இருநோயாளிகள், விருந்து – கடிதங்கள்

இரு நோயாளிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இருநோயாளிகள் கதையை வாசித்தபோது ஆமென்பது கதையை வாசித்த அதே உணர்ச்சியை அடைந்தேன். தனிமை சோர்வு கசப்பு. அந்தக்கதையிலாவது அந்த கைவிடப்பட்ட நிலை அந்த எழுத்தாளனின் அகத்திலிருந்து வந்தது என்னும் உணர்வு இருந்தது. இங்கே இரு மேதைகளுக்கும் அவர்களின் சூழலில் இருந்து அந்த நோய் வருகிறது.

சங்கம்புழா ரொமாண்டிக் கவிஞர். அவரைப்போன்றவர்கள் வாழ்க்கையின் உண்மைகளில் இருந்து விலகி கனவில் திளைக்கிறார்கள் [ஆனால் இவர்தான் அறிஞர் அண்ணாவின் கதையான செவ்வாழைக்கு முன்னோடியான வாழைக்குலை என்ற கவிதையை எழுதியவர் என நினைக்கிறேன். பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் அதை மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்த மொழியாக்கத்தைத் தழுவித்தான் அண்ணா எழுதினார்]

ஆனால் புதுமைப்பித்தன் வாழ்க்கையின் உண்மைகளை நேருக்குநேர் எதிர்கொள்கிறார். ஆகவே நோயுறுகிறார். ஒருவர் தனக்கு பிடித்தவற்றை முத்தமிடுகிறார். இன்னொருவர் நேருக்கு நேர் நிற்கிறார். எதுவானாலும் நோய் ஒன்றுதான். அதை நினைத்துத்தான் புதுமைப்பித்தன் சிரித்திருப்பார்

ரவிசங்கர்

இரு நோயாளிகள் கதையை பற்றி: நினைவு 1: ஜெ ஒரு நூலகத்தில் நெடுநேரம் படித்துவிட்டு மண்டை சூடேற சிந்தனை செய்துகொண்டே வெளியே வருகிறார். வாசலில் மக்கள்திறல் இங்கும் அங்கும் எதை எதையோ பேசி கூட்டமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். எதையும் கற்றறியும் ஆர்வமே இல்லாமல் வெறுமனே வாழும் சாமனியதனத்தை நினைத்து துக்கம் தொண்டையை அடைத்து மேலெழ கண்கலங்குகிறார்.

நினைவு 2: ஜெ துறவு வாழ்க்கையில் இருக்கும் பொழுது தெருவில் கிடந்து வாழும் ஒரு தொழுநோயாளியை பார்க்கிறார். எந்த பிரயோஜனமும் இல்லாத வாழ்க்கையை ஏன் இவர் வாழ்கிறார், இதற்கு பதில் தற்கொலை செய்து கொண்டு சாகலாம் அல்லவா என்று நினைக்கிறார். மறுநாள் எதேச்சையாக அவ்வழியே வரும்பொழுது அத்தொழுநோயாளி ஒரு தெருநாய்க்கு உணவளிப்பதை பார்க்கிறார். உணர்ச்சி மேலெழ அங்கேயே கண்ணீர்விட்டு அழுகிறார்.

இரு நோயாளிகள் சிறுகதையில் ஒரு வரலாற்று தருணம் ஒரு அற்ப சந்தர்ப்பமாக எவ்வாறு சாமானிய ஆழ்மனதில் பயணம் செய்து சென்றடய வேண்டிய அறிவை சென்றடைந்தது என்பதை குறிப்பதாக படுகிறது.

இக் காலகட்டத்தில் காட்சிஊடக தொழில்நுட்பம் அறிந்த நூண்ணுணர்வு கொண்ட கலைங்கனை ஒரு வரலாற்று தருணம் 80 வருடங்கள் பயணம் செய்து வந்து அடைந்துள்ளது. இனி அக்கலைங்கனின் கற்பனை திறனால் இக்காலாகட்ட தொழில்நுட்ப உதவி கொண்டு அச்சிறு விதை பல நூறு விதைகளாக பரப்பப்படும்.
இவையனைத்தும் மறுபடியும் சாமானிய உள்ளங்களில் எம்மாற்றமும் அடையாமல் பல நூறு ஆண்டுகள் பயணம் செய்து இன்னொரு காலகட்டதை அடையும்.
சமானியனாக வாழ்வதை மிககடுமையாக கண்டித்து வரும் ஜெ, இக்கதை மூலம் சாமானிய இருப்பை நியாய படுத்திருப்பதாக படுகிறது.

சாமானிய மனம் கற்பனை அற்றது, ஒரு நிகழ்வு அவ்வாறே எந்த மாற்றமும் இல்லாமல் பல நூறு வருடம் பயணம் செய்ய ஏற்றது.

சதீஷ்குமார்

விருந்து [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலமா

மீண்டும் சிறுகதைகள் ஒவ்வொரு இரவும் வாசிப்பும் அதன் தகிப்பில் உழல்வதும் அதன் உணர்வுகளையும்,உளத்துடிப்புகளையும் உங்களோடு மானசீகமாக உரையாடி விட்டுத்தான் உறங்க செல்கிறேன்.

“விருந்து” இக் கதை ஒரு கிளாசிக். சாமிநாத ஆசாரிக்கு சொல்வதற்கு ஒரு கதயிருக்கு அது நமக்கு தேவையில்லை. தாணப்பன் தாத்தாவிற்கும் சொல்வதற்கு இன்னும் மிச்சம் இருக்கலாம்

தூக்குத் தண்டணை கைதியின் எண்ணப்படும் இறுதி நாட்கள்
இப்படி பெருங்கதையாக களமாட வாய்ப்பிருக்கும் கதையை எவ்வாறு தாண்டி செல்வது என்று பாடம் எடுத்து இருக்கின்றீர்கள்.(நாளைய இயக்குனர்களுக்கு ஒரு அட்டகாசமான கலைப் படைப்பு)

இக்கதையை படித்தவுடன் எனக்கு ஜார்ஜ் ஆர்வெல்லின் -தூக்கிலிடுதல் (A- Hanging) கட்டுரை, அக்கட்டுரை ஏற்படுத்திய அதிர்வுமீண்டும் நினைவிலெழும்பியது.
“விருந்து” பெரும் வாசகர்களால் விவாதத்திற்கும் கொண்டாடபடவும் வேண்டிய கதை

”அவன் தாத்தாவிடம் இன்னொருமுறை புன்னகை செய்துவிட்டு அவர்களுடன் சென்றான். கதவு ஓசையுடன் மூடிக்கொண்டது.”

அன்புடன்
சக்தி
(குவைத்)

அன்புள்ள ஜெ

விருந்து கதையில் ஆசாரியின் சொந்தக்கதை, அந்தத் துயரம் உரையாடலின் வழியாக லேசாகக் கோடிகாட்டப்பட்டுள்ளது. முழுக்கச் சொல்லப்படவில்லை. அதைச் சொல்லாமல் ஏன் விட்டீர்கள், அது கதைக்கு ஆழமான உணர்ச்சிகரத்தை அளிக்குமே என்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு நண்பர் சொன்னார், அப்படிப்பார்த்தால் கதையில் அந்த தூக்குக் காட்சியே இல்லையே என்று. அதன்பிறகுதான் கவனித்தேன். அவன் தூக்கில் தொங்குவதுகூட சொல்லப்படவே இல்லை. அவன் தூக்கில் தொங்கும் சத்தம், சிறையில் எழும் எதிர்வினைச் சத்தம் மட்டும்தான் உள்ளது.

கதையை அந்த ஆட்டில் இருந்து நகர்த்தவே நீங்கள் விரும்பவில்லை என நினைக்கிறேன். அந்த ஆடு மட்டுமே கதையின் மையக்குறியீடாக நின்றிருக்கவேண்டுமென நினைக்கிறீர்கள். அந்த ஆட்டின் உடலை உரித்து தொங்கவிட்டு பங்கிடுவது வரை அத்தனை துல்லியமாகச் சொல்லப்படுகிறது. அது ஒரு சிலுவையேற்றம் போலவே உள்ளது

மதன் ராமகிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2021 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.