கொதி,வலம் இடம்- கடிதங்கள்

கொதி[ சிறுகதை]

அன்புள்ள ஜெ

கொதி கதையை வாசித்தேன். அதுவரை நீங்கள் எழுதிய பல கதைகளுடன் வந்து இணைந்துகொண்டது. இந்துமதம் ஒரு நிறுவனமாக இங்குள்ள ஏழை மக்களின் பசியை அட்ரஸ் செய்யவில்லை. அதை வெள்ளையானை முதல் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். சமூக ஒடுக்குமுறையையும் அட்ரஸ் செய்யவில்லை. அந்த இடைவெளியில்தான் கிறிஸ்தவமும் இஸ்லாமும் நுழைந்தன. ஆனால் அதை இன்றுவரை இங்குள்ள மதக்கண்மூடித்தனம் கொண்டவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஏற்கவில்லை. வேதத்தில் உணவை பங்கிடு என்று சொல்லியிருக்கிறது, உபநிஷத்தில் எல்லாரும் சமம் என்று சொல்லியிருக்கிறது என்று பசப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

கொதி கதையிலுள்ள கொதிப்பை எப்போது ஒரு சமூகமாக நாம் அடையாளம் காண்கிறோமோ அப்போதுதான் நாம் வெற்றிபெறும் சமூகமாக இருக்கமுடியும். அந்த உண்மையை பழிப்பு பேசியோ பசப்பு பேசியோ மழுப்பவே முடியாது.

எஸ்.சரவணக்குமார்

 

அன்புள்ள ஜெ,

கொதி கதையை உணர்ச்சிக்கொந்தளிப்புடன் வாசித்தேன். நரநாராயணசேவை என்றால் ஃபாதர் ஞானையா செய்வதுதான். பாவப்பட்ட ஜனங்க என்ற ஒரு வார்த்தையையே ஆப்தமந்திரமாக கொண்டவர். நான் எங்களூர்ப்பக்கம் அருந்ததியர் காலனியை பார்ப்பதுண்டு. அங்கே மதம்சார்ந்து நுழைபவர்கள் கிறிஸ்தவர்கள் மட்டும்தான். எந்த இந்து சாமியாரும் அங்கே நுழைந்ததில்லை.

[இப்போது கோவை பகுதியில் ஜக்கி குருகுலம் சார்ந்து சில பணிகளை அருந்ததியர் நடுவே செய்கிறார்கள். அதை பார்த்தேன். ஆனால் அதற்கு அவ்வளவு எதிர்ப்பு இடதுசாரிகளிடமிருந்து வருகிறது. அவர்கள் ஜக்கியை கொச்சைப்படுத்துவது இதனால்தான்]

ஞானையாவின் ஞானம் என்பது அவருடைய பசி வழியாக அவருக்குக் கிடைப்பதுதான். அவர் தன் கண்ணீரை ஏழைகளுக்கு கொடுத்தார். கிறிஸ்துவின் ரத்தம் அவருக்குக் கிடைத்தது

எம்.செந்தில்குமார்

வலம் இடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வலம் இடம் கனவில் நாம் எதை தொடுகிறோமோ அதைதான் நிஜத்தில் தொடுகிறோம். அல்லது நிஜத்தில் தொடவேண்டியதை முன்பே கனவில் தொட்டுவிடுகிறோம்.

பகவதி தன் மீதான அளவில்லா அன்பு கொண்ட பக்தனுக்கு அலைதல் இல்லாமல் அவரிடமே செல்லும் கதைதான் காவில் பகவதியின் தொமம். கணேசனுக்கு எருமைதான் அவனின் தெய்வம். அதனால் தான் முதலில் செல்லமை அளப்பங்கோடு சாஸ்தாவை பற்றி சொன்ன போது கணேசனுக்கு பொருட்டாகயில்லை. பின்னால் அளப்பங்கோடு அப்பசியாலேயே கணேசனின் பக்திக்காக அவனிடமே அது அவரால் கொண்டு சேர்க்கப்படுகிறது.

இக்கதையில் எழுதபடாத ஒன்று அது கணேசனுக்கும் செல்லமைக்கும் இன்னும் குழந்தைகள் இல்லை என்பது. வழக்கமாக என்றால் அதுதான் கதையாக்கபட்டு, பிராணிகளின் மீதான அவர்களின் அன்பு விளக்க பட்டிருக்கும்.

வடம் இடம் கதை சிறுகதையின் நேர்க்கோட்டில் இல்லையென்பதுபோல் இருந்தாலும்  ஒரு முழு வாழ்க்கையை காட்டுகிறது. ஹிந்துஸ்தானி இசையைபோல் தன்னுள்ளேயே அழைத்து அழைத்து ஒரு உச்சத்தை தொடுகிறது.

இக்கதையை முழுவதுமாக என்னால் மேல்லதிக வாசிப்பு செய்ய முடிந்ததா என்று தெரியவில்லை. தளத்தில் பிற கடிதங்கள் வெளியாகும்போது இன்னும் வாசிப்பின் சாத்தியங்கள் தெரியவரலாம்.

நன்றி

பிரதீப் கென்னடி.

 

அன்புள்ள ஜெ

வலம் இடம் ஓர் அருமையான கதை. அந்தக்கதையின் ஆழமும் நுட்பமும் பேசிப்பேசி தெளிந்து வரும். நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். வாழ்க்கைக்கு அருகே சாவு உள்ளது. ஒவ்வொருவருக்கு அருகிலும் சாவு உள்ளது. சாவு நெருங்கும்போது அது நமக்கே தெரியும். என் அம்மா சாவதற்கு ஒருநாள் முன்பு அவர் கண்ட ஒரு கனவைச் சொன்னார்கள். அம்மா காலையில் திண்ணையில் அமர்ந்திருக்கும்போது எதிர்த்திண்ணையில் அம்மாவின் அக்கா அமர்ந்திருப்பதுபோல கனவு வந்தது. அம்மாவின் அக்கா இறந்து ஏழு ஆண்டுகள் கடந்திருந்தன. அம்மாவுக்கு அந்த கனவின் அர்த்தம் தெரிந்திருந்தது. இன்னும் கொஞ்சநாள்தாண்டா சீக்கிரம் போயிருவேன் என்று சொன்னார். மறுநாளே போய்விட்டார்

கதையில் எருமைக்கு அருகே அவன் கண்டது எருமையின் சாவைத்தான். அவன் கனவில் அதைக் கண்டுவிட்டான்

சண்முகராஜா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2021 10:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.