கதைகளின் மீட்டல்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் முதல் ஆறு சிறுகதைப் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்தவொரு மகத்தான எழுத்தாளனின் படைப்புகளும் ஒட்டுமொத்த மானுடம் நோக்கி எழும் அதே தருணத்தில் அதன் ஒரு பகுதி அவன் சார்ந்த பண்பாட்டிலிருந்து ஒரு பொழுதும் பிரிக்கமுடியாததாகவும் இருக்கும் என்று நீங்கள் கூறுவதுண்டு. இந்தக் கதையில் நான் ரசித்தது இதில் இருக்கும் குமரிமாவட்ட வாழ்வின் ஒரு துளிதான்.
நான் ஆண்டுக்கணக்காக எங்கள் ஊரிலிருந்து நாகர்கோயிலுக்கு ஒரே வழியில் பேருந்தில் பயணம் செய்தவன்.நாகர்கோயிலிலிருந்து இராஜாக்கமங்கலம் வழியாகக் குளச்சல் செல்லும் தெற்கு வழிச் சாலையில் முன்பு கீழக்கோணம் அருகே வயல்வெளிகள் இருந்தன. பேருந்தில் எத்தனைக் கூட்டமிருந்தாலும் அந்தப் பகுதியைக் கடக்கும் பொழுது மக்கள் அனைவரும் இறுக்கம் கலைந்து வெளியே பரபரக்கும் கண்களோடு பார்த்து ரசிப்பார்கள். மேற்கிலிருந்து வரும் பொழுது கோணத்திற்கு முன்பும் நிலம் பச்சையாகவே இருக்கும். ஆனால் ஏன் கோணத்திற்கு வந்ததும் ஒரு இறுக்கம் கலைகிறது. பச்சையிலும் ஒரு சிறு மாற்றம் அவ்வளவுதான்.
அதன் முன்பு இருப்பது கட்டிப்பச்சை. கோணத்தில் இருந்தது இளம்பச்சை. அது மட்டுமே வேறுபாடு.அப்பாவை நான் முப்பது ஆண்டுகளாக கவனித்துவருகிறேன். ஒரே நிலத்தில் பெரும்பாலும் ஒரே வழியில் பயணம் என்ற வாழ்வு. ஆனால் எப்பொழுதும் பரபரக்கும்கண்களோடு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பார். இப்பொழுது கோணத்தின் வயல்வெளிகள் அழிக்கப்பட்டுவிட்டதால் இந்த சிறு நிறவேறுபாடு காரணமாகஉருவாகும் அனுபவம் இந்தச் சாலையில் இல்லை. ஆனால் அவ்வப்பொழுது சிறு வேலைகளுக்காக சாலை மூடப்படும் பொழுது முற்றிலும் புதிய நிலம் வழியாக பேருந்துபயணிக்கிறது.
குமரிமாவட்டச் சாலைகளின் ஒடுங்கியத் தன்மைக் காரணமாகச் சாலையை முறித்து ஒரு சிறு வேலைப்பார்க்க வேண்டுமென்றாலும் போக்குவரத்து மிகவும் சுற்றிக்கொண்டு செல்லுமாறு ஆகிவிடுகிறது. அப்படி சுற்றிச்செல்லும் சாலைகள் இன்னும் ஒடுங்கியவைகளாக இருப்பதால் போகும்பொழுது ஒரு வழியும் வரும் பொழுது ஒரு வழியும் பயன்படுத்தப்படும். கோணத்தில் பாலம் வேலை நடந்தால் குளச்சல் செல்லும் பேருந்து ஈத்தாமொழி வழியாகச் செல்கிறது. அதே பேருந்து நாகர்கோயில் செல்லும் பொழுது ஆசாரிப்பள்ளம் வழியாகச் செல்லும். இரண்டும் வேறு வேறு நிலப்பரப்பு. ஒன்று கடற்கரை. இன்னொன்று மலைங்கரை.
இத்தகைய மாற்று வழிப் பயணத்தில் ஓட்டுநர் முதல் நடத்துனர் வரை உற்சாகமடைகிறார்கள். அன்றாட சலிப்பிலிருந்து ஒரு விலக்கம். அவ்வளவுதான். நாம் ஆண்டுக்கணக்காக அவர்களை அறிவோம் ஆனால் பேசிக்கொள்வதில்லை. ஆனால் இந்தப் புதிய வழித்தடத்தில் தானாக ஒரு உரையாடல். பெரும்பாலும் “நல்லா சுத்து” என்றோ அல்லது “ரோடே இல்லியே” என்றோ.
இந்த நிலம் வேறு எங்கோ இருந்ததா, இல்லை மிக மிக அருகில். ஒரு வேளை நாம் ஆண்டுக்கணக்காக பேருந்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு வீட்டின் பின்பகுதியில் இருக்கும். தேரைகால்புதூரிலிருக்கும் மிகப்பெரிய குளத்தை சாலையிலிருந்து பார்ப்பதை மூன்று தென்னையோலைப் புரை வீடுகள் மறைத்துக் கொண்டிருக்கும். அந்த வீடுகளின் பின் வாசலில் நீர் தளும்பிக்கொண்டிருக்கும். நான் இந்தப் பகுதியைக் கடக்கும்பொழுதெல்லாம் இந்த வீடுகளில் வாழ்வதாகக் கற்பனை செய்துகொள்வேன்.அந்த இயற்கை தானாக ஒரு தருணத்தில் நம் கண்முன்னே வருகிறது. நம் உள்ளம் உவகை கொள்கிறது. பின் பழைய நிலைதான்.
அவன் மீண்டும் சென்று அவளிடம் பேசியிருப்பானா. இல்லை, அந்தக் கலவரம் அடங்கிய பின் பேருந்து பழைய வழியிலேயே செல்லும். அந்த புதிய பச்சையின் அனுபவம் ஒரு ஓரத்தில் எஞ்சும்.கதையில் நான் மேலும் ரசித்தது அந்த பவுடர் வைத்து மடிக்கப்பட்ட கர்சீப். நாம் நம் அகத்தை நம்மை ஏதோ ஒரு புறப்பொருளின் வழியாக புறத்தே எடுத்து வைக்கிறோம்.
இப்பொழுது இது வாட்ஸப் ஸ்டேடஸாக மாறியிருக்கிறது. முன்பு அந்தப் புறப்பொருள் நம் அகத்தை காட்டிக்கொடுத்துவிடும் என்ற பிரக்ஞை இல்லை. இப்பொழுது இருக்கிறது.புறப்பொருள் என்பது நீர், அகம் ஈரம்.
நன்றி,
ஜெயன் கோ
அன்புள்ள ஜெ,
கடலூர் சீனு ’போழ்வு’ கடிதத்தை எங்கு முடித்திருந்தாரோ அங்குதான் ’போழ்வு’ பற்றி அனுப்பாத எனது கடிதத்தை தொடங்கியிருந்தேன். மிக சம்பிரதாயமான ஒரு கடிதமாக இருக்குமோ என தோன்றியதால் அப்போதே அனுப்பவில்லை. சீனுவே சொன்னபிறகு ஐயமில்லை. அனுப்பிவிடவேண்டியதுதான்.:-)
***
’போழ்வு’ மனச்சோர்வை அளித்த கதை. உண்மையில் கலோனியல் காலகட்டம் என்பதே மனிதர்களின் இருண்ட கனவுகள் வெளிப்பட்ட காலம்தானா? நாடு முழுவதும் எத்தனை சூழ்ச்சிகள்! முதுகுகுத்தல்கள்! தன் தலையில் தானே தீயை வைத்துக்கொள்வதில்தான் மனிதர்களுக்கு எத்தனை நாட்டம்! சரித்திர புருஷர்களாக இருந்தாலும் கூட!
தளவாய் வேலுத்தம்பி – கர்னல் மெக்காலே மற்றும் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை-டாக்டர் பெய்ன்ஸ் இணைகள். முன்னது அரக்க முகங்கள் என்று கதை சொல்கிறது. அப்போது பின்னது மனசாட்சியின் முகங்கள். டாக்டரின் குரல் எதிர் முகாமிலிருந்து எழும் மனசாட்சியின் குரல். மனசாட்சியின் குரலுக்கு எதிர்முகாம் சொந்தமுகாம் என்ற பிரிவினை தெரியாதுதானே!
ஆனால் யானை மனசாட்சியின் குரலுக்கு என்றுமே நின்றதில்லை!.
பெரும் சோர்வுதான் ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் ரோபர் நகரில் சட்லஜ் ஆற்றங்கரையில் 1831 ல் மஹாராஜா ரஞ்சித் சிங்கிற்கும் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிக் பிரபுவுக்கும் இடையில் ஒர் ஒப்பந்தம் நிகழ்ந்தது. சட்லஜ் ஆற்றை ஆங்கிலேயர் கடக்க மாட்டார்கள். மஹாராஜாவும் சட்லஜ்ஜின் கிழக்குக்கரை தாண்டமாட்டார். ரஞ்சித் சிங் 1839 ல் இறந்தார். அவர் இறந்து 10 ஆண்டுகளில் பஞ்சாப் இணைக்கப்பட்டது. யுத்தங்கள். சூழ்ச்சிகள். அரசியல் கொலைகள். முதுகுகுத்தல்கள். உண்மையில் பெயர்களையும் இடங்களையும் மாற்றிக்கொண்டே திருவிதாங்கூரிலிருந்து ஜம்மு வரைக்கும் சென்றுவிடலாம். நிகழ்வுகளில் பெரிய வித்தியாசம் இருக்காது என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
ராஜா
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

