே பல நாள் தொங்க போட்டு விடுவார்கள்.

எல்லாமே சீன பண்டைய அரசர்களின் குசும்பிலிருந்து துவங்குகிறது. சீனாவில் ஒரு அரசர். அவர் வருடம் ஒரு முறை முக்கிய தே திருவிழா கொண்டாடுகிறார். அந்த விழாவுக்கு அவர்க்கு தயாராகும் தே, அதன் இலைகள் உண்மையாகவே ஏழு கடல் தாண்டி,ஏழாவது மலையில் விளையும் தே செடியில் இருந்து வருகிறது. அதுவும் குறிப்பிட்ட ஒன்பது மரத்தில், வருடம் ஒரே ஒரு முறை பறிக்கப்படும் 90 இலைகள் மட்டும். அந்த இலையும் தளிர் இலைகள். அதை பட்டுக் கையுரை போட்டு, தங்க கத்திரி கொண்டு வெட்டி எடுக்கிறார்கள். பிறகு அது தே ஆக மாறி பரிமாறப்படும் ராஜ உபசாரம் அது தனி. இதையெல்லாம் மேன்மை தங்கிய பிரிட்டானிய அரியணை விட்டு வைக்குமா என்ன? மொத்தமாக ஒப்பியம் வழியே மொத்த சீனாவையும் அடிமை செய்து ஈடாக தே இலைகளை கரக்கிறது பிரிட்டன். ஒப்பியம் போர்கள், போஸ்டன் தே விருந்து, என நூலின் மத்திய பாகம் முழுக்க தே வணிகத்துடன் இணைந்த போர்க்கள காட்சிகள்தான்.

இந்தியாவுக்குள் தே வரும் தருணம் இந்த நூலின் முக்கிய பகுதி. இண்டிகோ உற்பத்தியை நிறுத்தி சீன தே பயிரிட முயற்சி நடக்கும் சூழலில், அசாமில் காட்டுக்குள் ஒரு ஆங்கிலேயே தாவரவியலாளர் அசாம் மண்ணுக்கு சொந்தமான தே மரத்தை கண்டு பிடிக்கிறார். அங்கே துவங்குகிறது அசாமில் மாற்றம். பர்மியர்கள் படையெடுத்து மொத்த அசாமும் அழிந்து மீண்டும் அது காடாக நிற்கும் சித்திரத்தை நூல் அளிக்கிறது. அசாமியர் ஜனத்தொகையில் சரி பாதியை பர்மியர்கள் படையெடுத்து குறைத்திருக்கிறார்கள். மீண்டும் வனமாக மாறிக்கொண்டிருக்கும் அசாம் மெல்ல மெல்ல தே தோட்டங்களாக மாறும் சித்திரம் வருகிறது. காட்டுக்குள் போனால் புலி அடிக்கும். ஆகவே கண்ணில் படும் புலி எல்லாம் ஆயிரக் கணக்கில்  கொல்லப் படுகின்றன. காட்டுக்குள் பயணிக்க அங்குள்ள யானைகள் மொத்தமும் இலவச உழைப்பாளிகளாக மாற்றப் படுகிறது. மொத்த அசாமின் தே தோட்டங்களும் வெறும் 20 வருடங்களில் அங்குள்ள யானைகளால் மட்டுமே உருவாக்கி வளர்த்து எடுக்கப்படுகிறது.

இப்படி இலங்கை, ஆப்ரிக்கா என உலகெங்கும் காலனி தேசங்களில் பிரிட்டன் கொத்தடிமைகளாக கொண்டு வந்த லட்சங்களை தொடும்  பஞ்சம் பிழைக்க வந்த இந்தியர்களின் எண்ணிகை அவர்களின் உயிர் குடித்து வளர்ந்த தோட்டங்கள்,   கிழக்கிந்திய கம்பெனி, ப்ரூக்பொண்ட்,லிப்டன் நிறுவனங்களின் வணிக வெறி, என இரண்டாம் உலகப்போரின் இறுதி வரை தே வணிகம் வழியே பிரிட்டன் நிகழ்த்தியவற்றை விவரிக்கும் நூல். முழுக்க முழுக்க இரும்புத் தனமான அல்லது பிரிட்டிஷ் தனமான இந்த வரலாற்று நூலில், ஒரு சிறிய தீற்றலில் வாசனை கற்பனை சாத்தியங்களுக்குள் தள்ளி விடும் சித்தரிப்புகளும் உண்டு. உதாரணமாக ராய் மலாவி தே தோட்டத்தில் மேலாளராக வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடம் முடிய, அவர் சில மாதம் ஓய்வில் பிரிட்டன் செல்ல விடுமுறை கிடைக்கிறது. அது அவரது 22 ஆவது பிறந்த நாள். நண்பர்களுடன் அங்கே பெண் நடத்தும் விடுதியில் மது கொண்டாட்டம். நன்கு அலங்கரிக்கப்பட்ட மது விடுதி. நன்கு அலங்கரிக்கப்பட்ட காசாளர் மேஜை. அலங்காரங்கள் மத்தியில், ஒரு கண்ணாடி கூஜா நிறைய சாம்பல். அது வேறொன்றும் இல்லை, அந்த விடுதியை நடத்தும் பெண்ணின் கணவரின் அஸ்தி தான் அது :).

கடலூர் சீனு

தே  ஓ ர் இலையின் வரலாறு வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.