அன்பான நன்றி

புத்தகக் கண்காட்சி நேற்றோடு நிறைவு பெற்றது. இந்த 14 நாட்களில் எத்தனையோ விதமான வாசகர்களைச் சந்தித்தேன். உரையாடினேன். கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். ஆசையாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஒரு எழுத்தாளன் மீது வாசகர்கள் காட்டும் அன்பை முழுமையாக உணரக்கூடிய தருணமிது.

காலை 11 மணிக்கு தேசாந்திரி அரங்கிற்கு வந்து மாலை ஐந்துமணிக்கு நான் வரும் வரை காத்திருந்த வாசகருக்கு எப்படி நன்றியை வெறும் வார்த்தைகளால் சொல்வது.

என்னிடம் ஒரு கையெழுத்து வாங்குவதற்காக மட்டுமே பெங்களூரில் இருந்து பயணம் செய்து வந்த குடும்பத்தினர் காட்டிய நேசம் உன்னதமானது.

எனது நலனுக்காக திருப்பதிக்குப் போய் வேண்டுதல் செய்து பிரசாதம் கொண்டு வந்த வாசகர் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும் என்று மனதார வாழ்த்தினார். அது தான் உண்மையான அங்கீகாரம்.

80 வயதான தாத்தா என்னைக் காண வேண்டும் என சொன்னதால் அவரைச் சக்கர நாற்காலியில் உட்கார வைத்து புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வந்திருந்தார் அவரது பேத்தி.

அந்த தாத்தா மனம் நிறைந்த அன்போடு எனக்கு ஆசி அளித்தார். அந்த நிமிஷத்தில் கண்கலங்கிப் போனேன்.

நான் படிப்பதற்காக புத்தர் தொடர்பான நூல்களை பரிசாக அளித்த நண்பருக்கும். என்னை அழைத்துக் கொண்டு போய் வேண்டிய புத்தகம் எல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பைநிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்த வாசகிக்கும். என் பெயரை தனது பையனுக்கு வைத்துள்ள இளம் தம்பதிக்கும் தீராத நன்றிகள்.

இப்படி நூறு நூறு மறக்கமுடியாத நினைவுகள். அற்புதமான வாசகர்கள்.

தேசாந்திரி பதிப்பகத்திற்கான உங்கள் ஆதரவுக்கும் அன்பிற்கும் என் மனம் நிரம்பிய நன்றி.

புத்தகக் கண்காட்சியில் உறுதுணை செய்த நண்பர்களுக்கும் ,ஸ்ருதி டிவி கபிலன், சுரேஷ், மணிகண்டன். அகரமுதல்வன், அன்புகரன், சண்முகம், கல்கி, தினமணி, தி இந்து தமிழ், விகடன், மற்றும் அனைத்து பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கும் அன்பும் நன்றியும்.

4 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2021 02:23
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.