யமி [சிறுகதை]

நூதனாவின் பிறவிப் புழையில் மிக உச்ச வலியொன்று விட்டு விட்டுத் தெறித்தது.

திறமையான திரைப்பட எடிட்டர் செய்த ஹிப்ஹாப் மான்டேஜ் போல் கலவையான காட்சிகள் தோன்றின: இளஞ்சிவப்புக் கோடுகள், மெரீனா பீச், ராபியா ஆன்ட்டி, ரிக் வேதம், அம்மாவின் பிணம், டார்க் சாக்லேட், டிவி ரிமோட் அப்புறம் நவீனின் முகம்…


லோக்கல் அனஸ்தெடிக் செலுத்திக் கொண்டு உடல் மரத்துப் போகக் காத்திருந்தாள். மெல்ல வலது காலைத் தூக்கிப் பார்த்தாள். தூக்க முடிந்தது. அப்புறம் இடது காலை. பாதி வரை முடிந்தது. அப்புறம் இரண்டு கால்களையுமே அசைக்க முடியவில்லை.

தட்டுத் தடுமாறித் துருவற்று மின்னிய கத்தியைக் கையிலெடுத்து நடுக்கத்துடன் தனது வயிற்றில் வைத்தாள். மானசீகமாய் நீள அகலம் கணித்து விரிவுற்றிருந்த தொப்புளுக்கு மூன்று அங்குலம் கீழே கீறினாள். புதிய ரத்தம் அவசரமாய் எட்டிப் பார்த்தது. முகத்தைச் சுழித்து, பல்லைக் கடித்து வலியை அடக்கிக் கோடிழுத்தாள்.

அவள் படுத்திருந்த கட்டிலினருகே குனிந்து நின்று அவள் கைகளைப் பற்றியிருந்த நவீன் கண்களை மூடிக் கொண்டான். விடியல் விழிகளைத் திறக்கத் தொடங்கியது.

*

மொத்த நட்சத்திரங்களையும் உதிர்த்துப் பூரண நிர்வாணம் காட்டியது வானம். துகில் உரித்த பெண்ணின் கொலுசுகள் போல் திட்டுத்திட்டாய் மேகங்கள் சிணுங்கின. நிலா பிறந்தமேனியின் வனப்பில் மறுநாள் வளர்பிறையா தேய்பிறையா எனக் குழம்பியது.

சற்றே வெக்கையேறிய துவர்ப்புக் காற்று மெரீனாவின் மணற்பரப்பில் அம்மணமாய்ப் படுத்திருந்த நூதனாவையும் நவீனையும் தீண்டியும் தடவியும் தழுவியும் நகர்ந்தது.

நூதனாவின் வீங்கித் திரண்டிருந்த வயிற்றில் கைவைத்தான் நவீன். உள்ளே ரகசியம் கொண்டிருந்த சிசுவின் அசைவுகளை மொழிபெயர்க்க முயன்றான். அவன் கை மீது தன் கையை எடுத்து வைத்துக் கொண்டாள் நூதனா. மூன்று துடிப்புகள் ஒற்றைப் புள்ளியில் சங்கமித்தன. அவற்றின் வெம்மையில் பிரபஞ்சம் மெல்லத் தடுமாறியது.

“பையன் தானே?”

மெல்லக்கேட்ட நவீனின் கையைச் சட்டென வயிற்றிலிருந்து தட்டிவிட்டாள் நூதனா.

“இல்ல. பெண்.”

“பார்ப்போம்.”

“ம்.”

ஒருவேளை ஆணும் பெண்ணுமாய் இரட்டைகளாய் வந்து பிறந்து விடுமோ என்கிற எண்ணமெழுந்தது நூதனாவுக்கு. மனசு திடுக்கிட்டது. பேச்சை மாற்ற விரும்பினாள்.

“இன்னிக்குத் தேதி என்ன?”

“யாருக்குத் தெரியும்!”

“இப்ப ஏழாவது மாசம் நடக்குதுன்னு நினைக்கிறேன்.”

“வரும் போது வரட்டும். கணக்கு எதுக்கு?”

“ஒண்ணும் பிரச்சனை ஆகிடாதே?”

“ஏதும் ஆகாது. சும்மா குழப்பிக்காதே.”

“ம்.”

“தூக்கம் வருது எனக்கு. நீயும் தூங்கு.”

சொல்லி விட்டு அவளை நுட்பமான மென்மையுடன் அணைத்துக்கொண்டான். புலி ஒன்று அதன் குட்டியைக் கவ்விச் செல்வது போலிருந்த பக்குவம் அந்த முரட்டுச் சிறுபயலுக்கு எப்படிச் சாத்தியப்பட்டது என வியந்தாள். சூழலுக்குத் தகவமைத்தல்!

அப்படித் தன்னை மாற்றிக் கொள்ளும் உயிர்கள் மட்டுமே பிழைத்துக் கிடக்கின்றன.

“என்னால குழந்தையைப் பார்க்க முடியாதுல்ல.”

நவீனிடமிருந்து பதில் வரவில்லை. அவன் உறங்கிப் போயிருந்தான். அன்றைய பகல் முழுக்க அவன் தண்ணீர் தேடியலைந்து வந்திருந்த களைப்பு. நூதனா தன் கைகளால் அவன் முகத்தைத் தொட்டுத் தடவினாள். நெற்றி, கண்கள், மூக்கு, வாய். வாயை அகலத் திறந்து கொண்டு ஒரு குழந்தையைப்போல் அவன் தூங்குவதை உணர்ந்தாள்.

அது என்ன ஆண்டு என யோசித்தாள். உத்தேசக் கணக்கில் 2025 எனத் தோன்றியது. குழந்தையின் பிறந்த தேதி எல்லாம் எப்படிக் கண்டுபிடிப்பது எனக் கவலைப்பட்டாள்.

நூதனா நெடுநேரம் யோசனையாய் விழித்திருந்தாள். இருண்டிருந்த அவள் கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது. தன்னைப் போல முன்னொரு காலத்தில் கரையருகே கிடந்தழுத ஒருத்தியின் கண்ணீர் தான் கடலெனத் திரண்டதோ என்று நினைத்தாள். கடலலைகளின் ரீங்காரம் அவளைத் தொந்தரவு செய்தபடியே இருந்தது.

கண்ணயரும் சமயம் அதே மணலில் நிகழ்ந்த அவர்களின் முதற்கலவி நினைவுக்கு வந்தது. வானம் பார்த்துக் கண் திறந்திருந்த யோனி சிலிர்த்தது. புரண்டு படுத்தாள்.

*

பழைய செய்தித் தாள் பரப்பி மலங்கழித்து, டிஷ்யூவில் குதந்துடைத்து, அத்தாளைச் சுருட்டி, வீட்டிற்கு வெளியே சற்றுத் தொலைவில் துர்நாறிக் கிடந்த குப்பை மேட்டில் எறிந்து விட்டு வந்தாள் நூதனா. இருளைப் போல் அந்த வாடையும் பழகி விட்டது.

கிடைக்கும் தண்ணீர் என்பது குடிப்பதற்கு மட்டுமென்றாகி விட்டது. கை கழுவ, கால் கழுவ நீரைப் பயன்படுத்துவது எப்போதேனும் சாத்தியப்படும் சொகுசு. நீரை விடவும் காகிதங்கள் ஏராளம் கிடைக்கின்றன - செய்தித் தாள், கணிப்பொறி அச்சிட்ட தாள்கள், எவரோ கைப்பட எழுதிய தாள்கள், எதுவுமற்ற தூயவெள்ளைத் தாள்கள், பணம் என.

குளிப்பதென்றால் உலர்குளியல் தான். முதிர்காலை மிதவெயிலில் சுமார் கால் மணி நேரம் உட லின் எல்லாப் பகுதிகளிலும் வெளிச்சம், வெப்பம் நன்கு படுவது போல் வெவ்வேறு நிலைகளில் நிற்க, அமர வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய் வியர்வை உடம்பெங்கும் ஊற்றெடுக்கத் துவங்கும். அழுக்குகளும், கிருமிகளும் அதில் அடித்து வரப்படும். பின்னர் ஈரிழைத் துண்டு கொண்டு அழுத்தம் திருத்தமாக உடம்பெல்லாம் பொறுமையாய்த் துடைத்தெடுக்க வேண்டும். ஒருமுறை ஆஃப்ரிக்க தேசத்திலிருந்து இறக்குமதியான கிருமிநாசினி ஜெல் ஒன்று ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் கிடைத்தது. சூரிய ஒளிக்குப் பதிலாக அதைச் சில தினங்கள் பயன்படுத்தினார்கள்.

ஓராண்டில் வீடும், வீட்டைச் சுற்றிய அவசியமானதோர் எல்லையும் விரல் நுனிக்கு வந்து விட்டது நூதனாவுக்கு. அதைத் தாண்டிச் செல்ல நவீனின் கைகள் வேண்டும்.

மூன்றாமவர் எவரேனும் பார்த்தால் அவளைப் பார்வையற்றவள் என்று சொல்லவே முடியாது. மூன்றாமவர் என்று எவரும் இப்பூமியில் இல்லை என்பது வேறு விஷயம்.

“நவீன், நாள் தள்ளிப் போகுதுடா.”

சன்னல்வழி வந்துவிழுந்த சூரிய வெளிச்சத்தில் லயித்திருந்தவன் காதுகளில் துண்டு துண்டாய் அச்சொற்கள் விழுந்து மூளைக்கு நகர்ந்து புரிபட சற்று அவகாசமெடுத்தது.

“ஏய், நிஜமாவாடி?”

அவன் கேள்வியில் அர்த்தமில்லை தான். ஆனால் எல்லாச் சமயங்களிலும் ஒருவர் அர்த்தம் பொதிந்தே பேசிக் கொண்டிருக்க முடியுமா! அதுவும் உணர்ச்சிகள் கமழும் தருணங்களில் உளறல்களே உடன் வருகின்றன. உளறல் அர்த்தம் பெறும் கணங்கள்.

நூதனா அவன் முகத்தில் மிளிரும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்து புன்னகைத்தாள். அதைத் தன் முகத்தில் பிரதியெடுக்க முயன்றாள். அவ்வளவு நன்கறிவாள் அவனை.

“தேதிலாம் தெரியல. ஆனால் நிச்சயம் ஒரு மாசம் மேல ஆகுது.

“எப்படி உறுதியாச் சொல்ற?”

“முந்தின அமாவாசையில் அம்மாவுக்குப் படையல் வெச்சு சாமி கும்பிட்ட அன்னிக்கு தான் பீரியட்ஸ் ஆனேன். அதுக்கு அப்புறமும் ஒரு முறை அமாவாசை வந்து போயி ரெண்டு வாரமாவது இருக்குமே. எப்படிக் கணக்குப் பார்த்தாலும் நாற்பது நாள் ஆகுது. இவ்ளோ நாளெல்லாம் தள்ளிப் போனதில்ல. மணியடிச்ச மாதிரி டான்னு வந்திடும்.”

“வாவ்.”

நூதனாவை அணைத்துக் கொண்டான் நவீன். அதில் ஒரு பெருமிதம் மினுங்கியது. ஆடையற்ற அவனிடமிருந்து ஆடையற்ற அவளுக்கு அது சட்டெனத் தொற்றியது.

அன்று உணவு தேடப் போகும் போது சிதிலமுற்றிருந்த க்ரீம்ஸ் ரோடு அப்போல்லோ கிளையை உடைத்து நுழைந்து நூதனா தாளில் கிறுக்கிக் கொடுத்திருந்த மருத்துவச் சாதனங்கள் எல்லாவற்றையும் கவனமாக எடுத்து மூட்டை கட்டிக்கொண்டான் நவீன்.

மருந்துகள், பரிசோதனைக் கருவிகள் முதல் அறுவைக்கான உபகரணங்கள் வரை அதிலிருந்தன. நூதனாவுக்கு நான்காமாண்டு மருத்துவப் பாடங்கள் நினைவிலாடின.

மறுநாள் காலை எழுந்ததும் நூதனா அவற்றிலிருந்து தடவிப் பார்த்து ப்ரக்னன்ஸி டெஸ்ட் கிட்டை எடுத்து நவீனிடம் கொடுத்தாள். பிறகு அவன் தோளைப் பற்றிக் கொண்டு ஒற்றைக் காலைத் தூக்கி நாற்காலியில் வைத்து ஒரு நெகிழிக் குப்பியில் சிறுநீர் பெய்தாள். அதை நளினமாய் நவீனிடம் கையளித்துக் காலைக் கீழிறக்கினாள்.

“இதில் ஒரு ட்ராப் எடுத்து…”

“தெரியும்.”

பாக்கெட் பிரித்து சிகரெட் எடுக்கும் லாவகத்துடன் நவீன் அந்தக் கருவியை வெளியே எடுத்து அவளது சிறுநீரிலிருந்து ட்ராப்பரில் மூன்று துளியெடுத்து அதில் வைத்தான்.

சில நொடிகளில் அதில் ‘C’ என்பதற்கு நேராக ஓர் இளஞ்சிவப்புக் கோடு தோன்றியது.

“ஒண்ணு…”

நவீன் அடுத்து உச்சரிக்கவுள்ள சொல்லுக்காகப் பதற்றத்துடன் காத்திருந்தாள் நூதனா. கலைடாஸ்கோப் அருவ உருவங்கள் போல் அவளது முகத்தில் உணர்ச்சிகள் மாறின.

அடுத்து ‘T’ என்ற எழுத்துக்கும் நேராக மற்றொரு இளஞ்சிவப்புக் கோடு தோன்றியது.

“ரெண்டு!”

“ஹேய்ய்ய்…”

இருவரும் கத்திக் கொண்டு கட்டிக் கொண்டார்கள். நூதனாவின் கண்களின் ஈரம் நவீனின் மார்பில் பிசுபிசுத்தது. அவன் இதயத் துடிப்பு அவள் கன்னத்தில் அதிர்ந்தது.

“அம்மா இருந்திருந்தா நல்லா இருக்கும்.”

நூதனாவின் குரலை உள்வாங்கித் தடுமாறி யோசித்து விட்டுச் சொன்னான் நவீன் -

“இப்ப உலகத்தில் ஒரே அம்மா நீ தான்.”

“கடைசி அம்மாவா?”

“ஒருவகையில் முதல் அம்மா!”

ரசித்துச் சிரித்தாள் நூதனா. எத்தனை ஆண்டுகள் அவளுக்கு எரிச்சலூட்டிய குரல். சட்டென சில காலத்தில் எல்லாம் தலைகீழாய் மாறி விட்டது பேரதிசயம் தான்.

அவளை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு அவன் வெளியே கிளம்பினான். குளிக்கச் சோம்பலாக இருந்தது அவளுக்கு. நெடுநேரம் ப்ரக்னன்ஸி டெஸ்ட் கிட்டில் அந்த இரண்டு இளஞ்சிவப்புக் கோடுகளை ஆசையாய்த் தடவியபடியே படுத்திருந்தாள்.

*

நள்ளிரவில் உறக்கம் கலைந்த நூதனா நிதானமாய் எழுந்து சென்று வழக்கமான இடத்தில் வைத்திருந்த சொம்பை எடுத்துத் தண்ணீர் பருகினாள். முழுச் சொம்பு நீர் தீர்ந்த போதும் தாகம் அடங்கவே இல்லை என உணர்ந்து போது கவனமாய்த் தன் உடலைக் கவனித்தாள். உடம்பு பிடிவாதமாய்க் கோருவது நீரையல்ல எனப் புரிந்தது.

குளிர் உடம்பில் ஊடுருவி ஓர் ஊக்கி போல் மாயச் சமிக்ஞை தந்து கொண்டிருந்தது. மெல்ல நடந்து கட்டிலுக்கு வந்து நவீனின் வெற்றுமார்பில் கைவைத்து எழுப்பினாள்.

அன்றைய கலவி இரு மிருகங்களுடையது போல் மிக மூர்க்கமாக இருந்தது. அந்தக் கசப்பான இருளிலும் கண்ணாடித் துல்லியம் போல் நவீனை அங்குலம் அங்குலமாய் அளந்தலைந்தாள். தன் குற்றவுணர்வைத் தன் அகங்காரத்தால் எதிர்கொண்டாளோ என்பதாய் நவீனுக்குத் தோன்றியது. அன்று ஆட்டத்தில் அவள் கை ஓங்கியிருந்தது.

நவீன் நிறைந்த, நீடித்த புன்னகையுடன் அடிமை போல் அவளது இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து கட்டளைகளுக்குத் தாள்பணிந்து கீழ்படிந்தான். அதற்கு முன்பு அவளது அப்படியொரு முகத்தை அவன் கண்டதே இல்லை. கலவி தீர்ந்ததும் தனது கழுத்தைக் கடித்து ரத்தம் குடிப்பாளோ என எண்ணிக் கொண்டான். உச்சம் நிகழ்ந்து கொண்டிருந்த கணத்தில் அவன் பின்னந்தலை முடியைப் பற்றியிழுத்து உயிரற்றுத் துடித்த தன் கண்களில் முத்தமிடச் செய்தாள். அவன் உதடுகளில் உப்புக் கரித்தது.

“ஏய், ஏன்டி அழற?”

“ஒண்ணுமில்லடா. பேசாமப் படு.”

“சொல்லு. என்ன ஆச்சு?”

“டேய், எல்லா அழுகையும் துயரிலிருந்து எழுவதில்லை.”

“ம்.”

“சரி, என் கால் விரல்களுக்குச் சொடுக்கெடு.”

அவன் சட்டென எழுந்து அமர்ந்து கொண்டு அவளது பரிசுத்த நிர்வாணத்தின் மீது போர்வையை வீசி விட்டு அவள் இடது காலை எடுத்துத் தன் மார்பில் வைத்துக் கொண்டு சொடுக்கெடுக்கத் தொடங்கினான். அவள் கண்களை மூடிக் கொண்டாள். அக்கணம் தன்னை ராணியாக உணர்ந்தாள். மொத்த பூமிக்கும் மஹாராணியாக.

நிச்சயம் தன் வயிற்றில் அன்று கரு தங்கி விடும் எனத் தோன்றியது நூதனாவுக்கு.

*

ஒரு தேர்ந்த அறுவை நிபுணரின் நுட்பத்துடன் நூதனாவின் கால் விரல் நகங்களுக்கு நீல நிறப் பூச்சிட்டுக் கொண்டிருந்தான் நவீன். அவள் புன்னகையுடன் பார்த்திருந்தாள்.

“என் மீது உனக்குச் சந்தேகமே வராதுல்லடா.”

“ஏன்?”

“உன்னைத் தவிர இந்தப் பூமியில் தான் வேற ஆம்பிளை யாருமே இல்லையே!”

“குழந்தை ஒண்ணு பிறந்தா அதைத் தான் கொஞ்சுவே.”

“எனக்கு நீ போதும்.”

“மனுஷ இனம் மறுபடி தழைக்க வேண்டாமா?”

“ம்.”

“இப்ப நாம வரலாற்றின் முக்கியத் தருணத்தில் நிக்கறோம். கிட்டத்தட்ட ஆதாம், ஏவாள் போல. மீண்டும் மானுடம் பிழைக்குமா இல்லையா என்பது நம் கையில் தான் இருக்கு. அதை நாம கொஞ்சம் பொறுப்பாகச் செய்யனும்னு தோனுதுடி.”

“பொம்பளைக்குக் குடும்பம் தான் உலகம். அதுக்காக என்ன வேணா செய்வா!”

“ஒரு டாக்டர் நீ. இப்படிப் பேசறயே!”

“கோர்ஸே முடிக்கலயே!”

“சரி, அரை டாக்டர்!”

“பிரதமர்னாலும் பொம்பள இப்படித்தான்.”

“சரி, பொம்பளயா ஆம்பிள சொல்றத லட்சணமாக் கேளு.”

“என்ன?”

“ஒரு குழந்தை பெத்துக்குவோம்.”

“சரி. அப்புறம்?”

“அப்புறமென்ன! வேலை முடிஞ்சுது. காலை ஆட்டாம வை கொஞ்சம் நேரம்.”

*

அன்று இரவு உணவு சூடுபடுத்திய ஓட்ஸும், மீன் ஊறுகாயும். ருசி என்பது மறந்து ஆண்டுகளாகிறது. இப்போது உணவு என்பது தவிர்க்கவியலா ஒரு கடமை மட்டுமே.

“நாம தப்புப் பண்றோமா, நூதனா?”

“சரி, தப்பு எல்லாம் விடு. வேற வழி இருக்கா?”

“இந்த உடலைக் கையாளவே முடியலைல?”

“எத்தனை ஞானிக்கு விளையாட்டுக் காட்டியது! சும்மா சிக்கிடுமா?

“புத்தர், காந்தி மாதிரியா?”

“ஆமா. ஆனா அவர்களும் கூட சில காலம் இருந்துட்டு தானே வெளியேறினாங்க.”

“இதைக் கொன்று புதைக்க மாத்திரை இல்லையா?”

“இருக்கு. ஆனா எதுக்கு?”

“ம். சில சமயம் உறுத்துது. உடம்பு ஒரு சுமை.”

“அப்படி இல்ல. காமம் என்பதே மனதில் விளையாட்டு தான். உடல் வெறும் கருவி.”

“அப்படியா சொல்ற?”

“யோசித்துப்பார். உண்மையில் கலவியின் போதான முன்விளையாட்டுகளில் பாதிக்கு மேல் எந்த உடற்கிளர்ச்சியும் தருவதில்லை. அது எதிர்ப்பாலின உடலின் மீதான தன் அதிகாரத்தை உறுதி செய்வதன் போதை தான். அதன் மீது தனக்குள்ள உரிமையைப் பிரஸ்தாபிக்கும் பெருமிதம் மட்டுமே. உதாரணமாக என் மார்பை நீ சுவைக்கும்போது எனக்கு உணர்நரம்புகள் தூண்டப்படும், ஆனால் உனக்கு அப்படி எந்த நேரடிச் சுகமும் கிடையாது. ஆனால் அதை மிகுந்த ஆர்வத்துடன் செய்கிறாய். காரணம் என்னை, என் அந்தரங்கத்தை வெற்றி கொண்டு விட்ட நிறைவு தான். அப்புறம் என்னை இன்பத்தை நோக்கி அழைத்துப் போகும் கர்வமாக இருக்கலாம். அதைச் செய்கிற மிதப்பு. எப்படிப் பார்த்தாலும் பாலியல் திருப்தியில் பெரும்பான்மை ஈகோதான். அதனால்தான் காமம் மண்டைக்குள் உள்ளது என்கிறார்கள். இடுப்புக்குக் கீழே இருப்பது வெறும் ஸ்விட்ச்.”

“இப்படி ஏதாவது சுயசமாதானத்துக்குச் சாக்கு சொல்லிக்க வேண்டியது தான்.”

“டேய், எதையாவது குழப்பிக்காதே.”

“ம்.”

“சிவனுக்குக் கண்ணப்ப நாயனார் கண் ரெண்டையும் கொடுத்தாப்ல, இதுக்காக நான் கொடுத்திருக்கேன். அதுக்காவது மதிப்புக் கொடுத்து கொஞ்சம் நோண்டாம இருடா.”

“ஸாரி.”

“ஆஊன்னா இதொண்ணைச் சொல்லிடு.”

“ம்.”

“கொன்றால் பாவம் தின்றால் போச்சு. தின்னாம இருந்தாத்தான் தப்பாகிடும்.”

தினம் ஏதாவது சந்தர்ப்பத்தில் உரையாடல் அங்கே போய்க் கொண்டு தான் இருந்தது.
போலவே தினம் தவறாமல் கொன்ற பாவத்தைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.

*

நவீன் அவள் மீதிருந்து எழுந்த போது நூதனாவுக்கு அம்மாவின் நினைவு வந்தது. மானசீகமாய் மன்னிப்புக் கோரினாள். விழியோரம் நீர் கசிந்து மணலை ஈரமாக்கியது.

நவீன் தன் ஆடைகளைப் பொறுக்கி எடுத்து, தட்டி அணிய முற்படுவதை உணர்ந்தாள்.

“நவீன்…”

“சொல்லு.”

“ட்ரெஸ் போடாதே.”

“மறுபடியுமா?”

“அடச்சீ… இல்ல.”

“அப்புறம்?”

“இனிமேல் நாம ட்ரெஸ் போட வேண்டாம்.”

“ஆ!”

“இந்த உலகில் இப்ப யாருமே இல்லை. உன்னையும் என்னையும் தவிர. ஆக, இது வரை நாம ட்ரெஸ் போட்டுட்டு இருக்க ஒரே காரணம் உன்கிட்ட என் உடம்பையும் என்கிட்ட உன் உடம்பையும் மறைச்சுக்கத் தான். இனி அதுக்கும் அவசியமில்லைல.”

“வாவ். ஆமா.”

தன் உடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு வந்து அவளை அணைத்து முத்தமிட்டான்.

நிகழ்ந்த கலவிக்கு நினைவாய் கழற்றிய உடைகளை மணலிலேயே விட்டு விட்டு நிர்வாணமாகவே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். குளிருக்கு உடல் பழகக் கொஞ்சம் நேரமெடுத்தது. நூதனா நவீனின் தோள் மீது சாய்ந்து கொண்டே வந்தாள். அவன் கரங்கள் அவள் இடையைச் சுற்றி வளைத்திருந்தன. அதில் உரிமையிருந்தது.

கடலலைகள் அவர்களின் உடைகளைத் தொடத்தொடர்ந்து முயன்று கொண்டிருந்தன.

*

அன்று தன்னை மெரீனா கடற்கரைக்குப் அழைத்துப் போகச் சொன்னாள் நூதனா.

நவீனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. சுமார் ஓராண்டு முந்தைய கசந்த சம்பவத்துக்குப் பின் அவர்கள் மெரீனா செல்வதே இல்லை. அதை நினைவுபடுத்த வேண்டாம் என்று நவீனும் அதைப் பற்றிப் பேச்செடுப்பதில்லை. ஆனால் இன்று அவளே கேட்கிறாள்.

வீட்டிலிருந்து நடந்து கண்ணகி சிலை சேர்ந்த போது இருட்டத் தொடங்கி இருந்தது.

இடையில் அவளுக்குக் கால் வலிக்கிறதென்றதும் சற்றும் யோசிக்காமல் அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தான். கடந்த ஆறு மாதங்களாய் - அவள் பார்வை இழந்ததில் இருந்து - அப்படித்தான். அவள் ‘ம்’ என்றாலே அவள் தேவையைப் புரிந்து கொண்டு அவளை உள்ளங்கையில் தாங்குகிறான். சில சமயங்களில் அவள் சொல்லாமலும்.

சிறுவயதிலிருந்து நூதனாவுக்கு மெரீனா தான் இஷ்டம்; நவீனுக்கு பெசன்ட் நகர். பெசன்ட் நகர் மெரீனாவை விட ஜனநெரிசல் குறைந்தும் ஒப்பிட்டால் மேலதிகச் சுத்தமாகவும் இருப்பதாகத் தோன்றும் நவீனுக்கு. மாறாக அந்தக் கூட்டம் தான் நூதனாவுக்குப் பிடிக்கும். மகிழ்ச்சி, துக்கம், கவலை, காமம் என்று விதவிதமான உணர்வுகள் ஒளிரும் முகங்கள். ஒரே முகத்தில் கணப்பொழுதில் ஒன்றிலிருந்து மற்றதற்குத் தாவும் வினோதமும் நிகழும். கடலும் அலையும் ரெண்டாம்பட்சம்.

இன்று மனிதர்களும் இல்லை; அவர்களைப் பார்ப்பதற்குக் கண்களும் இல்லை.

மனிதர்கள் மீதான அப்பிடிப்பு இல்லையென்றால் அவள் மருத்துவம் எடுத்திருக்க மாட்டாள். நூதனாவுக்கு கிண்டி பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியலும் சென்னை மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்தது. அவள் இரண்டாவதைத் தேர்ந்தாள். இறுதியாண்டு நுழையும் தருவாயில் தான் உலகம் சிதறிப் போனது.

அலைகள் அன்று சீற்றம் அதிகரித்துக் காணப்பட்டன. அதன் வீச்சு அவள் காதுகளை அச்சுறுத்தியது. அல்லது மனதின் சஞ்சலத்தால் நூதனாவுக்கு அப்படித் தோன்றியது.

அவள் நவீனின் கை பற்றிக் கொண்டு கடலில் கால் நனைத்தாள். முதல் அலையில் ஒரு ஜில்லிட்ட விரோதமும் அடுத்த அலையில் ஒரு ரகசிய அழைப்பும் இருந்தன.

அவள் தவறாமல் அந்த அலையின் அழைப்பை நவீனின் உள்ளங்கையில் அழுத்தித் தெரியப்படுத்தினாள். திடுக்கிட்டு நவீன் அவளைத் திரும்பி உற்றுப் பார்த்தாள். அவன் அப்படித் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து சின்னப் புன்னகையுடன் - அதில் அசலானவெட்கம் தடவியிருந்தது - லேசாய்க் தலையைக் குனிந்தாள். இத்தனை ஆண்டுகளில் நூதனா வெட்கப்பட்டு அன்று தான் பார்க்கிறான். நிலவொளியில் நூதனாவின் முகம் ஒரு தேவதைத்தனம் நிரம்பியதாய்த் தோன்றியது. குலதெய்வம் நினைவுக்கு வந்தது.

“ஆர் யூ ஷ்யூர்?”

“ம்.”

நவீன் சட்டென அவளை அள்ளியெடுத்துக் கொண்டு கரைக்கு வந்து கிடத்தினான். கடலும், நிலவும், காற்றும், வானும் அவர்களின் நிர்வாணத்துக்குச் சாட்சிகளாகின.

உலகின் கடைசி இரண்டு மனிதர்கள் மிக முதன் முறையாக அன்று கலந்தார்கள்.

*

நூதனா மெல்ல இருட்டுக்குப் பழகினாள். கால் நூற்றாண்டு காலமாய்ப் பழகிவிட்ட வெளிச்சத்தைக் கைவிடுவது அத்தனை சுலபமானதாய் இல்லை. நவீன் அவளுக்கு உதவினான். ஒவ்வொன்றாய்ச் சொல்லிக் கொடுத்தான். அவ்வப்போது எங்கேனும் இடித்துக் கொண்டாள். தடுமாறி விழுந்தாள். தளராமல் மீண்டெழுத்து முயன்றாள்.

ஆறு மாதங்களில் தனியே அவ்வீட்டுக்குள் உலவவும் தன் தினக்கடன்களைத் தானே பிசகின்றி முடிக்கவும் கற்றாள். நவீனின் மனநிலையைக்கூட அவன் அசையும் சப்தம் மற்றும் குரல் கொண்டே அறியப் பழகினாள். ஒருவகையில் அத்தனை ஆண்டுகளில் அல்லாது அவனது புதிய பக்கங்கள் அவளுக்குத் திறந்து கொண்டன. அதை மிகவும் ரசித்தாள். பார்வை என்பதே ஒருவகையில் கவனச் சிதறல் தான் எனத் தோன்றியது.

தன் அந்தரங்க மயிர்களைச் சிரைப்பது தவிர நூதனாவுக்கு அனைத்தும் வசப்பட்டது.

*

நவீன் கண் விழித்த போது சூரியன் உச்சிக்குப் போயிருந்ததை வீட்டுக்குள் நுழைந்த வெளிச்சத்தின் மூலம் உணர்ந்தான். முந்தைய நாள் மதுவின் நினைவில் இன்னும் தலை வலித்தது. கடைசியாய்த் தடுமாறித் தரையில் விழுந்தது நினைவுக்கு வந்தது. அவனது வாந்தியின் துர்நெடி நெடுநேரம் நாசியைத் தாக்கிக் கொண்டே இருந்தது.

இப்போது அவனறையின் கட்டிலில் கிடந்தான். எழுந்து வீட்டின் வரவேற்பறைக்கு வந்தான். தரை சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. அவனது உடைகளும் மாறியிருந்தன.

குற்றவுணர்வும் வெட்கமும் ஆக்ரமித்தன. பத்து வயது தாண்டி அவன் தாய் கூட அவனது நிர்வாணம் கண்டதில்லை. இப்போது நூதனா அவனுக்கு உடை மாற்றி இருக்கிறாள். சட்டென நூதனாவும் அதைப் பார்த்திருக்க முடியாதென உறைத்தது.

“குட்மார்னிங்.”

நூதனாவின் குரல் கேட்டுத் திரும்பினான். குளித்து முடித்துப் பளிச்சென்றிருந்தாள்.

“ம். ஸாரி.”

அவள் ஏதும் பேசவில்லை. இன்னும் அறையில் வாந்தியின் மணம் மிச்சமிருந்தது. நவீன் நடந்து போய் அறையின் ஜன்னல்கள் அத்தனையையும் திறந்து விட்டான்.

“நவீன்.”

“ம்.”

“இங்கே வா!”

அவளருகே போனான். மண்டியிட்டு அமர்ந்தான். அவன் தலையைக் கோதினாள்.

“எனக்கு உன்னோட கில்டி புரியுது நவீன். ஆனா அதுக்கு அவசியமே இல்ல.”

“ம்.”

“இது முழுக்க ரொம்ப கன்ஸ்ட்ரக்டிவான என் முடிவு. ரொம்ப யோசிச்சு எடுத்தது.”

“எதுக்காக?”

“உனக்காக, எனக்காக, நமக்காகத் தான்டா.”

“புரியல.”

“என்னால் ஒருபோதும் உன்னைப் பார்த்து…”

“…”

“அதனால் தான் கண்ணே வேண்டாம்னு.”

“கண்ணைக் கட்டிக் கொள்ளலாம் அல்லவா?”

“அது ஒரு சுயஏமாற்றாகத்தான் இருக்கும்.”

“ம்.”

“திருதராஷ்டிரனின் குருடும் காந்தாரி கண்ணைக் கட்டிக் கொண்டதும் ஒன்றா?”

“ம்.”

“எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு. காயம் ஆறட்டும். மனமும்.”

“எந்த அவசரமும் இல்ல. நடக்கலனாலும் தப்பில்ல.”

“கண்ணெல்லாம் புடுங்கிட்டு ரிஸ்க் எடுத்திருக்கேன்டா. இப்ப வேண்டாம்ங்கற?”

கபடமின்றிச் சிரித்தாள். அவனால் சிரிக்க முடியவில்லை. முயன்றான். புன்னகை மன்னன் கமல் நினைவு வந்தது. திடீரென யோசனை வந்தவனாய்க் கேட்டான் -

“ஆனால் நான் இப்படி எல்லாம் குற்றவுணர்வு கொள்ளவில்லையே!”

“நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் நவீன்.”

*

சுத்தமாய் ஒரு மண்டலத்தில் நூதனாவின் கண் பார்வை முழுக்கப் பறிபோனது.

கொஞ்சம் கொஞ்சமாய் அவள் பார்வையை இழப்பதைக் கையாலாகாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு மாற்று மருந்து சொன்னால் எப்பாடு பட்டேனும் எடுத்து வருவதாக எத்தனையோ முறை அந்த நாட்களில் கெஞ்சிப் பார்த்தான். அவள் ஒரு புன்னகையை மட்டுமே தந்தாள். அது அவனை மேலும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.

அவள் தன்னைத் தண்டிப்பதற்கு பதில் அவளை வதைத்துக் கொள்கிறாளோ என்று நினைத்தான் நவீன். குழப்பத்திலும் குற்றவுணர்விலும் சிக்கிக் கொண்டு தவித்தான்.

அவள் ஏதேனும் பொருளை எடுக்கத் தடவித் தடவி நகர்வதைப் பார்க்கும் போது கதவிடுக்கில் சுண்டுவிரல் சிக்கிக் கொண்டது போல் உயிர் வலித்தது நவீனுக்கு.

ஓரிரவு நவீன் ஏதோ ஒரு டாஸ்மாக் கடையை உடைத்துக் குடித்து விட்டு வந்தான்.

அவன் வீட்டுக்குள் நுழைந்ததுமே வாடை சூழ்ந்ததில் புரிந்து விட்டது நூதனாவுக்கு. இத்தனை ஆண்டுகளில் அவள் அறிந்து ஒருபோதும் நவீன் குடித்ததில்லை. லிக்கர் சாக்லேட் கூடத் தொட மாட்டான். வைன் சேர்த்த கேக் ஆகாது. அவ்வளவு ஆச்சாரம். அவனை அவளுக்கு முழுக்கப் புரிந்ததால் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்தாள்.

நூதனாவின் அமைதி மேலும் அவனை ஆத்திரப்படுத்தியது. கத்தத் தொடங்கினான்.

“உன்னால தான்டி நாயே எல்லாம்…”

“…”

“எதையாவது வாயைத் திறந்து சொல்லித் தொலை.”

“…”

“இந்த உலகத்துல இருக்கறது நீயும் நானும் தான். இல்லன்னா போயும் போயும் உன் கிட்டலாம் மானங்கெட்டுப் போய் கெஞ்சிட்டு நிப்பேனா? எல்லாம் என் தலை விதி.”

“…”

“நீ மருந்து குடிச்சு கண்ணை அவிச்சுக்கிட்டதுக்கு பதிலா எனக்கு விசம் கொடுத்து கொன்னுருக்கலாம்லடி நாயே. அப்ப ரெண்டு பேருக்குமே நிம்மதி ஆயிருக்கும்ல?”

“…”

“தேவடியா நாயே…”

அதுவரை அவன் பேசுவதைக் கேட்காதது போல் கண்டுகொள்ளாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்த நூதனா சட்டெனத் தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள். அவளால் தன்னைப் பார்க்க முடியாது என்பதை அறிவான். ஆனால் அவள் கண்கள் தன்னைத் துளைப்பதைப் போல் உணர்ந்தான். ஏறி ஆட்டிய அத்தனை போதையும் இறங்கியது.

அதற்குத் தலைகீழ் விகிதத்தில் அவன் குடலிலிருந்து மேலேற, வாந்தி எடுத்தான்.

என்ன நடந்தது என்று புரிவதற்குள் அவனுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தானெடுத்துப் பரவியிருந்த வாந்திக்கு மிகமிக அருகில் குப்புற விழுந்து மயங்கினான்.

*

நூதனா அன்று சானிடரி நேப்கின்களோடு சில மருந்துகள் எடுத்து வரச் சொன்னாள்.

அவை என்ன மருந்துகள், அவளுக்கு என்ன பிரச்சனை எனக் கேட்க எண்ணினான் நவீன். ஆனால் கேட்கவில்லை. அவள் மீண்டும் வீடு திரும்பியதிலிருந்து அவளிடம் எதையும் கேட்கவே அஞ்சினான். மறுபடி எங்கேனும் சொல்லாது போய் விடுவாளோ என நினைத்தான். திரும்பவும் அவளற்ற தனிமையை எதிர்கொள்ளத் தயாரில்லை.

மாறாக அவளைத் தொந்தரவு செய்யாமல் இருந்து விடலாம். அதனால் அவளது விஷயத்தில் ஓர் ஊமைச் சேவகன் போலவே நடந்து கொள்ளத் தொடங்கினான்.

அதுவும் இந்த மாதிரி மருந்து விஷயங்களில் படிப்பை முடிக்காவிடிலும் அவளே ஒரு மருத்துவர் தான் என்பதால் அவன் தலையிடுவதோ தயங்குவதோ இல்லை.

அன்று நவீன் ஏழு கடைகளில் தேடியும் கிடைக்காமல் கடைசியில் ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்த ஒரு கடையிலிருந்து அவள் சொன்னவற்றைத் தேடிஎடுத்து வந்தான்.

“ஆனா நூதனா…”

“என்ன?”

“இது எல்லாமே எக்ஸ்பயரி முடிஞ்சது.”

“ரொம்ப நல்லதாப் போச்சு.”

தொன்னூறு நாட்கள் அந்த மாத்திரைகளைக் கவனமாக முறை வைத்து சாப்பிட்டாள். இரு வாரங்களுக்கொரு முறை கணக்கு எழுதி வைத்து ஊசிகள் குத்திக் கொண்டாள்.

அது முடிந்த பதினைந்தாவது நாள் நூதனாவின் கண் பார்வை மங்கத் தொடங்கியது.

*

மொத்த பூமியியிலும் தனித்திருந்த அந்த இரு மனித உயிர்களின் பொருட்டு இரவு சிருங்கார இசையைச் சூட்சம ரூபத்தில் அந்தப் பிரதேசத்தில் உலவ விட்டிருந்தது.

நவீன் வீட்டிலிருந்த அனாவசியங்களை ஒழித்துக் கொண்டிருப்பதை நூதனா பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது புஜங்களின் திரட்சியில் வியர்வை அரும்பி மினுங்கியது.

மனதுள் ஓர் ஒத்திகை நிகழ்த்திப் பார்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள் நூதனா -

“நவீன், நான் இங்கே திரும்பி வந்தது வெறும் உணவின் பொருட்டு மட்டுமில்லை.”

வேலையை அப்படியே நிறுத்தி விட்டு அவளைத் திரும்பிப் பார்த்துச் சொன்னான் -

“அன்புள்ள ரோஷக்காரியே, நீ அத்தனை பலகீனமானவள் இல்லை என்றறிவேன்.”

“வீட்டை விட்டு வெளியேறி நகரத்தில் திரிந்த நாட்களில் நானொரு பெண் என்பதை என்னுடல் உணர்த்திக் கொண்டே இருந்தது. உடல் என்றால் முழு உடல் கூட அல்ல. வெறும் பாதி. மற்ற பாதியைத் தேடிப் போ என உத்தரவிட்டுக் கொண்டே இருந்தது.”

“…”

“நான் ஆரம்பத்தில் அதை உதாசீனம் செய்தேன். பிறகும் அதிகரிக்கவே போராடிப் பார்த்தேன். பின் தோற்றேன். அதனிடம் சரணடைந்தேன். குறிப்பாய் விலக்காகும் நாட்களில் தாங்கவே முடியவில்லை. இறுதியில் வீடு திரும்ப முடிவெடுத்தேன்.”

“…”

“வாடா!”

நவீன் சற்று யோசித்தான். பிறகு கையிலிருந்த பொருட்களை அப்படியே போட்டு விட்டு வந்து தயக்கம் தோய்ந்ததொரு உடல் மொழியுடன் அவள் மீது பரவினான்.

நூதனா கண்களை மூடிக் கொண்டாள். மீண்டும் மீண்டும் அவள் பெயர் சொல்லி அழைக்கவே மெல்லக் கண்களைத் திறந்து அவனது முகத்தை உற்றுப் பார்த்தாள்.

சட்டென நினைவு வந்தது போல் நெஞ்சில் கைவைத்து அவனைத் தள்ளி விட்டாள்.

நவீனுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்றவன் பின் அமைதியாய் எழுந்து, சட்டையணிந்து வீட்டை விட்டு வெளியேறி நடந்தான்.

நூதனா கட்டிலில் உட்கார்ந்து கொண்டு ரொம்ப நேரம் அழுது கொண்டே இருந்தாள்.

*

அன்று நவீன் வீடு வந்த போது நூதனா இருந்தாள். அதாவது வீட்டிற்குத் திரும்பி வந்திருந்தாள். அவள் முன்பை விட மிக இளைத்திருந்தது தெளிவாய்த் தெரிந்தது.

கொஞ்சம் நேரம் நின்றவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அவள் பதிலுக்குப் லேசாய்ச் சிரித்தாள். அவன் பேசட்டும் என்பது போல் அமைதியாய்க் காத்திருந்தாள்.

“எங்கே போனாய் நூதனா?”

“இங்கேயே தான்டா. சிட்டிக்குள்ளயே தான் சுத்தினேன்.”

“ம். ஏன் போனாய்?”

“இங்கே இருந்தால் உன்னைச் சுரண்டி விடுவேனோ என்ற பயம் தான்.”

“அப்புறம் ஏன் வந்தாய்?”

“பசி.”

அந்தப் பதிலில் அதிர்ந்தவன் அவசரமாய் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டு அன்று அவனுக்குக் கிட்டியதை எல்லாம் அவள் முன் எடுத்து வைத்தான். பவ்யமாய் பயபக்தியுடன் கைகட்டிக் கடவுளுக்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2020 07:45
No comments have been added yet.


C. Saravanakarthikeyan's Blog

C. Saravanakarthikeyan
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow C. Saravanakarthikeyan's blog with rss.