குமரித்துறைவி [குறுநாவல்] – 4
[ 13 ]
மணப்பந்தலுக்குள் நான் மீண்டும் நுழைந்தபோது திவான் வரவேற்புரை முடித்து அமர்ந்து விட்டிருந்தார். ஸ்ரீமீனாம்பாளை அமரவைக்க வேண்டிய பீடத்திற்கு பூசை நடந்துகொண்டிருந்தது. மாடம்பிகள் மெல்ல அவர்களுக்கிடையே இருந்த பூசல்களிலிருந்து விடுபட்டு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருந்தமையால் அவையில் அமைதி நிலவியது. பெண்கள் பகுதியிலிருந்து மட்டும் பேச்சொலி சொற்களற்ற மென்மையான முழக்கமாக கேட்டது. நான் என் இரு மனைவியரையும் அப்போதுதான் கண்டேன். அவர்கள் பீடத்தை நோக்கி கூப்பிய கைகளுடன் அமர்ந்திருந்தனர்.
நான் என் சிற்றப்பனை அணுகி அவர் கால்தொட்டு வணங்கினேன். அவர் தலையில் கைவைத்து வாழ்த்திவிட்டு, “மகாராஜா வாற நேரமாச்சுல்லாடே?” என்றார்.
“வரப்போறார்” என்று நான் சொன்னேன்.
“இன்னைக்கு சர்வமங்களமான நாள். சாகிற காலத்துக்குள்ளே இப்டி ஒரு நாளிலே நானும் வந்து இருந்துபோட்டேன்…இது போதும்டே.”
திவான் எழுந்து என்னை நோக்கி வந்து “ராஜா வாறதுக்குண்டான அறிவிப்பை போட்டிடலாமா?” என்றார்.
அவர் என்னை நோக்கி வந்தது சிற்றப்பனுக்கு நிறைவளித்தது. நான் அவரைப் பார்க்காமல் திவானிடம் “கொம்புபோட சொல்லிடலாம்” என்றேன்.
திவான் கைதூக்கியதும் கொம்புகள் முழக்கமிட்டன. மறுபக்கம் மன்னரின் கொட்டகை முகப்பில் நின்ற அணிப்படையிலிருந்து கொம்போசை எழுந்தது. மன்னர் கிளம்பிவிட்டதை அறிவித்து முரசொலி எழுந்தது. அவையிலிருந்த அனைவரும் எழுந்து நின்றனர். நான் மறுபக்க வாசலில் சென்று நின்றேன். பஞ்சவாத்திய மேளம் ஒலிக்க மாரார் குழு முதலில் வந்தது. வேணாட்டின் சங்குக்கொடியுடன் கொடிவீரன் தொடர்ந்து வந்தான். சரிகைமேலாடையை மார்பில் கட்டி, திறந்த தோள்களின்மேல் சரப்பொளிமாலையும் பதக்கமாலையும் அணிந்து, தோள்வளைகளும் கைவளைகளும் காப்புகளும் மின்ன, விசிறியடுக்கு வெள்ளை ஆடை அலைபாய, பாத்ரமங்கலம் தாசிகள் தாலப்பொலி ஏந்தி வந்தனர்.
பட்டு விதானத்தை இருவர் ஏந்தியிருக்க அதன் கீழே மகாராஜா நடந்துவந்தார். அவருக்குப்பின்னால் இருபக்கமும் மயில்கண்வடிவ ஆலவட்டங்களை இருவர் வீச அவர் பொன்வண்ணச் சிறகுகளுடன் பறந்து வருவதுபோலத் தோன்றியது. அவரைத்தொடர்ந்து கவச உடையணிந்த வீரர்கள் வந்தனர். திவான் முன்னால் சென்று மகாராஜாவை தலைவணங்கி முகமனுரைத்து வரவேற்றார். தளவாய் அவர்முன் வாளை உருவி கால்நோக்கி தாழ்த்தி உடல் வளைத்து வணங்கினார். அவர்கள் அவர் முன் நடந்து அழைத்து வலப்பக்க வாசல் வழியாக அவைக்குள் கூட்டி வந்தனர்.
மகாராஜா அவைக்குள் நுழைந்ததும் கோல்காரன் சிறியமேடைமேல் ஏறி நின்று உரத்தகுரலில் “ஸ்ரீ ஆதிகேசவ பாததாசன், வேணாடு இருந்தருளும் மகிபதி, சேரகுல உத்துங்க சீர்ஷன், சத்ருபயங்கரன், சவ்யசாஜி, பிரியநந்தனன், ஆதித்ய வரகுண சர்வாங்கநாதப் பெருமாளுக்கு ஜயமங்களம்!” என்று கூவினான். “ஜயவிஜயீஃபவ!” என்று அவையிலிருந்தோர் கைதூக்கி வாழ்த்துக்களைக் கூவினர்.
வாழ்த்தொலிகள் நடுவே மகாராஜா கைகளைக் கூப்பியபடி வந்து அவை நடுவே நின்று மூன்றுபக்கமும் உடல்வளைத்து வணங்கினார். அவையிலிருந்து ஒவ்வொரு குடிக்கும் ஒரு குடிமூத்தவர் என பன்னிரு முதியவர்கள் வந்து மகாராஜாவை அழைத்துச் சென்று தாழ்வான ஆய் குலத்துச் சிம்மாசனத்தில் அமரச்செய்தனர். சங்கொலியும் முழவொலியும் கொம்பொலியும் மணியொயொலியும் முரசொலியும் எழுந்து அவையை நிறைத்தன.
அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்ததும் சிவீந்திரம் வயக்கரை மடம் ஆரியன் நம்பூதிரி தலைமையில் ஏழு நம்பூதிரிகள் வந்து வேதம் ஓதியபடி பொன்னாலான கிண்ணங்களில் இருந்து கங்கைநீரை மாவிலையால் தொட்டு அவர்மேல் தெளித்து மஞ்சளரிசியிட்டு வாழ்த்தினர். மகாராஜா கைகளைக் கூப்பியபடி அமர்ந்திருந்தார்.
முறைப்படி கோல்காரன் சொல்லி அழைக்க, ராமனாமடத்துப் பிள்ளை, மார்த்தாண்ட மடத்துப் பிள்ளை, குளத்தூர் பிள்ளை, கழக்கூட்டத்துப் பிள்ளை, செம்பழஞ்சிப் பிள்ளை, பள்ளிச்சல் பிள்ளை, குடமண் பிள்ளை, வெங்ஙானூர் பிள்ளை என எட்டு கோயிலதிகாரிகளும் அவர் முன் வந்து வாள்தொட்டு தலைவணங்கினர்.
அதன்பின் மாடம்பிகள் எழுவர் பாறசாலை கண்டன் வலியத்தான் தலைமையில் வந்து வாளை உருவி அவர் காலடியில் தாழ்த்தி வணங்கினர். மற்ற மாடம்பிகள் அவரவர் இடங்களில் நின்றவாறே வாளை உருவி தாழ்த்தி வணங்கினர். “வேணாடுக்கு ஜயம்!” என்றார் கண்டன் வலியத்தான். “ஜயம்! ஜயம்! ஜயம்!” என்று சபையினர் வாழ்த்தொலி எழுப்பினர்.
சிவீந்திரம் வட்டப்பாறை மடம் அச்சு மூத்தது அவை முன் வந்து வணங்கி ”வேணாடு உடைய ஸ்ரீ ஆதிகேசவ மூர்த்திக்கு சாஷ்டாங்க பிரணாமம்” என்றார். அவருடைய மெல்லிய குரல் கேட்குமளவுக்கு அவை அமைதி அடைந்தது. “எந்தெந்நால் இவ்விடம் இன்னைக்கு ஒரு மகாமங்கல கர்மம் நடக்கப்போகுது. மதுரை அரசி ஸ்ரீமீனலோசனி அம்மையை லோகேஸ்வரனாகிய திரிலோசனன் சுந்தரேசனுக்கு வதுவைமங்கலம் செய்துகொடுக்க தீர்மானமாகியிருக்கு. இந்த சித்திரை மாதம் பதினொன்றாம் நாள் துவாதசியில் காலை முதலொளிப் பொழுது குறிச்சிருக்கு. வரும் சித்ராபௌர்ணமி நாளில் அம்மையும் அப்பனும் மதுரைக்கு யாத்ரையாகவும் நாள் பார்த்திருக்கு. அதுக்கு வேணாடு முழுமையும் வந்து இருந்த இந்த சபை அனுக்ரகமளிக்க வேணும்” என்றார்.
அவையிலிருந்தவர்கள் கை தூக்கி “சுபம் சுபம் சுபம்” என்று வாழ்த்தளித்தனர்.
“எந்தெந்நால், ஸ்ரீமீனாக்ஷி இந்த கன்யாகுமரி மண்ணில் கடல்புறத்தில் மீன்குலத்தில் பிறந்தவள். இந்த மண்ணுக்கு ராஜனாகிய ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளுக்கு சொந்த அனுஜத்தியானவள். தங்கையை கைப்பிடிச்சு கொடுக்க ராஜாதிராஜனும் புவனமகாராஜனுமாகிய ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் இங்கே வந்து சேர்ந்திருக்கிறார். மகாராஜா இப்போ அவ்விடம் போய் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளை இந்த கல்யாணசபைக்கு ஸ்வீகாரம் செய்து கூட்டிவருவார். வேணும் சுபமங்களம்” என்றார் அச்சு மூத்தது.
அவையிலிருந்தவர்கள் கை தூக்கி “சுபம் சுபம் சுபம்” என்று வாழ்த்தளித்தனர்.
முரசுகள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கின. திவானும் தளவாயும் இருபக்கங்களிலாக நிற்க மகாராஜா எழுந்து கைகூப்பியபடி முகப்புவாசலை நோக்கிச் சென்றார். பக்கவாட்டு வாசல் வழியாக வெளியே சென்று முகப்பு வாசலை அடைந்து மகாராஜாவுக்கு முன்னால் விரைந்தேன்.
கீழே ஆதிகேசவப் பெருமாளை சப்பரத்துடன் நிறுத்தி வைத்திருந்தார்கள். அவரை எதிரேற்று அழைத்துவந்த பரகோடி கண்டன்சாஸ்தாவின் சப்பரம் அருகே நின்றிருந்தது. ஏற்கனவே வலப்பக்க வாசல் வழியாக மகாராஜா நுழைந்ததும் பந்தலைச் சுற்றிக்கொண்டு முன்னால் வந்து நின்றிருந்த மாரார்களும் தாசிகளும் முன்னால் நடக்க மகாராஜா தொடர்ந்து சென்றார். அவர் வருவதைக் கண்ட ஆதிகேசவனுடன் வந்த வாத்தியக்குழு முழக்கமெழுப்பியது. இரு மங்கல ஓசைகளும் இணைந்தன.
மகாராஜா சென்று முதலில் பரகோடி கண்டன் சாஸ்தாவை வணங்கிவிட்டு ஆதிகேசவனை வணங்கி மணப்பந்தல் காண வரும்படி மும்முறை சைகை காட்டி அழைத்தார். அதன்பின் ஆதிகேசவனின் சப்பரம் முன்னால் செல்ல அவர் பின்னால் நடந்தார். சப்பரத்தை ஏற்றிவந்த நாயர்கள் அதை நடனம்போல முன்னும் பின்னுமாக ஊசலாட்டினர். ஆதிகேசவன் களிநடமிட்டபடி பந்தலில் நுழைவது போலிருந்தது. கூடவே பரகோடி கண்டன் சாஸ்தாவும் நடனமிட்டார்.
ஆதிகேசவன் உள்ளே நுழைந்ததும் அத்தனை வாத்தியங்களும் இணைந்து உச்ச ஓசையெழுப்பினர். கொம்புகளின் ஓசை யானைக்கூட்டத்தின் பிளிறல் போல ஓங்கி ஒலித்தது.
சிவீந்திரம் வயக்கரை மடம் ஆரியன் நம்பூதிரி தலைமையில் ஏழு நம்பூதிரிகள் வேதம் ஓதியபடி வந்து ஆதிகேசவனை எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர். சப்பரத்திலிருந்து ஆதிகேசவனின் செம்பாலான உற்சவமூர்த்தி சிலையை எடுத்து அவருக்காக அமைக்கப்பட்டிருந்த கல்பீடத்தில் அமர்த்தினர். அருகே வலப்பக்கம் பரகோடி கண்டன் சாஸ்தா அமர்ந்தார்.
ஆதிகேசவனின் சப்பரத்துடன் திருவட்டாறிலிருந்து வந்த இளைய நம்பி ஆதிகேசவனுக்குரிய பூசைகளை தொடங்கினார். இடைக்கா மட்டும் ஒலித்துக்கொண்டிருக்க பூசைச்சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்தன.
நான் எழுந்து வெளியே வந்தேன். சட்டென்று வெளியே விரிந்திருந்த வெளிச்சம் என் கண்களைக் கூசவைத்தது. குனிந்து தரையைப் பார்த்தேன். கண்ணீர் வழிந்துகொண்டிருந்ததை மேலாடையால் துடைத்தேன். என்னை நோக்கி நூற்றுவர் தலைவன் மல்லன் சங்கரன் ஓடிவந்தான்.
நான் அவனிடம் “மணவாளன் மனையிலே எல்லாம் ஒருக்கம்தானே?” என்றேன்.
“நாலுமுறை பாத்தாச்சு உடையதே” என்றான்.
“இன்னொருமுறை பாரு… எந்த தப்பும் நடக்கப்பிடாது” என்றேன். “இப்ப ஆதிகேசவனுக்கு பூசை முடிஞ்சதும் கொம்புவிளி வரும். உடனே மணவாளன் தன் ஆளுகளோடே கிளம்பி பந்தலுக்கு வரவேண்டியது”
“சொல்லிடறேன் உடையதே” என்றான்.
“அவங்க பெண்ணுக்கான நகை, புடவை, சீர் எல்லாம் எடுத்து வைச்சாச்சா?” என்றேன்.
”அங்கே ஒரு பேச்சு வந்தது உடையதே” என்றான் மல்லன் சங்கரன். “அதிலே ஒருத்தன் ராயசம் கிட்டே கேட்டான், இங்கே இதெல்லாம் மலையாளத்துக் கல்யாணமா இருக்கே. தொடங்கினதும் தெரியாம முடிஞ்சதும் தெரியாம இருக்கு. மணவாளன் ஊர்க்கோலம், நலுங்காட்டம்னு நூறு சம்பிரதாயங்கள் இருக்கேன்னு… அதை ராயசம் தளவாய்கிட்டே சொன்னப்ப அவரு சிரிச்சுக்கிட்டு அதையெல்லாம் அங்கே நாம நடத்துவோம், இது அவங்க ஊரு. அவங்க பொண்ணுன்னு சொன்னாரு. இருக்கட்டும், ஆனா மணவாளன் நம்மூரு, நம்மாளுன்னு ராயசம் சொன்னாரு. அப்டி பேச்சு ஓடிச்சு. கடைசியிலே தளவாய் இது என்னமோ பொண்ணு களவாங்கிக்கிட்டு வாறது மாதிரி இருக்குன்னு சொன்னாரு. சரி, மருதைக்காரன்தானே மணவாளன். மறவக்குடி பழக்கமும் கொஞ்சம் இருக்கட்டுமேன்னு தளவாய் சொன்னப்ப ராயசம் சிரிச்சுப்போட்டாரு.”
நான் புன்னகைத்து “ஒண்ணு சொல்லுதேன் கேட்டுக்க. இவனுக இப்ப இந்த கல்யாண வைபோகத்தைப் பார்த்துட்டானுக. இனிமே விடவே மாட்டானுக. இதே கல்யாணச்சடங்கை இவனுக மதுரையிலே இதைவிட நூறுமடங்கு பெரிசா ஆண்டோடாண்டு நடத்தத்தான் போறானுக” என்றேன்.
”ஆமா உடையதே, எனக்கும் அப்டித்தான் தோணிச்சு” என்றான் மல்லன் சங்கரன். “கூட்டத்தைப் பாத்துட்டு தளவாய் சொன்னாரு. என்ன ஒரு பரவசம் பாத்தீங்களா சசிவோத்தமரே. இந்த அளவுக்கு ஒரு பரவசத்தை எங்கயும் பாத்ததில்லைன்னு. ராயசம் சொன்னாரு, இல்லாம இருக்குமா? கைலாசத்திலே நடக்குற சடங்கு இங்கே மண்ணிலே நடக்குது. அம்மையும் அப்பனும் கல்யாணம் பண்ணிக்கிடுததை பிள்ளைங்க பாக்குறது சாதாரண பாக்கியமான்னு. அதுவரை நான்கூட அப்டி யோசிக்கல்லை”
நான் சிரித்து “இனிமே அவங்களோட விளையாட்டு இது” என்றேன். “நூறாண்டு காலமாச்சுல்லா? அத்தனை மங்கலமும் அணைஞ்சு இருண்டு கிடந்த தென்னாடு தீபமும் பூவுமா மலர்ந்துட்டு வருதுல்லா? இனி ஊரூரா திருவிழாதான். தலைமைத் திருவிழா மதுரையிலே நடந்தாகணும்… இனிமே அது மீனாக்ஷி கல்யாணம்தான். எல்லாம் அம்மை அருள்” என்றேன்.
சுற்றிக்கொண்டு பின்பக்கம் சென்றபோது மீனாக்ஷியன்னையுடன் முத்தாலம்மனும் பிள்ளையாரும் வந்து சற்று அப்பால் பந்தலித்து நின்ற ஆலமரத்தின் அடியில் காத்து நிற்பது தெரிந்தது. நான் அருகே சென்றதும் ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் என்னை நோக்கி வந்து “அங்கே ஆதிகேசவனுக்கு முறைபூசைகள் முடிஞ்சதும் மகாராஜா மட்டும்தானே வணக்கம் நடத்துறது? அத்தனைபேரும் வணக்கம் சொல்றதுன்னா அதுவே விடியவிடிய ஆயிரும்” என்றார்.
“இல்லை, ஒண்ணுரெண்டு தாந்த்ரீகச் சடங்குகள் மட்டும்தான். மகாராஜாவும் சிவீந்திரம் பெரிய நம்பூதிரியும் மட்டும்தான் வணக்கம் நடத்துற சம்பிரதாயம்… இப்ப முடிஞ்சிரும்” என்றேன்.
முத்தாலம்மை சிவப்புப் பட்டு கட்டி பெரிய மூக்குத்தியும் வட்டப்பொட்டும் அரளிமாலையுமாக மங்கலக்கோலத்திலும் உக்கிரமாக இருந்தார். பிள்ளையார் சிலை சிறியது. குழந்தைப்பிள்ளையார். பொல்லாப்பிள்ளையார் என்று ஊரில் சொல்வார்கள். எதையுமே அறியாமல் தன் தீனியில் மூழ்கி குனிந்து அமர்ந்திருப்பவர் போலிருந்தார். “இங்க கிடந்து கண்ணீரு விடுதேன், நீ தின்னுட்டே இரு” என்றுதான் பக்தர்கள் சமயங்களில் அவரை வசைபாடுவார்கள்.
மணப்பந்தலில் இருந்து கொம்போசை எழுந்தது. நான் ஸ்தாணுலிங்க சிவாச்சாரியாரிடம் “அழைப்பு வந்தாச்சு, போலாம்” என்றேன்.
ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் கைகாட்ட மீனாக்ஷியம்மனின் முன்னால் நின்றிருந்த மாரார்கள் வாத்தியங்களை இசைத்தனர். குட்டியானைகள்போல கொம்புகள் முழங்கின. மலைக்குரங்குக் கூட்டம்போல் முழவுகள். மணியோசை இலைத்தாள ஓசை. சங்கொலிகள். மணமகளின் முன்னால் முத்தாலம்மை செல்ல பின்னால் பிள்ளையார் சென்றார். அவர் அப்போதும் எதையும் கவனிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன்.
மணப்பந்தலுக்கு வெளியே அம்மை தயங்கி நிற்க, முத்தாலம்மை நின்று அம்மையை அழைத்து ஊக்கப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றாள். அம்மை உள்ளே நுழைந்ததும் வாத்தியங்களின் முழக்கம் எழுந்தது. உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பெருங்குரலில் “அம்மே! மகாமாயே! தேவீ!” என்று கூவினர். தாசிப்பெண்கள் குரவையிட்டனர்.
சிவீந்திரம் வயக்கரை மடம் ஆரியன் நம்பூதிரியும் ஏழு நம்பூதிரிகளும் முன்னால் வந்து அம்மையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். அம்மையை அவளுக்கான பீடத்தில் சிவாச்சாரியார் எடுத்து அமரச்செய்தார். அம்மைக்கு வலப்பக்கமாக முத்தாலம்மனும் சற்று பின்னால் பொல்லாப்பிள்ளையாரும் அமர்த்தப்பட்டார்கள்.
சிவீந்திரம் வட்டப்பாறை மடம் அச்சு மூத்தது எழுந்து அவையை வணங்கியதும் ஓசைகள் அணைந்தன. “சுபமங்களம்! எந்தெந்நால் இங்கே இன்றைக்கு மதுரை ஸ்ரீ மீனலோசனித் தாயாருக்கான கல்யாண மங்கல மகா உத்சவம் நடக்கப்போகிறதாலே உடைய தம்புரான் வேணாடுடைய மகாராஜா தலைமையிலே வேணும்பூஜைகளும் முறைபோலே நடக்க ஆவன ஒருக்கியிருப்பதனாலே ஒவ்வொருத்தரும் அவரவர் குலமுறைப்படியான பூஜைகளை கல்யாண மங்கலங்கள் முடிஞ்ச பின்னாலே செய்துகொள்ள வேணுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேணும் சுபமங்களம்” என்று அவர் சொல்லி கைகூப்பினார்.
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் தங்கை மீனாம்பிகைக்கு ஐவகைப் பழங்களும், ஏழுவகை காய்களும் ,பன்னிருவகை மலர்களும் அண்ணன் சீராகக் கொண்டுவந்திருந்தார். பொற்தாலங்களில் வைத்து அவற்றை அவளுக்கு அளித்தார். மூன்று தாலங்களில் மூன்று வண்ண வீராளிப் பட்டும் வைரம் பதித்த பொன்நகைகளும் அவரால் அலங்காரச்சீராக அளிக்கப்பட்டன. அதன்பின் சேரநிலத்து முறைப்படி அஷ்டமங்கலங்களும் தசபுஷ்பமும் அளித்து வாழ்த்தினார்.
மகாராஜாவும் சிவீந்திரம் வயக்கரை மடம் ஆரியன் நம்பூதிரிப்பாடும் ராமனாமடத்துப் பிள்ளை, மார்த்தாண்ட மடத்துப் பிள்ளை, குளத்தூர் பிள்ளை, கழக்கூட்டத்துப் பிள்ளை, செம்பழஞ்சிப் பிள்ளை, பள்ளிச்சல் பிள்ளை, குடமண் பிள்ளை, வெங்ஙானூர் பிள்ளை என எட்டு கோயிலதிகாரிகளும் பதினெட்டு மாடம்பிகளும், பதினெட்டு பிடாகைத்தலைவர்களும் அம்மைக்கு வணக்கம் செலுத்தியதும் சிவாச்சாரியார்கள் அம்மையின் முன் தாலத்தில் இருந்து மலரும் நீரும் எடுத்து கூட்டத்தின்மேல் வீசி பூஜை முடிந்ததை அறிவித்தனர்.
கொம்புகள் முழங்கின. அதைக்கேட்டு மணவாளன் மனையின் முன்னால் நின்ற கொம்புகள் எதிர்முழக்கமிட்டன. வெளியே நின்றிருந்த அத்தனை மாரார்களும் செண்டைகள், திமிலைகள், முழவுகள், இடைக்காக்கள், கொம்புகள், இலைத்தாளங்கள் என முழக்க அப்பகுதியின் காற்றிலேயே தாளத்தை அலையலையென கண்ணால் பார்க்கமுடிந்தது. தொலைதூரத்து மலைகளின் கரும்பாறைப் பரப்புகள் தோல்படலங்கள் என விதிர்த்துக்கொண்டன.
நான் வெளியே சென்று சற்று விலகி அங்கே நிகழ்வன அனைத்தையும் பார்க்கும்படி நின்றேன். ஒவ்வொன்றையும் விழிகளால் தொட்டுத் தொட்டு எல்லாம் முறையாக நிகழ்கின்றனவா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளில் தீவிரம்கொண்டு பிறரை மறந்து செயல்பட அனைத்தும் ஒருங்கிணைந்து ஒற்றைச் செயல்பாடாக நடந்துகொண்டிருந்தது.
ஆதிகேசவப்பெருமாளின் சப்பரம் முதலில் மணப்பந்தலை விட்டு வெளியே வந்தது. தொடர்ந்து பரகோடி கண்டன் சாஸ்தாவின் சப்பரமும் வெளிவந்தது. ஆதிகேசவனின் கருடக்கொடியுடன் ஒருவன் முன்னால் சென்றான். அவனைத்தொடர்ந்து வாத்திய மேளங்களுடன் மாரார்கள். பின்னர் முன்நெற்றியில் முடிசுற்றிக் கொண்டை கட்டி, அவற்றின்மேல் பொற்சரடுகள் சுற்றிச் சரித்து, ஆரங்களும் மாலைகளும் மார்பிலணிந்த பட்டுமுலைக்கச்சைமேல் துவள, பட்டுத்துகிலை ஒட்டியாணத்தால் இறுக்கிய பாத்ரமங்கலம் தாசிகள் தாலப்பொலி ஏந்தியபடி சென்றனர். அவர்களுக்குப் பின்னால் நம்பூதிரிகளும் பரதேசப் பிராமணர்களுமாக இரண்டு நிரை வைதிகர்கள். அதன்பின் பொன்மின்னும் சப்பரத்தில் ஆதிகேசவன் எழுந்தருளினார்.
ஆதிகேசவனுக்குப் பின்னால் யானைக்கொடியுடன் பரகோடி கண்டன் சாஸ்தாவின் முன்னோட்டன் சென்றான். தொடர்ந்து சாஸ்தாவின் சிறிய சப்பரம் சென்றது. தாசிகளும் சிவாச்சாரியார்களும் இரு நிரைகளாகச் சென்றனர். பரகோடி கண்டன் சாஸ்தாவுக்கு பின்னால் மகாராஜாவின் தூதர்களாக திவான் நாகமையாவும் உருவிய வாளுடன் தளவாய் நாராயணக் குறுப்பும் நடந்தனர். குடிமுறையின் பிரதிநிதிகளாக பதினெட்டு மாடம்பிகளும், எட்டு கோயிலதிகாரிகளும் உருவிய வாளை ஏந்தியபடி நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் பதினெட்டு குடிகளின் நூற்றெட்டு தலைவர்களும் கைகளில் மங்கலவரிசைகளுடன் சென்றனர்.
மணவாளன்மனையின் முன்னால் திருநெல்வேலியில் இருந்து வந்த மதுரைப்படை அணிவகுத்து நின்றிருந்தது. வேணாட்டுப் படைகளைப் போல அன்றி அவர்கள் மார்புகளில் தேய்த்து தெளிநீர் போல மின்னிய இரும்புக் கவசங்களும், பட்டாலான தலைப்பாகைகளும் அணிந்திருந்தனர். கைகளில் ஒளியாலான கூர் கொண்டவை போன்ற ஈட்டிகள். யானைகளே கூட பொன்னணி கொண்டு மிகப்பெரிய வண்டுகள் போல ஒளிர்ந்துகொண்டிருந்தன. முகப்பில் நின்ற பெரிய பிடியானை தங்கத்தால் ரேக்கிடப்பட்டது போலிருந்தது. பழுதுகுறை இல்லாத முழுமைகொண்ட வெண்புரவிகள் முகிலால் ஆனவைபோல தோன்றின. அவை வெள்ளிப்பட்டைகளும் வெண்கொக்கு இறகால் குஞ்சலங்களும் அணிந்து மின்னல்கோத்த உச்சிமேகங்கள் போலிருந்தன.
மதுரையின் கோல்காரன் கைகாட்டியதும் அங்கே வாத்தியங்கள் முழக்கமிட்டன. அவர்கள் அனைவரும் பாண்டிநாட்டிலிருந்து வந்தவர்கள். பன்னிரு தவில்கள் இடியோசை ஒத்திசைவு கொண்டு தாளமென்றானதுபோல் முழக்கமிட்டன. ஆறு நாதஸ்வரங்கள், அவற்றுடன் ஒத்து ஊதும் பன்னிரண்டு சுதிக்காரர்கள். கைமணி இசைப்பவர்கள் பன்னிருவர். அந்த இசை மயில்கள் அகவுவதுபோல, கன்று குரலெழுப்புவதுபோல, கன்னிப்பெண் கொஞ்சுவதுபோல ஓங்கி எழுந்து தழைந்து குழைந்து ஒழுகியது. இசையை வெள்ளிச்சரடு போல கண்ணால் பார்க்க முடியும் என்பதை அப்போதுதான் கண்டேன்.
அவர்களின் தாசிகள் கொண்டையை பின்னால் கட்டிச் சரியவிட்டிருந்தனர். அனைவருமே பச்சைப்பட்டுச் சேலைகளை சுற்றி உடுத்திருந்தனர். கொண்டைகளிலிருந்து முத்தாரங்கள் சரிந்தன. பொற்தாலங்களில் மலரும் கனிகளும் மற்ற மங்கலப்பொருட்களும் ஏந்தியிருந்தனர். அனைத்துமே தூயபொன் என சுடர்விலிருந்து தெரிந்தது. அவர்களுக்குப் பொன் என்பது அள்ள அள்ள குறையாமல் எங்கிருந்தோ கிடைப்பதுபோல. ஒவ்வொரு அசைவிலும் அவர்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தவர் என தெரிந்தது.
முகப்பில் சுந்தரேசனின் நந்திக்கொடி பொன்மூங்கிலில் ஏந்தப்பட்டு இளங்காற்றில் எழுந்து சிறகடித்து துவண்டபடி வந்தது. விஜயநகரத்தின் பன்றிக்கொடியும் பாண்டியநாட்டின் மீன்கொடியும் தொடர்ந்து வந்தன. அவர்களின் அணியூர்வலம் வெயிலில் ஒளிரும் ஆறுபோல, பொன்னும் வெள்ளியும் உருகி வழிந்து அணுகுவதுபோல நெருங்கி வந்தது. ஆதிகேசவனின் ஊர்வலம் அவர்களை முன்னர் வகுத்த இடத்திலேயே சந்தித்தது. வாத்தியங்கள் அடங்கி அமைதி உருவாகியது. சங்கொலி மும்முறை எழுந்தடங்கியது. ஒற்றை முழவு மட்டும் சீரான ஓசையெழுப்பிக்கொண்டிருந்தது.
ஆதிகேசவனின் நம்பி சப்பரத்தின்மேல் எழுந்து நின்று கைகளை வீசி சைகை செய்து சுந்தரேசனை வேணாட்டுக்கு வரவேற்றார். பின்னர் ஆதிகேசவனின் சப்பரத்தில் இருந்து வைரப்பதக்கத்துடன் கூடிய பொன்மாலை ஒன்றை சுந்தரேசனுக்கு அளித்தார். அதை சுந்தரேசனுக்குச் சூட்டிய சிவாச்சாரியார் வைரம் பதித்த கணையாழி ஒன்றை ஆதிகேசவனுக்கு எதிர்மரியாதையாக அளிக்க இளையநம்பி அதை ஆதிகேசவனுக்கு அணிவித்தார். ஆதிகேசவன் அளித்த பொற்பட்டு சுந்தரேசனுக்குப் போர்த்தப்பட்டது.
பரகோடி கண்டன் சாஸ்தா முன்னால் வந்து சுந்தரேசனுக்கு ஒரு மணிமாலையை அளித்தார். அவருக்கும் ஒரு கணையாழி அளிக்கப்பட்டது. சாஸ்தா அதை மகிழ்ச்சியுடன் எல்லா கைவிரல்களிலும் மாறி மாறி அணிந்தார். கூட்டத்தினர் சிரித்து கூச்சலிட்டு அதை கொண்டாடினர். சிவாச்சாரியார் கண்டன் சாஸ்தாவின் சார்பில் “கொன்றைச் சுடர் அணையாத என் காட்டுக்கு வருக” என்று அழைத்தார். சுந்தரேசர் ”ஆகுக” என்று சொல்லி கையசைத்ததும் மூவருமாக மணப்பந்தல் நோக்கிச் சென்றனர்.
வெடித்தெழுந்ததுபோல் அத்தனை வாத்தியங்களும் முழக்கமிட்டன. “தென்னாடுடையோனே போற்றி. மூவிழிமுதல்வனே போற்றி! அழகனே போற்றி! அத்தா போற்றி! ஆடவல்லானே போற்றி!” என்று வாழ்த்தொலிகள் சூழ சுந்தரேசர் மீனாளை மணம்கொள்ள மணப்பந்தல் நோக்கிச் சென்றார்.
[14 ]
நான் மணப்பந்தலைச் சுற்றிக்கொண்டு பின்பக்கம் சென்றேன். உள்ளே வாழ்த்தொலிகளும் மேளங்களும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தன. அந்த பந்தலே ஒரு முரசாக மாறிவிட்டதுபோல. பின்பக்கம் நூற்றுவன் காளன் பெருமல்லன் என்னை நோக்கி வந்தான். “எல்லாம் ஒழுங்கா நடந்திட்டிருக்காடே?” என்றேன்.
“ஒருகுறையில்லை. இதுவரை சர்வமங்களம்” என்று அவன் சொன்னான்.
“ஆமா, இதுவரை” என்று நான் சொன்னேன்.
“அது என்ன பேச்சு உடையதே? இதுவரை நடத்தித் தந்த அம்மை இனி நம்மை கைவிடுவாளா?”
“அதில்லடே” என்றேன். “நான் மூணு யுத்தம் நடத்தியிருக்கேன். பத்திருபது உத்சவங்கள் நடத்தியிருக்கேன். நாலு கோட்டை கட்டியிருக்கேன். இப்டி மானுஷ யத்னங்கள் நடக்கிறப்ப நமக்கு ஒரு கர்வபங்கம் கண்டிப்பா உண்டு. பாத்துப்பாத்துச் செய்வோம். ஆனா கண்ணுக்கு முன்னாடி எதையோ காணாம விட்டிருப்போம். நான் நான்னு நினைச்சு நிமிருற நேரத்திலே சரியா அது வந்து பூதமா முன்னாலே நின்னுட்டிருக்கும். நம்மளைப் பாத்து இந்த பிரபஞ்சம் சிரிக்கிறதுதான் அது. நீ என்னடே மயிரு, சின்னப்பூச்சி. நான் ஏழுகடலும் ஒற்றைத் துளியா ஆகிற பெருங்கடலாக்கும்னு சொல்லுது அது… சரி பாப்போம்.”
“ஒண்ணும் நடக்காது” என்று அவன் சொன்னான்.
”நடக்கும். என்னமோ நடக்கும். கண்டிப்பா நடக்கும். நடக்காம இருக்கவே இருக்காது. அதைத்தான் பாத்திட்டிருக்கேன். நான் தெய்வத்தை தேடுறது அங்கேயாக்கும். ஒரு தப்பு, அதிலேயாக்கும் தெய்வம் முகம் காட்டுறது” என்றேன்.
கணேச சிவாச்சாரியார் வெளியே வந்தார். என்னை நோக்கி ஓடிவந்து “அங்கே சடங்குகள் இப்ப முடிஞ்சிரும். கன்யாகுமரி திருமஞ்சனநீர் வந்தாச்சா?” என்றார்.
”வந்தாச்சு…” என்றேன். ஆனால் அதை மறந்துவிட்டிருந்தேன். திரும்பி மல்லனிடம் “ஓடு, ஓடிப்போயி கன்யாகுமரி மஞ்சனநீர் எங்கேன்னு கேளு” என்றேன்.
நானே அவன் பின்னால் ஓடினேன். அவன் முன்னால் ஓடி திரும்பி வந்து “உடையதே, அதெல்லாம் வந்து அங்கே தெக்குபந்தலிலெ இருக்கு. மீனவக்குடியிலே ஏழு பட்டக்காரங்களும் வந்து காத்திருக்காங்க…” என்றான்.
”நீ இங்கே நில்லு… இந்த மஞ்சனநீர் ஏற்பாட்டை நீ பாத்துக்கோ” என்றேன்.
“உத்தரவு” என்றான்
நான் மீண்டும் உள்ளே நுழைந்தபோது மணப்பந்தலில் ஆதிகேசவனும் பரகோடி கண்டன் சாஸ்தாவும் அமர்ந்திருந்தனர். அப்பால் சுந்தரேஸ்வரர் நின்றிருக்க அவருக்கு முன்னால் சிவீந்திரம் ஆரியன் நம்பூதிரி நின்று பூஜைகள் செய்துகொண்டிருந்தார். சபையினர் எழுந்து நின்று வாழ்த்தொலி எழுப்பினர். மகாராஜா கைகூப்பி நின்றார்.
பூஜைகள் முடிந்ததும் சுந்தரேஸ்வரர் இருக்கை கொண்டார். மகாராஜாவின் இருபக்கமும் அவருடைய மைந்தர்களாக ஆதிகேசவனும் பரகோடி கண்டன் சாஸ்தாவும் நிலைகொள்ள அவர் அரியணையில் அமர்ந்திருந்தார்.
வாத்தியங்கள் அடங்கின. வாழ்த்தொலிகள் தணிந்து அமைதி உருவாகியது. சுந்தரேஸ்வரர் எழுந்து வந்து மகாராஜாவை வணங்கி, நவமணிகளும் ,தங்கம் வெள்ளி செம்பு என முப்பொன்னும், மலரும் கனிகளும் படைத்து, வில்லும் வாளும் தாழ்த்தி அவர் மகளை மணம்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
மகாராஜா “உன் பெயர் என்ன? உன் குலமென்ன? உன் பெற்றோர் யார்? உன் தகுதிகள் என்னென்ன?உன் இல்லம் எங்கே?” என்றார். அதை அவர் அருகே நின்ற பூசகர் அவர் பொருட்டு சைகை காட்டி கேட்டார்
“என் பெயர் அழகேசன். நான் குலமிலி. பெற்றோர் எனக்கில்லை. என் தலையில் நிலவும் காலடியில் மானும் கைகளில் உடுக்கும் தீயும் உள்ளது. நான் வாழுமிடம் சூரையங்காடு” என்று சுந்தரேசர் பதில் சொன்னார்.
மகாராஜா மகளை அளிக்கமுடியாது என்று மறுத்தார். கைகளை வீசி மகடூ மறுத்து ‘செல்க செல்க’ என்று காட்டினார்.
செல்வதில்லை, பெண்ணுடனேயே செல்வேன், மணமகளைப் பெறவில்லை என்றால் மடலூர்வேன் என்று சுந்தரேஸ்வரர் சொன்னார். அவை சைகைகள் வழியாகச் சொல்லப்பட்டன. ஆகவே அனைவராலும் விழிகளால் கேட்கப்பட்டன.
“உனக்கு என் பெண்ணை தரவேண்டுமென்றால் ஒரு சிறப்பையேனும் சொல்” என்றார் மகாராஜா. பீடத்தில் தளிர்வாழைப் பூபோல செப்புச்சிலையாக அன்னை தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அங்கு நிகழ்வன எதையுமே அறியாதவளாக. பொல்லாப்பிள்ளையாருக்கு அதிரசம் தீர்ந்துவிடவே அவர் கைநீட்டினார். ஒரு சிவாச்சாரியார் தட்டுடன் அதிரசங்களை படைத்தார்.
சுந்தரேஸ்வரர் தன்னுடைய சிறப்பைச் சொல்லும்படிச் சைகைகாட்ட அவருடன் இருந்த ஓதுவார்கள் கைக்கழியால் தாளக்கட்டையை தட்டியபடி மணமகனின் குலம், கொடிவழி, மலைச்சிறப்புகள், ஆகியவற்றை பாடினர்.
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானை, சுடுசரத்தால் துவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோசு ஆடித்
திளைத்தானைத், தென்கூடல் திரு ஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!
விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை
மேல் ஆடு புரம் மூன்றும் பொடி செய்தானை
பண் நிலவு பைம்பொழில் சூழ் பழனத்தானை
பசும் பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை
உள்நிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்து
உமையோடு உடன் ஆகி இருந்தான் தன்னை
தெள்நிலவு தென்கூடல்திரு ஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
மகாராஜா தன் மகள் மீனாம்பிகை தேவியின் சிறப்பைச் சொல்லும்படி பாணர்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் சிறுபறையை மீட்டியபடி பாடினர்.
“ ராஜமாதங்கி சியாமளே! மகாசாகர ஹரிதவர்ணே!
மரகதவல்லி தடாதகே! அபிஷேகவல்லி மகாமாயே!
அபிராமவல்லி, கற்பூரவல்லி, ஸ்ரீ மதுராபதி நிலையே!
தடாதகே மீனாக்ஷி சமுத்ரஜன்யே! தேவீ நமஸ்துப்யம்!
என்று ஒரு பாணன் மலையாண்மையில் பாடி முடித்ததுமே இன்னொருவர்
“ குமரித்துறை மலர்ந்த மலரே, கோமகளே, சுந்தரவல்லி அன்னையே!
பாண்டிநிலத் தலைவி மதுரை நிலையமர்ந்த மாதரார்க்கரசி தாயே,
மாணிக்க மணிமானே மும்முலை திருவழுதி மகளே,
ஆலவாயழகர் உளம்கவர் கன்னி அங்கயற்கண் அழகியே வாழ்க!”
என்று தொடர்ந்து பாடினார். சம்ஸ்கிருதத்திலும் மலையாண்மைத் தமிழிலுமாக மாறிமாறி அன்னையின் பெருமையைப் பாடினார்கள்.
மகாராஜா “என் மகளுக்கு என்ன சீர் செய்வீர்கள்?” என்று கேட்டார்.
“வெள்ளிப்பனிமலை முடி ஒன்று மணிமுடியாக. வீழும் கங்கைப்பேராறு ஒன்று மேலாடையாக. கூனலிளம்பிறை ஒன்று கூந்தல் மலராக. மானுண்டு மழுவுண்டு காவலாக” என்றார் ஓதுவார்.
“என் மகளுக்கு என்ன கொண்டு வந்தீர்கள்?”என்றார் மகாராஜா.
“விண்ணில் இருக்கும் இருசுடரும், மண்நிறைய ஓடும் பன்னிரு பேராறுகளும் பனிமலையும் நடுமலையும் தென்மலையும் என கொடுமுடிகள் மூன்றும், பாதாளமும், அங்கு ஊறிய நஞ்சும் கொண்டு வந்தோம், ஏற்றருளல் வேண்டும்” என்று ஓதுவார் சொன்னார்.
மகாராஜா ஆதிகேசவனைப் பார்க்க அவர் ஏற்றுக்கொள்ளும்படி கைகாட்டினார். பரகோடி கண்டன் சாஸ்தாவும் ஆகுக என்று சைகை காட்டினார்.
மகாராஜா சீர்களைப் பெற்றுக்கொள்ளஒப்புக்கொண்டார். சிவாச்சாரியார்கள் கைகாட்ட வாத்தியங்களும் குரவையொலியும் வாழ்த்தொலிகளும் மீண்டும் முழக்கமிட்டன.
சுந்தரேஸ்வரர் அளித்த சீர்களை மகாராஜா பெற்றுக்கொண்டார். மகாராஜா கைகாட்ட பரகோடி கண்டன் சாஸ்தா சென்று மணப்பந்தலில் பீடத்தில் அமர்ந்திருந்த மீனாக்ஷியன்னையிடம் மணவறைக்கு வரும்படிச் சொன்னார். அன்னை நாணத்தால் மறுக்க முத்தாலம்மன் அவள் முகவாயை பிடித்து கொஞ்சியும் கெஞ்சியும் எழச்செய்தாள். முத்தாலம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

