கலி [சிறுகதை]
“அன்புள்ள தபஸ்வி… ஒளிநிறை உடலுறைவோனே… பிறப்பால் என்ன வர்ணம் நீ?”
விரிந்து நின்ற புங்கை விருட்சத்தின் கிளையில் வௌவால் ஒன்றின் அவதாரம் போல் தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்த யாக்கையில் அசைவேதும் இருக்கவில்லை.
பரத கண்டத்தின் தென்னகத்தே சைவஜ மலைச்சாரலில் அடந்திருந்த ஆரண்யத்துள் செழித்திருந்த தனிமையையும் மௌனத்தையும் கண்ணுக்குத் தென்படாத பூச்சிகள் குலைத்துக் கொண்டிருந்தன. சூரியன் அவ்விடத்துள் ஊடுருவத் தயங்கி, கண்டும் காணாமல் நகர்ந்து கொண்டிருந்தான். எங்கோ பாயும் அருவியின் சப்தம் செவியில் தேய்ந்து பாய்ந்தது. மரங்களின் பச்சை வாசனை வனத்தின் கற்பைப் பறைசாற்றியது.

அயோத்திப் பேரரசன் ஸ்ரீராமச்சந்திரன் பொறுமையிழந்து குரலை உயர்த்தினான். அது ஒரு குதிரைக் கனைப்பைப் போல் நாராசமாய் இருந்ததாய் அவனுக்கே தோன்றியது.
“ஏ, முதிராத் துறவியே, முனிவினை புரிபவரே, கண்ணையும் காதையும் திறங்கள்!”
ஆழ்ந்த தவத்துள் தொலைந்து போயிருந்த மனிதரின் காதுகளை அந்த ஆறாச்சினம் தொட்டது போல் தெரியவில்லை. அவர் முகத்தில் சாந்தம் நிறைந்து வழிந்தது. இறுக மூடியிருந்த அவரது விழிகளில் மட்டும் இரண்டு நரம்புகள் மெல்லிசாய் அசைந்தன.
ராமன் இறுதி முயற்சியாய்த் தன் இடையிலிருந்த உடைவாளை உருவ முயன்றான்.
இலங்கை இறுதி யுத்தத்துக்குப் பின்னர் அவன் அதை எடுக்கவே இல்லை. அதனால் துருவேறிக் கிடந்தது. இலங்கையில் கூட பெரும்பாலும் வில்லும் அம்புகளும் மட்டுமே பயன்பட்டன. வாள் சம்பிரதாயத்துக்கு வைத்திருந்ததோடு சரி. சீதை அரண்மனையில் இருந்திருந்தாலாவது கவனித்து எண்ணெய் போட்டு வைத்திருப்பாள். அவளையும் மத தர்மத்தின் படியும் ஊரார் கிசுகிசுக்களின் பொருட்டும் காட்டுக்குத் துரத்தி ஆயிற்று.
சிரமத்துடன் வாளை இழுத்த போது பலத்த சப்தத்துடன் அது வெளியே வந்தது. அவன் அதை வான் நோக்கி உயர்த்திப் பிடித்தான். தன் வீரம் அதிகமானது போல் தோன்றியது.
கைப்பிடிக்கருகே துரு தென்பட்டாலும் முனையில் பழைய கூர் மங்காது பளபளத்தது.
மாமழையில் நனைந்து களைத்திருந்த வன யட்சி சோம்பலாய்ப் புரண்டு படுத்தாள். இரையுண்டு திரும்பி மரங்களில் உறைந்திருந்த பறவைகள் சிறகதிர்ந்து படபடத்தன.
அந்த ஒலியின் கோரத்தில் கவனஞ்சிதறிய தபஸ்வி தன் கண்களை மெல்லத் திறந்தார்.
*
சம்புகா கணக்கிட்டாள். முப்பத்தி ஒன்பது நாட்கள் கடந்து விட்டன. அவளது சுழற்சி இருபத்தி ஒன்பது நாட்கள். லீப் ஆண்டு மாதக் கேலண்டரின் ஃபிப்ரவரித் தாளைக் கிழிப்பது போல் ஊற்றி விடும். முழுதாய்ப் பத்து நாட்கள் தப்பியிருக்கின்றன. நிச்சயம் அது தான். அவள் வெட்கப்பட்டாள். பொறுக்கிப் பயல். கடைசியாய் கல்யாணத்துக்கு இரு வாரம் முன் விலக்கானது. சந்திரன் கொஞ்சம் நேரம் கூட அவளைச் சும்மா இருக்க விட வில்லை. நோண்டிக் கொண்டே இருந்தான். முகர்ந்து கொண்டே தான் கிடந்தான்.
“சம்புகா…”
எதிர்த்த ப்ளாட் அக்காவின் குரல் அவள் எண்ணத்தையும் எண்ணத்தையும் அறுத்தது.
தன் பெயரை எப்போது சொன்னாலும் எதிராளியின் புருவங்கள் உயர்வதை சம்புகா கவனித்திருக்கிறாள். அது பழகி விட்டது. அப்பெயரின் விநோதம் முகத்திலிருக்கும் ஒரு மரு மாதிரி இந்த இருபத்து ஆறு ஆண்டுகளும் அவளோடு ஒட்டிக் கொண்டு விட்டது.
அப்பா தான் அவளுக்கு அப்பெயரை வைத்தார். அவர் கட்சியிலிருந்தார். அவள் பிறந்த அன்று தான் பிரதமர் விபி சிங் பிற்படுத்தப்பட்டோருக்கான இருபத்தி ஏழு சதவிகித இட ஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டார். அதையொட்டி கலைஞர் சென்னையில் நடத்திய ஐம்பெரும் விழாவில் பேசிய வசன கவிதையில் சம்புகன் அறிமுகமானான்.
ஆனால் சம்புகன் நான்காம் வர்ணத்தவன் என்பதைத் தவிர வேறு ஏதும் தெரியவில்லை.
மாவட்டச் செயலர் கணியன் பூங்குன்றனிடம் விசாரித்து சம்புகன் கதையைத் தெரிந்து கொண்ட பின் அதைப் பிடித்துக் கொண்டார். சுற்றத்தின் எதிர்ப்பை, கேலியை மீறிப் பிடிவாதமாய் அந்தப் பெயரையே மகளுக்குச் சூட்டினார். சம்புகன் சம்புகா ஆனான்.
“எதற்காகத் திறமை? அது தேவையா? என்று நாம் என்றுமே கேட்டதில்லை.
ஆனால் ஏகலைவன் வித்தை கற்க இந்தச் சாத்திரம் அனுமதிக்கவில்லை.
அவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று
கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றதென்ன நியாயம்?
தவம் செய்தான் சம்புகச் சூத்திரன். தகுதி அவனுக்கு ஏது எனச்சீறி
அவன் தலை வெட்டிச் சாய்த்த கதை ராமபிரான் வரலாறன்றோ?
கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனுங்கேட்டால்
பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்.”
அப்பா அவளது சிறுவயதில் எத்தனையோ முறை அவ்வரிகளைச் சொல்லியிருக்கிறார்.
“வீட்டுக்கு ரெஜிஸ்டர்ட் போஸ்ட் வந்திருக்கு, கீழே போய் வாங்கிக்கோ.”
“சரிக்கா…”
சம்புகா அவசரமாய் துப்பட்டாவை எடுத்து மாரில் சாற்றிக் கொண்டு கதவைத் திறந்து வெளியேறி மின்தூக்கியில் நுழைந்து ‘B’ என்றெழுதிய பொத்தானை அழுத்திக் கீழே தரைத் தளம் வந்து தபால்காரரிடம் கையொப்பமிட்டு காக்கி உறையை வாங்கினாள்.
செவ்வகமான கண்ணாடித் தாளினுள்ளே சந்திரன் பெயரும், வீட்டு முகவரியும் சன்ன எழுத்துக்களில் துல்லிய ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது. உறை மேலே Union Public Service Commission என எழுதியிருந்தது. பிரிக்கும் போதே புரிந்து விட்டது. ஹால் டிக்கெட்!
*
தலைகீழ் மனிதர் கண்களைத் திறந்ததும் ஒத்திகை பார்த்தபடி பேசத் தொடங்கினான்.
“நான் இந்த தேசத்தின் சக்ரவர்த்தி, ஸ்ரீராமன்.”
“மகிழ்ச்சி. வணக்கம் மன்னரே!”
மரத்தில் தொங்கும் நிலையில் பூமியை நோக்கி இரு கரங்களை இறக்கி வணங்கினார். அதற்குப் பதில் வணக்கம் எப்படி வைப்பது என ராமனுக்குக் குழப்பமாய் இருந்தது. பின் தீர்மானித்து வழமை போல் கைகள் இரண்டையும் கூப்பி நின்று நமஸ்காரம் செய்தான்.
“ஏன் என் தவத்தைக் கலைத்தீர்கள்?”
“அதற்கு மன்னிப்புக் கோருகிறேன்.”
“சரி மன்னித்தேன். மேலே சொல்லுங்கள்!”
இங்கிதத்துக்குச் சொல்லுதிர்த்தால் இளக்காரமாகி விட்டோமோ என யோசித்தான்.
“நீங்கள் எதன் நிமித்தம் தவம் செய்கிறீர்கள்?”
“நான் கடவுளாக விரும்புகிறேன். வானில் ஒரு தேவனாக சஞ்சரிக்க நினைக்கிறேன்.”
“நீங்கள் யார்?”
“என் பெயர் சம்புகன்.”
“ராமராஜ்யத்தில் மனிதரின் அடையாளம் பெயரில் அல்ல.”
“வேறு எதில் இருக்கிறது? செயலிலா?”
“அதுவும் இரண்டாம்பட்சம் தான்…”
“பிறகென்ன?”
“…”
“ஓ! பிறப்பிலா?”
“ஆம். நீங்கள் என்ன வர்ணம்?”
“நான் இறைவனின் முகத்திலிருந்து தோன்றியவன் அல்லன்; அவன் கைகளிலிருந்து ஜனித்தவனும் அல்லன்; போலவே அவன் தொடைகளிலிருந்தும் பிறந்தவன் அல்லன்.”
“எனில் பரம்பொருளின் கால் தூசு நீ.”
*
‘ஷெட்யூல்ட் கேஸ்ட்’ என்று சந்திரன் தயங்கியபடி சொன்ன போது திக்கென்று தான் இருந்தது சம்புகாவுக்கு. அவளது சாதி ‘பேக்வேர்ட் க்ளாஸ்’ என்கிற பிரிவில் வருவது. ஆனால் அம்மா ஆண்ட பரம்பரை என்று தான் எப்போதும் சொல்வாள். அதென்னவோ அதைச் சொல்லும் போது அம்மாவுக்கு முகத்தில் அப்படியொரு பூரிப்பு வந்து ஒட்டிக் கொள்ளும் - டிவி விளம்பர புஷ்டிக் குழந்தை வாயில் செரலாக் ஒழுகச் சிரிப்பது போல்.
ஆனால் அக்குழந்தை சம்புகா தன் காதலைச் சொன்ன போது ஒப்புக் கொள்ளவில்லை.
“ஆம்பள இல்லாம இத்தனை வருஷமும் உன்னை வளர்த்திருக்கேன்.”
“…”
“அதுக்குக் கொஞ்சமாவது விசுவாசமா இருக்கனும்னு நினைச்சா இதை மறந்திடு.”
“…”
சம்புகாவுக்கு அவளுடன் வாதிடத் திராணியும் விருப்பமும் இல்லை. மௌனமானாள்.
ஆனால் அது புலியின் பதுங்கல். சம்புகாவுக்கே தான் அத்தனை அழுத்தம் மிக்கவள் என்பது அது நாள் வரை தெரியாது. அது அப்பாவின் வார்ப்பு என்றுதான் தோன்றியது.
உறையை எடுத்துக் கொண்டு லிஃப்ட் ஏறாமல் படியேறித் தன் ஃப்ளாட்டுக்குத் திரும்பி சோஃபாவில் நிறைந்து அதைச் சூடாக்கினாள் சம்புகா. கொஞ்சம் தூங்கினால் நன்றாக இருக்கும் எனத்தோன்றியது. அன்று சனிக்கிழமை. அவளுக்கு அலுவலக விடுமுறை. ஒரு ப்ராஜெக்ட் லாஞ்ச் அடுத்த வாரமிருக்கிறது. அதற்காக வார இறுதியில் அழைக்கப்படும் சாத்தியம் இருந்தது. ஐடியில் தரப்படுகின்ற உயர்சம்பளம் எப்போது வேண்டுமானாலும் அழைக்கப்படவும் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படவும் தானே! சோர்வாகவும் சோம்பலாகவும் இருந்தது. அழைப்பு ஏதும் வரக்கூடாது என வேண்டிக் கொண்டாள்.
சந்திரன் பயிற்சி வகுப்புக்குப் போயிருக்கிறான். திரும்பிச் சுவர்க்கடிகாரம் பார்த்தாள். அவன் வருகிற நேரம் தான். வரும் போது அவனை அணைத்துக் கொள்ள வேண்டும்.
மறுநாள் அவளுக்குப் பிறந்த நாள். பல்லாண்டு கழித்து ஞாயிறன்று வருகிறது. போன முறை வந்த போது அப்பா இருந்தார். வீட்டுக்கு ஜேப்பனீஸ் கேக் வாங்கி வந்து அவளை வெட்ட வைத்து முத்தமிட்டார். ஒருவேளை சந்திரன் பிறந்தநாளையே மறந்து விட்டானா என அவளுக்கு மனதில் ஒரு குறுகுறுப்பு இருந்தது. அவர்கள் அறிமுகமான பின்பான கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு முறையும் அவன் மறந்ததில்லை. தவிர, கல்யாணத்திற்குப் பின்பான அவளது முதல் பிறந்த நாள் இது. ஆனால் இவை மன அழுத்தம் மிக்க நாட்கள்.
*
ஸ்ரீராமன் கண்களில் கங்கெரியும் கோபம் கனன்றெழுந்து சுடுமூச்சாய் வெளியேறியது.
“சூத்திரனுக்குத் தவஞ்செய்ய அனுமதியில்லை எனத் தெரியாதா உனக்கு?”
“தெரியும். ஆனால் யார் செய்த சட்டம் அது? நான் ஏன் மதிக்க வேண்டும்?”
“சனாதன தர்மம் அது. வர்ணாஸ்ரம வழக்கம். சாஸ்திரத்தில் இருக்கிறது.”
“அதை கண்களை மூடிக் கொண்டு கடைபிடிப்பது தான் அரச கடமையா?”
“அதிகப்பிரசங்கித்தனம் வேண்டாம். நீ பழிப்பது வையம் போற்றும் ராமராஜ்யத்தை.”
“சமத்துவ நீதியற்ற ராஜ்யத்தை ராமன் தந்தாலென்ன, ராவணன் தந்தாலென்ன?”
“இப்படிப் பேசுவது தான் உன் பிறவிக் குணம்.”
“ஓ! கடையில் நீங்களும் அங்கே வந்து விட்டீர்களா பிரபு!”
“அதனால் தான் உன் தவப் பலன் உலகிற்குக் கேடாக முடியும் என்கிறார்கள்.”
“இதெல்லாம் ஒரு பாமரத்தனமான பொதுமைப்படுத்தல்.”
“நான் விஸ்வாமித்ரரிடம் குருகுலம் பயின்றவன்”
“சனாதனத்திற்குக் கணிசமாய்ப் பங்களித்தவர், வேறென்ன கற்பித்தித்திருப்பார்!”
“என் ஆசானையா அவமதித்துப் பேசுகிறாய்?”
“எவர் மீதும் எமக்கு வெறுப்பில்லை. ஆனால் உண்மையைச் சமரசம் செய்ய முடியாது.”
“என் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.”
“சரி, நான் தவஞ்செய்வதால் யாருக்கு என்ன தொந்தரவு?”
“நீ ஒரு பிரம்மஹத்தி.”
“நானா?”
“ஆம். தர்மம் மீறிய உன் தவத்தால் ஒரு பிராமணப் பாலகன் அகாலமாய் மரித்தான்.”
*
சம்புகா கண் மூடிப் படுத்த போது ஒரு புதிய உயிரின் வரவை இச்சமயத்தில் சந்திரன் விரும்ப மாட்டானோ என சம்புகாவுக்குத் தோன்றியது. ஹால் டிக்கெட்டைக் கையில் எடுத்தாள். அது சந்திரன் கனவு. அதனால் அவள் கனவாகவும் ஆகிப் போய் விட்ட ஒன்று.
சந்திரன் முதலில் வேண்டாம் என்று தான் சொன்னான். குழந்தை மட்டுமல்ல; கலவியும் கூட. திருமணத்திற்கு முன்பே அதை அவளிடம் விளக்கிச் சம்மதம் வாங்கியிருந்தான்.
ஐஏஎஸ் ஆவது அவன் லட்சியம். சாதிய இழிவு நீங்க அதிகாரத்தைக் கைகொள் என்பது அவனுக்குச் சிறுவயது முதல் சொல்லித் தரப்பட்டிருந்த பாடம். வருமான வரிப் பிடித்தம் போக மாதம் ஒரு லட்சம் இந்திய ரூபாய் சுளையாய்க் கையில் கொட்டும் பன்னாட்டு மென்பொருள் நிறுவன வேலையை இந்நோக்கத்தின் பொருட்டு மிகுந்த யோசனைக்கும் ஆலோசனைக்கும் பின் ராஜினாமா செய்து விட்டு முழுநேரம் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிறான். தனியார் பயிற்சி நிலையம் ஒன்றிற்கு காலையில் மூன்று மணி நேரம் போய் வருவது தவிர மற்ற நேரமெல்லாம் வீட்டில் தான் இருக்கிறான். அதாவது படித்துக் கொண்டிருக்கிறான். அதனால் இதில் இறங்கினால் கவனம் சிதறும் என்பதால் தேர்வு முடிந்த பின் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்பது சந்திரனின் திட்டமாக இருந்தது.
சம்புகாவிற்கு இதில் உவப்பில்லை என்றாலும் அவனைப் புரிந்து கொண்டிருந்தாள்.
அதனால் கட்டுப்பாடாய் இருக்க ஒப்புக் கொண்டாள். ஓடி வந்ததும் அறையெடுத்து அவசரமாய் அவிழ்த்து அதிரப் புணர்பவர்கள் மத்தியில் சந்திரன் இப்படியிருப்பது ஒரு வகையில் அவளுக்குப் பிடித்து தான் இருந்தது. தவிர, என்ன தான் காதலித்து மணம் புரிந்தவர்கள் என்றாலும் வெட்கத்தை விட்டு ‘படுக்க வா’ என்று அவனை அழைக்க அவளுக்குத் தயக்கமாய் இருந்தது. அதனால் அதற்குத் தலையாட்டி வைத்திருந்தாள்.
முதலிரவில் ஒரே ஒரு முத்தம் - அதுவும் போனால் போகிறதென பிச்சையிடுவது போல் சந்திரன் பட்டும்படாமல் அவள் கன்னத்திலிட்டது, அதுவும் முத்தமிட்டானா, மோப்பம் பிடித்தானா எனச் சம்புகாவுக்குக் குழப்பமாய் இருந்தது - அது தவிர மூன்று மணி வரை இருவரும் மல்லாக்கப் படுத்து வெறுமனே சொற்களால் உரையாடிக் கொண்டிருந்தனர்.
ஏழு நாள் கட்டுப்பாடாய்த் தான் இருந்தாள். அலுவலக வேலைப்பளு, வெளியே இரவு உணவு எனச் சோர்வில் படுக்கையில் விழுந்ததும் உறங்கிக் கொண்டு தானிருந்தாள்.
“ஏய்… எதுக்கும் உன் ஆளுக்கு ஏதும் பிரச்சனை இல்லையான்னு செக் பண்ணிக்கடி.”
சிரித்துக் கொண்டே திவ்யா கேலி செய்த போது சம்புகாவுக்கு எரிச்சலாய் இருந்தது.
சரி, ஒரு முறை செய்வதில் என்ன ஆகி விடப் போகிறது என அன்றிரவு நைட்டியின் முதலிரு பட்டன்களை அவிழ்த்து விட்டுக் கொண்டு அவன் மீது காலைப் போட்டாள்.
சந்திரனும் அதற்குக் காத்திருந்தது போல் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.
அனுபவஸ்தனோ எனச் சந்தேகிக்குமளவு நீண்ட, நிதானமான கலவி. சாம்பார், காரக் குழம்பு, கூட்டு, பொரியல், ரசம், தயிர் என ஒவ்வொன்றாய்ப் பரிமாறினான். அவளது எச்சில் வழிந்த அதே தலைவாழையிலையில் தானும் அள்ளியள்ளி உண்டான். வெட்கம், பயம் கொண்டு பூட்டி வைத்திருந்த அவளது ரகசியத்தை மெல்ல மெல்ல நெகிழ்த்தி உடைத்துப் புகுந்தான். உணவுக்கிடையே புடைத்த வயிற்றை இலகுவாக்க இடுப்பின் பட்டையை இளக்கித் தொடர்வது போல் நிறுத்தி பின் மீண்டும் தொடர்ந்து என அவளை முகிழ்த்தி மலர்த்தினான். எத்தனையோ இரவுகளில் கற்பனையில் அவன் அதற்கான முழு ஒத்திகையை நிகழ்த்திப் பார்த்திருக்க வேண்டும் எனப் புரிந்தது சம்புகாவுக்கு.
அவ்விரவில் மட்டும் மூன்று முறை அவன் அவளை எழுப்பினான். நான்காம் முறை அவள் அவனை எழுப்பினாள். புன்னகைத்தபடி அவள் கையோங்க ஒத்துழைத்தான் சந்திரன்.
அதன் பிறகு ரத்தத்தின் கவுச்சி வாடை கண்டு விட்ட மிருகம் போல் இருவரின் உடம்பும் பரஸ்பரம் தேடிக் கொண்டன. பிய்த்துப் பிய்த்துத் தின்றார்கள். அருவருப்பொழித்தனர். ஒருவர் திரவத்தில் மற்றவர் ஊறிக் கிடந்தார்கள். உடம்பெங்கும் உப்புப் பிசுபிசுத்தது. அவரவரின் தனித்துவ வாசனை அழிந்தது. நாள் தவறாமல் கலந்தார்கள். அதுவும் தினம் மூன்று முறை என அட்டவணையிட்டு. மாலையில் சம்புகா அலுவலகம் மீண்டதும் ஒரு முறை, நள்ளிரவில் உறங்கப் போகும் முன் ஒரு முறை, காலை விழித்ததும் ஒரு முறை.
திட்டமிடலின்றி நடந்த அம்முதலிரவு தவிர மற்ற எல்லா முறையும் அவர்களுக்கிடையே ஆணுறை திரையிட்டிருந்தது. எனில் அந்த முதல் முறையிலேயேதான் இது தங்கியிருக்க வேண்டும் என்பது சம்புகாவுக்குத் தெளிவாகப் புரிந்தது. இனி கொஞ்ச நாளைக்கு இந்த ராட்சசனைக் கொஞ்ச அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டாள். அதைச் சொல்லும் போது அவன் முகம் பொக்கென்று போகுமே என்றும் கவலை கொண்டாள்.
அந்த முதல் உச்சம் நினைவுகளில் மேலெழுந்தது. மலைகளில், காடுகளில், குகைகளில், பள்ளத்தாக்குகளில், கொண்டையூசி வளைவுகளில் அவளை நெடுந்தூரம் அழைத்துப் போன பின் அடிவயிற்றில் நெருப்பில் பூ மலர்ந்தது போல் இளஞ்சூடாகத் துடித்த இன்பம்.
*
தொங்கிய தவசி சற்றே அதிர்ச்சியுற்று ஸ்ரீராமனின் கண்களை உற்று நோக்கி உண்மை தேடினார். அவர்கள் உரையாடலை அலட்சியம் செய்து வான் இருண்டு கொண்டிருந்தது.
“என் தவத்தாலா?”
“ஆம். நாரத முனி அப்படித்தான் சொன்னார்.”
“அவர் சொல்வதிருக்கட்டும். உனக்குப் பகுத்தறிவு வேண்டாமா?”
“நாவை அடக்கு, சம்புகனே!”
“மன்னிக்க வேண்டும் மன்னா. விசித்திரமான குற்றச்சாட்டு. அவரவர் நெல் அவரவர்க்கு. நான் தவம் செய்வது எப்படி ஒரு சிறுகுழந்தையின் மரணத்துக்குக்காரணமாக முடியும்?”
“ராஜ்யத்தில் எங்கேனும் சாஸ்திரம் உடைபட்டால் துர்சாவுகள் நடப்பது வழக்கம் தான்.”
“அது உண்மையென்றே வைத்தாலும் என்ன மாதிரியான இரக்கமற்ற சாஸ்திரம் அது?”
“ஆம். குரூரம் தான். ஆனால் அதைக் கேட்க எவருக்கும் உரிமையில்லை. எனக்குமே.”
“சரி, நடந்ததைச் சொல்லுங்கள்.”
“தேகத்தில் எந்த ரோகமுமின்றி, ஓர் அடியும் உடலில் வாங்காமல், எவ்வித அதிர்ச்சியும் எதிர்கொள்ளாமல் ஒரு பிராமண குலக் கொழுந்து திடீரென தனது உயிரை விட்டது.”
“மனதைத் தொந்தரவு செய்யும் நிகழ்வு தான்.”
“அந்த பிராமணர் என் பிரம்மாண்ட அரண்மனை வாயிலில் பதின்மத்தைக் கூட எட்டாத பாலகனின் துவண்ட பிரேதத்துடன் அழுதபடி நிற்கிறார். அவருக்கு நீதி பெறவே நான் திசையெட்டும் தேடி வந்தேன். கடைசியாய்த் தெற்கில் உன்னைக் கண்டு கொண்டேன்.”
“தெற்கு வடக்கிற்கு அடங்காதிருப்பது ஆதிதொட்ட வழக்கம் தான். தொடருங்கள்.”
“அந்த அந்தணர் பிறந்த கணம் முதல் பொய் சொன்னவரில்லை. ஒரு கிருமிக்குக் கூடத் தீங்கு எண்ணியவரில்லை. செல்வத்தின் மீது ஆசை கொண்டவரில்லை. என் போலவே பிறனில் விளைந்தவரில்லை. எனில் வந்திருக்கும் இன்னல் எதனால் என்பதவர் வினா.”
“தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை அறியாதவரா நீங்கள்?”
“அதைத் தான் அவரும் சொல்கிறார். தான் எத்தவறுமே இழைக்காத போதும் இம்மாதிரி துர்மரணங்கள் நிகழ்கிறதென்றால் மன்னன் தீமை புரிந்து விட்டான் அல்லது நீதி வழுவி விட்டான் என்றே பொருள். அதாவது அவனது பரிபாலனத்தின் போதாமையில் தேசத்தில் குற்றங்கள் அதிகரித்து விட்டன என்று அர்த்தம். அதனால் சிறுவன் மரணத்துக்கு நான் பொறுப்பாகிறேன். தாமதமின்றி அதைச் சரி செய்ய வேண்டிய இக்கட்டில் நிற்கிறேன்.”
“வையத்து நிகழ்வுகளை அப்படி எல்லாம் எளிய தர்க்கத்தில் அடக்கி விட முடியாது.
அது ஒரு சிக்கலான பின்னல். கோர்வையோ, காரண காரியமோ கண்டறிய அது ஒன்றும் காலத்தின் சொப்பு விளையாட்டோ, கடவுளின் ஓரங்க நாடகமோ அல்ல.”
“ஓ! இறையையும் மறுப்பவனா நீ? நானே ஓர் அவதாரம் என்பதை அறியாதவனா நீ?”
“நன்கறிவேன். இறையின் தர்க்க லட்சணமே இது தான் என்பது தான் கசக்கிறது.”
“உன் துடுக்கான பேச்சினால் உன் குற்ற எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.”
“ஒருவர் மீதான குற்றங்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி எழுதுவது தண்டனை வழங்குபவர் தனது மனசாட்சியைச் சமாதானம் செய்யக் கையாளும் பழைய உத்தி.”
“நீதி வழங்குபவனுக்கு மனசாட்சி ஏதும் இருக்கக்கூடாது. அது அவனை நிலைதடுமாற வைக்கும். அவன் நீதி நூல்கள் சொல்வனவற்றை அப்படியே பின்பற்றுவதே அறமாகும்.”
“சரி, இப்போது என் மீது சுமத்தப்பட்டிருக்கும் பிரதானக் குற்றம் தான் என்ன?”
*
சம்புகா மருத்துவர் அல்லது பொறியாளர் ஆக வேண்டும் என்பது அப்பாவின் பேரவா. வாரத்துக்கு ஒரு முறையாவது அதை எப்படியேனும் அவளுக்கு நினைவூட்டி விடுவார்.
கலைஞரையும் விபி சிங்கையும் அவள் வாழ்வில் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று சொல்லியிருந்தார் அப்பா. சரியாய் அவள் பள்ளி இறுதி நாள் தேர்வின் போது அப்பா அவசரமாய்ச் செத்துப் போனார். குடி சற்று அதிகம். நெஞ்சு வலி கண்டு இரு சக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போதே உழன்று விழுந்து இறந்தார். ஆட்கள் பார்த்து தூக்கிக் கொண்டு போய் ஆம்புலன்ஸ் சொல்லி அதில் ஏற்றும் போதே உயிர் பிரிந்தது.
அவள் பரிட்சை எழுதும் வரை சொல்லாமல் பொத்தி வைத்து வெளிவந்ததும் சொல்லி வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். அம்மா அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள். யார் யாரோ கட்டிக் கொண்டு மூக்கு சிந்தி ஒப்பாரி வைத்தார்கள். அப்பாவின் மீது கருப்பு சிவப்புக் கொடி போர்த்தி எடுத்துப் போய்க் குழி தோண்டிப் புதைத்துப் பாலூற்றினர்.
சம்புகாவை வெளியே அனுப்பி விட்டு நான்கைந்து பெண்கள் அம்மாவை அறைக்குள் அழைத்துப் போய் தாலியறுத்துப் பசும்பாலில் மிதக்க விட்டார்கள். அப்போது அம்மா இட்ட கதறலை அவளால் மறக்கவே முடியாது. அதுவரை அவள் கேட்காத புதுக்குரல்.
அதன் பிறகு அம்மா மாறித்தான் போனாள். ஓர் ஆண்தன்மை அவள் குரல், உடல்மொழி எல்லாவற்றிலும் வந்தமர்ந்து கொண்டது. அவளை அணுக பயமும் தயக்கமும் புகுந்தது.
அண்ணாப் பல்கலைக்கழக ஒற்றைச் சாளர முறையில் பிற்படுத்தப்படுத்தோருக்கான இட ஒதுக்கீட்டில் கிண்டி பொறியியல் கல்லூரி கணிணி அறிவியல் எடுத்துச் சேர்ந்ததை அப்பா எங்கிருந்தோ சூட்சமரூபத்தில் பார்த்துக் கொண்டிருந்ததாய் சம்புகா நம்பினாள்.
கலைஞர், விபி சிங்குக்கு நன்றி சொன்னாள். கல்லூரியில் சந்திரன் அறிமுகம் ஆனான்.
*
ஸ்ரீராமனுக்குக் கால் வலித்தது. பயணக் களைப்பை விட பேச்சுக் களைப்பு அழுத்தியது.
நீதிமான் என்று வேறு பிம்பம் உண்டாகி விட்டதால் உடனடியாகத் தீர்ப்பெழுத முடியாது. விசாரணை போல் சற்றுப்பேச வேண்டி இருந்தது. பல்லைக் கடித்துப் பதில் சொன்னான்.
“உன் பிறப்பிற்கு அனுமதிக்கப்பட்ட தர்மம் இது இல்லை, சம்புகனே!”
“அது தான் சொன்னீர்களே! நானும் மறுத்து விட்டேனே!”
“உன் மறுப்பிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. நீ ஓர் உதிரி. காலங்காலமாய் நம்மை வழிநடத்தும் சாஸ்திர விதிகளின் ஆகிருதியின் முன் உன் கருத்து ஒன்றுமே இல்லை.”
“எனக்கு இன்னும் உங்கள் குற்றச்சாட்டு விளங்கவே இல்லை.”
“நீ உன் தகுதிக்கு மீறி தவஞ்செய்யப் புகுந்ததால் தான் அந்த மரணம் நிகழ்ந்தது.”
“சரி அது நிஜமென்றே கொள்வோம். இப்போது என்ன செய்வதாய் உத்தேசம்?”
“வேறென்ன! உன் உயிரை எடுப்பது தான் தீர்வு.”
“ஓ! என்னைக் கொன்றால் அச்சிறுவன் பிழைத்து விடுவானா?”
“அப்படித் தான் நம்புகிறேன்.”
“நம்பிக்கை. ம். எதாவது உறுதியாகத் தெரியுமா உங்களுக்கு?”
“…”
“சிறுவன் இறந்தது என் தவத்தால் என்பது முதல் ஊகம். என்னைக் கொன்றால் அவன் மீண்டு வருவான் என்பது மற்றுமோர் ஊகம். எல்லாமே காற்றில் கட்டப்பட்ட கற்பனை மாளிகைகள். ஆனால் அதைப் பற்றி எந்தவோர் உறுத்தலும் உங்களுக்குக் கிடையாது.”
“பிராமணர்கள் இயற்றியதைக் கேள்வி கேட்க ஷத்ரியனான எனக்கே உரிமையில்லை. ஆனால் சூத்திரனான நீ கொஞ்சமும் லஜ்ஜையின்றிக் கேள்விகளால் துளைக்கிறாய்.”
“காரணம் எனக்கு இழக்க ஏதுமில்லை. அதனால் அச்சமில்லை.”
“இழக்க உயிர் இருக்கிறதல்லவா!”
“நான் கேள்விகளை நிறுத்தினால் மட்டும் உயிர் பிழைக்கவா போகிறேன்?”
*
இன்னும் சில தினம் காத்திருந்து பார்க்க வேண்டுமா அல்லது இப்போதே மருத்துவரிடம் போக வேண்டுமா சம்புகாவுக்குத் தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் இன்னும் சரியாய் யாரும் பழக ஆரம்பிக்கவில்லை. குறிப்பாய் அவளொத்த வயதில் அங்கு எவருமில்லை.
அம்மா இப்போது உடனிருந்தால் நன்றாக இருக்கும் என்று சம்புகாவுக்குத் தோன்றியது. அழ வேண்டும் போலிருந்தது. உடனேயே அழக்கூடாது என்ற வைராக்கியமும் எழுந்தது.
அம்மா இன்னும் என் மீது கோபமாக இருப்பாளோ! எல்லாம் எத்தனை வேகமாக முடிந்து விட்டது! அம்மா தான் எத்தனை பிடிவாதகாரி! நானுமே சமமான பிடிவாதகாரி தானே!
ஒருவேளை அப்பா இல்லாததால் தான் அம்மா தனக்கு அவப்பெயர் வந்து விடக்கூடாது என்று இப்படிப் பிடிவாதம் காட்டினாளோ! சாதி என்பது ஒரு கூடுதல் காரணம் தானா?
“ஏன்டி, குடும்ப மானத்தைக் கெடுக்கற?”
கல்லூரி படித்துக் கொண்டிருந்த, மீசை சரியாய் முளைக்காத தம்பிக்கு எப்படி திடீரென குடும்ப மானம் பற்றிய அக்கறை வந்தது என்று சம்புகாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
ஊர் வாட்ஸாப் க்ரூப்பில் "பொண்ணைக் கட்டினா வெட்டுவோம்” என அவன் அனுப்பிக் கொண்டிருந்த ஃபார்வேர்ட்கள் எல்லாம் பகடிகள் அல்ல என்பது அதிர்ச்சியாக இருந்தது.
அப்பா இருந்திருந்தால் இதெல்லாம் நடக்க விட்டிருப்பாரா? அவர் என் காதலைப் புரிந்து கொண்டிருக்க மாட்டாரா? அப்பா இந்த மாதிரி குறுகிய அடையாளங்களைக் கடந்தவர்.
அப்பா கட்சிக் கொள்கைகளில் ஊறியவர். அவர் எவரிடமும் உயர்வு தாழ்வு பாராட்டிப் பார்த்ததில்லை. அம்மா அப்படி இல்லை என்பதோடு அவரையும் கடிந்து கொள்வாள்.
“சுத்தபத்தம் பார்க்காம எல்லாத்தையும் புழங்கவிட்டா எப்படி?”
அவளுக்கு ஏதேனும் அவர் கடுமையாகப் பதிலளிக்க வேண்டும் எனச் சிறுவயதிலேயே தோன்றியது சம்புகாவுக்கு நினைவிருக்கிறது. அப்பா அதற்குப் பதில் சொல்ல மாட்டார்.
ஆனால் அப்பா ஏன் வேறு சாதியில் பெண்ணெடுக்கவில்லை? அவருக்குக் காதல் என்ற ஒன்றே வந்திருக்காதா? அல்லது அவர் என் போல் அவசரப்படவில்லையோ? அம்மாவின் வார்த்தைகளில் சொன்னால் அவர் அரிப்பெடுத்துத் திரியவில்லையோ! பலவீனத்தைக் காதல் என்றெண்ணி நான் நிஜமாகவே குடும்ப மானத்தைக் குலைத்து விட்டேனோ?
சம்புகா அந்த எண்ணத்தைப் பிடிவாதமாகப் பிடுங்கியெறிய முயன்றாள். ஆனாலும் திரும்பத் திரும்பத் தான் ஓடி வந்து கல்யாணம் செய்திருக்கக்கூடாது என அவளுக்குத் தோன்றியது. அந்த எண்ணம் குற்றவுணர்வாக அவள் மனதில் விஸ்வரூபம் கொண்டது.
மண்டைக்குள் ஈசல்கள் பறந்து கொண்டிருந்த சமயம் வாயில் அழைப்பு மணி அடித்தது.
*
தவத்தின் ஆழ்நிலையிலிருந்து விழித்து அதிக நேரமாகவில்லை என்பதால் சம்புகனின் கண்களில் கனிவு ஒட்டியிருந்தது. அது ஸ்ரீராமனுக்கு ஓர் உறுத்தலாக நின்று எரிந்தது.
“வானத்தில் உலவும் தேவர்களுக்கு ஒப்பான, அவர்களையும் மிஞ்சிய மார்க்கண்டேயர், மௌடகஜயர், வாமதேவர், காஷ்யபர், காத்யாயனர், ஜாபாலி, கௌதமர், நாரதர் ஆகிய எட்டு ரிஷிகளும் என் அவையில் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு மனதாய்ச் சொன்ன விஷயம் இது. அனைத்தும் அறிந்த முனிகள். இதில் எனக்குச் சந்தேகிக்க ஏதுமில்லை.”
“எனக்கும் அவர்களுமான தூரம் இந்தத் தவம் தான் ஸ்ரீராமரே. அதைத் தான் கலைத்துப் போட நீங்கள் வந்திருக்கிறீர்கள். எத்தனை காலம் தான் நான் அவர்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியும்? நானும் அவர்களில் ஒருவனாக வேண்டாமா?”
“அதற்கு உனக்குப் பிறப்பிலேயே தகுதியில்லை, சம்புகனே!”
“தகுதி எப்படி பிறப்பிலேயே வரும்? அது சிந்தையிலும் செயலிலும் வருவதல்லவா!”
“இல்லை. பிறப்பிற்கென ஒரு மதிப்பிருக்கிறது. அது மிக முக்கிய முத்திரை.”
“மச்சம் மாதிரியா?”
“அப்படித் தான் வைத்துக் கொள்ளேன்.”
“மச்சம் கூட பிறப்பில் தான் வரும் என்றில்லை. இடையே உருவாவதுண்டு.”
“பிறப்பில் வருவதே நிலைக்கும். முயற்சி எல்லாம் சுயசமாதானத்திற்குத் தான்.”
“ராவணன் பிராமணன். நீங்கள் ஷத்ரியர். எனில் அவன் உங்களை விட உசத்தியா?”
“நிச்சயம் உயர்வு தான். ஆனால் அவன் விதி வேறு மாதிரி சமைக்கப்பட்டிருந்தது.”
“ஓ!”
“ஆம். என்ன தான் அறத்தை நிலைநாட்ட நான் ராவணனை வதம் புரிந்திருந்தாலும் பிராமணனனைக் கொன்ற பாவம் என்னைப் பிடித்துக் கொள்ளவே செய்தது. நான் கடவுள் என்பது கூட என்னைக் காக்கவில்லையே! பரிகாரம் தான் வேண்டியிருந்தது. அதுவும் எனக்கு மேலிருக்கும் பிராமணர்கள் ஆய்ந்து வகுத்துக் கொடுத்த முறை.”
“பரிதாபகரமான நிலைமை தான்.”
“மதிப்பிற்குரிய விதிகளைக் கொச்சைப்படுத்தாதே, சம்புகனே!”
“சரி, மரணத்துக்குப் பதில் இன்னொரு மரணம் என்பது எப்படி நீதியாகும்?”
“இரண்டாம் மரணம் முதல் மரணத்தை ரத்து செய்கிறதென்றால் நீதியாகும்.”
“ஆனாலும் எப்படியும் ஓர் உயிர் போகத் தானே செய்கிறது?”
“ஆனால் போவது சூத்திர உயிர். பிழைப்பது பிராமண உயிர். வித்தியாசம் உண்டே!”
“ஒரு சமூகத்துக்கு உரிமையளித்து இன்னொரு சமூகத்தை அடக்குவது தான் நீதியா?”
“ஆம். எல்லா உயிரும் ஒன்றல்ல. எறும்பு சாவதற்கும் யானை மரிப்பதற்கும் வேறுபாடு உண்டு. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு மதிப்பு உண்டு. அப்படித் தான் இயங்க முடியும்.”
ராமராஜ நாயகன் அதை மனப்பூர்வமாகத்தான் சொல்கிறானா என அவன் முகத்தை உற்றுப் பார்த்தார் சம்புகன். ஸ்ரீராமன் அவரது விழிகளைச் சந்திப்பதைத் தவிர்த்தான்.
*
சந்திரன் வந்து கை, கால், முகம் கழுவி விட்டு வந்தமர்ந்து டிவி ரிமோட்டைப் பற்றினான்.
ஓர் அலைவரிசையில் தொல். திருமாவளவன் நேர்காணல் ஓட ஆர்வமாய்க் கவனிக்கத் தொடங்கினான். அடுத்த சில தினங்களில் வரும் அவரது பிறந்த நாளை ஒட்டிய ஏற்பாடு.
கேள்விகள் மக்கள் நலக்கூட்டணி படுதோல்வி கண்டிருந்ததைச் சுற்றி இருந்தன. அவரே காட்டுமன்னார்கோயிலில் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை இழந்திருந்தார்.
“திருமாவளவன் தலித்களுக்கான தலைவரா? அல்லது தமிழர்களுக்கான தலைவரா?”
“அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பதிலிருந்து வெகுதூரம் விலகி வந்து விட்டோம். இப்போது நாங்கள் முன்னெடுப்பது எல்லோரையும் உள்ளடக்கிய ஓர் அரசியல். ஒடுக்கப்பட்டோருக்கு மட்டுமின்றி எல்லோருக்குமான மைய நீரோட்டத்தில் கலக்க முனைகிறோம். உரையாடல் வழியே தான் சமத்துவத்தை அடைய முடியும்.”
“அப்படி என்றால் நீங்கள் தமிழகத்தின் முதல்வராக முடியும் என நினைக்கிறீர்களா?”
திருமாவளவன் புன்னகைத்தார். சந்திரன் அவர் பதிலுக்கு ஆர்வமாய்க் காத்திருந்தான்.
சம்புகாவுக்கு நாள் தள்ளிப் போவதைச் சொல்லத் தயக்கமாக இருந்தது. பயமாகவும்.
நான்கு வருடங்களாய் பெங்களூரில் வசித்தாலும் வீட்டை விட்டு வெளியேறி அவனைத் திருமணம் செய்து கொண்டு சின்னதாக
Published on August 17, 2020 01:03
No comments have been added yet.
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
