இரண்டு இளம் படைப்பாளிகள்

காளி பிரசாத்: ஆள்தலும் அளத்தலும்

மராத்திய எழுத்தாளர் விலாஸ் சாரங் எழுதிய தம்மம் தந்தவன் நாவலை மொழியாக்கம் செய்த எழுத்தாளர் காளிபிரசாத் ஆள்தலும் அளத்தலும் என்ற தனது முதல் சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். பதாகை மற்றும் யாவரும் வெளியீடாக வந்துள்ளது.

இவரது கதைகளை முன்னதாகச் சொல்வனம் மற்றும் பதாகை இதழில் வாசித்திருக்கிறேன்.

இந்தத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளை நேற்று படித்தேன். தினசரி வாழ்வின் நுண்தருணங்களைக் கதைகளாக எழுதுகிறார். சரளமான எழுத்து நடை.

பழனி கதையில் வரும் கதாபாத்திரச் சித்தரிப்பும் கதை சொல்லும் முறையும் மிகவும் பிடித்திருந்தது.

அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

சுஷில்குமார் : மூங்கில்

சுஷில்குமார் சிறுகதைகளை யாவரும்.காம் மற்றும் பதாகையில் படித்திருக்கிறேன். அவரது முதல் சிறுகதை தொகுப்பு மூங்கில் யாவரும் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது

மூங்கில் ஒரு அற்புதமான கதை. மூங்கில் மேட் ஓவியங்கள் செய்யும் அப்பாவினைப் பற்றி மகள் வரையும் சித்திரங்களே கதை. புகழ்பெற்ற ஒவியக் குடும்பத்தில் வந்த அந்த மனிதர் தற்போது வயிற்றுப்பாட்டிற்காக ஒவியங்களை வரைந்து கொண்டிருக்கிறார். அப்பா தனி அறையில் ஒவியம் வரையும் காட்சி மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது. வீட்டில் அம்மாவும் அக்காவும் கூடை பின்னிக் கொடுப்பதில் அவர்களின் வாழ்க்கை ஒடுகிறது. அந்தத் தந்தையின் வீழ்ச்சி காவிய சோகம் போலக் கதையில் அழுத்தமாக வெளிப்படுகிறது. மிக நல்ல கதை.  கதைகளில் வரும் உரையாடல்களை மிக அழகாக எழுதுகிறார் சுஷில்குமார்.

அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2021 22:13
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.