இசையுடன் மரபைக் கொண்டாடுவோம்…

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011 – இசையைத் தாண்டிக் கொண்டாடுவோம்


ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சென்னையே இசை விழாக் கோலம் பூணும். நூற்றுக்கணக்கான சபாக்களில் ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு பாடுவார்கள். இசையைத் தவிரவும் கொண்டாடப் பல விஷயங்கள் உள்ளன என்று தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையைச் சேர்ந்த நாங்கள் நம்புகிறோம். அதே நேரம், டிசம்பரின் கொண்டாட்ட மனநிலையையும் கூடும் கூட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். உலகின் பல இடங்களிலிருந்தும் மக்கள் தம் விருப்பத்துக்குரிய இசைக் கலைஞர்களைக் கேட்க சென்னைக்கு வந்து குவிகின்றனர். அவர்கள் நம் பாரம்பரியத்தின் பிற கூறுகளையும் அறிந்துகொள்ள சில மணி நேரங்களை ஒதுக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.


இலக்கியம், ஓவியம், சிற்பம், கோவில் கட்டுமானக் கலை, நாட்டியம் என அனைத்தையும் கொண்டாட நாங்கள் விரும்புகிறோம். இந்தத் துறையில் பிரசித்தி பெற்றவர்களை நம்மிடையே அழைத்துப் பேசவைப்பதன்மூலம் இதனைச் சாதிக்க விரும்புகிறோம்.


எனவே இந்த முதலாம் ஆண்டு நிகழ்வுக்கு, எழுத்தாளர் ஜெயமோகன், பேராசிரியர் ச.பாலுசாமி, ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா, முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், நாட்டியக் கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஆகியோரை அழைத்துள்ளோம்.


நிகழ்ச்சிகள்


இடம் ராகசுதா அரங்கம், மைலாப்பூர்


நாள் டிசம்பர்23 முதல் 27 வரை


நேரம் :காலை 10-12 மணி


முதல்நாள்


23-12-2011 [வெள்ளி]




குறுந்தொகை – தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்


23 டிசம்பர் 2011 – எழுத்தாளர் ஜெயமோகன்



சங்கத் தொகை நூலான குறுந்தொகை, சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு. அகத்திணை நூலான இதில் காதலையும் பிரிவையும் சொல்லும் பல்வேறு தனிப்பாடல்கள் உள்ளன.


இந்தப் பேச்சின்போது, எழுத்தாளர் ஜெயமோகன், தமிழ்க் கவி மரபு பற்றியும், அதன் நுணுக்கங்கள், படிமங்கள் ஆகியவை பற்றியும் விவரிப்பதோடு, எப்படி இவை அனைத்துமே குறுந்தொகையிலிருந்தே தொடங்குகின்றன என்பதை நிறுவுவார்.


கன்யாகுமரி மாவட்டத்தில், மலையாளம் பேசும் குடும்பத்தில் பிறந்த எழுத்தாளர் ஜெயமோகன், இன்று தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர். 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் குறுநாவல்களையும், 10 நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.


இரண்டாம் நாள்


 


24-12-1011 [சனிக்கிழமை]


அருச்சுனன் தபசு – மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை


பேராசிரியர் சா. பாலுசாமி


யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னம் என்று குறிக்கப்பட்டுள்ள இடம் மாமல்லபுரம். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்த இடத்தில் இருக்கும் பல்வேறு கலைப் புதையல்களுக்கு இடையில் அருச்சுனன் தபசு என்ற புகழ்வாய்ந்த, மாபெரும் புடைப்புச் சிற்பம், 40 மீட்டருக்கு 12 மீட்டர் என்ற அளவிலான பாறை முகப்பில் எழுப்பப்பட்டுள்ளது. இதில் 158 பாத்திரங்கள் செதுக்கப்பட்டுள்ளனர்.


இந்தப் பெரும் பாறைச் சிற்பமே, மகாபாரதத்தின் வன பர்வத்தில் இமயமலை பற்றி எழுதப்பட்டுள்ளதன் சிற்ப வடிவம் என்கிறார் பேராசிரியர் பாலுசாமி. தன் விளக்கத்தை அவர், தமிழில் ஒரு புத்தகமாகக் கொண்டுவந்துள்ளார். இந்தச் சிற்பத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு வானவரும், கடவுளரும், மனிதர்களும், விலங்கு களும், தாவரங்களும், ஏன், பொய்த்தவப் பூனையும்கூட வியாசரின் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கங்களுக்கு ஏற்ப உள்ளன என்பதை அவர் விளக்குகிறார்.


பேராசிரியர் பாலுசாமி, சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.


மூன்றாம் நாள்


25-12-2011 [ஞாயிறு]


 


இந்திய புனிதக் கலைப் பாரம்பரியம்


ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா



இந்தியச் சிந்தனையின்படி, சிறப்பான கலை என்பது வெறும் ஒரு படைப்பு அல்ல; அது ஓர் ஆன்மிக தரிசனம். இந்தியக் கலை என்பது புனிதமானதாகக் கருதப்படுகிறது. அது உருவாக்கும் பொருள் புனிதமானது என்பதால் அல்ல; அதன் இயல்பும் அதனைச் செயல்படுத்தும் முறைமையுமே உள்ளூரப் புனிதமானவை என்பதனால்.


ஸ்தபதி உமாபதி ஆசார்யா, விஸ்வகர்மா சமூகத்தின் சாஸ்திரப் பாரம்பரியத்தையும், அது எவ்வாறு ஆயிரமாயிர ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது என்பதையும், அவர்கள் எப்படி கோவில் கட்டுதல், சிற்பம் செதுக்குதல், ஓவியம் வரைதல் ஆகியவற்றை சிந்தையில் உருவாக்குவது முதல் செயல்படுத்துவதுவரை அணுகுகிறார்கள் என்பதையும் விளக்க முற்படுவார்.


உமாபதி ஆசார்யா, கோவில் கட்டுதல், கடவுளர்களின் தங்க/வெள்ளி/வெண்கலத் திருமேனிகளை வடித்தல், உலோகத் தகடுகளில் புடைப்புச் சிற்பங்கள் செய்தல் ஆகியவற்றைச் செய்துவருகிறார்.


நான்காம் நாள்


26-12-2011 [திங்கள்]



கங்கைகொண்ட சோழபுரம்: வரலாறும் கலையும்


முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்




முதலாம் ராஜேந்திர சோழன் தன் கங்கை வெற்றிக்குப் பிறகுக் கட்டுவித்ததே கங்கை கொண்ட சோழபுரம். அதற்குள் அவன் கடாரத்தையும் வென்றிருந்தான்.


இந்தப் பேச்சில், கங்கைகொண்ட சோழபுரக் கோவிலின் கட்டடக் கலைச் சிறப்பு, சிற்பங்களின் பேரழகு, செப்புத் திருமேனிகளின் சிறப்பு, பிற்காலத் திருப்பணிகள் ஆகியவை பற்றி படங்களுடன் விரிவாக விளக்கப்படும்.


முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், சரசுவதி மகால் நூலகத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். கோவில் கட்டடக் கலை, சிற்பங்கள், வெண்கலச் சிலைகள், ஓவியங்கள் ஆகியவை பற்றியும், வரலாறு, கல்வெட்டியல், பனையோலைகள், அகழ்வாராய்ச்சி ஆகியவற்றிலும் இவர் தேர்ச்சி பெற்றவர். நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், செப்பேடுகள், காசுகள், சிலைகள், ஓவியங்கள் ஆகியவற்றை இவர் கண்டுபிடித்துள்ளார். அத்துடன் அவற்றைச் சரியான வரலாற்றுப் பின்புலத்திலும் பொருத்தியுள்ளார். பல ஆராய்ச்சி இதழ்களிலும் வெகுஜன இதழ்களிலும் கட்டுரைகளையும் பல புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.


ஐந்தாம் நாள்


27-12-2011



ரகுநாத நாயக்கரின் வாழ்க்கை
- காணொளி உரை


நாட்டியக் கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ்


[image error]

விஜயநகரப் பேரரசின்கீழ் தஞ்சாவூர், மதுரை, செஞ்சி ஆகிய நகரங்களிலிருந்து ஆண்ட குறுநில மன்னர் போன்றோரே நாயக்கர்கள். இவர்களில் மிகவும் பிரபலமானவர் ரகுநாத நாயக்கர் (1600-1630 பொதுயுகம்). ஒரு நல்ல அரசராக இருந்ததோடு, இவர் பலமொழிகளில் புலமை வாய்ந்தவராகவும், கவிஞராகவும், இசையமைப்பவராகவும், பாடுபவராகவும், வீணை வாசிப்பவராகவும் இருந்தார். ஜானகி கல்யாணமு, அச்சுதநாயகாத்புதயமு, சங்கீத சுதா போன்ற படைப்புகளை இவர் எழுதியுள்ளார்.


இவருடைய மகனான விஜயராகவ நாயக்கர், தன் தந்தையின் சரிதத்தை ரகுநாதப்யுதயமு என்ற பெயரில் தெலுங்கில் அற்புதமான யக்ஷகானமாக எழுதியுள்ளார். ரகுநாத நாயக்கரின் வாழ்க்கையை விவரிப்பதோடு நாயக்கர் கால அரண்மனை வாழ்க்கை, ஆட்சியமைப்பு, சமூக வாழ்க்கை ஆகியவற்றையும் விவரிக்கிறது.


நாட்டியக் கலைஞரும் ஆராய்ச்சியாளருமான ஸ்வர்ணமால்யா கணேஷ், இந்தப் படைப்பிலிருந்து சில பகுதிகளை, இசை, நாட்டியம், காணொளி ஆகியவற்றுடன் சேர்த்து நிகழ்த்திக் காட்டவுள்ளார்.


ஸ்வர்ணமால்யா, கே.ஜே. சரசாவிடம் நாட்டியம் பயின்றார். தற்போது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.




தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை


தமிழ் மற்றும் இந்தியப் பாரம்பரியங்களை ஊக்குவிக்கவும், ஆவணப்படுத்தவும், பரப்பவும் என்று உருவாக்கப்பட்ட பதிவுபெற்ற ஓர் அறக்கட்டளை நாங்கள் (எண்: 379/2010).ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று உரைநிகழ்வுகளை நாங்கள் தொடர்ந்து நடத்திவருகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை, பாரம்பரியச் சின்னங்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று சில நாட்கள் செலவிட்டு, ஆழ்ந்து படிக்கிறோம். இவ்வாறாக, கடந்த இரு ஆண்டுகளில் மாமல்லபுரம், அஜந்தா/எல்லோரா ஆகிய இடங்களுக்குச் சென்றுவந்துள்ளோம். ஜனவரி 2012-ல் புதுக்கோட்டை செல்ல இருக்கிறோம்.


பேராசிரியர் எஸ். சுவாமிநாதன் எழுதிய, அசோக் கிருஷ்ணசாமியின் படங்களுடனான, மாமல்லபுரம் பற்றிய காஃபி மேசைப் புத்தகம் ஒன்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொண்டுவந்துள்ளோம். இதைப்போன்று புதுக்கோட்டை பற்றிய ஒரு புத்தகம் இப்போது தயாராகிக்கொண்டிருக்கிறது.


பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பாதுகாத்து, கற்க விரும்பும் பிற அமைப்புகளுடனும் தனி நபர்களுடனும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறோம். பள்ளி மாணவர்கள் நம் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறோம்.


 


நன்கொடை வாய்ப்புகள்


தமிழ் பாரம்பரியக் கச்சேரி, தன் முதலாம் ஆண்டு உரைநிகழ்வுகளுக்கு நன்கொடையை வேண்டி நிற்கிறது. அரங்கில் 150 பேர் அமரக்கூடிய இடம் உள்ளது.


* நன்கொடை தருவோருக்குக் கீழ்க்கண்ட விளம்பர வாய்ப்புகள் உள்ளன:


* ராகசுதா அரங்கில் பேனர்கள் வைக்கலாம்.


* நன்கொடையாளர்கள் தம் கையேடுகளை பார்வையாளர்களுக்கு விநியோகிக்கலாம்.


* உரைவீச்சுகள் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படும். அவற்றில் நன்கொடையாளர்களின் அரைப்பக்க விளம்பரங்கள், லோகோ ஆகியவையும் சேர்க்கப்படும்.


மேற்கொண்டு தகவல்களுக்கு அணுகவும்:


சிவா 98842-94494,


பத்ரி 98840-66566


தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011, 23-27 டிசம்பர் 2011


ராகசுதா அரங்கம், 85/2 லஸ் அவென்யூ, மைலாப்பூர்,


சென்னை 600004. தொலைபேசி: 2499-2672


தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை, 2-ம் மாடி, புது எண் 30 / பழைய எண் 16, டிசில்வா சாலை, மைலாப்பூர், சென்னை 600004, தொலைபேசி: 044-2467-1501. www://tamilheritage.in/

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2011 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.