விசை, எச்சம் – கடிதங்கள்

விசை [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

விசை கதையை வாசிக்கும்போது சென்ற தலைமுறையினருக்கு இருந்த மன உறுதியைத்தான் நினைத்துக்கொள்கிறேன். என் சொந்தகாரர்களின் வீட்டில் ஒரு சாவு. இறந்தது 12 வயதுப் பையன். அவர்களின் பாட்டி “செரி, போனது போச்சு. ஆகிறதைப் பாப்போம்” என்று சொன்னார். மற்றவர்கள் உடைந்து அமர்ந்திருந்தனர். பாட்டிதான் வந்தவர்களுக்கு தேவையான எல்லாம் செய்தார். நிதானமாக இருந்தார். நாங்களெல்லாம் பாட்டியை கல்நெஞ்சு என்று திட்டியபோது ஒரு மாமா சொன்னார். பாட்டியின் 4 மகன்கள் இளவயசிலேயே செத்துவிட்டனர். ஒரு மகன் மட்டும்தான் மிச்சம் என்று. எல்லாமே பார்த்துவிட்டார்கள். அந்த விசைதான் அது. அந்த விசை கடவுளுக்கும் விதிக்கும் எதிரான மனிதனின் விசை

அருண் சந்திரசேகர்

 

அன்பு ஜெ,

“விசை” எனக்கு அனக்கனின் பாட்டியான கொரம்பையம்மாவை நினைவு படுத்தியது. ஆமைக்காரி என்று அழைக்கப்பட்டு கொரம்பையையே கூடாக்கி வாழ்ந்தவள் அவள். ஆனால் இங்கு ஓலைக்காரியைக் காணித்திருக்கிறீர்கள். விசை என்ற சொல் மேலும் பெருகி “உயிர்விசை என்ற சொல்லாக என்னுள் நின்றது.

வாழ்வென்னும் இந்த பயணப்பாதையில் ஏதோவொரு விசை ஏதோவோர் தருணத்தில் நம்மை அது நோக்கி உந்துகிறது. அது நம்முள் நிகழ்த்தும் தாக்கத்தால் இனி ஒரு போதும் அதை விட இயலாது இறுகப் பற்றிக் கொண்டு பயணப்பட்டு மாண்டு போகிறோம். எல்லோரும் அத்தகைய விசை கொண்டு வாழ்வதில்லை. ஆமைக்காரி, ஓலைக்காரி என்று நிலைக்குமளவுக்கான விசை மிகச் சிலரிடமே இருக்கிறது. புனைவுக்களியாட்டு சிறுகதைத் தொகுப்பில் அத்தகைய விசையோடு இருந்த பலரை நினைவு கூர்ந்தேன். ஷம்பாலாவை நோக்கிய பயணப்படும் ஆடமின் விசை, தங்கப்புத்தகத்தை நோக்கிய பாட் -ன் விசை, சிற்பக்கலையை நோக்கிய குமரனின் விசை. அருகே கடலின் கதை சொல்லிக்கு புத்தகம் நோக்கிய விசை; கல்வியின் மீது ஆனந்தவள்ளிக்கு இருந்த விசை; அரிகிருஷ்ணனுக்கு துப்பறிவதில் இருந்த விசை… இது தவிரவும் தீவண்டி ஜான், காளியன், காரியாத்தான் யாவருக்குள்ளும் ஏதோவொரு விசை இருந்து தான் அவர்களை முன்நகர்த்திச் சென்றிருக்கிறது.

ஆனால் சில விசைகள் விடுபட வேண்டியவையாக இருக்கிறது. வாழ்வின் மொத்தத் தருணங்களையும் அது விழுங்கிச் செறிக்கும் விசையாக மாறிவிடுகிறது. அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள வேறோர் விசையை பற்றிக் கொள்ள தெளிந்தமனது தேவைப்படுகிறது.

எங்கள் கிராமத்தில் ஒரு அத்தை எந்நேரமும் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருப்பாள். யாரையும் அவள் வீட்டுக்குள் விடுவதில்லை, யாரிடமும் பேசுவதில்லை, வெளி வாசலை மட்டுமே இரண்டு மணி நேரமாக பர் பர் என்று கூட்டிப் பெருக்குவாள். அவள் வீட்டின் வாசல் மட்டும் ஒரு இன்ச் தரைக்குக் கீழே இருக்கும். அவளுடைய கணவர் ஊரிலேயே வேறொருவருடன் காதல் கொண்டது தெரிய வர அதன் பின் மேலும் விசையுடன் சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். அவளை எங்கள் வீட்டின் முற்றத்து அரட்டைகளின் போது கிண்டல் செய்வதை பார்த்திருக்கிறேன். பாட்டி வீட்டிற்கு செல்லும் போது அவள் வாசலை பார்க்கத் தவறுவதில்லை. அவள் இன்றும் நித்தமும் நாள்முழுவதும் சுத்தம் செய்து கொண்டே இருக்கிறாள். அவளுக்கு அதிலிருந்து விடுதலையில்லை. ஓலைக்காரியின் விசையையுங் கூட அப்படி ஒன்றாகத்தான் பார்க்கிறேன். அவள் தன் அடிமை வாழ்வு, கணவனின் இறப்பு என ஏதோவொன்றிலிருந்து வெளிவரும் விசையாக ஓலையைத் தேர்ந்தெடுத்து அந்த விசையின் உச்சியிலேயே மரணத்தைத் தழுவியிருக்கிறாள். அவள் அதிலிருந்து வெளிவந்திருக்கலாம் தான். ஆனால் அது ஒரு தவம். அது அடையும் இறுதிப் புள்ளியும் தவம் செய்பவர் இறுதியில் அடையும் புள்ளியும் ஒன்றே என்று கருதுகிறேன். இங்கு விசைகளுக்கு பல பெயர்கள் இருக்கின்றன. ஆனால் நியூட்டன் சொல்வது போல அவற்றின் தீவிரத்தைப் பொருத்து ஒரு பொருளின் முடுக்கம்  (F=ma) அமைகிறது. இங்கு இந்தக் கதையில் ஓலைக்காரியின் விசையையும், அவளின் முடுக்கம் சென்றடைந்த திசையையும் காணித்திருக்கிறீர்கள். தரிசணமாய் அமைந்தது. நன்றி ஜெ.

அன்புடன்

இரம்யா.

 

எச்சம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

எச்சம் கிட்டத்தட்ட என் அப்பாவின் கதை 36 ஆண்டுகளில் மொத்தம் 2 நாட்கள்தான் கடையை மூடியிருந்தார். காமராஜ் பக்தர். ஆனால் காமராஜ் இறந்த அன்றுகூட கடை திறந்தார். அன்று வந்த லாபத்தை காமராஜர் பேருக்கு கோயிலுக்கு கொடுத்தார்.  தன் சொந்த திருமணத்தின்போதே மதியத்துக்குமேலே கடைதிறந்துவிட்டார். அந்த தொழிலே தான் என ஆகிவிட்டவர். அது ஒரு வகை தவம். அங்கே ரெஸ்ட் என்பதே கிடையாது

என். மணிக்குமார்

 

அன்புள்ள ஜெ,

எச்சம். எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆதி தெய்வம். அவர் புவியில் செய்ய வேண்டிய செயல்கள் இன்னும் எஞ்சி இருக்கிறது. அவரால் காக்கப்பட வேண்டியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதன் பின் தான் ஓரமாக நிற்க்கும் இளைஞர்களாகிய   முருகனும் ஏசுவும் சொல்வது வாஸ்தவம் என்றாலும் அவரால் கேட்கமுடியும். மண்ணில் அனைவருக்கும் சொத்து கிடைத்து, அனைவருக்கும் ஓய்வெடுக்கும் வாய்ப்பு வந்தபின் தான் அவர் அகத்தில் சாந்தி ஏற்படும், அதன் பின்தான் அவரால் சமாதிநிலை போன்ற எஞ்சியதை யோசிக்க முடியும். அதனால் தான் அவருக்கு ரெஸ்ட் செரியாகவராது அதைதான் அந்த இளைஞனுக்கும் சொல்கிறார்.

இறந்தபின்னும் ரெஸ்ட் நமக்கு தேவையில்லை. மீண்டும் திரும்பி வந்து செய்ய வேண்டிய செயல் இருக்கிறது என்று சொல்கிறா அறுமுகபெருமாள் நாடார்.

உலகில் அனைவராலும் என்று ரெஸ்ட் எடுக்க முடியுமோ அன்று தான் இவராலும் ரெஸ்ட் எடுக்க முடியும். ஏன்னென்றால் இவர் பசியை பார்த்தவர். அவர் கடையாட்களை வசைபாடுவது ஒரு நடிப்பு, அவர்களையும் ஆளாக்கிவிடதான் அவர் உழைக்கிறார். அனைவருக்கும் என்று செத்து இருக்கிறதோ அன்று தான் அவருக்கு பீஸ்.

ஆனால் அத்தனை பேர் பட்டினியில் ஓடும் பொழுது பக்கத்தில் இருந்துகொண்டே, அவர்களிடமிருந்து எடுத்து கொண்டதை வைத்தே எப்படி வெள்ளைகார துரையால் ரெஸ்ட் எடுக்கமுடிந்தது. இன்றும் ஏழ்மையில் இருக்கும் இந்தியாவில் கோவலத்தில் வந்து அவர்களால் இளைப்பாற முடிகிறது. இதுதான் இருவேறு அழகியல் மரபுகளான வசனத்துக்கும் நடிப்புக்கும்மான வித்தியாசமா. கிழக்குக்கும் மேற்க்குக்கும்.

சொர்க்கத்தில் இருக்கும் ஆறு தெய்வங்களும் அறுமுகபெருமாள் அவர்கள்தான்.  இங்கு வாழும் ஏழைகளும் சொத்து இல்லாதவர்களும்தான் எம்.ஏ.எம். ஆறுமுகபெருமாள் நாடாருடைய சண்ஸ் என்று வாசிக்களாமா.

25 கதைகள். ஆம் இனிமையான பயணம். கற்பிப்பதும்.

 

நன்றி

பிரதீப் கென்னடி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2021 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.