அநீதிகளின் மேல் கலாச்சார கேரளம்

கேரளத்தின் காலனி

போகன் சங்கர் இந்தப் பதிவை எழுதியிருக்கிறார். என்னிடம் நேரில் பேசும்போதும் இதைச் சொல்லியிருக்கிறார்.

நான் திரும்பத் திரும்ப எழுதிவரும் ஒன்று உண்டு, ஆதிவாசிகள் கேரளத்தின் காலனியாதிக்கத்தில் இருக்கிறார்கள். கேரளத்தின் வலுவான இடது- வலது கட்சிகள் ஆதிவாசிகளை ஒடுக்குவதில் போட்டியிடுகின்றன. மிகச்சில நடுநிலை அறிவுஜீவிகளை தவிர எவருடைய மனசாட்சியும் இதில் உறுத்தல் கொள்வதில்லை.

ஆதிவாசிப்போராட்டங்கள் எல்லாமே மூர்க்கமாக இருதரப்பு ஆட்சியாளர்களாலும் ஒடுக்கப்பட்டுள்ளன. ஆதிவாசிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மீதான அத்தனை வழக்குகளும் மழுப்பப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆதிவாசி அடித்துக்கொல்லப்படுவது கொன்றவர்களாலேயே பதிவுசெய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு உருவானது. என்னாயிற்று வழக்கு? அங்கே குற்றவாளிகள் வலதுசாரிகள்.

அங்கும் பிரச்சினை கட்சிச்சார்புள்ள அறிவியக்கவாதிகள்தான். கட்சியின் கண்காட்டலுக்கு ஏற்ப அறச்சீற்றம் அடைபவர்கள். கட்சி செய்யும் பாவங்களை மழுப்ப எல்லாவகையான தர்க்கங்களையும் கண்டடைபவர்கள். அங்கும் குரலெழுப்பிக்கொண்டே இருப்பவர்கள் நடுநிலையாளர்கள். அங்கும் மிக அதிகமாக வசைபாடப்படும் சொல் நடுநிலை என்பதுதான்

ஜெ  

ஒரு சிகப்பு அநீதி

இதை நான் எழுதுவதை ஒத்தி வைத்துக்கொண்டே இருந்தேன்.வேறு யாராவது எழுதி வசவு வாங்கிக் கட்டிக்கொள்ளட்டுமே என்ற தற்காப்பு உணர்வு ஒரு காரணம்.இங்கே எப்படி ஒரு தரப்பின் அநீதியை சுட்டிக் காட்டுவது இன்னொரு தரப்பின் அநீதியை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளவோ மாற்றப்படவோ பயன்படுத்தப்படவோ படுகிறது என்பது இன்னொரு காரணம்.

கடந்த சில வருடங்களாக திருவனந்தபுரம் செல்லும்போதெல்லாம் அங்குள்ள தலைமைச் செயலகம் முன்பு நிரந்தரமாக இரண்டு தொடர் உண்ணாவிரத போராட்டங்களைப் பார்ப்பேன்.ஒன்று கேரளத்தில் இருக்கும் ஜாக்கோபைட் சர்ச்சுக்கும் இன்னொரு கத்தோலிக்க சர்ச்சுக்கும் இடையே நூற்றாண்டுகளாய் நடக்கும் வாய்க்கால் வரப்பு தகறாறு பற்றியது. சுதந்திரத்துக்கும் முன்பு சி பி ராமசாமி அய்யரிலிருந்து இன்று மோடி வரை இந்த வழக்கில் பஞ்சாயத்து பேச அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்னொரு சமரம் 2017 ல் வாளையாரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட இரண்டு தலித் சிறுமிகள் குறித்த வழக்கில் நீதி வேண்டி.

இருவரும் கட்டிடத் தொழிலாளி பெற்றோருக்கு பிறந்தவர்கள்.2017 ஜனவரி 13 அன்று பெற்றோர்கள் வேலைக்குப் போயிருந்த போது இவர்களின் மூத்த பெண் அவர்களின் ஒரே அறை கொண்ட வீட்டில் உத்திரத்திலிருந்து பிணமாகத் தொங்குகிறார்.அவளுக்கு அப்போது வயது 13.,அப்போது அவளுடன் 9 வயது தங்கையும்

உடன் இருந்திருக்கிறாள்.அவள் தனது வீட்டிலிருந்து இரண்டு பேர் முகத்தை துண்டால் மூடிக்கொண்டு சென்றதைக் கண்டிருக்கிறாள்.நேரில் கண்ட சாட்சி.ஆனால் இந்த ஒன்பது வயதுப் பெண்ணும் அவளது அக்கா மரித்த அதே உத்திரத்தில் பிணமாய் சரியாக 52 தினங்கள் கழித்து தொங்குகிறாள்.

இரண்டு சிறுமிகளும் தொடர்ச்சியாக பிரதீப் குமார் என்கிற ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் பினராயி அரசு குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வதாகவும் சர்ச்சை எழுகிறது.இரண்டு சிறுமிகளின் தாயே அதைச் சொல்கிறார்.இரண்டு சிறுமிகளின் கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்றியது,பிணக் கூறாய்வில் முதல் சிறுமி பாலியல் உறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார் என்று எழுதியதை மாற்றி அரசு தரப்பு டாக்டர் மூலம் அவளது ஆசன வாயில் ஏற்பட்டிருந்த காயங்கள் பைல்ஸ் தொந்திரவினால் இருக்கலாம் என்று சொல்லவைத்தது உபியில் நடந்தது போலவே தலித் சிறுமிகளின் உடல்களை பெற்றோர்க்கும் சொல்லாமல் அதிகாலையில் போலீசாரே எரித்தது என்று பல விஷயங்களில் பினராயி அரசின் அழுத்தம் இருந்தது என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.இதன் உச்சமாக அல்லது நிரூபணமாக இந்த போக்சோ வழக்கில் குற்றம் சாட்ட்டப்பட்ட பிரதீப் குமாருக்கு ஆதரவாக வாதாடிய ராஜேஷ் என்ற வக்கீலையே அரசு குழந்தைகள் நல வாரியத்துக்கும் தலைவராக பிறகு அரசு நியமித்தது!அவர் இதுபோன்றே பல போக்சோ குற்றவாளிகளுக்காக வாதாடியவர் என்பதுதான் அவரது சிறப்புத் தகுதி!

எதிர்பார்த்தது போல எதிர்க் கட்சிகள் இதில் சேர்ந்துகொண்டு கூச்சலிட ஆரம்பித்ததும் வழக்கு சிபி ஐக்கு மாற்றப்பட்டுள்ளது.நடுவில் பிரதான குற்றவாளியான பிரதீப் குமாரும் மர்மமான முறையில் ‘தற்கொலை’செய்துகொண்டார்.

பிரச்சினை வெளியானதும் தலித் சிறுமிகளின் தாயாரை ஒரே ஒருமுறை பினராயி சந்தித்திருக்கிறார்.அப்போது ‘இதை அரசியலாக்கக் கூடாது’என்ற ஒரே ஒரு ‘ஆறுதல் வார்த்தையை’ மட்டுமே அவர் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.

இத்தோடு நான்கு வருடங்கள் ஆகிவிட்டன.இன்னும் அந்த வழக்கில் நீதி கிடைக்கவில்லை.கிடைக்கும் அறிகுறியும் இல்லை.நேரில் கண்ட சாட்சியும் முக்கியக் குற்றவாளியும் இறந்து விட்டனர் அல்லது கொல்லப்பட்டு விட்டனர்.அவருடன் இருந்த கூட்டாளிகள் ஜாமீனில் விடப்பட்டு விட்டார்கள்.

இன்று அந்த சிறுமிகளின் தாய் தன் தலையை மொட்டை அடித்துக்கொண்டு பினராயியை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார் என்ற செய்தி படித்தேன்.தோற்றுப் போய்விடுவார் என்பதில் ஐயமில்லை. இந்த அநீதியை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதே அவர் நோக்கம்.

ஆனால் இதுபற்றி அண்டை மாநிலமான தமிழ் நாட்டில் கூட யாரும் ஒருவரி இதுவரை எழுதவில்லை.பலருக்கு இந்தச் செய்தியே தெரியாது என்றால் கேரளத் தொடர்புடைய அறிவுஜீவிகள்,எழுத்தாளர்கள், முக நூல் கொந்தளிப்பாளர்கள் யாருக்கும் கூட இது ஒரு பொருட்படுத்தத் தக்க செய்தியாகவே ஏனோ தோன்றவில்லை.அவர்கள் கவனத்துக்கு தொடர்ந்து மர்மமான முறையில் வராமலே இந்த செய்தி கண்ணாமூச்சி காட்டுகிறது

வலது சாரிகளின் குற்றங்களை இடது சாரிகளும் இடது சாரிகளின் அக்கிரமங்களை வலது சாரிகளும் தயங்காது கூச்சமின்றி செய்கிறார்கள்.

இவர்களைப் பிரித்திருப்பதாக சொல்லப்படும் அந்தக் கோடுதான் என்ன?எங்கே?

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.