வடக்குநாதனின் வாசலில்

படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் வணிகசினிமாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கலைவிமர்சகர்களின் முழுப்புறக்கணிப்புக்கு ஆளானவர் பி.பத்மராஜன். அவருடைய திரைக்கதைகளில் இருந்த வன்முறையும் காமமும் அவர்களை அப்படி மதிப்பிடச்செய்தது. பின்னர் அவருடைய பல படங்கள் ஒருவகையான ‘கல்ட் கிளாஸிக்’ அந்தஸ்தை அடைந்தன.

அவற்றில் ஒரு படம் ‘தூவானத்தும்பிகள்’. வெளிவந்தபோது பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் பின்னர் மலையாளத்தின் அடுத்த தலைமுறை இயக்குநர்களில் பலர் தூவானத்தும்பிகளை அவர்களின் இலட்சிய மலையாள சினிமாவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதிலிருந்து தொடங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

தூவானத்தும்பிகளில் இந்த பாடல் பலவகையிலும் கடந்தகால ஏக்கம் ஊட்டுவது. முதல் விஷயம் இதிலுள்ள தெளிவான இட அடையாளம். திரிச்சூர். படத்தின் மொழியும் திரிச்சூர் உச்சரிப்புதான் – திருவனந்தபுரத்துக்காரரான மோகன்லால் திரிச்சூர் உச்சரிப்பை அற்புதமாக அளித்திருப்பார். ‘ம்மக்கு ஒரு நாரங்ஙா வெள்ளம் காச்சியாலோ’ என்கிற அந்த கேள்வி இன்று ஒரு சொலவடை போல.

இந்தப்பாடல் அதிகம் அறியப்படாதவரான பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் இசையமைத்தது. அறியப்படாத நல்ல பாடகரான ஜி.வேணுகோபால் பாடியது. இதன் கேரளத்தன்மை இதிலுள்ள இடைக்கா வாத்திய தாளத்திலும் மெட்டிலும் உள்ளது. ஒரு சோபான சங்கீதப்பாடல் போலுள்ளது இது. நடுவே வரும் அந்த ஆலாபனைகூட சோபானம்தான்.

அனைத்துக்கும் மேலாக பாடலில் வரும் திரிச்சூர் வடக்குந்நாதன் ஆலயத்தின் காட்சிகள். அவை அந்தப்பாடலை ஒரு காலத்தில், ஒரு பண்பாட்டில் அழுத்தமாக நிலைநிறுத்துகின்றன.

ஒந்நாம் ராகம் பாடி ஒந்நினே மாத்ரம் தேடி

வந்நுவல்லோ இந்தலே நீ வடக்கும்நாதன்றே மும்பில்

பாடுவதும் ராகம் நீ தேடுவதும் ராகமாய்

தேவனும் அனுராகியாம் அம்பலப்பிறாவே

 

ஈ பிரதக்ஷிண வீதிகள் இடறிவிண்ட பாதகள்

எந்நும் ஹ்ருதய சங்கமத்தின் சீவேலிகள் தொழுது

கண்ணுகளால் அர்ச்சன மௌனங்ஙளால் கீர்த்தனம்

எல்லாம் எல்லாம் அறியுந்நு ஈ கோபுரவாதில்

 

நின்ற நீல ரஜனிகள் நித்ரயோடும் இடயவே

உள்ளிலுள்ள கோயிலிலே நடதுறந்நு கிடந்நுவோ

அந்நு கண்ட நீயாரோ இந்ந்து கண்ட நீயாரோ

எல்லாம் எல்லாம் காலத்தின் இந்த்ரஜாலங்ஙள்

பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத்

[தமிழில்]

ஒன்றாம் ராகம் பாடி ஒன்றை மட்டும் தேடி

வந்தாய் நேற்று நீ இந்த வடக்குநாதனின் முன்னால்

பாடுவதும் ராகம் நீ தேடுவதும் ராகம்

தேவனுக்கும் காதலியான கோயில்புறாவே

 

இந்த சுற்று வீதிகள் இடறிப்பிளந்த பாதைகள்

என்றும் இதய சங்கமத்தின் ஸ்ரீபலிகளை தொழுதன

கண்களால் அர்ச்சனை மௌனங்களால் கீர்த்தனை

எல்லாம் எல்லாம் அறிகின்றது இந்த கோபுரவாசல்

 

உன் நீல இரவுகள் நித்ரையுடன் போரிடுகையில்

உள்ளே உள்ள கோயிலில் வாசல் திறந்து கிடந்ததா?

அன்று கண்ட நீ யாரோ இன்று கண்ட நீ யாரோ

எல்லாம் எல்லாம் காலத்தின் இந்திர ஜாலங்கள்

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.